Monday, March 23, 2009

சாருவின் உளறல்கள்

தமிழகத்தில் அறிவுஜீவி என காட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ? கமல்ஹாசன் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை ,சிவாஜி கணேசனுக்கு நடிக்கவே தெரியாது ,எம்.ஜி.ஆர் ஒண்ணுமே தெரியாத முட்டாள் ,கருணாநிதிக்கு தமிழே தெரியாது ,இளையராஜாவின் இசை வெறும் இரைச்சல் மட்டுமே என அடித்து பேச வேண்டும் . அப்போது தான் 'ஆஹா ..இவன் ரேஞ்சே வேற போலிருக்கு' என்று பலர் அதிர்ந்து பார்க்க ,இதற்காகவே இருக்கும் சில அறிவுஜீவி அடிபொடிகள் உங்களை அரவணைத்துக் கொண்டு வக்காலத்து வாங்க ஓடி வருவார்கள் .

சாருநிவேதிதா இப்படிப்பட்ட அறிவிஜீவிகளில் ஒருவர் ..கெட்ட வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கத்தில் நிரப்பிவிட்டால் அவர் பெரிய இலக்கிய பருப்பாக இருக்கலாம் .அதற்காக இலக்கியம் தாண்டிய எல்லா விடயங்களிலும் அவர் ஏன் தொடர்ந்து உளற வேண்டும் என தெரியவில்லை . ராக்கெட் அறிவியல் பற்றி அவர் உளறினால் கூட சாரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் (அதுவும் கேரளாவில் தான் அதிகமாம்) இருப்பது தான் இவரின் 'அடிச்சு விடுறா..பாத்துக்கலாம்" அள்ளிவிடல்களுக்கு காரணமாக இருக்க முடியும். இதே தமிழகத்திலிருந்து போன ஷகீலாவை இவரை விட 100 மடங்கு பேருக்கு தெரியும் .அதனால் என்ன இப்போ?

சாஸ்திரிய சங்கீதத்தில் கரை கண்ட செம்மங்குடி ,பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களே மேதை என ஒப்புக்கொள்ளும் இளையராஜாவின் இசை வெறும் இரைச்சலாம் ..ஜேசுதாசின் குரலைக் கேட்டால் இவருக்கு வாந்தி வருகிறதாம் .'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் இளையராஜா பாடியது என அடித்துச் சொன்னவர் ,இப்போது ஆஸ்கார் குறித்த கமல்ஹாசனை கலாய்க்கிறாராம் .

சாரு சொல்கிறார் "
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)


ஆஸ்காரையும் இலக்கிய நோபலையும் ஒப்பிடும் இந்த அறிவிலியை என்ன சொல்வது ? ஆஸ்கார் என்பது உலக மொழி திரைப்படங்கள் எல்லாம் போட்டி போடும் இடமல்ல . 'சிறந்த பிற மொழி படம்' பிரிவைத்தவிர ஆங்கிலப்படங்கள் மட்டுமே இங்கே போட்டி போட முடியும் .பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை ..ஒரு ஈரானியப்படம் 'சிறந்த பிற மொழி திரைப்படம்' பிரிவில் ஒரு விருது பெற முடியுமே தவிர ,அதன் இயக்குருக்கோ ,நடிகருக்கோ விருது கொடுக்க மாட்டார்கள் ..காரணம் மிகச்சுலபம் ..இது ஹாலிவுட் படங்களுக்காக விருது . ஆனால் இதைத் தாண்டி சத்யஜித்ரே போன்றவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு ,குறிப்பிட்ட படம் என்பதற்காக இல்லாமல் அவரின் ஒட்டுமொத்த கலை பங்களிப்பை கவுரவிக்க ஒரு சிறப்பு விருது கொடுத்திருகிறார்கள் ..ஆனால் ரகுமானோ ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததால் அந்த வாய்ப்பை பெற்று ,விருதை தட்டிச்சென்று நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ..இது தான் கமல்ஹாசன் சொன்னது ..ஆனால் அறிவுஜீவி சாரு அதை இலக்கிய நோபல் பரிசோடு ஒப்பிடுகிறார் ..இலக்கிய நோபல் என்ன சுவீடிஷ் இலக்கியத்துக்கு மட்டுமா வழங்குறார்கள் ? எல்லா மொழி இலக்கியங்களும் போட்டி போட்டு அதில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது ..இந்த அடிப்படை வித்தியாசம் கூடவா இவருக்கு தெரியாது ? கமல்ஹாசனை நொள்ளை கண்டுபிடித்து விட்டால் இவருடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளலாம் அவ்வளவு தான் .ஆனால் தனது மேதாவித்தனத்தை இலக்கியத்தில் மட்டும் காட்டிவிட்டு போகலாமே ,சினிமா அறிவிலும் இவர் கமல்ஹாசனை விட அறிவாளி என காட்டிக்கொண்டு அப்புறம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பல்டி அடிக்க ஏன் முயல்கிறார்?

அப்புறம் அடுத்த அறிவுஜீவி வாக்கியம்
"சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. "
..

உலகின் மிகச்சிறந்த நடிகனை இந்தி சினிமாவில் தெரிந்திருந்தால் தான் ஆச்சு என்ற அடிமைப் புத்தியை விடுவோம் .இருந்தாலும் இவரின் வழிக்கே வருவோம் .இந்த சாருவுக்கு தெரிந்த நாலு கச்சடா ஹிந்திவாலாக்களுக்கு சிவாஜி கணேசனை தெரியாது தான் .ஆனால் சிவாஜி கணேசன் இருந்த துறையில் இருந்த இருக்கிற வட இந்திய மேதைகளிடம் போய் சாரு கேட்டாரா "உனக்கு சிவாஜி கணேசனை தெரியுமா?" என்று ? வேண்டுமென்றால் அமிதாப்பச்சனிடம் போய் கேட்டுப்பார்க்கலாமே ..சிவாஜி கணேசன் யாரென்று . சிவாஜி கணேசனின் எத்தனையோ படங்கள் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட போது 'சிவாஜி அளவுக்கு எங்களால் செய்ய முடியாது ' என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டு செய்தார்களே திலீப்குமாரும் ,சஞ்சீவ் குமாரும் ..அவர்களிடம் போய் கேட்டாரா இந்த சாரு ? சிவாஜி கணேசனை தன் உடன்பிறவா சகோதரனாக நினைந்து அவர் குடும்பத்தில் ஒருவராக விளங்கும் லதா மங்கேஷ்கரை போய் கேட்டாரா சிவாஜி கணேசனை தெரியுமா என்று ..அல்லது 1960 -ல கெய்ரோ படவிழாவில் கட்டமொம்மன் படத்துக்காக 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த சிறந்த நடிகர்' விருதைக் கொடுத்து விட்டு கணேசனுக்கு தனி விருந்தளித்த எகிப்து அதிபர் நாசர் ,அடுத்த முறை இந்தியா வந்த போது தேடி வந்து கணேசனை சந்தித்தாரே ,அந்த நாசரைப் போய் கேட்டாரா ? எம்.ஜி.ஆரிலிருந்து சாய்ப் அலிகான் வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் ,அந்த விருதை ஒரு முறை கூட வாங்காத கணேசனின் படங்களை 6 மாத காலம் ஆராய்ச்சி செய்து தேடி வந்து 'செவாலியர்' கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டாரா இந்த சாரு ? அல்லது 'தில்லானா மோகனம்பாளி'ம் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ரஷ்யாவைப் போய் கேட்டாரா இந்த சாரு? அல்லது மராத்தி மொழியில் தூர்தர்ஷன் முதல் ஒளிபரப்பை துவங்கும் போது இதே கணேசனை மராத்திய சிவாஜியாக நடிக்க வைத்து அதை ஒளிபரப்பி துவக்கினார்களே ..அங்கே போய் கேட்டாரா இந்த சாரு?




இவரே இவரை உலகத்தர எழுத்தாளர் என பீத்திக்கொள்வாராம் . தமிழ் நாட்டுலயே இவரை மொத்தம் 34 பேருக்கு தான் தெரியும் .. கேரளாவில் இவர் சொன்னா ஆட்சி மாறிடுமாம் ரேஞ்சுக்கு நினைப்பு வேற . இவர் ஒத்துகொண்டாலும் ஒத்துக்கொள்ளா விட்டாலும் ,இவருக்குத் தெரிந்த வடநாட்டுக்காரனுக்கு கணேசனை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கணேசன் உலகப்பெரு நடிகன் தான் .

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives