Tuesday, November 13, 2007

நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி




(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)

சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.

சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.

சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.

சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .

அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .

ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.

இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .

வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .

நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .


தமிழாக்கம் : முரளி ஸ்ரீனிவாஸ்
நன்றி : மலையாள மனோரமா

Wednesday, August 15, 2007

சிந்து நதியின் மிசை நிலவினிலே

வாழிய பாரத மணித்திரு நாடு

வாழிய செந்தமிழ் !
வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு

Saturday, July 21, 2007

எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் -புகைப்படங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் சில கண்கவர் காட்சிகள் .அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி!

திற்பரப்பு அருவி

Photo Sharing and Video Hosting at Photobucket

திற்பரப்பு அருவி

Photo Sharing and Video Hosting at Photobucket

குமரி முனை -விவேகானந்தர் பாறை

Photo Sharing and Video Hosting at Photobucket

குமரி முனை - வான் புகழ் வள்ளுவர்

Photo Sharing and Video Hosting at Photobucket


வட்டக்கோட்டை

Photo Sharing and Video Hosting at Photobucket

வட்டக்கோட்டை கடற்கரை

Photo Sharing and Video Hosting at Photobucket

பேச்சிப்பாறை அணை

Photo Sharing and Video Hosting at Photobucket

கீரிப்பாறை ரப்பர் தோட்டம்

Photo Sharing and Video Hosting at Photobucket

சொத்தவிளை கடற்கரை

Photo Sharing and Video Hosting at Photobucket

கிறிஸ்துமஸ் பெருவிழா

Photo Sharing and Video Hosting at Photobucket

நாஞ்சில் நாட்டின் பசுமை

Photo Sharing and Video Hosting at Photobucket

Thursday, July 12, 2007

இவனா தமிழன் ?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.

கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....

-தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.

நன்றி : செம்பருத்தி

Friday, July 06, 2007

தேவனே என்னைப் பாருங்கள்

நடையிலே நானூறு விதம் காட்டிய நம் நடிகர் திலகம். கம்பீரம் ,நளினம் ,ஸ்டைல் என்ன வேண்டும் ,இந்த பாடல் காட்சியைப் பாருங்கள்




நம்ம தருமி வாத்தியார் வேண்டுகோளுக்கிணங்க "யார் அந்த நிலவு"

Tuesday, June 19, 2007

நடிகர்திலகம் 'சிவாஜி 'யும் ரஜினியின் 'சிவாஜி' யும்

திசைகள் அ.வெற்றிவேல்
(ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை)

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகர்திலகம் காலமாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.நடிகர்திலகம் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டமும்,அவர் ஒரு நடிகரே அல்ல என்று சில இலக்கியவாதிகளும்,அவர் ஒரு 'நடிப்புக் குற்றாலம் ' என்று அறிவு ஜீவி 'மதன் ' போன்றவர்களும், அவர் ஒரு 'மகாகலைஞன் 'என்று நம்மிடையே வாழும் கலைஞானி கமல்ஹாசனும்,தமிழக கலையுலகின் 'ஞானகுரு ' என்று தமிழக திரையுலகக் கலைஞர்களும் கொண்டாடும் விதமாக,அவரைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் உண்டு.

நான் அவர் படம் பார்த்து, அவர் ரசிகன் என்ற பெருமையில் வளர்ந்தவன்.அது பெருமையா அல்லது சிறுமையா என்பது அறுபது-எழுபதுகளின் சினிமா ரசிகர்களைக் கேட்டால் தெரியும்.தமிழ் திரைப்படக் கலைஞன் என்பதாலும்,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் தகுதிக்கு கிடைக்கவேண்டிய புகழ், மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் நம்பும் பல கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.வாழ்க்கையில் நடிக்கத் தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நடிகன் என்பவன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, நடிப்பில் வித்தியாசம் (வெரைட்டி) கொடுக்கவேண்டும்.அதைத் தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக திறம்படச் செய்தவர் நடிகர் திலகம்.அவர் நடித்து தமிழ்த் திரையுலகில் உலவவிட்ட பாத்திரங்கள் ஏராளம்.நடிப்பில் மட்டுமின்றி, நடை, உடை, தோற்றம், வசன உச்சரிப்பு,பாவனை,ஸ்டைல் என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியவர்.பராசக்தி முதல் சவாலே சமாளி வரை (முதல் 150 படங்கள்) உள்ள படங்களில் அவர் சிகரங்களைத் தொட்ட படங்கள் நிறைய உண்டு.பல இலக்கியவாதிகள் அவரை 'மிகு உணர்ச்சிக் கலைஞன் ' (overacting) என்று ஒரங்கட்டியது உண்டு..overacting என்று இவர்கள் சுட்டிக்காட்டும் 'பாசமலர் ' படத்தில் கூட வசனம் பேசாமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் காட்சிகள் உண்டு.

எது எப்படியோ, சிவாஜி தமிழ் திரை உலகத்திற்கு செய்துள்ள பங்களிப்பையும் யாராலும் புறக்கணிக்க இயலாது.தமிழ் திரை உலக வரலாற்றை எழுதுபவர்கள் சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின் என்று தான் எழுதமுடியும்.

'அன்பேசிவம் ' வெளிவந்த சமயம்.கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி.வாரப்பத்திரிக்கைலோ அல்லது தொலைகாட்சியிலோ வந்தது. பேட்டியாளர் கமலை நோக்கி ' தற்பொழுது சிவாஜியின் நாற்காலி காலியாக உள்ளது.அதில் உட்கார தகுதி வந்து விட்டதா ? என்ற கேள்விக்கு கமல் சொன்ன பதிலை இப்பொழுது இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன்.கமல் சொன்ன பதில் இது தான். 'அவர் இருந்த நாற்காலியில் உட்காரவேண்டும் என்பதுதான் நடிக்க வந்துள்ள எங்கள் அனைவரது லட்சியமுமே.இத்தனை படங்கள் நடித்த பிறகு கூட நாற்காலியின் ஒரமாகத்தான் உட்கார முடியுமே ஒழிய, முழுமையாக உட்கார முடியாது.ஏனென்றால் அவர் சாதித்துப் போனது அவ்வளவு. நாற்காலியில் உட்காருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நாற்காலியில் வேறு யாரும் தகுதியில்லாதவர்கள் அமரவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும்தான்.அதைத் தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டு இருக்கிறோம். ' ஒரு தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக மட்டுமின்றி, சிவாஜி ரசிகனாகவும் இருந்து அவர் வெளியிட்ட கருத்து இது என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசன் கடைசியாகக் குறிப்பிட்டபடி அவர் விட்டுச்சென்ற இருக்கைக்கு தற்பொழுது வந்துள்ள ஆபத்து குறித்துத்தான் சிவாஜி ரசிகனாக எனக்கு கவலை.தமிழ்கூறும் நல்லுலகம் முழுதும் சிவாஜி என்றால் இன்றுவரை அது சிவாஜிகணேசன் அவர்களை மட்டுமே குறிக்கும்.தமிழ்ப் புத்தாண்டுக்குப்பிறகு ஏ.வி.எம்மின் 'சிவாஜி ' வந்தபிறகு படையப்பா ரஜினி மாதிரி சிவாஜி ரஜினி ஆவதுதான், ரஜினிக்கு குறிக்கோளாக இருக்குமோ..தெரியாது.ஆனால் அவரது ரசிகர்கள் அப்படிக் கூப்பிடுவதை யாராலும் தடுக்க இயலாது.மேலும் ஏ.வி.எம்.தரும் விளம்பர வெளிச்சத்தில் நடிகர்திலகம் மறைந்து,அவர் சாதனைகள் மறக்கடிக்கப்பட்டு, சிவாஜி என்றால் ரஜினி நடித்த ஒரு தமிழ்ப்படம் என்று தான் வரும் தலைமுறை நினைக்கக் கூடும்.

சிவாஜி என்றால் தமிழகமெங்கும் தந்தை பெரியாரால் பட்டம் வழங்கப்பட்டு,பாரட்டப்பட்ட சிவாஜி கணேசன் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கும் விதமாகவும் சிவாஜி ரஜினி என்று வரும் தலைமுறை தன்னை அழைக்கச் செய்யும் ஒரு சூழ்ச்சி மாதிரித் தான் தெரிகிறது.அதற்கான முதல் விதை சந்தரமுகி வெற்றிவிழாவில் பிரபு வாயால் தன்னை 'அடுத்த சிவாஜி ' என்று அழைக்க வைத்து, படம் வருவதற்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. ஒரு வகையில் சிவாஜியின் பெருமையையைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியா இது என்று சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

இது எப்படி இருக்கு ? என்றால் திருவிளையாடல் படத்தின் ஆரம்பக் காட்சி தான் நினைவுக்கு
வருகிறது.தமிழ்க் கடவுள் முருகன் மயிலைத் துணை கொண்டு உலகைச் சுற்றிவரப் புறப்படுவதும், விநாயகர் அப்பா அம்மாவைச் சுற்றி ஞானக்கனியைப் பறித்துக் கொள்வது மாதிரியான திருட்டு விளையாட்டாகத்தான் தெரிகிறது.

உண்மையான தமிழ்க் கலைஞனான கமல்ஹாசன் வயதினிலே, நாயகன், தேவர்மகன், மகாநதி,குணா,அன்பேசிவம் என்று படிப்படியாக 'சிவாஜி இருக்கை ' என்ற இலக்கை நோக்கி தமிழ்க் கடவுள் முருகன் மாதிரி முன்னேறி வருகையில்,தடாலடியாக 'சிவாஜி ' என்ற படத்தில் நடித்து அந்தப் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் கொண்டுவருவதும் தன்னை 'அடுத்த சிவாஜி ' என்று மற்றவர்கள் அழைப்பதில் ஒருவித ஆனந்தம் அடைவதும் ஒருவகையில் குரூரமாகப் படுகிறது.

ரஜினிக்கு இன்றுள்ள மார்க்கெட்டுக்கு,அவர் படம் ஒடுவதற்கு,அவர் படப்பெயர் என்றுமே காரணமாக இருந்தது இல்லை.ஆகவே அவர் தன்னுடைய இயற்பெயரான 'சிவாஜி ராவ் ' என்று இப்படத்தின் பெயரை மாற்றிக் கொள்வதால் இப்படத்தின் வெற்றி வாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை.


திசைகள் அ.வெற்றிவேல்

ஜித்தா-சவூதி அரேபியா
vetrivel@nsc-ksa.com

-----------------

பின் குறிப்பு: இந்த படத்தில் நடிகர் திலகத்தை கவுரவிக்கும் விதமாக தொடக்கத்தில் இந்த படம் நடிகர் திலகத்துக்கு அர்ப்பணிப்பதாக காட்டுவார்கள் என எதிர்பார்த்தேன் .நன்றி கெட்ட AVM அதை நினைத்துக்கூட பார்க்கவில்லை .மாறாக ,வெறும் சிவாஜி பெயரை சொன்னால் எம்.ஜி.ஆர் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது என்பதால் ,மொட்டை ரஜினிக்கு எம்.ஜி.ஆர் என பெயர் வைத்து "சிவாஜி-யும் நான் தான் .எம்.ஜி.ஆர்-ம் நான் தான்" என டயலாக் வேறு .காலக் கொடுமை ..கேட்டால் "சிவாஜி" ரஜினியின் பெயர் என்பார்கள்.

Monday, June 18, 2007

சிவாஜி (ராவ் கெய்க்வாட்)

வருடக்கணக்காக நீடித்த எதிர்பார்ப்பு ,பில்டப் ,ஊகங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது .ஷங்கர்+ரஜினி+ AVM கூட்டணி உருவான போது எனக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு ..ஷங்கர் பலகாலமாக ரஜினிக்காக ஒரு பிரம்மாண்ட கதையை மனதில் உருவாக்கி அதை AVM -ம் கொடுத்து ,ரஜினியை ஒப்புதல் கொடுக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள் ..ஆனால் படம் பார்த்த பின்னர் தெரிந்தது ..ரஜினியின் கால்சீட் AVM-க்கு கிடைக்க அவர்கள் சங்கரிடம் ரஜினிக்கு ஒரு கதையை யோசிக்க சொல்லியிருக்கிறார்கள் .சங்கரோ தன்னை நம்பாமல் முழுக்க முழுக்க ரஜினியை நம்பி (அடுத்தவர்)பணத்தை இறைத்து ரஜினி நிழலில் குளிர்காய்ந்திருக்கிறார் .வெற்றியும் பெற்றிருக்கிறார் .ஆனால் இந்த வெற்றியில் ரஜினியின் பங்கே மகத்தானது .சங்கர் தனது வழக்கமான சமூக அக்கறை ,பாடல்கள் பிரம்மாண்டம் ,கதாநாயகியின் கவர்ச்சி இவற்றைக்கொண்டு படத்தை நிரப்பினாலும் ,ரஜினியின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும்.

தனிமனிதன் உலகத்தையே திருத்துவதாக முன்பு பிற கதாநாயகர்களை வைத்து செய்த இந்தியன் ,அந்நியன்,முதல்வன்,ஜெண்டில்மேன் படங்களே வெற்றியை குவித்த போது ,சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சங்கர் துணிந்ததில் வியப்பில்லை .ஒரு ரூபாயை வத்திருப்பவர் உதவியாளர் அழைத்தவுடன் ஊரிலுள்ள பெருந்தலைகள் கோட்டும் சூட்டுமாக ஒரு அறையில் வந்து கூடுவது ,உதை வாங்குவது ,250 கோடியை வைத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்குவது போன்றவற்றை பிறர் படத்தில் குறை சொல்லலாம் ..இது சூப்பர் ஸ்டார் படம் .வந்தோமா..தலைவரை பார்த்தோமா .தரிசனம் கிடைத்து கிளம்பினோமா என்றிருக்க வேண்டும். அது தான் உடம்புக்கு நல்லது .இல்லையென்றால் ரஜினி ரசிகர்கள் 'ஆபீஸ் ரூம்'-க்கு கூட்டிப் போய் விடுவார்கள் .

பாடல் காட்சிகளில் 100 பேர் உடம்பில் விதவிதமாக பெயிண்ட் அடிப்பது ,கோடிக்கணக்கில் செலவு செய்து கண்ணாடி மாளிகை அமைத்து டூயட் பாடுவது என்றெல்லாம் தனது 'பிரம்மாண்ட' பிம்பம் கலைந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார் சங்கர் .ஆனால் அர்ஜீன் படத்துக்கு சரி..ரஜினி இருக்கும் போது யார் இதை கவனிக்க போகிறார்கள் ?கிளைமாக்ஸ் காட்சியில் தரை தெரியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்கும் போது ஒரு மாணவர் எண்ணி எண்ணி தான் கட்டிய பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறார் ..என்னே நேர்மை ? இந்தியா அப்போதே வல்லரசாகி விட்டது.

விவேக்கின் சில டயலாக்குகள் ,ரஜினி 'பழக' போவது ,நடிகர் திலகம் ,எம்.ஜி,ஆர் .கமல் போல நடனமாடுவது ,லிவிங்ஸ்டன் 'லகலகலக' சொல்லுவது ,சின்னி ஜெயந்த் நடிகர் திலகம் போல பேசுவது போன்றவை ரசிக்க வைக்கின்றன.பாடல்களில் வழக்கமான ஷங்கர் பிரம்மாண்டம் ,கூடுதலாக ரஜினி ஸ்டைல் .ஷ்ரயாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஜொள்ளு விட வைத்து.

ஷ்ங்கரின் வழக்கமான படங்களில் இருக்கிற அளவுக்கு கூட கதையோ ,திரைக்கதையோ ,லாஜிக்கோ ,பிரச்சனைக்கு நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வோ இந்த படத்தில் இல்லை .ஆனால் சந்தேகமில்லை ..படம் மிகப்பெரிய வெற்றி பெறும் ..காரணம் சிவாஜியோ ,எம்.ஜி .ஆரோ அல்ல..காரணம் சிவாஜி ராவ் கெய்க்வாட் .மொட்டை பாஸாக வந்து அசத்தும் அந்த கடைசிகட்ட காட்சிகள் போதும் ..படத்தின் வசூலை தூக்கி நிறுத்த .

ரஜினியின் இடத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என்று நினைக்கிற இளைய தலைமுறைக்கு 'தம்பிகளா ..வெயிட் பண்னுங்கப்பா..நான் இன்னும் ஆடி முடிக்கல.." என்று சொல்லுகிறார் சூப்பர் ஸ்டார் .ஒரு சொதப்பல் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் சக்தி இன்னும் தனக்கிருக்கிறது என்பதை தன்னந்தனியாக நிரூபிக்கிறார் ரஜினி .அவருடைய அந்த Screen presence- தலை வணங்கியே ஆக வேண்டும்.

நான் குடும்பத்தோடு ,நண்பர் குடும்பத்தோடு 7 பேர் சென்றிருந்தோம் .பலருக்கு படம் பிடிக்க வில்லை .சிலருக்கு ஓரளவு பிடித்திருந்தது .ஆனால் முழு படத்தையும் முழுக்க முழுக்க அனுபவித்தது டிக்கெட் எடுக்காமல் என் மடியில் உட்கார்ந்து படம் பார்த்த 18 மாதங்களே ஆன என் மகன் ..ஆடாமல் அசையாமல் திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டு ,பாடல் காட்சிகளுக்கு தலையை முன்னும் பின்னும் ,சில நேரம் உடல் முழுவதையும் ஆட்டி நடனம் வேறு ..என் வீட்டில் ஒரு ரஜினி ரசிகன் உருவாகிறான் ..அடுத்த தலைமுறை 'சூப்பர் ஸ்டார் ரசிகர் கூட்டம்' ரெடி !

Sunday, May 13, 2007

'பெரியார்' திரைப்படம் - என் பார்வையில்

பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர் .கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக திட்டுவார் .கடவுள் சிலைகளை போட்டு உடைத்தவர்" இவ்வளவு தான் .இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை .இதற்கு காரணம் ,பெரியாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் மூலம் சுய தேடல் இல்லாத ,வெகுஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது .மாறாக பெரியார் தொண்டர்கள் ,வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே .பெரியார் வழி வந்த அரசுகள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தூண்களிலும் சரி ,சிலைகளிலும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் "கடவுளை நம்பியவன் முட்டாள் ...." என்ற வாசகம் தான் .இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக்கருத்துக்கள் ,சாதி ஒழிப்பு கருத்துக்கள் ,பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதில்லை .பெரியாரின் பல முக்கிய பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.

அதிர்ஷ்ட வசமாக பெரியார் திரைப்படம் இந்த குறையை சற்று போக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது .அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக்குள் பெரியார் ஆவி புகுந்து கொண்டது போல கன கச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.

பெரியாரின் இளைமப்பருவத்திலிருந்து தொடங்கும் படத்தில் அவர் காசிக்கு செல்வதற்கு முன் வரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லை .வணிக ரீதியாக திணிக்கப்பட்டதாக சொல்ல முடியாத வகையில் இருந்தாலும் ,கேளிக்கை விடுதி நடனத்திற்காக வீணடிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரின் சிறு வயது வாழ்வில் தண்ணீர் குடிப்பதில் ஜாதிப்பாகுபாடு அவர் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை காண்பித்திருக்கலாம் .

முதல் மனைவியாக வரும் ஜோதிர்மாயி ,இரண்டாவது மனைவியாக வரும் குஷ்பு இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் .ராஜாஜியின் கதா பாத்திரம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது .அதே நேரத்தில் ராஜாஜியின் மறைவுக்கு சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்லை.

இளையராஜா இசையமைத்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் கூட வித்தியாசாகர் எதிர்பார்த்ததை விட நன்றாக இசையமைத்திருந்தார் .வைரமுத்துவின் ஆழமான வரிகளின் அர்த்தம் சிதையாமலும் ,இசைக்குள் வார்த்தைகளை அமுக்கி விடாமலும் பாடல் வரிகளுக்கு கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு இசையை வழங்கியிருக்கிறார் .வைக்கம் போராட்ட காட்சியில் வரும் ஒரு பாடலில் தீண்டாமை குறித்து "அவர்கள் மட்டும் தானா விந்து-லிருந்து பிறந்தார்கள் .நாங்கள் என்ன எச்சிலிலுருந்தா பிறந்தோம் ' என்னும் பொருள் படும் வரிகள் கைதட்டலை அள்ளுகிறது.
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் ,அந்த கால பழைய காற்றாடி போன்றவற்றை நுணுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் .

சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ... முதல் பாதியில் அதே சத்யராஜ் பாணி உச்சரிப்பை தவிர்த்திருக்கலாம் .இரண்டாவது பாதியில் சத்தியராஜ் சுத்தமாக மறைந்து பெரியார் நம்மை ஆட்கொள்ளுகிறார் .ஆட்சியமைக்கும் போது அண்ணாவின் விஜயம் மற்றும் இறுதிக்காட்சியில் சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் .

95 வருட வாழ்க்கையை 3 மணி நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு .காந்தியாரோடு சந்திப்பு ,விதவை மறுமணம் ,தேவதாசி ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல் ,வைக்கம் போராட்டம் ,காங்கிரசில் ஜாதிப்பாகுபாடு ,காங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகியவை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் பின்னர் தி.க உதயம் ,இரண்டாம் திருமணம் ,திமுக தொடக்கம் ,பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு ,திமுக ஆட்சி அமையும் போது அண்ணா சந்திப்பு ,கலைஞர் சந்திப்பு ,எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சிகள் நகர்வதாக தோன்றுகிரது .விஷுவல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .

மிகவும் உடல்நிலை பாதிப்பட்ட போதிலும் ,சொன்ன தேதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ,தனது நெஞ்சில் தைத்திருக்கும் முள் பற்றி வேதனைப் பட்டு விட்டு உரையைத் தொடரும் போதே மயங்கி சாய்கிறார் பெரியார் .95 வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை ,ஒடுக்கப்பட்டோர் இழிவு நீக்கல் ,விழிப்புணர்வு -க்காக பாடுபட்ட மாபெரும் தலைவன் மறைகிறார் .பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய அரசு மரியாதை இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிகளோடு படம் முடிகிறது.

பெரியார் வாழ்க்கை என்பது 3 மணி நேரத்தில் விளக்கப்பட முடிகிற ஒன்றல்ல .இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ,புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல .மாறாக ,பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது .அந்த வகையில் இந்த படம் அதன் இலக்கை வென்றிருக்கிறது .

ஞானராஜசேகரனுக்கும் ,சத்திய ராஜ்-க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

Wednesday, May 02, 2007

பட்டுக்கோட்டையை காப்பியடித்த வைரமுத்து

என்னடா இது? வைரமுத்து மீது பகிரங்க குற்றசாட்டா என்று நினைக்க வேண்டாம் .நேற்று சிங்கையில் நடந்த விழாவில் வைரமுத்துவே குறிப்பிட்ட செய்தி இது.

சிங்கையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆர்வலர்களின் முயற்சியால் ஆண்டு தோறும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா கடந்த மூன்று ஆண்டுகளாக மேதினத்தன்று கொண்டாப்பட்டு வருகிறது .நேற்றைய விழாவுக்கு சிறப்புரை வழங்க கவிஞர் வைரமுத்து வைந்திருந்தார்.

சிங்கை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் அரங்கு நிறைந்து வழிந்த போதும் 7 மணியளவிலேயே துவங்கப்பட்டது .வைர முத்து பேசும் போது அரங்கத்திலிருந்த கூட்டத்தை போல 3 மடங்கு கூட்டம் திறந்த வெளியிலும் நின்று கொண்டிருந்தது .

சிறப்பு விருந்தினராக வந்திருந்து பட்டுக்கோட்டையார் பாடல்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த சிங்கை அமைச்சர் தெக் யூ நான்கைந்து தமிழ் வாக்கியங்களை எழுதி வந்து படித்த போது சீனர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு தமிழ் வாக்கியத்துக்கும் விண்ணதிர கைதட்டல் ஒலி எழும்பியது .ஒரு கவிஞரின் புகழ் பாடும் விழாவுக்கு இத்தனை பெரிய கூட்டத்தை அமைச்சர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அமைச்சர் சிங்கையின் அரசாங்க மொழிகளில் ஒன்றான தமிழை விஞ்ஞான யுகத்தில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் ,மொழி கலாச்சார கூறுகளை பேணிக்காக்க வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டி ,தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கை அரசு கொண்டுள்ள கடப்பாட்டை உறுதிப்படுத்தினார். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர் கூட்டம் அவரது பேச்சுக்கும் வருகைக்கும் மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

விழாவின் இறுதியில் கவிஞர் வைரமுத்து உணர்ச்சிகரமான உரைநிகழ்த்தினார் .29 வயதிலேயே மறைந்து விட்ட மாபெரும் 'மக்கள் கவிஞனின்' சிறப்புக்களை பட்டியலிட்ட அவர் சில சுவாரஸ்யமான தகவல்களையும் சொன்னார் .காதல் பாடல்களில் கூட பொதுவுடமையைச் சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை என்று உதாரணத்தோடு குறிப்பிட்ட அவர் ,பட்டுக்கோட்டையின் சமுதாய கருத்துக்கள் கொண்ட பாடல்களின் வெற்றி அப்போதிருந்த மற்ற கவிஞர்கள் சமுதாய கருத்துக்களை சொன்னால் தான் நிலைக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.

படத்துக்கு படம் ஒரு சமுதாயப்பாடல் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை நினைக்க வைத்தது பட்டுக்கோட்டை தான் ,அது எம்.ஜி.ஆரை அரியணையில் கொண்டு அமர்த்தியது என்று குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையை தான் காப்பியடித்த ரகசியத்தையும் சொன்னார் .பட்டுக்கோட்டையாரின் "தவறுக்கு தவறான தவறை புரிந்து விட்டு " என்ற தனது மனதில் தங்கிய வரிகளை காப்பியடித்தே சிந்து பைரவியில் 'மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்" என்றெழுதியதாக குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையார் இறந்த போது ஒரேயொரு நடிகை மட்டுமே அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தாராம் .அவர் அப்போது பட்டுக்கோட்டையார் பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு படத்தை தயாரித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை பண்டரி பாய் .ஒரு கையில் மாலையும் இன்னொரு கையில் காசோலையும் கொண்டு வந்து ,மாலையை அணிவித்து ,தான் கொடுக்க வேண்டிய தொகைக்கான காசோலையை பட்டுக்கோட்டையார் குடும்பத்துக்கு கொடுத்தார் என்ற செய்தியை குறிப்பிட்டார்.

வைரமுத்து பேசி முடிக்கும் போது இரவு 9-ஐ தாண்டியிருந்தது .வைரமுத்து பேச்சில் 'சிங்கப்பூர் தமிழர்கள்' என்று குறிப்பிடும் போதெல்லாம் என் மனதில் தோன்றியது ...இந்த விழாவை ஏற்பாடு செய்த ,மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்ற சில சிங்கப்பூர் தமிழர்களை தவிர இந்த நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காமல் வந்திருந்த கூட்டத்தில் 90 % இந்தியாவிலிருந்து இங்கு வந்து தினக்கூலிகளாக வேலை செய்யும் கட்டுமானத்துறை தொழிலாளர்கள் .

தொழிலார்கள் தினத்தன்று தொழிலாளர் நலம் பாடிய அந்த மக்கள் கவிஞனின் விழாவுக்கு திரளாக வந்திருந்து தமிழுக்கு அழிவில்லை என நிரூபித்த அந்த தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, April 25, 2007

ஸ்டைல் சக்கரவர்த்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்கிய சமயத்தில் தூர்தர்ஷனில் அவர் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது .நேயர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லும் விதமாக அமைந்த அந்த பேட்டியின் முதல் கேள்வி..

"நடிகர் திலகம் சிவாஜி பற்றி உங்கள் கருத்து?"

சூப்பர் ஸ்டார் பதில் :

"என்னை பல பேர் ஸ்டைல் கிங் அப்படி இப்படின்லாம் சொல்லுறாங்க .நான் ஸ்டைல் கிங்-ன்னா சிவாஜி சார் ஸ்டைல் சக்கரவர்த்தி"

சூப்பர் ஸ்டார் என்ன சொல்லுறார்ணு புரியாதவங்க கீழேயுள்ள பாடல் காட்சியை பார்க்கவும்.

வாய் திறந்து பேசவில்லை ,பாடவில்லை ,எழுந்து நடக்கவில்லை ,உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஆனாலும் ஸ்டைல் ..இது ஸ்டைல் !

Tuesday, April 24, 2007

ஆதரிப்போம் தமிழ்மணம்!

புதுமணம் வீசட்டும்!
புத்துணர்ச்சி நிலைக்கட்டும்!
புறந்தள்ளுவோம் புரட்டுக்'களை'
அறம் திளைக்க விளைவோம் .நன்றி!


Saturday, April 14, 2007

தசாவதாரம் கதை -வழக்கு -கமல் கடிதம்



Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி : Indiaglitz.com

Monday, March 26, 2007

தருமி கண்டுபிடித்த 1- ம் நம்பர் கிறுக்கன்

நான் ஒரு 1-ம் நம்பர் கிறுக்கன் -னு கண்டுபிடிச்சிருக்கார் தருமி .ஒரே ஒரு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை வைத்தே சரியா கணிச்சிருக்கார் .என்ன இருந்தாலும் வாத்தியார் அல்லவா.

1.சின்ன வயசுல நான் கிறுக்குத்தனமா இருந்தது 'பட்டம்' விடுறதுல .பட்டம்-ன்னா சென்னைல சின்னதா ஒரு பட்டம் விடுவாங்களே அது மாதிரி இல்ல .எங்க ஊருல கதவு அளவு பட்டமெல்லாம் விட்டிருக்காங்க .நான் விட்ட பட்டமெல்லாம் அரைக் கதவு அளவுக்கு .அதாவது மூங்கிலை வெட்டி 3 அடி ,1.5 அடி யாக தலா 3 கம்புகள் எடுத்து நீள் சதுரமாக கட்டி அதில் இரண்டு மூன்று அடுக்கு செய்தித் தாள்களை வைத்து ஒட்டி பட்டம் செய்து அதற்கு சரடி இட்டு ,வாலுக்குக்காக மீன்பிடிக்க பயன் படும் பெரிய கயிறை கட்டி ,நூலுக்கு பதிலாக மீன்பிடிக்க பயன்படும் நைலான் ரோல் வைத்து பட்டம் விடுவது தான் எங்க ஊருல வழக்கம் .சின்ன பட்டம் ,நூல் வைத்து விடுவதெல்லாம் எங்கள் ஊரில் கடற்கரையில் வீசுகிற காற்றுக்கு பஞ்சாக பறந்து விடும் .மே மாத கோடை விடுமுறையில் எனக்கு முழு நேர தொழிலே இது தான் .எனக்கு 2 உதவியாளர்கள் வேறு .எங்கள் வீட்டில் யாரும் மீன் பிடிப்பவர்கள் இல்லையாததால் உதவியாளர்கள் வீட்டிலிருந்து நைலான் ரோல் எடுத்து வருவார்கள் .தூண்டில் மீன் பிடிக்க பயன் படும் இந்த நைலான் ரோல் விறைப்பாக இருக்க வேண்டியது அவசியம் .அதனால் சில நேரம் மீன் பிடிக்க செல்லும் முன் 200 மீட்டர் நீளத்தில் இரண்டு பேர் பிடித்துக்கொண்டு இழுப்பார்கள் .பட்டம் விட இதே நைலான் ரோலை உபயோகித்தால் தானாகவே விறைப்பாக ஆகிவிடும் என்பதால் உதவியாளர்கள் வீட்டில் அதை நாங்கள் எடுத்து பட்டம் விடுவதில் சிக்கல் எதுவுமில்லை. காலை 9 மணியளவில் பட்டத்தை எடுத்து பாரமான வாலை கட்டி ,முதலில் ஒரு 50 அடி தூரம் கொண்டு சென்று பட்டத்தை விட்டால் விர்ரென்று 45 டிகிரியில் போய் ஆடாமல் அசையாமல் போய் நிற்கும் .பின்னர் மெதுவாக மீதமுள்ள ரோலை இரண்டு பேர் சேர்ந்து விடுவிக்க வேண்டும் .கொஞ்சம் அசந்தால் கையை அறுத்து விடும் .முழுவதுமாக ரோலை விடுவித்து பின்னர் ரோல் இருக்கும் கட்டையை ஏதாவது ஒரு மரத்தில் அல்லது கட்டுமரத்தில் கட்டிவைத்து விடுவோம் .பொதுவாக எங்கள் ஊரில் விடப்படும் பட்டத்தில் உச்சியில் நடு கம்பு நீளமாக இருக்கும் .அதில் சில நேரம் தேசியக் கொடி அல்லது அதிமுக ,திமுக கட்சிக் கொடி பறக்கும் .பெரும்பாலான பட்டத்தில் பெரிய எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்படிருக்கும் .நம்ம பட்டத்தில் மட்டும் சிவாஜி படம்.45 டிகிரில் விறைப்பாக நிற்கும் ரோல்.திருப்பி இழுக்க வேண்டுமென்றால் துணியை கையில் சுற்றி தான் இழுக்க வேண்டும் .இல்லையென்றால் கையை வெட்டி விடும் .தென்னை ஓலையை கிழித்து ரோலை சுற்றி சொருகி விட்டால் காற்றடிப்பதால் சல்லென்று மேலே சென்று பட்டத்தோடு ஒட்டிக்கொள்ளும் .எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் இங்கிருந்து தந்தி அனுப்புகிறோமாம்..இப்படி வேகாத வெயில்ல பட்டம் விட்டே கறுத்து கருவாடு ஆனேன் நான்.

2.பொதுவா நடந்து ஒரு இடத்துக்கு போறோம்னா ஏதோ கோட்டையை பிடிக்க போறது மாதிரி இண்டு இடுக்குல புகுந்து ,விறு விறுண்ணு நடந்து போகிற பழக்கம் எனக்கு .எதிரே யார் வர்றாங்கண்ணு கூட கவனிக்க மாட்டேன் .பல முறை தூரத்திலேயே என்னை பார்த்து விட்ட நமக்கு தெரிந்தவர் பக்கத்தில் வரும் போது நம்மை பார்ப்பான் என்றெண்ணி குறுக்கே நிற்க ,கிட்டத்தட்ட மோதிய பிறகு நிமிர்ந்து பார்த்து அசடு வழிந்திருக்கிறேன் .ரொம்ப அவசரமான வேலையாக போகும் போது இப்படி போனா பரவாயில்ல .சும்மா நேரப்போக்குக்கு போகும் போதும் இப்படித் தான்.

திருச்சியில் படிக்கும் போது கல்லூரிக்கு எதிரே தெப்பகுளம் முதல் மலைக்கோட்டை வரையிலாக திருச்சியில் மிக பிரபலமான பரபரப்பான ரோட்டில் நண்பர்களோடு மாலை வேளையில் நடந்து செல்வது வழக்கம் .போவதே சும்மா நேரப்போகுக்கு .சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பெண்கள் கூட்டம் ,ஏகப்பட்ட துணிக்கடை ,ஆற அமர ரசித்துக்கொண்டு நடந்து வருவது தான் நண்பர்கள் வழக்கம் .நான் ஏதோ புகுந்து புறப்பட்டு வளைந்து நெளிந்து நடந்து கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தால் நண்பர்கள் ஒரு 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருப்பார்கள் .அவர்கள் வந்து "டேய் ! என்னடா மலைக்கோட்டையை போய் வாங்கப் போகிறாயா என்ன ? எதுக்கு இப்படி ஓடுற" என்பார்கள் .எனக்கும் 'அதானே! ஏன் இப்படி பறக்குறேன்" -ன்னு தோணும் .ஆனால் அடுத்த 5-வது நிமிடத்தில் அதுவே மீண்டும் நடக்கும் .நான் மாறவே இல்ல.

3.காபி குடிக்குறது .ஒரு காபி-யை வாங்கி வைத்து ஆற அமர குடித்து முடிப்பதற்கு குறைந்தது 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுவோரை பார்த்திருக்கிறேன் .ஆனால் நமக்கு 1 நிமிடத்துக்கு மேல் தேறாது .பல முறை முயற்சி செய்திருக்கிறேன் .ஆனாலும் குடிக்க ஆரம்பித்தால் குடித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல குடிப்பது என் வழக்கம் .எனக்கே இது ஓவராக தெரிந்தாலும் இன்னும் மாற்ற முடியவில்லை.

4.திருச்சியில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த போது ,வார இறுதி நாட்களில் நண்பர்களெல்லாம் ரஜினி,கமல் படம் பார்க்க பறந்து கொண்டிருக்க ,நானோ திருச்சியின் சந்து பொந்துகளில் இருக்கும் ஓட்டை ஒடிசல் பழைய தியேட்டர்களை கண்டு பிடித்து தாய்மார்கள் பெரியோர்கள் நடுவில் அமர்ந்து பழைய சிவாஜி படங்களை விரட்டி விரட்டிப் பார்த்தது .'உத்தம புத்திரன்' படம் பார்த்து வெளியே வந்து விட்டு ,அடுத்த காட்சிக்கு நின்ற வரிசையில் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தது .நண்பர்கள் என்னை ஒரு தினுசாக பார்த்ததை சொல்லவும் வேண்டுமா!

5.எனக்கு விவரம் தெரியுமுன்னரே நடந்த ஒரு நிகழ்ச்சியை என் மாமா (எனக்கு பெயரிட்டவர் .பேராசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்) சொல்லிச் சொல்லி சிரிப்பதுண்டு .எனக்கு இரண்டரை வயதிருக்கும் போது அம்மா எனக்கு சோறூட்டியிருக்கிறார்கள் .முதல் சுற்று முடிந்து ,இரண்டாவது சுற்று .அதையும் முடித்து விட்டு மேலும் சோறு எனபது போல அம்மாவை பார்த்திருக்கிறேன் .பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.."

Thursday, March 01, 2007

பருத்தி வீரன்

சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல .நல்ல நகைச்சுவையை வழங்கும் பொழுது போக்கு திரைப்படங்களும் நமக்கு தேவையே .அதே நேரத்தில் நம் நம் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை ,பழக்க வழக்கங்களை ,நாட்டின் இதயமான கிராமங்களின் நடைமுறைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமையும் திரைப்படங்களும் வரவேற்கப் படவேண்டியவை. ஒரு திரைப்படம் "பாட்டி வடை சுட்ட கதை' போன்று ஏதாவது ஒரு கதையோடு தான் அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை .சுவாரஸ்யமான சம்பவங்களில் தொகுப்புகள் கூட ஒரு ரசிக்கத் தக்க திரைப்படமாக அமையலாம் .அந்த வரிசையில் ஒரு கிராமத்து சண்டியரின் கதையை அதன் பின்புலத்தோடு ,வாழ்க்கை முறையோடு ,அதன் சோகங்களோடு சொல்லும் ஒரு படம் 'பருத்தி வீரன்'.

தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த படம் தன் கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் நடந்த பல சம்பவங்களை கண்முன் நிறுத்தும் .கிராமம் என்றால் கண்டிபாக காட்டப்படும் மரத்தடி பஞ்சாயத்து ,ஊரை அடியாள்கள் தயவில் மிரட்டி வைத்திருக்கும் வில்லன் ,கதாநாயகனை வாழ்த்திப்பாடும் போது நூற்றுக்கணக்கில் வந்து நடனமாடும் தடியர்கள் மற்ற நேரத்தில் காணாமல் போய் விட மற்ற நேரங்களில் கிழவர்கள் மட்டுமே கதாநாயகனிடம் முறையிடும் அபத்தம் ,பட்டணத்துக்கு படிக்கப் போய் 10 ஆண்டுகளுக்கு பின்னரே முதல் முறையாக கிராமத்துக்கு வரும் டூ பீஸ் உடையணிந்த வில்லன் மகளான கதாநாயகி இப்படிப் பட்ட சமாசாரங்கள் இந்த படத்தில் இல்லை .ஆனால் கிராமத்து கூத்து ,கரகாட்டம் .கிராமத்து சாதாரண பள்ளியில் படிக்கும் சுமாரான அழகுள்ள கதாநாயகி ,விஷம் குடித்த கதாநாயகிக்கு செய்யப்படும் சிகிச்சை ,கிராமத்து வெளியில் சீட்டாட்டம் ,வெட்டித்தனமாக ஒரு சண்டியரின் வாழ்க்கை, எகத்தாளம் ,அவனை வெறித்தனமாக காதலிக்கும் கதாநாயகியின் செய்கைகள் இப்படி பல விடயங்கள் கண்முன் நடப்பவை போன்று யதார்த்தமாக விரிகின்றன.

சிவகுமாரின் இளைய மகன் 'கார்த்திக்' முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் .கண்டிப்பாக நடிப்பில் நல்ல திறமையுள்ளவராக திகழ்வார் ,ஆனால் அண்ணன் போன்று இளமை துள்ளும் கதாபாத்திரத்தில் மிளிர்வாரா என்பது போகப் போகத் தான் தெரியும் .இருந்தாலும் ,தமிழ் சினிமாவுக்கும் திறமையுள்ள நடிகர் கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கதாநாயகனின் சித்தப்பாவாக வரும் சரவணன் (பழைய ஹீரோ) ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் .இவரிடம் இத்தனை நடிப்பாற்றலா என வியக்க வைக்கிறார் .கதாநாயகி பிரியாமணி மிக நன்றாக செய்திருக்கிறார் .இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே அவரை பாராட்டலாம்.

சின்ன சின்ன காதாபாத்திரங்களில் வருபவர்கள் கூட நிறைவாக செய்திருக்கிறார்கள் .அதிலே இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது .நீண்ட நேடிய கதை சொல்வது முக்கியமல்ல .காட்சிகளின் நேர்த்தி தான் இயக்குநரின் முக்கிய வேலை .அதிலே அமீர் தனது முந்தைய படங்களை மிஞ்சியிருக்கிறார்.

2 மணி நேரங்களுக்கு மேல் கலகலப்பாக செல்லும் திரைப்படம் ,நெஞ்சை பதற வைக்கும் சோகத்தோடு முடிகிறது .மனம் கனக்கிறது .அது படமாக்கப்பட்டிருக்கும் விதம் அதீதமாக வலிந்து திணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருகின்றன .ஆனால் என்னைப் பொருத்தவரை அந்த காட்சிகள் நம் சமூகத்தின் இழிவான ஒரு பக்கத்தை ,பொறுப்பின்மையை குறித்த கோபத்தையும் ஆற்றாமையையுமே கொடுப்பதாக இருக்கிறது .அதே நேரத்தில் வாழ்க்கையை பொறுப்ற்ற விதமாக கழிப்பவர் தங்களுக்கு மட்டுமல்ல தங்களை சார்ந்தோருக்கும் கொடுக்கும் துன்பத்தை எடுத்துக்காட்டும் பாடமாக இருக்கிறது.

இத்தகைய முடிவைப்பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ,இத்தகைய திரைப்படங்கள் பெறும் வெற்றி,தமிழ் சினிமா எதார்த்தத்தை நோக்கிய பாதையில் இன்னொரு படி எடுத்து வைப்பதற்கான வழியாக இருக்கும்.

இயக்குநர் அமீருக்கு பாராட்டுக்கள்!

Tuesday, February 20, 2007

எல்லை மீறும் கன்னட அமைப்புக்கள்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அடுத்து அது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சாதகமாகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது .முதலில் அரைகுறையாக வெளிவந்த செய்திகளின்படி தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் என குறிக்கப்பட்ட அளவை ,தமிழ்கத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய அளவாக திரித்துக் கூறப்பட்டு கர்நாடகத்தில் கொந்தளிப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் இப்போது தமிழகத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு இடைக்கால உத்தரவு படி கொடுக்க வேண்டிய அளவை விட குறைவு என்று தெளிவாக தெரிந்த பின்னரும் கர்நாடக அமைப்புக்கள் தங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ளுவதாக இல்லை. உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதனை மொழிப் பிரச்சனையாக வழக்கம் போல ஊதி பெரிதாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துகென்று தனிக்கொடி கர்நாடகாவில் தான் உள்ளது .17 வருடங்கள் விசாரணைக்குப் பின் அளிக்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட தமிழர்கள் ,விவசாயிகள் இந்த வகையிலாவது நம் பங்கு கிடைத்ததே என்று நினைத்து எதிர்ப்புகள் ,ஆர்ப்பாட்டங்கள் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களை தவித்து வரும் நேரத்தில் கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன.

பந்த் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது எதிர் பார்த்ததை விட வன்முறைகள் கட்டுக்குள் இருந்ததற்கு கர்நாடக மாநில அரசை பாராட்டியே ஆக வேண்டும் .அதே நேரத்தில் வழக்கம் போல தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி இணைப்புகள் வழக்கம் போல துண்டிக்கப்பட்டன .தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது .தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன .இது போதாதென்று சிலர் அத்துமீறி தமிழகத்துகுள்ளேயே நுழைந்து ஓசுரை கைப்பற்றப்போவதாக கோஷமிட்டுள்ளனர்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காம் செய்தியில் தமிழக எல்லையில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ...

கர்நாடக கிறிஸ்துவ ஆலயயங்களில் தமிழ் பிராத்தனை ஜெபக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிக்க கன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது .இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபேல் கூறுகையியில் "பெங்களூர்,மைசூர்,மாண்டியா,கோலார் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் பிராத்தனை நடத்துவதை நிறுத்த வேண்டும் .இந்த கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் .கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழ் பிராத்தனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இப்படி ஒரு கேவலமான சிந்தனை உள்ள ஒருவர் கத்தோலிக்க சங்கத்தின் (இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தால்) தலைவராக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது .இச்செய்தியின் பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது போல கன்னடரல்லாத இயேசு கிறிஸ்துவை இவர்கள் ஏன் கும்பிட வேண்டும் .இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வதே வெட்கக்கேடு.

காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது .எனவே கர்நாடகாவுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .ஆனால் காவிரி முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கே சொந்தம் என்று ஊளையிடுவது இந்திய ஒருமைப்பாட்டிக்கே அவமானம் .இதை மத்திய அரசு வேட்டிக்கை பார்ப்பது வேதனையானது .சரி .அப்படியே சொல்லி விட்டுப் போகட்டும் .ஆனால் இருவருக்கும் பொதுவான நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் இந்த கன்னட அமைப்புகள் காட்டும் வன்மத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? தான் என்ன செய்தாலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தமிழக தமிழர்கள் எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற கோழை மனப்பான்மையும் மிரட்டல் புத்தியுமே கன்னட அமைப்புகளின் இந்த காட்டுமிராண்டித் தனங்களுக்கு அடிப்படைக் காரணம்.

தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு தலைக் கொள்ளி எறுப்புக்கள் .மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தான் .தன்மானம் இல்லாதவர்கள் ,மொழியுணர்வு இல்லாதவர்கள் என்ற மற்ற சில தமிழர்கள் சொல்லும் பழிச்சொல் ஒரு பக்கம் ..மொழி வெறி பிடித்தவர்கள் என்ற மற்ற மாநிலத்தவரின் அரை வேக்காட்டு குற்றச்சாட்டு மறு பக்கம் .தமிழகத்தில் கூட இதைக் கண்டித்து சிறிது குரல் எழுப்பினாலும் மொழி வெறியனென்று திட்டி ,முதலில் நாம் இந்தியர் என்றெல்லாம் இலவச அறிவுரை வழங்கி தேச துரோகிகளாக சித்தரிக்கும் தமிழரிலே ஒரு கூட்டம் மறுபக்கம் .எப்படி இருப்பினும் இத்தனை தூண்டல்களுக்குப் பின்னரும் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு அறிவுபூர்வமாக நடந்து கொண்டிருக்கும் தமிழக தமிழர்கள் தங்கள் முதிர்ச்சியை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள்.

கர்நாடகா-வினர் வெளிப்படையாக தனிக் கொடி வைத்திருக்கலாம் .தமிழர்களை அடிக்கலாம் .தமிழ் சார்ந்த அனைத்தையும் தடை செய்யலாம் .காவிரியில் எவனுக்கும் பங்கு கிடையாது என்று முழங்கலாம் .ஆனாலும் அவன் இந்தியன் .ஆனால் கார்கில் போரானாலும் சரி ,குஜராத் பூகம்பம் ஆனாலும் சரி இந்தியாவிலேயே அதிகமாக வாரிக்கொடுத்த தமிழன் தன் உரிமை பற்றி வாய் திறந்தாலோ உள்ளூரிலேயே தேச துரோகிப் பட்டம்.

வாழ்க இந்திய ஒருமைப்பாடு!

Thursday, February 08, 2007

டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள்

டோண்டு ராகவன் என்ற வலைப்பதிவர் மிகுந்த அனுபவமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர் என்ற வகையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் மீறி மரியாதைக்குரியவராகவே கருதி வந்தவர்களில் நானும் ஒருவன்.

போலி டோண்டு விவகாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .போலி டோண்டு-வின் ஆபாச செய்கைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை ,நிராகரிக்கத் தக்கவை ,அருவருக்கத் தக்கவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .முகம் தெரியாத (சிலருக்கு தெரியும் என்கிறார்கள்) அந்த நபரின் செய்கைகள் டோண்டுவை மட்டுமல்ல ,வலைப்பதியும் பல சகோதரிகள் உட்பட சம்பந்தம் இல்லாத பலரையும் மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மோசமானதாக உருவெடுத்தது .தமிழ் வலைப்பதிவுலகில் உருப்படியான விவாதங்களை பின்னுக்குத் தள்ளி ,தேவையில்லாத இந்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது துரதிருஷ்ட வசமானது.

ஆனால் இந்த விவகாரம் அணைந்து விடாமலும் ,அதன் மூலம் தனக்கு கிடைக்கும் விளம்பரமும் அனுதாபமும் தளர்ந்து விடாமலும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்ததில் டோண்டு அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை தொடக்கத்திலிருந்து கவனித்து வரும் நடுநிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் .

இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த புதிதில் என் போன்ற சிலர் டோண்டு அவர்களிடம் பல முறை வேண்டுகோள் வைத்தோம் .தயவு செய்து இந்த புண்ணை கிளறாதீர்கள் .ஆறப்போடுங்கள் .ஏட்டிக்கு போட்டியாக மீண்டும் மீண்டும் இதை கிளறுவதால் எந்த பயனும் இல்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம் .ஆனால் டோண்டு அவர்களின் பதில் "நீ என்ன அவனுக்கு வக்காலத்தா .அவனைக் கேட்க வேண்டியது தானே!" என்ற ரீதியிலே இருந்தது .

இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார் ,யாரென்றே தெரியவில்லை ,சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த ,புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் படி வேண்ட முடியும் .ஆனால் அந்த நபரே நம்மை எதிர் தரப்பு ஆதரவாளன் என முத்திரை குத்தி அதிலும் விளம்பரம் தேடி ,அனுதாபம் பெற முயற்சிக்கும் போது எழும் எரிச்சலை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு "நீ ஒன்றில் என் பக்கம் .அல்லது அவன் பக்கம்" என்று புஷ் தனமாக டோண்டு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் கூறு போட்டு குழு மனப்பான்மையை தொடங்கி வைத்தார் .செல்லுகிற இடமெல்லாம் இதைப் பற்றியே எல்லோரும் பேசும் படி செய்து விளம்பரம் தேடிக்கொண்டார் .இதை சுட்டிக்காட்டிய அனைவரையும் போலியின் ஆதரவாளன் என வாய் கூசாமல் பழி சுமத்தினார் .புதிதாக வலைப்பதிபவர்கள் மேலோட்டமாக இதை புரிந்து கொண்டு ,டோண்டு பக்கம் தவறே இல்லாதது போல நினைக்கும் படி செய்தார்.

இவரின் சாதி சாதி என பிடித்து தொங்கும் விவகாரத்தில் நான் நுழைய விரும்பவில்லை .தொங்கிக் கொள்ளட்டும் .எனக்கு அதைப்பற்றி விவாதிக்க கூட ஆர்வமில்லை .இத்தனையும் மீறி இவரை நான் டோண்டு சார் அல்லது டோண்டு ஐயா என்று வயது ,அனுபவம் காரணமாக மரியாதையாகத் தான் அழைத்து வந்தேன். அதனால் சில மிரட்டல் கடிதங்களும் கிடைக்கப்பெற்றேன் .அதைப்பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ்- சமீபத்திய ஒலிப்பதிவில் நான் டோண்டு விவகாரத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட்ட போது அவருக்கு இந்த பின்னணி தெரியாது என குறிப்பிட்டிருந்தார் .அவரை போல இந்த விவகாரம் சூடு பிடித்த பின்னர் வலைப்பதிய வந்தவர்களுக்கும் இந்த பின்னணி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனை பதிகிறேன்.

போலி டோண்டுவோ அல்லது ஆபாசமாக எழுதும் யாரோ அவர்களை நான் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை .ஆனால் டோண்டு மிக முக்கியமான வலைப்பதிவராக அறியப்பட்டவர் .சரியான விளம்பரப் பிரியர் .போலி டோண்டு விவகாரத்தில் இந்த பிரச்சனையை முடிக்கும் ஆர்வத்தை விட இதை வைத்து தான் எப்படி சுய விளம்பரம் தேடிக்கொள்ளலாம் ,வெளிச்சத்திலேயே இருக்கலாம் என்ற ஆர்வம் தான் அவருக்கு அதிகம் இருந்ததாக என் மனசாட்சி சொல்லுகிறது .

எப்போதெல்லாம் இந்த விவகாரம் சிறிது அமுங்கி ,டோண்டு வெளிச்சத்திற்கு வெளியே போகிறாரோ ,அப்போதெல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதனை கிண்டி கிளறி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ,வெளிச்சம் மீண்டும் தன் மீது விழுவதை ரசிப்பவர் டோண்டு அவர்கள் .அதனால் தமிழ் வலையுலகில் ஏற்படும் திசை திருப்பல்கள் குறித்தோ அல்லது பாதிக்கப்படுவோர் குறித்தோ அவருக்கு கவலையில்லை .மாறாக இன்னும் எத்தனை பேரை பாதிக்க வைக்கலாம் ,அதன் மூலம் கூட்டம் சேர்க்கலாம் ,அதை வைத்து கும்மியடிக்கலாம் என்பதே அவரின் நோக்கமாக இருந்ததாக நான் நினைக்கிறேன்.

தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது ,தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயத்தை ,தனக்கு சாதகமான நேரத்தில் பொதுவில் வெளிப்படித்திவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல நடிப்பது ,எங்கு சென்றாலும் இந்த விவகாரத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அனைவருக்கும் ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் அவரின் புத்திசாலித் தனமான (அப்படி அவர் நினைத்துக்கொள்ளுகிற) உத்திகள் .

டோண்டு அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .அவரின் வயது ,அனுபவம் காரணமாக நாம் அவரை மதிக்கிறோம் என்பதற்காக ,அவரின் சிறுபிள்ளைத் தனமான வழிமுறைகளும் ,விளக்கங்களும் நமக்கு புரியாமல் இல்லை .பல நேரங்களில் இவரிடம் போய் விவாதித்து இவரின் விதண்டாவாதத்தில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமே என்பதால் தான் பலர் இவரை தவிர்த்து வருகிறார்கள் .ஆனால் அவர்களையும் இவர் விடுவதில்லை .இவருக்கு பின்னூட்டம் கொடுக்காதவர்களெல்லாம் போலிக்கு பயந்தவர்கள் ,விட்டால் போலிக்கு நண்பன் என்று ஓயாமல் சொல்லி வருவார்.

நிறைய சொல்லலாம் .இப்போதைக்கு இது போதும் .இப்போது அவர் பல முகமெடுத்து (ஆமய்யா ! ஆமா! ஆபாசமாகவெல்லாம் எழுதவில்லை) மாட்டிக்கொண்டது பற்றி அவரின் "மீசையில் மண் ஒட்டாத' விளக்கங்கள் குறித்து நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

Friday, January 26, 2007

கலைஞரும் சாயி பாபாவும்

Photobucket - Video and Image Hosting

சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார் .இது தான் செய்தி.

பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் .எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர் .பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர் .இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?

பாபா ஆன்மீகவாதி .கலைஞர் ஆன்மீக மறுப்பாளர் .இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்று தான் .கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை .கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .

ஆனால் நடந்தது என்ன ?பிரதமர்களும்,கவர்னர்களும் ,முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார்.அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை .அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள் .இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை .காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும் ,அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள் .

இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது .ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே .இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே .ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை ,ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.

இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார் .கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்..ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள் .ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம் ..நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?

முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர் .

சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை..இதோ பார் .நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி ,இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து ,தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் ,கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள் .அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது ,இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு ,சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது...
"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.


மதிநுட்பத்தோடு செயல்பட்டு ,நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!


படம் :நன்றி -விகடன்

Monday, January 15, 2007

வியட்நாமில் மதுரை வீரன் - 3

வியட்நாமின் வர்த்தக நகரான ஹோசிமின் சிட்டி -யில் பரவலாக காணப்படும் ,குறிப்பாக தமிழர்களால் கட்டப்பட்ட இந்துக் கோவில்களைப் பற்றி முன்னர் பாகம் -1 , பாகம் -2 -ல் குறிப்பிட்டிருந்தேன் .

இம்முறை அவ்விரு கோவில்களுக்கு மிக அருகிலேயே ,நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கே உரிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை காண முடிந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கோவில் திறந்திருந்தாலும் ,தேடித் தேடிப் பார்த்தும் யாரும் கோவிலுக்குள் இல்லை .ஆனால் தமிழில் அச்சிடப்பட்டுள்ள நாட்காட்டி, தொடர்ந்து யாரோ சில தமிழர்களே கோவிலை பராமரித்து வருவதைக் காட்டியது.

Photobucket - Video and Image Hosting

தமிழிலேயே ஒரு கல்வெட்டும் காணக்கிடைத்தது .அதன் படி பாதரக்குடி மகாஸ்ரீஸ்ரீ பாபுராஜா பி.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை- யின் குமாரன் கடம்பவன சுந்தரம் பிள்ளை 1928 - ல் உபயம் செய்தது என அறிய முடிகிறது .பாதரக்குடி என்பது ஊரின் பெயரா ? தமிழகத்தில் அவ்வூர் எங்குள்ளது ?

Photobucket - Video and Image Hosting

(கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களின் தரத்துக்கு பொறுத்தருளுக!)

Saturday, January 13, 2007

தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்

இது ஒரு மீள் பதிவு...

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives