சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.
சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.
இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?
இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.
ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.