சென்ற பதிவின் தொடர்ச்சியாக ...
பொதுவாகவே கிறித்துவர்களிடையே கத்தோலிக்கருக்கும் மற்ற பிரிவினருக்கும் உள்ள கலாச்சார வேறுபாடுகள் குறித்த புரிதல் கிறித்துவரல்லாதவரிடத்தில் மிகக்குறைவு என்பது நிதர்சனம் . அதுவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முரண்பட்ட பார்வை இருந்து கொண்டே இருக்கிறது .அவை பெரும்பாலும் ஆவேசப்பட்டு எதிர்க்கும் வகையாக இல்லாமல் புரிதலற்ற தன்மை குறித்த நகைப்போடு கடந்து செல்வதாகவே இருந்திருக்கிறது . கிறித்துவர்களென்றால் முன்பெல்லாம் தமிழை கடித்துத் துப்பும் ஆங்கிலோ இந்தியரை சித்தரிப்பது , மாதா கோவிலில் நடப்பதாக காட்டப்படும் நிகழ்வுகள் தமிழக கத்தோலிக்க பின்புலத்திலிருந்து மாறுபட்டு கத்தோலிக்கரல்லாத பிறரின் வழக்கங்களை காட்டுவது (உதாரணமாக திருமணத்துக்கு தமிழ் கத்தோலிக்கர் இன்றுவரை மணமகள் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி தான் கட்டுகிறார் என்பதை அறிந்திருக்காமல் ) வழக்கமான ஒன்று .
கடல் திரைப்படத்திலும் சில முரண்கள் இருக்கின்ற . 'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை ஒருவருக்கொருவர் சொல்வது போல காட்டப்படுகிறது . எங்கள் ஊர்களில் 'ஸ்தோத்திரம்' என்று யாரும் சொல்லுவதில்லை . தமிழிலேயே இன்றைக்கு கத்தோலிக்கரும் பிற பிரிவினரும் உபயோகிக்கும் விவிலியத்தின் (பைபிள்) உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் வார்த்தை அமைப்புகளில் பெரும் வேறுபாடு உண்டு . தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமே பைபிள் தான் என நினைக்கிறேன் . அப்போதைய தமிழ் மொழிபெயர்ப்பு அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த மணிபிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது . கொஞ்சம் சமஸ்கிருதம் கலப்போடு வார்த்தைகள் அமைந்திருக்கும் ..பின்னர் கத்தோலிக்க ஆயர் குழு அதை திருத்தி முடிந்தவரை தூய தமிழில் மாற்றி அமைத்த வடிவத்தையே கத்தோலிக்கர்கள் இன்று உபயோகிக்கிறார்கள் . ஆனால் பிற சபையினர் இன்னும் பழைய வார்த்தை அமைப்புகள் கொண்ட வடிவத்தையே உபயோகிக்கிறார்கள் ..உதாரணமாக ஸ்தோத்திரம் , கர்த்தர் , தேவன் , இரட்சணியம் போன்ற வார்த்தை பிரயோகங்களை கத்தோலிக்கரல்லாதவர் உபயோகிக்கும் பைபிளில் காணலாம் .ஆனால் கத்தோலிக்கர் பைபிளில் அவை முறையே வணக்கம் , மீட்பர் , கடவுள் , மீட்பு என்றிருக்கும் . இது போன்ற வார்த்தை பிரயோகங்களிலேயே கத்தோலிக்கரையும் மற்றவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம் . 'ஸ்தோத்திரம்' போன்ற வார்த்தைகள் கத்தோலிக்கரிடையே இன்று வழக்கொழிந்து விட்டது . 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க கோவில்களில் லத்தீன் மொழியில் வழிபாடுகள் நிகழ்ந்தன . பின்னர் கத்தோலிக்க திருச்சபை அவரவர் தாழ்மொழியில் வழிபாடு செய்ய ஆரம்பித்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ வைத்து பொட்டும் வைப்பது சகஜம் . அதுவும் மீனவ கிராமங்கள் இது சற்று அதிகம் . கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை தான் .ஆனால் கடல் திரைப்பட்டத்தில் 'கிறித்துவர்கள் பொட்டு வைக்க மாட்டார்கள்' என்ற பொதுக்கருத்தை அபப்டியே எடுத்துக்கொண்டு ஒரு பெண் கூட பொட்டோடு இருக்க கூடாது என கவனமாக தவிர்த்திருப்பதை பார்க்க முடிகிறது . அது ஒரு வேடிக்கையான அனுமானம் தான் .
கடல் திரைப்படத்தின் வர்த்தக தோல்விக்கு பிறகு ஜெயமோகன் தன் இணையப்பக்கத்தில் கொடுத்துள்ள சில விளக்கங்களில் ஒன்று இந்த கதை ஒரு அவிசுவாசம் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமத்தில் நடப்பதாக உள்ளது என்கிறார் . பொதுவாக மீனவர்கள் குறித்து உள்நாட்டவர் பலருக்கு ஒரு பொதுவான எண்ணம் உண்டு . மீனவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் , முரடர்கள் , அடுத்தவர் சென்று சொல்லித்தான் எதையும் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் உலக நடப்பு தெரியாதவர்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் பலருக்கும் இருப்பதை பார்க்க முடிகிறது . தமிழகத்தில் வட தமிழக மீனவ கிராமங்களுக்கும் தென் தமிழக மீனவ கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு . தென் தமிழகத்தில் மீனவ கிராமங்கள் கத்தோலிக்க திருச்சபையோடு பின்னிப் பிணைந்திருப்பதால் அவர்கள் ஒரு வகையில் சுரண்டப்பட்டாலும் , அவர்கள் அடைந்த மிகப்பெரிய நன்மை கல்வி மேம்பாடு .. தென் தமிழகத்து மீனவ கிராமங்களில் வானுயர்ந்த தேவாலயங்களுக்கு அருகில் நிச்சயமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் காணலாம் . படிப்பறிவில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன இந்த கிராமங்கள் .சமீபத்தில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் பெண் பேசும் போது மீனவர்கள் என்றால் படிப்பறிவில்லாத அப்பாவிகள் என்பது போல குறிப்பிட்டு விட்டு இடிந்தகரை மக்களுக்கு உதயகுமாரின் என்.ஜி.ஓ பிழைப்பதற்கு வேலை கொடுப்பதனால் தான் அவரை ஆதரிக்கிறார்கள் என ஒரு மிகப்பெரிய காமெடியை சீரியசாக சொன்னார் . மீனவர் பற்றிய பொதுவான புரிதல் எத்தனை அபத்தமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் . அவரைச் சொல்லி குற்றமில்லை . ஏனன்றால் உள்நாட்டில் இருக்கும் பலரும் மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்த்ததே கிடையாது . இது அவருக்கு மட்டுமல்ல , மீனவர் பற்றி ரொம்ப தெரிந்தது போல பேசும் , எழுதும் பல அறிவுஜீவிகளின் நிலையும் அது தான் .
திரைப்படம் என்பது கற்பனை கலந்தது , அதை பொதுமைப்படுத்தி குறை சொல்லக்கூடாது என்பதிலும் , ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு ஒட்டுமொத்தமாக எதையும் நிறுவுவதாகாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு . ஆனால் மீனவர் குறித்து மேற்சொன்ன பொதுமைப்படுத்துதலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் போது , அரிதாக மீனவர் குறித்து வரும் இது போன்ற திரைப்படங்களின் சித்தரிப்புகள் அந்த பொதுப்புத்தியை தாண்டிய பார்வையை தவிர்த்து அதை மீண்டும் உறுதிப்படுத்தவே செய்யும் எனும் போது அது பற்றி நமக்கு கரிசனம் வருவது தவிர்க்க முடியாதது . எந்த ஒரு குறிப்பிட்ட சித்தரிப்புக்கும் ஒரு குறைந்த பட்ச நடைமுறை முகாந்திரம் இருக்க வேண்டும் . ஜெயமோகன் சொல்ல வரும் அவிசுவாச மக்கள் நிறைந்த கத்தோலிக்க கடற்கரை கிராமம் என்பது குறித்த பொதுவான சித்திரத்தை அளிக்க முடியாது . குறிப்பிட்ட பாதிரியார்கள் , சில திருச்சபை செயல்பாடுகள் குறித்த சில அவிசுவாசங்கள் சாத்தியம் உண்டு என்றாலும் அடிப்படை கத்தோலிக்க விசுவாசத்தில் கடற்கரை மக்கள் காலங்காலமாக ஊறியவர்கள் . மீனவர்களுக்கும் கிறித்துவத்துக்கும் விவிலிய ரீதியாகவே பிணைப்பு உண்டு . இயேசுவை முதன் முதலாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்த அவரது சீடர்களில் பலர் மீனவர்கள் தான் . மீன் பிடித்துக்கொண்டிருந்தவரிடம் "இன்று முதல் நீ மனிதர்களை பிடிப்பவனாவாய்" என இயேசுவால் சொல்லப்பட்ட , பின்னர் திருச்சபையின் முதல் தலைமையாக இருந்த இராயப்பர் (St.Peter) உள்ளிட்ட இயேசுவில் 12 அப்போஸ்தலர்களில் பலர் மீனவர்கள் தான் . இயேசுவே அவர்களோடு சென்று வலை வீசினார் என பைபிளில் வருகிறது . தென் தமிழ்கத்தில் 5 நூற்றாண்டுகளாக கத்தோலிக்கராக இருக்கின்ற கடற்கரை மக்களின் கிறித்துவ விசுவாசத்தில் இவை சார்ந்த ஒரு பெருமிதமும் , கூடுதல் ஒட்டுதலும் இருப்பதை நிச்சயமாக்க சொல்ல முடியும் . மீனவ மக்களிடம் அதிமாக காணப்படும் புனித அந்தோனியார்(St.Antony) பக்திக்கும் , அந்தோனியாரின் போதனையை கடல் மீன்கள் செவிமடுத்தன என்பது போன்ற கதைகளும் காரணம் . இந்த பின்புலத்தில் கடற்கரை கிராமம் முழுவதும் அவிசுவாசிகளாக இருப்பதாகவும் அதை மாற்ற ஒரு பாதிரியார் சென்று அவர்களின் அறியாமையையும் அவிசுவாசத்தையும் போக்க முயல்வதாகவும் இன்றைய காலகட்டத்தில் சொல்லுவது நீயா நானாவில் பேசிய அந்த மாணவியிடம் வெளிபட்ட பொதுப்புத்தியிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல என்றே நினைக்கிறேன்.
மற்றபடி , பாராட்டத்தக்க சில அம்சங்களும் படத்தில் இருக்கின்றன . முதலில் மேற்சொன்ன சித்தரிப்பு முரண்பாடுகளைத் தாண்டி இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல .. நண்பர் அருள் எழில் சொன்னது போல மீனவர் சம்பந்தப்பட்ட எதைக்குறித்தும் மீனவரல்லாதவரிடம் நிலவுகின்ற அதீதமான இடைவெளியாலேயே இந்த படம் பலரால் முற்றாக நிராகரிக்கப்பட்டதோ என்ற ஐயமும் இருக்கிறது . படத்தில் கையாளப்பட்ட வட்டார வழக்கை பொறுத்தவரை இதுவரை மீனவர் குறித்து வந்த படங்களிலேயே இதுவே ஆகச்சிறந்தது . முதன்மை கதாபாத்திரங்கள் தவிர சிறு கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் சில வசனங்கள் அருமையான அவதானிப்பை உணர்த்துகின்றன . குறிப்பாக கதாநாயகனின் தாய்க்கு பின்னர் ஒரு நாளில் கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அது சார்ந்த பாடலும் மிகவும் எதார்த்தம் .
கடவுள் , சாத்தான் , குறியீடு , படிமம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கெல்லாம் ஆழம் இருப்பதாக படவில்லை என்றாலும் நிராகரிக்கத்தக்க படமல்ல 'கடல்'.