Friday, April 09, 2010

மகளிர் இட ஒதுக்கீடு - அடிப்படை புரிதலும் குழப்பமும்

சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?

இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.

ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.

Tuesday, April 06, 2010

எனக்கு பிடித்த 10 தமிழ் படங்கள்

தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்

அந்த நாள் (1954)

இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .

ரத்தக்கண்ணீர் (1954)

என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .

கர்ணன் (1964)

பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)

தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாயகன் (1987)

விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.

தேவர் மகன் (1992)

நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.






மகாநதி (1993)

கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.




சதி லீலாவதி (1995)
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.





குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .





அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.

குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.

குறைந்தது 2 பேரையாவது தொடருக்கு அழைக்க வாத்தியார் சொல்லிவிட்டார் . நண்பர்கள் மருத்துவர் புருனோ மற்றும் சுரேஷ் கண்ணன் இருவரையும் அழைக்கிறேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives