Tuesday, December 05, 2006

செவாலியே கமல்ஹாசன் ?

Photobucket - Video and Image Hosting

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன்.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை .ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ,ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை .இன்று ஒரு தயாரிப்பாளராக ,இயக்குநராக ,கதை வசன கர்த்தாவாக ,பாடலாசிரியராக ,பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன் ,தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல ,வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.

நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!

Tuesday, October 31, 2006

நாதியற்ற மீனவன்!

குமரி மாவட்டத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .அரபு முதலாளிகளின் படகுகளில் வேலை மீன்பிடிக்க செல்லும் இவர்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும் பல அரபு முதலாளிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரும்பாடு .பட்ட கடனை அடைக்க முடியாமலேயே ஊர் திரும்பியவர்கள் ஏராளம்.

இந்நிலையில் கடந்த ரம்ஜானுக்கு 4 நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் படகில் மீன் பிடிக்க சென்ற போது கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு எனது நண்பர் ஒருவர் பலியாகி விட்டார் .சவூதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த நண்பர் படகு ஓட்டுபவராகவும் இருந்திருக்கிறார் .ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கொள்ளையர்கள் தாக்குவது சகஜமாக நடக்கக் கூடியதாம் .வழக்கமாக கடற்கொள்ளையர்கள் வந்து விட்டால் படகை நிறுத்திவிட வேண்டுமாம் .அவ்வாறு செய்தால் அவர்கள் துப்பாக்கி முனையில் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டு சிறிது தாக்கி விட்டு சென்று விடுவார்களாம் .ஆனால் அவர்களை பார்த்த பின்னரும் படகை நிறுத்தாமல் சென்றால் முதலில் படகை ஓட்டுபவரை குறிவைத்து சுடுவார்களாம் .இங்கு நடந்தது அது தான்.

கடற்கொள்ளையர்களை பார்த்தவுடன் ,நண்பர் படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார் .அவர்களும் குறி வைத்து சுட்டதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார் .எங்கள் ஊரைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் கழுத்தில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலையிலுள்ளார்.

அநியாயமாக இறந்து போன இந்த நண்பர் ,பள்ளியில் என்னோடு பயின்றவர் .குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புக்கு மேல் தொடர முடியாமல் மீன்பிடித் தொழிலில் இறங்கியவர் .எங்கள் ஊரில் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு இளைஞர் இயக்கத்தை தொடங்கி ,பின்னர் மீன்பிடிக்கும் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு பல்வேறு பணிகளை செய்த போது ,மீன்பிடிக்கும் இளைஞர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த நண்பர் .இளைஞர் இயக்கத்தின் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்படும் சுதந்திர தின விழாக்களை முன்னின்று நடத்தியவர் .திருமணமாகி குழந்தைகள் இருக்கின்ற சூழலில் ,இளம் மனைவியைவும் குழ்ந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு அநியாயமாக சென்று சேர்ந்து விட்டார்.

ரம்ஜான் விடுமுறை காலம் என்பதால் அவருடைய உடல் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கப்படவேயில்லையாம் .கண்ணீரும் கம்பலையுமாக ஊரே அவர் உடலுக்காக காத்திருக்கிறது. இது பற்றிய செய்தி கூட எந்த பத்திரிகையிலும் வந்ததாக தெரியவில்லை.

"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை"

Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் முடிவு - விஜயகாந்தின் உள்குத்து

கொஞ்ச நாளாகவே விஜயகாந்த் செய்யும் அரசியலின் மீது எனக்கு ஒரு சந்தேகம் .அந்த சந்தேகம் இப்போது உண்மையாகும் அறிகுறிகள் தெரிகின்றன.

தனிக்கட்சி ஆரம்பித்தது முதலே விஜயகாந்த் திமுக-வையும் கலைஞரையும் கடுமையாக தாக்கி வருகிறார் .இன்று தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக காட்டிக்கொள்ளும் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கலைஞர் அபிமானி என அறியப்பட்டவர் .திமுகவினர் விஜயகாந்தை தங்கள் கட்சி அபிமானி என்றே முன்பு அறிந்திருந்தனர் .ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு அவர் திமுக ,அதிமுக இரண்டையும் தாக்கினாலும் ,திமுக எதிர்ப்பை அளவுக்கு அதிகமாகவே செய்து வருகிறார் .அதிமுக-வை பட்டும் படாமல் ஒப்புக்கு மட்டுமே தாக்குவதோடு தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக முன் நிறுத்தி வருகிறார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவருடைய வருகை அதிமுகவை விட திமுகவுக்கே வாக்கு இழப்பாக இருக்கும் என பத்திரிகைகள் ஆரூடம் சொன்னன. அவரும் ஏதோ திமுகவை எதிர்த்தே கட்சி ஆரம்பித்தது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதிலுள்ள சூட்சுமம் என்னவாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு ஓட்டு என்பது 50% மேல் உள்ளது .இதில் பெரும் பகுதியை அதிமுக அறுவடை செய்து வந்தது .தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மூலம் கிடைக்கும் சொற்ப சதவீதத்தோடு கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களில் பெரும் பகுதியை கைப்பற்றுவதே விஜயகாந்தின் திட்டமாக இருக்க முடியும் .அதோடு எம்.ஜி.ஆர் அபிமானிகளின் ஓட்டுக்களையும் பெற முயல்வது .அதற்கு ஒரே வழி கலைஞரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது .

இதன் மூலம்
1.கலைஞரை எதிர்ப்பதற்காக மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி விஜயகாந்துக்கு வாக்களிக்கும்.

2.கலைஞர் எதிர்ப்பு என்ற தாரக மந்திரத்தை கொண்டே எம்.ஜி.,ஆர் வெற்றி பவனி வந்தது போல ,கலைஞர் எதிர்ப்பாளராகவும் எம்.ஜி.ஆர் பக்தராகவும் காட்டிக்கொண்டால் ,கலைஞர் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜெயலலிதாவை வேண்டாவெறுப்போடு ஆதரித்து வந்த எம்.ஜி.ஆர் அபிமானிகள் ஓட்டுக்களையும் பெற முடியும்.

3.ஜெயலலிதாவை விட கலைஞரை அதிகமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்து தன் பக்கம் திரும்புவார்கள்.

இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %


கலைஞரும் விஜயகாந்தும் உள்குத்து கூட்டணி அமைத்துக்கொண்டு ,கலைஞர் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பு பயணம் வெற்றிப்பாதையில் செல்வது போலத்தான் தெரிகிறது.

Tuesday, October 03, 2006

இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)

இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?

Tuesday, September 19, 2006

போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை

சமீபத்தில் போப்பாண்டவர் இஸ்லாம் குறித்து பேசிய சில கருத்துக்கள் உலகம் முழுதும் இஸ்லாமியர்களின் கோபத்தை கிளறி பின்னர் அவரே மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது ."முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்" என்னும் பொருள் பட 14- நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மேற்கோள்காட்டி அவர் பேசியிருக்கிறார் .அது தன்னுடைய கருத்து அல்ல ,வெறும் மேற்கோள் தான் என்று அவர் சொல்வதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் ,இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.

உலகின் வலிமை வாய்ந்த ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இன்னொரு வலிமை வாய்ந்த மதத்தைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்வோடும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் யோசித்து பேசியிருக்க வேண்டும் .அவரவர் மனத்தளவில் சில கருத்துக்களை கொண்டிருக்கலாம் .ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் அறியாதிருந்திருக்க மாட்டார்.அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு போப் இப்போதைக்கு ,அது மேற்கோளேயானாலும் ,அதை சொல்ல வேண்டிய தேவை இல்லை .அதனால் உலகில் இணக்கமின்மை தான் அதிகரிக்குமே தவிர நன்மை விளையப்போவதில்லை .

இவருக்கு முன்னால் இருந்த போப் ஜாண் பால் அவர்களும் பல சர்ச்சைகளுக்கு ஆள்பட்டாலும் ,இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்தவர் .மசூதிக்கு சென்ற முதல் போப் என்று பெயரெடுத்தவர் .போப் பெனடிக்ட் -ம் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் .முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார் .இது வரவேற்கப்பட வேண்டியது .இத்தகைய செயல்களை போப்பாண்டவர் தவிர்ப்பதே நல்லது .முஸ்லீம்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக பயந்து அல்ல .மாறாக ,இத்தகைய பேச்சுக்கள் உலகில் எந்த நன்மையையும் கொண்டுவராது ,நல்லிணக்கத்தை கீழிறுக்கும் என்பதால் ,மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கடமை போப்பாண்டவருக்கு இருக்க வேண்டும் .

இன்னொரு கோணத்தில் ,இஸ்லாமை வன்முறையோடு தொடர்புபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டி பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .இதை கேள்விப்பட்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது . ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது?

இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய எதிர்ப்பு நியாயமானது .ஆனால் சிலர் எதிர்ப்பை காட்டிய முறை நகைப்புக்குரியது.

Friday, September 08, 2006

அன்னையே! ஆரோக்கிய அன்னையே!

Photobucket - Video and Image Hosting

அன்னையே!
ஆரோக்கிய அன்னையே!
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே!

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் உன் கருணையை கூறும்
மடல் விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தை தந்தோம்
கண்ணென எம்மை காத்தருள்வாயே!
கர்த்தரின் தாயே! துணையென்றும் நீயே!

பாடல் ஒலிவடிவம்

கருணை மழையே மேரி மாதா பாடல் -ஒலிவடிவம்

(செப்டம்பர் 8 -அன்னை மரி பிறந்தநாள் பெருவிழா)

Monday, August 28, 2006

வேட்டையாடு விளையாடு

Photobucket - Video and Image Hosting

பொதுவாகவே கமல் படம் என்றாலே ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் குறை சொல்லுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வரிசைப்படுத்துவது என்று ஒரு பெருங்கூட்டமே கிளம்பி விடும் .மற்ற நடிகர்கள் படங்களுக்கு இந்த அளவுக்கு அவர்கள் மெனக்கெடுவதில்லை . இதிலிருந்து கமல் மட்டுமே சீரியஸாக எடுத்துகொள்ளக் கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என்பது தெளிவாகிறது

கமல் என்னும் நடிகனிடமிருந்து இன்னொரு 'குருதிப் புனல்'-ஐயும் கவுதமிடமிருந்து இன்னொரு 'காக்க காக்க'-வையும் பலர் எதிர் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது . 'வேட்டையாடு விளையாடு' குருதிப்புனல் அளவுக்கு நேர்த்தியான கமல் படமல்ல .காக்க காக்க-வின் சுவடுகளை மறைக்க இயக்குநரால் முடியவில்லை தான் .தமிழில் மிகச்சிறந்த படம் என்று இப்படத்தை சொல்ல முடியாது தான் .ஆனால் போலிஸ் என்றால் 'வால்டர் வெற்றி வேல்" அல்லது சந்து முனையில் பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே!

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை .ஆனால் காட்சி அமைப்புகள் நேர்த்தி படத்தின் ஓட்டத்தை சீராக கொண்டு செல்கிறது .படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது பொதுவாக பலரும் கருதினாலும் ,எந்த இடத்திலும் போரடித்ததாக எனக்கு நினைவில்லை.

கமல் என்ற மகா கலைஞனுக்கு இந்த பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி .யானைப் பசிக்கு சோளப்பொரி! இதற்கு கமல் தேவையா? -என்று என் நண்பர் கேட்டார் .நானும் தமிழில் உள்ள மற்ற எல்லா நடிகர்களையும் ஒவ்வொருவராக இதில் பொருத்தி மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன் .கமலின் மகத்துவம் தெரிந்தது .40-களில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராகவன் பாத்திரத்துக்கு இந்த அளவுக்கு கம்பீரத்தையும் ,பண்பட்ட தோற்றத்தையும், இயல்பையும் ,ஒற்றை வரிகளில் பொட்டிலடிதாற் போல் புரிய வைக்கும் நேர்த்தியையும் வெளிக்கொணர கமலை விட்டால் வேறு யாரால் முடியும்?கமலின் முந்தைய சாதனைகளை கணக்கிலெடுத்துக் கொண்டால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல் அல்ல .ஆனால் டி.ஜி.பி ராகவன் என்ற பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் தான் .மற்ற இளைய நடிகர்களுக்கு ஒரு எதிர் கால பாடம்.

இயக்குநர் கவுதமைப் பொறுத்தவரை காக்க காக்க-வை இன்னும் மறக்கவில்லை என தெரிகிறது . அது போலவே இதிலும் வில்லன் நீள தலைமுடி வைத்துக்கொண்டு ,அதே பாணியில் வசனம் பேசுகிறார் .காக்க காக்கவில் ஹீரோவின் நண்பராக வந்தவர் இதில் வில்லனாக வருகிறார் . மருத்துவம் படிக்கும் இரு வில்லன்களுக்கும் ஏன் இவ்வளவு வெறி என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் போதுமானதாக இல்லை . வில்லன் முடியை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு மரணமில்லா பெருவாழ்வு தரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ,ஏழைகளுக்கு சேவை செய்யப்போவதாகவும் உச்சஸ்தாயில் கத்தவிட்டு என்ன சொல்ல முயல்கிறார் இயக்குநர் என்பது புரியவில்லை.

கமலினி சில நிமிடங்கள் வந்து மனதில் நிற்கிறார் .ஜோதிகா -கமல் உரையாடல் ,பின்னர் காதல் தமிழ் சினிமா வரையறைகளுக்குள் வராமல் இயல்பாக இருக்கிறது . "சாப்ட்வேரா.. இல்லைங்க..நான் போலிஸ்..ஹார்ட்வேர்" என்று சொல்லும் போது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டர் அதிர்கிறது .இப்படி பல இடங்களில் கமலின் ஓரிரு வார்த்தைகள் ,டைமிங் ரசிக்க வைக்கின்றன. இன்றிலிருந்து நீயும் குழந்தையும் என் சொந்தம் என்று கமல் சொல்லும் போது ஜோதிகா உணர்ச்சிகளை அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார்.

தமிழில் ஓளிப்பதிவில் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் .சேஸிங் காட்சியில் கேமராவை போட்டு தலைகீழாக புரட்டியது தவிர ,படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது .

அமெரிக்க போலிஸ் அதிகாரிகளோடு உரையாடல்கள் இயல்பாக ஆங்கிலத்தில் ,தமிழ் சப்-டைட்டில்களுடன் காட்டப்படுகின்றன .ஹேராமில் இது போல தமிழில் சப் -டைட்டில் போட்டிருக்கலாம் என்று குறை சொன்னார்கள் .இப்போது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றுமே புரியாதே ,அதனால் அமெரிக்க அதிகாரி ஜுனூன் தமிழிலேயாவது பேச விட்டிருக்கலாம் என்று குறை சொல்லுவார்கள் .அப்படியே செய்து விட்டால் அமெரிக்க அதிகாரி தமிழ் பேசுவது போல அபத்தக்காட்சிகள் கமல் படத்தில் என்று மீண்டும் குறை சொல்லுவார்கள் .

இசையைப் பொறுத்தவரை பின்னணி இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை .பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கின்றன .ஹரிஸ் ஜெயராஜைப் பொறுத்தவரை அவரின் சில பாடல்களில் தேவாலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவப்பாடல்களின் சாயல் இருப்பது போல எனக்குத் தோன்றும் .குறிப்பாக "பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .சின்ன வயதில் அவர் தேவாலய இசைக்குழுவில் இருந்ததால் அந்த பாதிப்பு இன்னும் மறையவில்லை போலிருக்கிறது.

குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல ."சாமி' போன்ற படங்கள் 150 ஓடுமென்றால் ,இந்த படம் 300 நாள் ஓடும் தகுதியுள்ளது .தமிழ் ரசிகர்கள் இதை உணர வேண்டும்.

Friday, July 21, 2006

மகா கலைஞன் நினைவாக

Photobucket - Video and Image Hosting

காலத்தை வென்ற கலைஞனே !
ஞாலத்தில் உனை மிஞ்சும்
நடிகன் நானறியேன்.

தமிழரின் பெருமையே!
வாழ்க நீ தந்த கலை!


Photobucket - Video and Image Hosting

(ஜூலை 21 -நடிகர் திலகம் நினைவு நாள்)

Friday, July 07, 2006

பிரேசில் தோற்ற கதை

பிரேசில் தோற்ற கதை
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

Thursday, July 06, 2006

இந்து மதம் -சில சந்தேகங்கள்

சமீபத்திய ஐயப்பன் கோவில் குறித்த சர்ச்சைகளிலும் ,அது தொடர்பான நம்பிக்கைகளோடு இணைந்த விவாதங்களிலும் எனக்கு கருத்து இருந்தாலும் இது வரை கலந்து கொள்ளவில்லை .ஆனால் சில அடிப்படை நிலைப்பாடுகள் குறித்த நியாயமான ஐயப்பாடுகள் எனக்கு இருப்பது மறுக்க முடியாது .அவை ஒரு வேளை என் அறியாமையினாலோ அல்லது சரியான புரிந்துணர்வின்மையாலோ தோன்றியிருக்கலாம் .ஒரு கிறிஸ்தவனான நான் இது குறித்து பொதுவில் அதுவும் வலைப்பதிவுகளில் அறிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகளை முன் வைத்தால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற குழப்பம் காரணாமாக நீண்ட தயக்கம் இருந்து வந்திருக்கிறது.

450 வருடகாலமாக கிறிஸ்தவர்களாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்த நான் ,என் பிறப்பால் தான் நான் கிறிஸ்தவன் ஆனேனேயன்றி ,என் சுய தேடலின் விளைவாக நான் கிறிஸ்தவன் ஆகவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன் .அதனால் ஏற்பட்ட ஒரு சிறு தெளிவில் பிற மதங்களை மரியாதையோடும் ,திறந்த மனத்தோடும் தான் நான் அணுகி வந்திருக்கிறேன் .நண்பர்கள் பலரோடு பல முறை இந்து கோவில்களுக்கு செல்ல நேரிட்ட போது ,அங்கு விபூதி வைத்துக்கொள்வதிலோ ,அல்லது என் நண்பர்கள் அர்ச்சனை செய்யும் போது என்னுடைய பெயரையும் சேர்த்துச் சொன்ன போதும் எனக்கு சிறு நெருடலோ ஏற்பட்டதில்லை .அங்கிருக்கின்ற ஆச்சார முறைமைகளுக்கு என்னால் (என் அறியாமையால்) எந்த சங்கடமும் நேர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தால் கூடுதல் கவனம் எடுத்து மரியாதையுடன் பணிவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன். அந்த தகுதியின் அடிப்படையில் எனது இந்து சகோதரர்களிடம் சில விளக்கங்கள் கேட்கலாமென்றிருக்கிறேன்.இவை சமீபத்திய சர்ச்சைகளுக்கு சம்பந்தம் இல்லாத பொதுவான கேள்விகளாகவும் இருக்கலாம்.

(சில கேள்விகள் குமரன் அவர்கள் பதிவில் கேட்கப்பட்டு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார்)

1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்கு செல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை (எனக்கு தெரிந்து சிலர் கிறிஸ்தவ கோவில்களுக்கு கூட வந்திருக்கிறார்கள் ,ஆனால் சைவக்கோவிலுக்குள் வர மறுத்து விட்டார்கள்). இது ஏன்?

2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை .பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஒருவன் செய்த தீவினையினால் ஏற்பட்டதாக இருந்தால் நியாயம் இருக்கிறது .உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டான் .அதனால் அது 'தெய்வ குற்றம்'ஆகி அவன் மேல் இறைவன் கோபமாக இருக்கிறார் என்றால் அது புரிந்து கொள்ளக்கூடியது .ஆனால் பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை மீறுவதாலேயே ஏற்படுவது போலவும் ,தனிப்பட்ட முறையில் இறைவனை நாம் முறைத்துக் கொள்ளுவதால் அவர் கோபப்படுவது போலவும் அதனால் 'தெய்வ குற்றம்' ஆகிவிட்டதாகவும் சொல்லுவதாகவே நான் புரிந்து கொண்டிருக்கிறேன் .ஆனால் இதற்கு சில மனதளவில் இல்லாத வெளி அடையாங்கள் மூலம் சிலவற்றை செய்யும் போது கடவுள் மனம் குளிர்ந்து தெய்வ குற்றத்தை போக்கி விடுவதாகவும் நம்பப்படுகிறதே ? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை .இறைவன் அகத்தை விட புறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நிறுவுவது சரியா?

3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? மனிதர்களுக்கு அதனால் சில அசவுகர்யங்கள் இருக்கலாம் ,ஆனால் இறைவன் சன்னிதானத்தில் அது தீட்டாக பார்க்கப்படுவது எந்த விதத்தில் ?

4.மீரா ஜாஸ்மின் என்ற பெண் கிறிஸ்தவர் .அவர் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு கோவிலுக்குள் சென்று வணங்கி விடுகிறார் .ஒரு இடத்தின் புனிதத் தன்மையை பற்றிய அறிவு இல்லாமல் நடந்துகொள்ளக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பது தவறு ஒன்றும் இல்லை .கிறிஸ்தவ ஆலயத்தில் யாரும் சென்று வழிபடலாம் ,திருப்பலியில் கலந்துகொள்ளலாம் என்றாலும் ,திருவிருந்தில் கிறிஸ்தவர் அல்லாதவர் கலந்து கொள்வதை தவிர்க்க அறிவுற்த்தப்படுகிறார்கள் .காரணம் ..திருப்பலியில் திருவிருந்துப்பகுதி என்பது இயேசுவின் கடைசி ராவுணவு நிகழ்ச்சியை நினைவு கூறும் நிகழ்ச்சி .இயேசு அப்பத்தை பிட்டு அதனை தன் உடலாகவும் ,கிண்ணத்தில் இருக்கும் ரசத்தை தனது இரத்தமாகவும் உணர்ந்து உண்ணுமாறு தமது சீடர்களுக்கு பணித்தது போல ,குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக இருக்க மக்கள் சீடர்களாக இருக்க ,அதே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .எனவே அதனை உட்கொள்ளுவோர் அதன் பொருளை உணர்ந்து அதனை செய்ய வேண்டும் .அந்த சிறிய அப்பத்தில் இயேசு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு உண்ண வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் ஞானஸ்நானம் பெற்றவர் அனைவரும் இதை உண்பதற்கு தகுதிபடைத்தவராகி விடுவதில்லை .விபரம் அறிகிற வயதுக்கு வந்த பின்னர் இது குறித்த அறிவு புகட்டப்பட்டு ,தனிப்பயிற்சிகள் அளிக்கப்பட்டே இதில் கலந்துகொள்ள வேண்டும் ..அந்த அடிப்படையிலே தான் மற்றவர் இதன் பொருளுணராது ஏதோ அப்பம் கொடுக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது .ஆனால் தப்பித்தவறி ஒருவர் தெரியாமல் அதை உண்டால் அதனால் ஒன்றும் தீட்டு கிடையாது .அப்படி நடைபெறுவது தடுக்கவும் முடியாது..அந்த வகையில் மீரா ஜாஸ்மின் செய்தது தவறு தான் .அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தான் என்னை உறுத்துகிறது .10000 -ரூபாய் கட்டுவது தான் தண்டனையாம் .அதைக்கொண்டு அந்த தீட்டு நீங்க சடங்குகள் நடத்தப்படுமாம் .முதலில் 'தீட்டு' என்றால் என்ன ? 'தீட்டை களைவது' என்றால் என்ன?


(இவை எனது முதற்கட்ட சந்தேகங்கள் தான்..இதற்கு கிடைக்கும் பதில்களின் கோணம் அறிந்த பின் மற்ற கேள்விகள் கேட்கலாமென நினைக்கிறேன் ..தயவு செய்து உண்மையிலேயே நான் உளப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்பதாக கருதுவோர் பதிலிறுத்தால் மகிழ்ச்சியடைவேன் )

Thursday, June 29, 2006

எனக்கு பிடித்த ஆறு..

ஆறு போட அழைத்த சகோதரி லிவிங் ஸ்மைல் மற்றும் விடாது கறுப்பு இருவருக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக தமிழ்மணம் பக்கமே அதிகமாக வர முடியாத நிலை .இருப்பினும் அவரச ஆறு!

பிடித்த பேச்சாளர்கள்

1.வலம்புரி ஜாண்
2.சுகி சிவம்
3.ப.சிதம்பரம்
4.அண்ணா
5.வைகோ
6.பெரியார் தாசன்

பிடித்த நடிகர்கள் / நடிகைகள்

1.நடிகர் திலகம்
2.கமல்ஹாசன்
3.நாகேஷ்
4.மம்மூட்டி
5.சாவித்திரி
6.எம்.ஆர்.ராதா

பிடித்த இசை/பாடகர்கள்

1.இசை ஞானி இளையராஜா
2.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
3.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
4.பி.சுசீலா
5.வாணி ஜெயராம்
6.டி.எம்.எஸ்

பிடித்த பாடல்கள்

1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது -வறுமையின் நிறம் சிவப்பு
2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?
3.மலர்ந்தும் மலராத -பாசமலர்
4.எங்கே என் ஜீவனே -உயர்ந்த உள்ளம்
5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை
6.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை

பிடித்த படங்கள்

1.சலங்கை ஒலி
2.குருதிப்புனல்
3.மகாநதி
4.தேவர் மகன்
5.முதல் மரியாதை
6.முள்ளும் மலரும்

படித்ததில் பிடித்தது

1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்

என்னை பாதித்தவர்கள்

1.தந்தை பெரியார்
2.பெருந்தலைவர் காமராஜர்
3.நடிகர் திலகம் சிவாஜி
4.அப்துல் கலாம்
5.கக்கன்
6.கலைஞர்

பிடித்த இடங்கள்

1.எங்கள் ஊர் பள்ளம் ,குமரி மாவட்டம்
2.கேரளா
3.அங்கோர் வாட் ,கம்போடியா
4.கோத்தா திங்கி ,மலேசியா
5.கீரிப்பாறை ,குமரி மாவட்டம்
6.முட்டம் ,குமரி மாவட்டம்

அடிக்கடி உலாவுவது

1.தமிழ்மணம்
2.forumhub
3.திண்ணை
4.தமிழ்.சிபி
5.தட்ஸ்தமிழ்
6.விகடன்.காம்

மனதிற்கு இதம்

1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்
2. அதிகாலையில் தூரத்தில் கேட்கும் சுப்பிரபாதம்
3. குழந்தையின் சிரிப்பு
4. பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்
5. மாலை நேர கடற்கரை உலாத்தல்
6. தமிழ் மொழி

நான் அழைக்கும் ஆறு பேர்

1. டி.பி.ஆர்.ஜோசப்
2. தருமி
3. பாலசந்தர் கணேசன்
4. நெல்லை சிவா
5. ரஜினி ராம்கி
6. முத்து தமிழினி

Tuesday, May 23, 2006

கமல் எழுதிய தலையங்கம்

கமல்ஹாசன் .தனித்து நிற்கும் கலைஞன் .தான் சார்ந்திருக்கும் துறை மூலம் தன்னை வளர்த்திக்கொள்ளும் போதே அந்த துறையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல துடிக்கும் துடிப்பு மிக்க 50 வயது இளைஞன் .தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று கூட அறியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நடிகர்களுக்கு மத்தியில் அரசியல் பற்றி தெளிவான சிந்தனைகளும் ,எந்த பிரச்சனையிலும் தனக்கென்று ஒரு நிலைப்பாடும் கொண்ட அறிவாளி .
15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களுக்காக 'மய்யம் ' என்னும் இதழை நடத்தி வந்த போது ,1990-ல் ரசிகர்களுக்கு கமல் தீட்டிய ஒரு தலையங்கம் இதோ...


----------------------------------------------------------------------------------------------
வெளிநாடு சென்று புளங்காகிதத்துடன் வீடு திரும்பும் வேளையில் ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை நடக்கும் பயணத்தில் பாதையிலிருக்கும் குழிகளில் கார் விழுந்து எழும் பொழுது நமது நாட்டை நிந்தனை செய்யும் பழக்கம் யதார்தமாக எல்லோருக்கும் வருவதுண்டு

முதல் குழியில் விழுந்ததும்-
"பாருய்யா ...இது தான் நம்ம நாடு.ஜெர்மனியைப் பார்...ஐந்து கார்கள் ஒரே திசையில் அழகாய் போகக் கூடிய அகலமான பாதைகளை அங்கே ஹிட்லர் காலத்திலேயே அமைத்து விட்டார்கள் .இன்னும் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம்.

அமெரிக்காவில் நினைத்த இடத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது தெரியுமா? இங்கே பார் தெருவுக்கு தெரு சுவரொட்டி .அதை பசுமாடு இழுத்து தின்னுகிறது.

அந்த ஊரில் மாடையெல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள் .இங்கே மனிதர்களுக்கே ரோட்டை கடக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிப்பர் .இந்த விமர்சனம் நானும் செய்து கொண்டிருந்தேன் போன வருடம் வரை.

இந்த வருடம் அமெரிக்கா சென்று ,அவர்களுடம் நெருங்கிப் பழகவும் ,அவர்களின் சில சினிமாத் தொழில் நுட்பத்தைச் சற்றே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த பொழுது -நான் என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . நான் என்ன செய்து விட்டேன் நாடு மேம்பட ? குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?

கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான் குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று நான் யோசிக்க மறந்தது ஏன்?

எனது நறகலும் கலந்து வரும் மணம்தானே அந்த கூவத்தில் மணம் என்பதை யோசித்துப் பார்த்தேன். அரசியல்வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ்ட்சர்லாந்தில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் செய்யலாம் .ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவுல் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் எங்கோ என்னுடைய பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்துப் பார்க்கையில்..இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்ப் பேச்சு அடங்கி விடுகிறது.

சற்றே குற்றவுணர்வு என்னைத் தாக்கி என் தொழிலில் நான் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது..

அப்படி விமர்சித்துப் பார்த்த பொழுது 'செய்ததெல்லாம் போதாது' என்னும் சபையடக்கமான சொல்லை விட அதிகமான சில விஷயங்கள் புரிகிறது .வலிக்கிறது.

"என்னுடைய தொழிலில் நான் என்ன செய்து விட்டேன்?"

" 'அப்பு' செய்தீர்களே ..'நாயகன்' செய்தீர்களே.. " 'மூன்றாம் பிறை' செய்யவில்லையா ?

இரண்டு முறை ஜனாதிபதி பரிசு வாங்கவில்லையா ? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ,எனது ரசிகர்களும் என்னுடைய சோர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நினைப்பவர்களும் சொல்லுவார்கள்.

ஆனால் யோசித்துப்பார்த்தால் - இந்தியா..இந்தியாவின் முதுகைத் தட்டிக்கொள்வது போதாது.கமல்ஹாசன் ,கமல்ஹாசனின் முதுகைத் தட்டிக் கொள்வது போதாது.

நாம் உலகத்துடம் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும் .எனது சினிமா உலகத்திற்கு புரிய வேண்டும். எனது குரல் உலகத்துக்கு கேட்க வேண்டும்.

அப்படி செய்ய முடியுமாயின் -அமெரிக்காவை விட அழகாக..ஜெர்மனியை விட அகலமான பாதைகளை நாம் செய்ய முடியும்.

இதற்கு நாமென்ன செய்ய வேண்டும்?

"நீங்கள் சினிமா நடிகர். காரில் வசதியாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் .நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் .நானென்ன செய்ய முடியும் ?" என்று ஒரு ரிக் ஷா தொழிலாளி கேட்பானாயின் - செய்ய முடியும்.

கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.

உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.

நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.

"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .

இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை நான் உணர்கிறேன். நான் உபதேசம் செய்வது உனக்கல்ல -எனக்கே!

இதை நான் பேசிப்பார்த்துக் கொள்வதன் மூலம் -இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு தெளிவாய்ப் புரிகிறது .அவ்வளவே!

இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட எனக்கு நானே எழுதிக் கொண்ட கடிதம்.

பொங்கல் வாழ்த்துக்களுடன்..அன்பன் ..கமல்ஹாசன்.

Friday, May 19, 2006

யார் நல்லவர்? யார் ஏழை?

பொதுவாவே புனித பிம்பங்களாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் புத்திசாலித்தனமாக பேசிக் கொள்வதாக நினைத்துக்கொண்டு சில கருத்து முத்துக்களை உதிர்த்து விடுவார்கள் "இப்போ இருக்கிற அரசியல் வாதிகளையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு ஒரு நல்லவரா ,உத்தமரா ,நாட்டுப்பற்றுள்ளவரா பார்த்து அதிகாரத்த ஓப்படைக்கணும் .அப்ப தான் நம்ம நாடு உருப்படும் " அப்படீண்ணு ஒரே வரியில பெரிய தீர்வு சொல்லிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள் போல .விசுவின் அரட்டை அரங்கங்கள் போல உச்சஸ்தாயி உளறல்களில் இதை அதிகம் கேட்கலாம் .

இப்படிப்பட்டாவர்களை தனித்தனியே அழைத்து "நீங்க அற்புதமா சொன்னீங்க .சரி சொல்லுங்க .யாருங்க அந்த நல்லவர் ,உத்தமர் ?" -ன்னு கேட்டுப்பாருங்க .அநேகமா அவங்க அப்பா அல்லது சித்தப்பா அல்லது மாமா -வைச் சொல்லுவாங்க .இப்படி எல்லோரும் ஆளாளுக்கு இவர் தான் நல்லவர் ,அவர் தான் நல்லவர் -ன்னு சொல்லப்போக ,இருக்கதுல ரொம்ப நல்லவரை கண்டுபிடிக்க 'நல்லவரோமீட்டர்' கருவியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

"ஐயா ! உங்களுக்கு நல்லவரா தெரியுறவர இவரு ஒத்துக்க மாட்டேங்குறாரே ? அவர் சொல்லுறவர நீங்க ஒத்துக்க மாட்டேங்குறீங்க .இப்படியே நாட்டுல உள்ள கோடிகணக்கானவர்களும் ஒத்துக்குற நல்லவர உத்தமர எப்படி கண்டுபிடிக்குறது ?"

.."அட அப்படீண்ணா எல்லோரும் அவங்களுக்கு தோணுறவங்கள சொல்லட்டும் .யாரை அதிகம் பேரு சொல்லுறாங்களோ அவங்கள எடுத்துக்குவோம் "..

"ஐயா ! அதைத் தானே இப்போ தேர்தல்-ங்குற பேர்ல பண்ணிட்டிருக்கோம் . நீங்க என்ன தொடங்குன இடத்துக்கே வந்து நிக்குறீங்க ?

"என்னங்க சொல்லுறீங்க .அதுக்காக இப்படி அநியாயம் பண்ணுறவங்களை நிறைய பேர் தேர்ந்தெடுத்தா எப்படிங்க ஏத்துக்க முடியும் ?"

"சரி! நீங்க சொல்லுறத பார்த்தா உங்க அப்பா ,சித்தப்பா அல்லது மாமாவை தேர்ந்தெடுக்குற வரைக்கும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க போல"

"ஹி..ஹி"
---------------
"அப்புறம் பாத்தீங்கண்ணா இந்த இட ஒதுக்கீடு முறை ஒண்ணும் சரியில்லீங்க .சாதி அடிப்படையில கொடுக்காம ,பொருளாதார அடிப்படையில கொடுக்கணும் .அது தான் சரிப்பட்டு வரும்"

"நீங்க சொல்லுறது சரி தாங்க .ஆனா யாரெல்லாம் ஏழைங்க-ன்னு எப்படி கண்டுபிடிக்குறது?"

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க .பார்த்தா தெரியாதா ? வசதி இல்லாதவங்க ,கஷ்டப்படுறவங்க இவங்கள ஏழைங்கண்னு முடிவு பண்ணனும் "

"யாரு முடிவு பண்ணனும் ? ஏழைங்கல்லாம் வரிசையில் வந்து நிற்க உண்மையிலேயே வசதியானவங்க பெருந்தன்மையா வரிசையில வந்து நிக்க மாட்டாங்கண்ணு சொல்லுறீங்களா?'

"குதர்க்கமா பேசாதீங்க! அதான் ரேசன் கார்டுல வருமானம் போட்டிருக்கில்ல"

"அடேங்கப்பா ! ரேசன் கார்டுல போட்டுட்டாலும் ...எங்கூரு பண்ணையார் 200 ஏக்கர் நிலம் வச்சிருக்காரு .அவர் ரேசன் கார்டுல மாசம் 1000 ரூபா வருமானம்-ன்னு போட்டிருக்கு .சாராயக்கடை பெரும்புள்ளி மாச வருமானம் 200 ரூபாய்ன்னு போட்டிருக்கு .பாவப்பட்ட சண்முகம் வாத்தியாருக்கு மட்டும் கரெக்டா 8000-னு போட்டிருக்கு . ரயில்வேயில வேலை பாக்குறவங்க குடும்பத்துக்கே இலவச ரயில் பயணம் .பஸ் டிரைவர் புள்ளைக்கு பஸ் பயணம் இலவசம் .ஆனா பள்ளிக்கூடத்துல வாத்தியார் புள்ளைக்கு மட்டும் தான் ஸ்காலர்ஷிப் கிடையாதாம் .அரசாங்க ஊழியராம் .ஆனா பண்ணையார் புள்ளைக்கும் ,சாராயக்கடை காரன் புள்ளைக்கும் ஸ்காலர்ஷிப் உண்டாம் .பாவம் அவங்க தான் ஏழைங்களாச்சே."

"என்ன நக்கலா !இப்போ என்ன தான் சொல்லுறீங்க ! சாதி சார்புல குடுத்து அனுபவிக்குறவனே அனுபவிக்குறான் .அதனால தான் பொருளாதார அடிப்படையில கேக்குறோம் "

"பொருளாதார அடிப்படையில மட்டும் என்ன வாழுதாம் -ன்னு இவ்வளவு சொல்லியுமா புரியல்லயா ? .ஓய்! சாதி அடிப்படையில குடுக்குறதுல ஓட்டை இருந்தா ,அத அடைக்குறதுக்கு என்ன பண்ணலாம்-ன்னு உருப்படியா எதாவது சொல்லும் .அதை விட்டுட்டு பெருசா பொருளாதார அடிப்படையில குடுத்தா பிரச்சனை தீர்ந்துடும்-ன்னு கப்ஸா உட்டுட்டு அலையாதேயும்"

"ஆளை விடுயா!"

Monday, May 15, 2006

குமரி மாவட்ட முடிவுகள் -சுவாரஸ்யத் துளிகள்

பொதுவாக தென் மாவட்டங்கள் அதிமுக கோட்டை ,தென் மாவட்டங்கள் சாதி மோதலுக்கு பெயர் போனவை என்று குறிப்பிடப்படும் போது தென் கோடியிலிருக்கிற எங்கள் குமரி மாவட்டத்தை ஒருவேளை தென் மாவட்டங்களில் சேர்க்கவில்லையா அல்லது குமரி மாவட்டத்தை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லையா என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .ஏனென்றால் குமரி மாவட்டம் ஒரு போதும் அதிமுக-வின் கோட்டையாக இருந்தது இல்லை என்பது மட்டுமல்ல ,தமிழகத்திலேயே அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கும் மாவட்டம் இது தான் என்பதும் உண்மை .அதுபோல மற்ற தென் மாவட்டங்களைப் போல ஜாதி மோதல்கள் எனக்கு தெரிந்து இல்லாத மாவட்டமும் இது தான் (1982 மதக்கலவரம் வேறு).

தமிழகத்திலேயே படிப்பறிவில் முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டம் இன்று வரை தேசியக் கட்சிகளின் கூடாரமாக இருக்கிறது .பெருந்தலைவர் காமராஜர் நாகர் கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞர் இங்கு முகாம் அமைத்து தீவிர பணியாற்றியும் மக்கள் பெருந்தலைவரை 'அப்பச்சி' 'அப்பச்சி' என்று வாஞ்சையோடு அழைத்து அமோக வெற்றி பெற செய்தார்கள் .அதனாலேயோ என்னவோ கலைஞர் அவர்கள் குமரி மாவட்டம் என்றாலே பாராமுகம் காட்டுவது உண்டு .ஒரு முறை வெறுத்துப் போய் 'நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை' என்று குறிப்பிட்டார் .பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னாலும் அவரை மிகவும் நேசிக்கும் மக்கள் நிறைந்த மாவட்டத்தில் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக கோலோச்சி வந்தது .

நாளடைவில் இந்துத்துவ கட்சிகள் இங்கு தலையெடுக்க ஆரம்பித்தன. தமிழகத்தில் சிறுபான்மை மதத்தினர் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருப்பதால் இயல்பாக இந்த மாவட்ட அரசியலிலும்,பொருளாதாரத்திலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பதை சில இந்து அமைப்புகள் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிலே ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் .தமிழகத்தில் பாஜக காலூன்றாத காலத்திலேயே பத்மநாதபுரம் தொகுதி முதல் பாஜக எம்.எல்.ஏ -வை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

அதிமுக-வைப் பொறுத்தவரை திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றிருக்கிறது .நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதன் நிலைமை அந்தோ பரிதாபம் தான். கேரள எல்லையில் அமைந்திருக்கும் திருவட்டாறு ,விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

இந்த தேர்தலில் பலம் பொருந்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இருந்ததால் திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு இயல்பான ஒன்று தான் .ஆனால் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மதிமுக- வை கூட்டணியில் பெற்றிருந்த அதிமுக டெபாஸிட் தொகையை இழக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வழக்கம் போலவே பாளையங்கோட்டை வரை வந்த கலைஞர் ,தொல்லை மாவட்டமான குமரிக்கு பிரச்சாரத்துக்கு வராத நிலையில் அதிமுக அணியில் ஜெயலலிதா ,வைக்கோ ,சரத்குமார் என்று அனைவரும் மாவட்டம் முழுக்க பிரச்சாரம் செய்தார்கள்.


தொகுதிவாரியாக இங்கு முடிவுகளைப் பார்ப்போம்...

நாகர்கோவில் - திமுக வெற்றி

ராஜன் (திமுக) -45,354
எஸ்.ஆஸ்டின் -31,609
ரத்தினராஜ்(மதிமுக) - 21,990
உதயகுமார்(பாஜக) -10,752
தேதிமுக -3783

இது தனிப்பட்ட முறையில் என்னுடைய தொகுதி .சென்ற முறை திமுக கூட்டணியில்(திருநாவுக்கரசு கட்சி) வென்று எம்.எல்.ஏ-வாக இருந்த ஆஸ்டின் பின்னர் அதிமுகவில் இணைந்தார் .அவருக்கு சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார் .சுனாமி நேரத்தில் கட்சி சார்பாக இல்லாமல் ,தான் சார்ந்திருந்த சர்ச் சார்பில் அவர் ஆற்றிய பணி அபாரம் .அந்த நன்றி மறவாத மீனவ மக்கள் அவருக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு ,கணிசமான வாக்குகளும் இரண்டாமிடமும் ..அதிமுக கூட்டணி 3-வது இடத்தில்.

பத்மநாபபுரம் - திமுக வெற்றி

தியோடர் ரெஜினால்ட் (திமுக) -51,612
ராஜேந்திர பிரசாத்(அதிமுக) -20,546
வேலாயுதன்(பாஜக) -19777
தேதிமுக -3360

200-க்கு மேல் திமுக கூட்டணிக்கு கணித்திருந்த ஜூவியில் கூட ,அதிமுக வெற்றி பெறும் என்று கணித்திருந்த தொகுதி ,கடைசியில் அதிமுக பெற்ற வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகம் என்று முடிந்திருக்கிறது ..பாஜக ஒரு காலத்தில் கோலோச்சிய தொகுதி .அதிமுக அளவுக்கு பாஜக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் (ராஜேந்திர பிரசாத் கிறிஸ்தவர் தான்..நம்புங்கள்..ஹி..ஹி) மதரீதியில் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்று சொல்லலாம்.

குளச்சல் (காங்கிரஸ் வெற்றி)

ஜெயபால் (காங்) -50,258
எம்.ஆர்.காந்தி -29,261
பச்சைமால்(அதிமுக)-20,407
தேதிமுக - 4941

காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி என்று நினைத்திருக்க அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடத்தில் பாஜக. தேதிமுக வேட்பாளர் மீனவர் என்பதால் மீனவர் ஓட்டை பெருமளவு பிரிக்கிறார் என்று ஜூவியிலும் ,இங்கே வலைப்பதிவிலும் சொல்லப்பட்ட போது நான் அதை மறுத்தேன் .அது பொய்க்கவில்லை .மீனவ ஓட்டுக்களை இம்முறை காங்கிரஸ் அள்ளியிருக்கிறது.

கிள்ளியூர் (காங்கிரஸ் வெற்றி)

ஜாண் ஜேக்கப்(காங்) -51,016
சந்திரகுமார்(பாஜக) -24,441
டாக்டர் குமாரதாஸ் (அதிமுக) -14,056
தேதிமுக - 1743

டாக்டர் குமாரதாஸ் கோலோச்சிய தொகுதி .ஜனதா தளம்,காங்கிரஸ் ,த.மா.க சார்பாக பல முறை அமோக வெற்றி பெற்ற டாக்டர் குமாரதாஸ் ,பச்சோந்தியாக மாறி அதிமுக சார்பில் நின்றதால் மக்கள் வெறுப்பை சம்பாதித்து டெப்பாஸிட் இழந்து மூன்றாமிடத்தில் பரிதாபமாக நிற்கிறார்..அய்யோ பாவம்!

திருவட்டாறு (மா.கம்யூ வெற்றி)

லீமா ரோஸ் (மா.கம்யூ) -57,162
சுஜித்குமார்(பாஜக) -29,076
திலக்குமார்(அதிமுக) -13,353
தேதிமுக -9431

கம்யூனிஸ்ட் அமோக வெற்றி பெற ,பாஜக இரண்டாமிடத்தில் ..அதிமுக பரிதாபமாக டெப்பாஸிட் இழந்து நிற்கிறது.அதிமுக +பாஜக கூட கம்யூ ஓட்டை நெருங்க முடியவில்லை.என்னங்க நடக்குது?


விளவங்கோடு (மா.கம்யூ வெற்றி)

ஜாண் ஜோசப் (மா.கம்யூ) -64,552
பிராங்கிளின்(அதிமுக) -19,458
பொன்.விஜயராகவன் -13,434
தேவதாஸ்(பாஜக) -12,553
தேதிமுக -7309

இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் ,இந்த சிறிய தொகுதியில் 4 முனை போட்டியில் நிகழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே சாதனை தான். வாக்கு வித்தியாசம் 45000-க்கு மேல். இதற்கு மேல் என்ன சொல்லுவது?

கன்னியாக்குமரி (திமுக வெற்றி)

சுரேஷ்ராஜன் (திமுக) -63,181
தளவாய் சுந்தரம்(அதிமுக) -52,494
தேதிமுக -5093
பாஜக -3436

மற்ற தொகுதிகளிலிருந்து தனித்து நிற்பதும் ,அதிமுகவின் மானத்தை ஓரளவு காத்ததும் இந்த ஒரே தொகுதி தான் .இங்கு வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற செண்டிமெண்ட் இந்த முறையும் தப்பவில்லை.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது...

* அதிமுக ஏற்கனவே பலவீமமாயிருந்து ,இப்போது இன்னும் சரிந்திருக்கிறது

* ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அதிமுக எதிர்ப்பு அலை பலமாகவே வீசியிருக்கிறது.

* வழக்கமாக அதிமுக -வுக்கு சாதகமான மீனவர் ஓட்டுக்கள் இம்முறை பல்வேறு காரணங்களால் வேறு அணிக்கு போயிருக்கிறது

*அதிமுக 3 இடங்களில் டெபாஸிட் தொகையை இழந்திருக்கிறது

* பரவலாக தமிழகத்தில் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருக்க ,குமரி மாவட்டத்தில் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கிறது

* பாஜக செல்வாக்கு சரிந்திருந்தாலும் ,கணிசமாக வாக்கு வங்கி இன்னும் இருக்கிறது.

* மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இங்கு விஜயகாந்துக்கு ஆதரவு மிகக்குறைவு.

* திராவிடக்கட்சிகளில் இம்மாவட்டத்தில் பலமான திமுக தன் பலத்தை கூட்டியிருக்கிறது.

* தேசியக்கட்ட்சிகள் தொடர்ந்து குமரிமாவட்டத்தை கட்டிப்போட்டிருக்கின்றன.

திமுக -வுக்கு எச்சரிக்கை மணி!

தன் தள்ளாத வயதிலும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தனது பிரச்சாரத்தினால் கூட்டணியை தூக்கி நிறுத்தி ,இன்றும் தன்னை வசீகரத் தலைவராக நிரூபித்து ,வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்தின் முதல்வராக 5-வது முறை பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

சுவாரஸ்யம் மிகுந்த இந்த தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது .

அதிமுக ஆட்சியை இழந்தாலும் ,மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழக்கவில்லை என்பதை அக்கட்சி வலிமை குறைந்த கூட்டணியிலும் பெற்ற பெருவாரியான வெற்றியும் ,வாக்குக்களும் புலப்படுத்துகின்றன .அதிமுக இதை சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது எமது விருப்பமென்றாலும் ,அதன் தலைமை அந்த அளவுக்கு பக்குவப்பட்டது போல் தெரியவில்லை.

திமுக-வைப் பொறுத்தவரை கூட்டணி பலத்தால் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் ,பல இடங்களில் திமுக-வுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் என்பது உண்மை.

திமுக-வின் கோட்டை எனப்படும் சென்னையில் அதிமுக இம்முறை 14-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது .திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் கூட அதன் வாக்கு வித்தியாசம் திருப்தியுறும் அளவுக்கு இல்லை .இதற்கான காரணங்களை இதய சுத்தியோடு ஆராயவேண்டும் .சென்னையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் தட்டுப்பாடை நீக்கும் திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பது என் எண்ணம் .திமுக வழக்கம் போல பாரம்பரிய கோட்டை என்றெல்லாம் இனிமேல் சால்ஜாப்பு சொல்ல முடியாது .மக்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் .பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்து பெருவாரியான மக்கள் வெளியே வந்து ,பிரச்சனைகள் அடிப்படையில் ஓட்டளிக்கும் பாங்கு இப்போது அதிகரித்து வருகிறது .திமுக-வின் கோட்டையை தகர்க்க சென்னையைப் பொறுத்தவரை ஜெயலலிதா எடுத்த சில முயற்சிகள் வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள விதத்தில் அமைந்தது என்பதை ஜெயலலிதா எதிர்ப்பாளரான என் போன்றவர்கள் ஒத்துக்கொள்வதில் ஒன்றும் தயக்கம் இல்லை .அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்கள் .அதே வகையில் நல்லதை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்று சென்னை நகர மக்கள் கொடுத்திருக்கும் செய்தியை திமுக சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வெறும் பாரம்பரிய கோட்டை என்னும் மாயையை மட்டும் வைத்து இனிமேல் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் சென்னையில் பாதிக்கு பாதி இடங்கள் ,கோவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ,விருதுநகர்,தேனியில் பெருவாரியான இடங்கள் ,தூத்துக்குடி மற்றும் தஞ்சையில் பாதிக்கு பாதி இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .அதையும் மீறி கூட்டணி பலமின்றி அதிமுக பெற்ற ஓட்டுக்களை குறைத்து மதிப்பிட முடியாது தான் .

கலைஞர் அவர்கள் மற்றொரு விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .தான் திமுக கோட்டை என்று நம்பிய பல பகுதிகள் திமுகவை கைவிட்டது போல ,பாரம்பரியமாக தனக்கு சாதகமில்லாததாக திமுக நினைக்கும் பல பகுதிகள் திமுக-வை கைதூக்கி விட்டுருக்கின்றன.. உதாரணமாக கலைஞர் அவர்கள் தனது பிரச்சார பயணத்தில் முற்றிலுமாக புறக்கணித்த குமரி மாவட்டம் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்தது மட்டுமல்ல ,அதிமுக கூட்டணியை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழக்க செய்திருக்கிறது(இது பற்றி தனிப்பதிவு விரைவில்) .இனிமேலாவது கலைஞரும் திமுக-வும் இது போன்ற முன் முடிவுகளின் அடிப்படையும் செயல்படாமல் இருப்பது நல்லது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரேயடியாக ஆதரவும் தெரிவிக்கவில்லை ,முழுவதுமாக கைவிடவும் இல்லை .கலைஞரை முதல்வராக்கினாலும் திமுக-வுக்கு பல இடங்களில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள் .அதிமுக-வை ஆட்சியை விட்டு அகற்றினாலும் முழுவதுமாக கைவிட்டு விடவில்லை .மதிமுக தோல்வியை தழுவினாலும் முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறது .விடுதலைச் சிறுததைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்கள் .பாமக 17 தொகுதிகளைப் பிடித்திருந்தாலும் மக்கள் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .விஜயகாந்தின் துணிச்சலுக்கு பரிசாக பெருவாரியான வாக்குகளையும் அளித்து அவரை சட்டமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள் .சுயேட்சைகளை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டுமென்று அவர்களுக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் .

எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஒரு காலத்தில் மலையாள சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு தமிழ் சினிமாவை அதீதமாக கேலி செய்யும் நிலைமை இருந்தது .இன்று தமிழ் சினிமா அதன் தரத்தை உயர்த்தி அந்த இடைவெளியை குறைத்திருக்கிறது .இப்போது அரசியலும் அந்த பாதையில் மாறிக்கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் .மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும் கேரளாவைப்போல கடந்த நான்கு முறை தொடர்ந்து தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது .கேரளா போன்று முழுமையான கூட்டணியாட்சி இல்லையெனினும் கூட்டணி ஆதரவோடு ஆட்சி நீடித்து அமையும் என நம்புகிறேன் .

இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!

அனுபவமும் ஆற்றலும் கொண்ட கலைஞர் தலைமையில் தமிழகம் ஆக்க பூர்மான வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்..வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!

Friday, April 28, 2006

சீனரும் மதமும்

பொதுவாகவே ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் ஒரு பொதுவான கருத்துருவாக்கம் நம் மனதில் ஏற்கனவே இருக்கும் .முன்பெல்லாம் இந்தியா என்றால் பாம்பாட்டிகள் ,அரை நிர்வாண சாமியார்கள் நிறைந்த நாடு என்ற தோற்றம் மேலை நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது போல ,சீனாவை பற்றியும் பொதுவான இந்தியர்களிடையே ஒரு கருத்துருவாக்கம் இருந்து வருகிறது ..அவற்றில் சில சீனர்கள் எப்போதும் நூடுல் சாப்பிடுவார்கள் ,அப்புறம் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிடுவார்கள் , பெரும்பாலும் புத்த மதத்தை பின்பற்றுவார்கள் இப்படியெல்லாம் சில கருத்துருவாக்கங்கள் இருகிறது . நான் 3 முறை சீனா சென்று வந்த போது கூட பலர் என்னிடம் ஏதோ நான் வேறு வழியில்லாமல் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிட்டிருப்பேன் என்று சந்தேகத்தோடு கேட்டார்கள் .

பொதுவாக இந்தியர்கள் அதிகமாக வெஜிடேரியன் சாப்பிடுவது போலவும் ,சீனர்கள் அதிகமாக புலால் உண்பதாகவும் நம் மக்கள் நினைக்கிறார்கள் ..சீனர்கள் உணவில் தினமும் புலால் சேர்த்து உண்பது உண்மை தான் .ஆனால் கண்டிப்பாக நம்மை விட அதிகமாக காய்கறிகள் ,கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள் அவர்கள் தான் .நம்ம ஊரில் வெஜிடேரியன் என்ற பெயரில் சட்டி சட்டியாக சோறு சாப்பிடுகிறோம் .காய்கறிகளை பெயருக்கு தொட்டுக் கொள்ளுகிறோம் .சீனர்களும் சோறு சாப்பிடுகிறார்கள் .ஆனால் நம் அளவு அல்ல .சோற்றை விட அதிகமாக காய்கறிகள் ,கீரைகள் அதோடு இறைச்சி சம அளவில் சாப்பிடுகிறார்கள் .அதோடு பழங்களும் நிறைய சாப்பிடுகிறார்கள் .ஆக மொத்ததில் காய்கறி சாப்பிடுவதாக சொல்லும் நம்மை விடவும் வித விதமான காய்கறிகள் ,கீரைகள் சாப்பிடுவது சீனர்கள் தான் . இது தவிர உடலுக்கு நலம் தரும் மீன் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

அலுவலக வேலை காரணமாக 3 முறை நான் சீனாவுக்கு சென்றிருக்கிறேன் .நான் சென்ற நகரம் ShenZhen .இது ஹாங்காங்-க்கு மிக அருகில் உள்ள சீன நகரம் .ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நுழைவதற்கான வாயில் என்று சொல்லலாம் .இந்தியாவோடு வளர்ச்சியில் போட்டி போடும் ஒரு நாடாக நினைத்து சீனாவை கற்பனை செய்திருந்த எனக்கு இங்கு அதிர்ச்சி காத்திருந்தது..Shen Zhen உள்கட்டமைப்பு ,வசதிகள் ,தொழில் ,சுத்தம் இவற்றில் உலகத்தரத்தில் இருந்தது என்றால் மிகையல்ல .இன்னும் சொல்லப்போனால் சுத்தம் ,நகர பராமரிப்பு ,வடிவமைப்பு இவற்றில் சிங்கப்பூருக்கு இணையாக இருந்தது என்பதே உண்மை. நாம் அவர்களோடு போட்டி போட்டாலும் இப்போதைக்கு நம்மை விட கிட்டத்தட்ட 20 வருடங்களாவது அவர்கள் முன்னால் இருப்பதாகவே எனக்கு தோன்றியது.

பொதுவாக நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு வரலாறு ,மக்கள் வாழ்க்கை முறை ,கலாச்சாரம் ,உணவு முறை ,மதம் ,சமுதாய கட்டமைப்பு இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவேன் . சீனாவிலுள்ள சீனர்கள் சிங்கப்பூர் ,ஹாங்காங்கில் உள்ள சீனர்களைக் காட்டிலும் நட்பு பாராட்டுபவர்களாகவும் ,உதவுகின்ற மனமுள்ளவர்களாகவும் ,பிறர் மேல் கரிசனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து . என்ன தான் சிங்கப்பூரில் நான் சீன உணவு சாப்பிட்டு அனுபவம் இருந்தாலும் ,சீன உணவின் சுவை ,எண்ணற்ற வகைகள் இவற்றை சீனாவில் தான் என்னால் உணர முடிந்தது.

அலுவலக வேலை நிமித்தம் சென்றிருந்ததால் ,நான் அங்கு பணியாற்றிய ,பழகிய அனைவரும் நன்கு படித்த பொறியாளர்களாக இருந்தனர் .ஒரு சிலரைத் தவிர மிகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசவும் ,நாம் பேசினால் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்தனர் .ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு நன்றாக எழுதவும் ,நாம் எழுதினால் நன்றாகவே புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தனர் . அதனால் எப்போதும் என்னோடு ஒரு பேப்பரும் பேனாவும் வைத்திருப்பேன் .நான் சொல்லி அவர்களுக்கு புரியாத பட்சத்தில் உடனே வாக்கியமாக அதை எழுதி காண்பிப்பேன் .உடனே புரிந்து கொண்டு அவர்களும் பதிலை எழுதிக்காட்டுவார்கள் . மற்ற படி உடைந்த ஆங்கிலத்தில் உரையாடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலே ஆங்கிலம் கற்றிருந்தாலும் உரையாடும் வாய்ப்போ ,தேவையோ இல்லாததால் இந்த நிலமை .ஆனால் இப்போது நிறுவனங்களிலேயே இதற்கான பட்டறைகளை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக சீனாவில் உள்ள சீனர்கள் படித்தவர்களாக இருந்தாலும் ,வேலை ,வியாபாரம் தவிர்த்த உலக அறிவு அவர்களுக்கு இல்லாதது கண்கூடாக தெரிந்தது .அரசியல் ,மதம் இவற்றைப்பற்றி நடுத்தர சீனர்கள் கண்டுகொள்வதே இல்லை .அவர்கள் ஒரே நோக்கம் படிப்பு ,வேலை ,பணம் ,நல்ல வாழ்க்கை .மதம் ,சாதி(அப்படி ஒன்றும் கிடையாது) ,மொழி ,சடங்குகள் ,அரசியல் இவற்றிலெல்லாம் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமின்மை அல்லது தேவையின்மை அவர்களின் முழுக்கவனத்தையும் நேரத்தையும் உழைப்புக்கும் ,வசதிகளை பெருக்கிகொள்வதற்கும் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவதே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பதாக என்னால் உணர முடிந்தது.

நண்பரொருவர் வார இறுதியில் அவர் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதை தியாகம் செய்து என்னையும் வியட்நாமிலிருந்து வந்த இன்னொரு நண்பரையும் நகர உலாவுக்கு அழைத்து சென்றார் .."Little wonders of the world" என்ற மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார் .உலகின் முக்கியமான சின்னங்களின் சிறிய வடிவங்கள் அங்கே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன .தாஜ்மகால் ,ஈபில் டவர் உட்பட பல முக்கிய சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால் கிட்டத்தட்ட 30 அடி உயரமாகவும் ,ஈபில் டவர் கிட்டத்தட்ட 200 அடி உயரமாகவும் இருந்தது .அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்தால் உண்மையிலேயே அந்த உண்மையான சின்னங்களின் முன் நின்று எடுத்தது போல இருந்தது.இந்த பூங்காவின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருந்தது நமது அரசு சின்னமான 'மூன்று சிங்கங்கள்' அச்சு அசலாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்தது . இந்தியர்களை அங்கு காண்பது அரிது என்பதால் பலரும் என்னை விநோதமாக பார்த்தார்கள் .பின்னர் புன்னகைத்தார்கள் . ஓரிடத்தில் சீன மாது ஒருவர் பாரம்பரிய சீன உடைகள் அணிந்து தலையில் கீரீடங்கள் வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் .திடீரென்று சீன நண்பரிடம் வந்து ஏதோ சொன்னார் .சீன நண்பர் என்னிடம் "இந்த இந்தியரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்" என்றார் .பக்கத்தில் நின்ற வியட்நாம் நண்பருக்கு காதில் புகை .ஏதோ ஒரு விநோத ஜந்துவை பார்த்த ஆர்வத்தில் அப்பெண் புகைப்படம் எடுக்க விரும்பியிருப்பார் போலும்.

சீனாவில் புத்த மதம் ,கன்பூசிய மதம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் இன்னும் பல பாராம்பரிய சீன வழிமுறைகளை பின்பற்றுவோர் இருந்தாலும் கிட்டத்தட்ட 70% பேர் மத நம்பிக்கை அற்றவர்கள் தான் .அதிலும் நான் சென்ற நிறுவனத்தில் நான் பழகிய அனைவரும் தாங்கள் எந்த மதத்தை சாரவில்லை என்றே சொன்னார்கள் .பலரிடம் மதம் என்றால் என்ன என்பதை புரிய வைப்பதே பெரும்பாடாக இருந்தது .ஒரு பொறியாளரிடம் பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள் ?" என்று கேட்க அவருக்கு மதம் என்பதே புரியவில்லை ..நான் ஒரு உதாரணத்திற்கு 'I am a christian..what about you?' என்று கேட்க ,அவர் ஓரளவு புரிந்தவராக "Oh! no relegion" என்றார் .நான் உடனே "Do you beleive in GOD?" என்று கேட்க "No..I beleive in myself " என்று தீர்க்கமான பதில் வந்தது .நானும் விடாமல் "What about your parents?" என்று கேட்க ,அவர் சொன்னார் "They also same like me..But my grandparents beleived" ..கிட்டத்தட்ட அனைவருமே இப்படித் தான் சொன்னார்கள் .இவர்கள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்காமல் பொழப்பைப் பார்ப்பதால் தான் நம்மைவிட வேகமாக முன்னேறிச் செல்கிறார்களோ என்று தோன்றியது.

நம்மை நகர உலா அழைத்துச் சென்ற நண்பர் இதை விட மேல் .அவரிடம் வழ்க்கம் போல 'I am a christian .what about you?" என்று கேட்க அவருக்கு christian என்றால் என்ன என்று தெரியவில்லை ..நான் சைகையெல்லாம் வைத்து 'Jesus' என்று சொல்ல 'ஓ! யேசு'(சீன மொழியில் யேசு என்ரு தான் சொல்கிறார்கள்)என்று சொன்னார் .அப்பாடா ஒரு வழியாக புரிந்தது. அப்போது டிசம்பர் மாதம் .கிறிஸ்தவ மதம் அங்கு பெரிதாக இல்லையென்றாலும் எங்கும் கிறிஸ்துமஸ் சுவடுகள் .உணவகங்கள் ,ஹோட்டல்கள் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ,அலங்கரிப்புகள் ,வாழ்த்து வாசகங்கள் என்று வியக்கும் வகையில் இருந்தது .ஒரு ஆடியோ சீடி விற்கும் கடை தென்பட நானும் அந்த சீன நண்பரும் உள்ளே சென்றோம் . அங்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் எதுவும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தேன் .சீன மொழியிலேயே இருந்தன .சீன நண்பர் அருகில் வந்து "என்ன தேடுகிறீர்கள்" ? என்று கேட்டார் .நான் "கிறிஸ்துமஸ் பாடல்கள் சீன மொழியில் இருக்கிறது .அது போல ஆங்கிலத்தில் கிடைக்குமா?" எனக் கேட்டேன் .அவர் புருவத்தை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டார் "You worship Yesu .then why do you look for christmas songs?..எனக்கு மயக்கம் வராத குறை .அதன் பிறகு மதம் பற்றி நான் வாய் திறக்கவே இல்லை.

Thursday, March 30, 2006

நாகர்கோவில் தொகுதி அலசல்

குமரி மாவட்டம் எப்போதுமே அரசியலில் விசித்திரமான முடிவுகளையும் ,அரசியல் கட்சிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளையும் அளிக்கும் மாவட்டம் .பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் வென்ற பின்னர் நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி பொதுவாக காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்திருக்கிறது.

திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் எப்ப்போதுமே செல்வாக்கு குறைந்த மாவட்டம் .கலைஞரே ஒரு முறை வெறுத்துப்போய் " நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை" என்று சொல்லியிருக்கிறார்.காங்கிரஸ்,பா.ஜ.க ,கம்யூனிஸ்டுகள் ஏன் ஜனதா தளம் கூட இங்கே குறிப்பிடத்தக்க செல்வாக்கோடு கோலோச்சியிருக்கின்றன .நாகர் கோவில் சட்ட மன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக வரும் கட்சி இங்கு வெற்றி பெறுவதில்லை அல்லது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் நிலையே இருக்கிறது .

* எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் வின்செண்ட் வென்றார் (1977,1980) .தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மீனவர்களின் சுளையான ஓட்டு இவரை இரு முறையும் கரையேற்றியது .ஆனால் 1982 மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவர் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என்பதால் அம்மக்கள் இவரை விரட்டி அடித்தனர் .அப்போதே அவர் அரசியலிலும் காணாமல் போனார்.

*எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுகொண்டே ஜெயித்த 1984 தேர்தலில் தமிழகம் அதிமுக பக்கம் சாய ,நாகர்கோவிலில் திமுக வென்றது .அப்போது தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ரத்தினராஜ் ,இப்போது ம.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

* 1989,1991,1996 மூன்று தேர்தல்களிலும் வென்றவர் டாக்டர் மோஸஸ் (காங்கிரஸ் ,தா.ம.க சார்பில்) .ஓட்டுக் கேட்க வருவதோடு இவர் பணி முடிந்து விடும் .ஜெயித்த பிறகு அடுத்த தேர்தல் வரை ,வாயில் வெத்திலையை குதப்பிக்கொண்டு அவருடைய மருத்துவமனையில் மட்டும் அவர் பணி தொடரும் .இவரிடமும் மக்கள் வெறுத்துப் போயினர்.

*2001 தேர்தலில் அதிமுக தமிழகம் முழுதும் வெற்றி முழக்கமிட ,நாகர் கோவில் தொகுதியில் வென்றவர் திமுக கூட்டணியில் திருநாவுக்கரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் .திடீரென்று அரசியலில் குதித்து குறுகிய காலத்தில் ஜெயலலிதாவால் அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,ராஜ்யசபா எம்.பி யாகவும் நியமிக்கப்பட்ட ஆஸ்டின் ,பின்னர் திருநாவுக்கரசுவுடன் அதிமுகவிலிருந்து வெளியேறினார் .தி.மு.க தொண்டர்களின் உழைப்பினால் எம்.எல்.ஏ ஆனவர் திருநாவுக்கரசு கட்சியை பா.ஜ.க வுடன் இணைத்த போது ,ஒரு கிறிஸ்தவராக அந்த கட்சிக்கு போக முடியாமல் மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாயுள்ளார் .இப்போது தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற தேர்தலில் மதிமுக இரண்டாமிடம் பிடித்த குளச்சல் தொகுதியை அதிமுகவே எடுத்துக்கொண்டுள்ளது)

* இந்த தொகுதியில் பா.ஜ.க வும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது .காரணம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருப்பது .எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்ணணி இங்கு 20% மேல் கணிசமான வாக்குக்களை பெற்று ஜெயலலிதா கட்சியை நான்காம் இடத்துக்கு தள்ளியது .இன்றும் நடிகர் திலகம் ரசிகர் நிறைந்த தொகுதி இது. ம.தி.மு.க குளச்சல் அளவு இல்லையெனினும் ஓரளவு ஓட்டு வங்கி பெற்றுள்ளது.

* மற்ற மாவட்டங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதி குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது போல ,இங்கு மதம் ஓரளவு ஒரு காரணியாக இருக்கிறது .பெரும்பாலும் கிறிஸ்தவர்களே இங்கு வென்று வந்துள்ளது அதைக்காட்டுகிறது.


இந்த தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தி.மு.க வும் ம.தி.மு.கவும் மோதுகின்றன . ம.தி.மு.க வில் முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின ராஜ் வேட்பாளர் .எளிய மனிதர் .நாகர் கோவில் டீகடைகளில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சாதாரணமாக நின்று கொண்டிருப்பார் .எளிமை அவருக்கு அனுகூலம் என்றாலும் தனிப்பட்ட செல்வாக்கோ ,பணபலமோ ,வசீகரமோ இல்லாதவர்.

தி.மு.க இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை .இந்த தொகுதியில் அதிமுக -வை விட தி.மு.க செல்வாக்கான கட்சி என்றபோதும் வெற்றி பெற அது போதாது .தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ் ஓட்டுக்களை தி.மு.கவுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது .அது போல கணிசமான ஓட்டுக்களை கொண்டுள்ள பா.ஜ.க தனித்து போட்டியிடும் சூழநிலையில் அதுவும் வெற்றி தோல்வியை பாதிக்கும் முக்கியமான காரணி .பா.ஜ.க ஆதரவு ஓட்டுக்கள் அப்படியே பா.ஜ.க வுக்கு விழும் பட்சத்தில் அது தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மை.இதற்கிடையில் அதிமுக-வில் புறக்கணிக்கப் பட்டதால் ஆஸ்டின் சுயேட்சையாக நிற்கலாம் என்ற பேச்சு இருக்கிறது .அப்படி நடந்தால் அதுவும் தி.மு.கவுக்கு சாதகமே.

மதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் ஆஸ்டினை சரிகட்ட வேண்டும் .பா.ஜ.க ஓட்டுக்களை ஓரளவு திசைதிருப்பி பெறவேண்டும் ..தி.மு.கவை பொறுத்தவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டு ஓட்டுக்களை முழுவதுமாக பெற்றுவிட்டால் வெற்றிக்கோட்டை தொடலாம் .தொகுதியிலிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்கள் பொதுவாக தி.மு.க பக்கம் என்பதும் அக்கட்சிக்கு சாதகமான அம்சம்...தி.மு.க வேட்பாளர் யார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

Sunday, March 05, 2006

கலைஞர் தடுமாறுகிறார்

கடந்த 35 ஆண்டுகளாக கலைஞர் தமிழக அரசியலின் மையப்புள்ளி .வெற்றியும் தோல்வியும் அவரில்லாமல் இல்லை .'அரசியல் ராஜதந்திரி' என வர்ணிக்கப்பட்டிருக்கிறவர் .மோதுகின்ற இரு தலைகளில் எதிர் புறம் நிற்கிற போட்டியாளர் மாறியிருக்கிறாரே தவிர கலைஞர் எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார்(காமராஜரிலிருந்து ஜெயலலிதா வரை) .ஆயிரம் விமரிசனங்கள் ,கோப தாபங்கள் ,எரிச்சல்கள் இருந்தாலும் ,அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்திருக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன் .ஆனால் இப்போது கலைஞரை 'ராஜதந்திரி' என்றழைப்பது கடினமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.

மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.

நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.

1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .

3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.

4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.

5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.

Thursday, February 23, 2006

சங்கிலி பதிவு -ஜோசப் சார் அழைப்பில்

ஜோசப் சார் நம்மளையும் ஞாபகம் வச்சு இழுத்து விட்டுட்டாரு..அவர் சொன்னா மறுக்கமுடியுமா?

பிடித்த நான்கு விடயங்கள்

1.அரசியல்,வரலாறு புத்தகங்கள் படிப்பது
-நூலகத்துக்குப் போனால் முதலில் தேடுவது இந்த புத்தகங்களைத் தான்.'அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டார்' போல அதர பழசில்லாமல் ,இந்த நூற்றாண்டு அரசியல் ,சமூகம் பற்றிய புத்தகங்கள் படிக்க மிகவும் விருப்பம்

2.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்
-எம்.ஜி.ஆர் ரசிகனில்லை என்றாலும் ,அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மீது எப்போதும் ஒரு மயக்கம்.

3.சமையல் செய்வது
-குண்டக்க மண்டக்க-னு எதயாவது ஒரு காம்பினேஷன்ல சமையல் செய்து பார்ப்பது .ஓரு தடவை இப்படி நண்பரோடு சேர்ந்து சிக்கன் வகையறா ஒன்று சமைக்க ,அது அதிகமாக வெந்து சிதறி விட்டது .அதற்கு 'சிக்கன் சிதறல்' -ன்னு புதுப் பேர் கொடுத்து சாப்பிட்டோம் .ரொம்ப நல்லாயிருக்க ,இன்னொரு தடவ பண்ணலாம்னா வரமாட்டேங்குது.

4.குழந்தையோடு விளையாடுவது
- சமீபத்தில் வாய்த்திருக்கிற சந்தோஷம்.

பிடித்த நான்கு திரைப்படத் துறையினர்

1.நடிகர் திலகம்
ஆயிரம் பேர் 'ஓவர் ஆக்டிங்'-ன்னு என்ன தான் வாரினாலும் ,அசைக்க முடியாத என் அபிமானம் அந்த ஈடில்லா கலைஞன்மீது.கிட்டத்தட்ட கிறுக்கு பிடித்த அபிமானம்.

2.இசைஞானி இளையராஜா
மெல்லிசை மன்னருக்கு ரசிகனாகி பின்னர் இசைஞானி இசைக்கு ரசிகனானேன்
3.கமல் ஹாசன்
நடிகர் திலகத்தின் வாரிசு .மனம் கவர்ந்த கலைஞன்!
4.எம்.ஆர்.ராதா
இவரைப்போல இவர் மட்டும் தான் .தனித்தன்மை மிக்க கலைஞன் .லொள்ளுக்கு மன்னன்!

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் 4

1.ரத்தக்கண்ணீர்
2.குருதிப்புனல்
3.தில்லானா மோகனாம்பாள்
4.சலங்கை ஒலி

வசித்த நான்கு இடங்கள்
1.பள்ளம்,குமரி மாவட்டம்
-பிறந்து வளர்ந்த இடம்
2.திருச்சி
-கல்லூரிப்படிப்பு
3.சென்னை-6 வருடங்கள்
4.சிங்கப்பூர் -6 வருடங்கள்

பிடித்த 4 உணவு வகைகள்

1.வெறும் குழம்பு - தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து அம்மா செய்யும் மிக சுலபமான குழம்பு .ஒப்புக்கு செய்யும் இந்த குழம்பு எனக்கு அந்த அளவுக்கு ஏன் பிடிக்கிறது என்று அம்மாவுக்கு ஆச்சரியம் .ஆனால் எனக்காக எப்போதும் செய்வார்கள் ,சும்மா சூப்பர் ஸ்டார் வேகத்துல.

2.வாளை மீன் குழம்பு - எல்லா மீன்களும் பிடிக்குமென்றாலும் ,இது கொஞ்சம் அதிகமாக..

3.கணவாய் பொரித்தது

4.ஆப்பம் - கோழி குருமா பண்டிகை நாட்களில் கண்டிப்பாக உண்டு.

Tag செய்ய விரும்பும் வலைப்பதிவர்கள்

1.குழலி
2.தருமி
3.முத்துக்குமரன்
4.சிங்.செயக்குமார்

Wednesday, February 22, 2006

ஆழி சூழ் உலகு -நாவல் அறிமுகம்

ஆசிரியர் : ஜோ டி குரூஸ்
பக்கங்கள் :550
பதிப்பகம் :தமிழினி ,67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை,சென்னை-14.

Image hosting by Photobucket


சிறில் அலெக்ஸ் அவர்களின் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற முட்டம் பற்றிய பதிவுகளை படித்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அதில் 'ஆழி சூழ் உலகு' என்ற சமீபத்திய நாவலைப் பற்றி குறிப்பிட்டு தமிழில் முதன் முதலில் கிறிஸ்தவ பரதவ மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நாவல் என்றாலே எனக்கு கொஞ்சம் கசப்பு தான் என்றாலும் ,கிட்டத்தட்ட அதே பகுதி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சார்ந்தவனாக இருந்ததால் ,இதை படிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது .சிங்கையில் ஒரு கிளை நூலகத்துக்கு சென்று வேறு புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக இந்த புத்தகம் கண்ணில் பட்டது .அள்ளிக்கொண்டு வந்து படித்தேன்.

இந்த நாவலுக்கு உட்புகுமுன் தென்தமிழ்நாட்டு மீனவர்களைப்பற்றி சில அடிப்படை விடயங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது .திருச்செந்தூரின் சற்று கீழிருந்து கன்னியாகுமரி வரை வங்காள விரிகுடா ஓரமும் ,கன்னியாகுமரியிலிருந்து மேற்கே கேரள எல்லை நீரோடி வரை அரபிக்கடல் ஓரமும் வரிசையாக அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுக்க முழுக்க இரண்டு சமுதாயத்தை சார்ந்த (பரவர் ,முக்குவர்) கத்தோலிக்க மீனவர்கள் .இதில் வங்காள விரிகுடா ஓர தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட கிராமங்கள் கிட்டத்தட்ட முழுவதும் பரவர்கள் வாழுகிறார்கள் .அரபிக்கடல் ஓர குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள சுமார் 45 கிராமங்களில் 7 கிராமங்களில் முழுவதுமாக பரவர்களும் ,கன்னியாகுமரி ,முட்டம் என்ற 2 கிராமங்களில் இரு சமூகத்தினர் இணைந்தும் ,மற்ற அனைத்து கிராமங்களில் முக்குவர் சமுதாயத்தினரும் வசிக்கின்றனர்.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வரை குமரி அன்னையை குலதெய்வமாக கொண்டு இந்துக்களாக வாழ்ந்த இம்மக்கள் ,இப்பகுதிக்கு வந்த புனித சவேரியார் (St.Xavier) -ஆல் ஒட்டுமொத்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .மணப்பாடு ,நாகர்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்த சவேரியார் இந்த நீண்ட கடற்கரையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கால் பதித்தார் .முதலில் பரவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு கத்தோலிக்கர்களாக மாற,அவர்களை பின் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முக்குவர்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .இது நடந்தது கிட்டதட்ட 1530-வாக்கில்.

மதம் மாறியிருந்தாலும் ,அவர்கள் இதுவரை கைக்கொண்டிருந்த வழக்கங்கள் ஒரேயடியாக மாறிவிடவில்லை .குமரி அன்னை மீது மிகுந்த பக்தி கொண்டு குலதெய்வமாக வழிபட்ட இம்மக்கள் அந்த பக்தியை லேசில் விடுவதாக இல்லை .அதற்கு மாற்றாக அவர்கள் அன்னை மேரியை நிறுத்த நாளடைவில் பழகிக் கொண்டார்கள் .பின்னர் அதிலே ஊறியும் போனார்கள்.

இந்த நாவலைப் பொறுத்தவரை,இதிலுள்ள நிகழ்வுகள் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இறுதிவரை நிகழ்வனவாக சித்தரிக்கப்பட்டுள்ளது .வட ,மத்திய தமிழ்நாட்டு மீனவர்களைப் போல் பல்வேறு சாதி,மதம் கலந்து வாழும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ,முழுக்க ஒரே சாதி,மதமாக அடுத்தடுத்த கிராமங்களாக வாழும் இம்மக்களின் வாழ்க்கை முறை மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சமூக,பொருளாதார முறைமைகளை கொண்டிருக்கிறது .

இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மக்கள் பேசுகின்ற மொழி அவர்களிடமிருந்து 1 கி.மீ தூரத்தில் வாழும் உள்நாட்டினர் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டாலும் ,இலங்கைத் தமிழர் மொழியோடு ஓரளவு நெருக்கமாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து,என் சொந்த அனுபவத்தில்.

குறிப்பாக வங்காள விரிகுடா ஓர பரவ மீனவர்களைப் பற்றி பேசும் இந்த நாவல் ,அவர்கள் வாழ்க்கையின் எல்லா முக்கிய பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதாக சொல்ல முடியாது .குறிப்பாக மதம்,அரசியல் ,சினிமா,கலைகள் இவற்றின் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்யப்படவில்லையெனினும் ,அவர்களின் அலைகடலோடான போராட்டத்தையும் ,தனிமனித உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ,வேறு சமூகத்தோடு அவர்களின் உறவு முறையையும் அற்புதமாக பதிவு செய்கிறது.முக்கியமாக இந்த மக்களின் மொழி வழக்கு மிக அழகாக கையாளப்பட்டுள்ளது .ஆசிரியரும் அந்த சமூகத்தவர் என்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது.

இந்த மக்களோடு ,அவர்கள் மொழியோடு ,குறிப்பாக கடல் சார்ந்த குறியீடுகளோடு பரிச்சயம் இல்லாத வாசகர்கள் முதலில் பின் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'வட்டார வழக்கு சொல் அகராதி' யை ஒருமுறையேனும் படித்துவிட்டு நாவலின் உட்புகுவது நல்லது.

பின்குறிப்பு : இதன் ஆசிரியர் ஜோ டி குரூஸ் ,உவரி கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் .மறைந்த வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண் அவர்களும் இதே கிராமத்தை சார்ந்தவர் என்பது உபரித் தகவல்.

Thursday, February 02, 2006

நண்பன் அவர்களுக்கு விளக்கம்

சகோதரர் இறைநேசன் அவர்கள் பதிவில் விஷமக் கார்ட்டூன்கள் கிளப்பிய விவகாரம்! நான் கேட்டிருந்த சில விளக்கங்கள் குறித்து நண்பர் அவர்கள்
நண்பர் ஜோவிற்கு அன்புடன் நண்பன்... என்ற பதிவை இட்டிருந்தார் .அவருக்கு மிக்க நன்றி .அவர் கருத்துக்கள் குறித்து எனக்கு கேள்விகள் இல்லையெனினும் ,நான் முன்னர் கேட்க வந்தது என்ன என்பது குறித்து விளக்க நினைத்து அது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இடுகிறேன்.

சகோதரர் நண்பன்,
உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்கு நன்றி.
//இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. //

எனக்கு இதில் ஆதங்கம் எதுவுமில்லை .நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம் .ஆனால் என்னைப் பொறுத்தவரை ,இஸ்லாம் பற்றி ,நபிகள் பற்றி,நபிகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கிறேன் .இஸ்லாமிய கோட்பாடுகளில் ஈஸா நபிக்குள்ள முக்கியத்துவத்தைப் பற்றியோ ,அல்லது முகமது நபியவர்கள் ஈஸா நபியவர்களின் மேன்மையை எடுத்தியம்பியது பற்றியோ எனக்கு ஐயமில்லை.ஆனால் முஸ்லீம்கள் நடைமுறையில் அவற்றை எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் ,வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிய எனது சந்தேகத்தின் ,அல்லது மேல் விவரம் அறிந்து கொள்வதின் ஆர்வத்தின் பால் எழுப்பட்டது தான் என்னுடைய கேள்விகள்.

கவிக்கோவின் கவிதையும் ,அதற்கு உங்கள் விளக்கமும் அருமை .கவிதை என்ற முறையில் அதன் உட்கருத்து எனக்கு மிகவும் ஏற்புடையதாயிருக்கிறது.உங்கள் விளக்கம் அதை விட அருமை .

கத்தோலிக்க ,இஸ்லாம் மதங்களின் நம்பிக்கைகள்,கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்புவதல்ல என் நோக்கம் .இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேனோ இல்லையோ,அவை இஸ்லாமியர்களின் உரிமை என்பதை மதிக்கிறேன் .நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்கள் நடைமுறையில் எந்த அளவு அதை பிரதிபலிக்கிறார்கள் என்பது பற்றிய எனது தெரிந்துகொள்ளும் ஆர்வமே இங்கு பிரதானம் .அதற்கு நான் கிறிஸ்தவன் என்ற அடையாளம் கூட தேவையில்லாதது.

எல்லா மதத்திலும் அந்த மதத்தின் கோட்பாடுகளை தவறாக புரிந்து கொண்டு நடைமுறைபடுத்துபவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள் .கத்தோலிக்க மதத்தை எடுத்துக்கொண்டால் ,அன்னை மேரியை கத்தோலிக்கர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது .அது நடைமுறையில் ஓரளவு உண்மையும் கூட .கத்தோலிக்க மதத்தின் அதிகார பூர்வ கோட்பாடு படி ,அன்னை மரியை கடவுளாக வணங்கக் கூடாது."மகிமையும் ஆராதனையும் இறைவனுக்கு மட்டுமே" என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.புனிதர்கள் என்பவர்கள் ஆராதனைக்கும் மகிமைக்கும் உடையவர்கள் அல்ல. அவர்கள் கத்தோலிக்க திருச்சபையால் அடையாளம் காணப்பட்டு ,இறைவனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ,தங்கள் மேன்மையான வாழ்க்கையினால் இறைவனின் அன்பைப் பெற்றவர்கள் என நம்பப்படுகிறது .அவர்கள் இப்போது இறைவனின் அரசாட்சியில் அவரோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ,அவர்களை இறைவனிடம் நமக்காக பிராத்தனை செய்ய கத்தோலிக்கர்கள் வேண்டுகிறார்கள் .அந்த வகையில் அன்னை மேரி ஒரு புனிதர் .இயேசுவை கருத்தாங்கியதால் அவள் புனிதர்களில் முதன்மையாக கருதப்படவேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுகிறது.அந்த நம்பிக்கையில் கத்தோலிக்கர்கள் அன்னையிடம் நமக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள மன்றாடலாம் .அது போல எல்லா புனிதர்களிடமும் .இறைவன் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும்.அன்னை மரியோ ,புனிதர்களோ அற்புதங்களை செய்வதில்லை .அவர்கள் மூலமாக இறைவன் செய்கிறார்.

அதனால் தான் அன்னை மரியை வேண்டும் போது "அன்னையே! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்!" என்று கத்தோலிக்கர்கள் வேண்ட வேண்டும் .இறைவனிடம் வேண்டுவதற்கு எதற்கு வேறொருவர் மூலமாக செல்ல வேண்டும் ?இறைவன் நமது தந்தையல்லவா? அவரிடமே நேரடியாக வேண்டலாமே? என்று கேட்கலாம் .நேரடியாகவும் தந்தையிடம் வேண்டுகிறோம் .அதே நேரத்தில் நம் நண்பர்களை ,உறவினர்களை நமக்காக இறைவனிடம் வேண்ட நாம் கோருவதில்லையா? அது போலத் தான் கன்னி மரியிடமும் ,புனிதர்களிடமும் கோருகிறோம் என்பதைத் தவிர இதில் வேறதும் இல்லை.

பின்னர் ஏன் மாதாவுக்கு ,புனிதர்களுக்கு கோவில் இருக்கிறது என்று கேட்கலாம் .மாதவுக்கென்று தனியாக எந்த கோவிலும் கிடையாது.எல்லா கோவிலகளுமே இறைவனுக்கு எழுப்பப்பட்ட கோவில்கள் தான் .கத்தோலிக்கர்கள் இறைமகனாகக் கருதும் இயேசுவும் ,அவருடைய உடலாக கருதப்படும் நற்கருணையுமே எல்லா கோவில்களிலும் நடுநாயகம் .இந்த கோவில்கள் மாதாவின் பெயரில் ,அல்லது புனிதர்களின் பெயரில் எழுப்பப்பட்ட இறைவனின் ஆலயமே தவிர ,அங்கே புனிதர்களுக்கு மகிமையும் ஆராதனையும் அதிகார பூர்வமாக செலுத்தப்படுவதில்லை.

ஆனால் இந்த கோட்பாடுகளுக்கும் ,சாதாரண கத்தோலிக்கர்களின் நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பது உண்மை .அதற்கு தங்கள் மதம் குறித்த அறியாமையே காரணம்.பல கத்தோலிக்கர்கள் இறைவனுக்கும் புனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இறைவனுக்கு இணையாக புனிதர்களை வைத்து வழிபடுவது நடைபெறுகிறது .இது கண்டிக்கப்பட வேண்டியது .அவர்கள் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.இதுவே கத்தோலிக்கர் மீது பிரிந்து சென்ற சபையினர் குறை சொல்லுவதற்கும் காரணமாக இருக்கிறது.

இப்போது இஸ்லாமுக்கு வருவோம் .அல்லாவின் இறுதித் தூதராம் முகம்மது நபியவர்கள் ,இறுதித்தூதர் என்ற முறையிலும் ,குரான் அவர் மூலமாக இறக்கப்பட்டது என்ற முறையிலும் ,இஸ்லாமை அதிகார பூர்வ மார்க்கமாக நிறுவியவர் என்ற வகையிலும் தனிச்சிறப்பு பெருகிறார் .

இஸ்லாம் படி ,இயேசு இறை தூதர்களில் ஒருவர் .அதுவும் வேறெந்த இறை தூதருக்கும் கிட்டாத சிறப்பு அவருக்கு உண்டு .அவருடைய அன்னை மரியம் ,கன்னியாக இருந்தே இறைவனின் அருளால் இயேசுவை பெறுகிறாள் .இஸ்லாம் நம்பிக்கைப் படி ,உலகின் இறுதிக் காலத்தில் அல்லாவின் தூதராக இயேசு மீண்டும் வருவார் .இஸ்லாமை மறு உறுதிப்படுத்துவார் (நான் தவறாக புரிந்து கொண்டிருந்தால் சுட்டிக்காட்டவும்).

ஆக முகமது நபியவர்கள் அளவுக்கு இல்லையெனினும்,இயேசுவும் இறுதி நாளில் வரும் தூதர் என்ற சிறப்பை பெற்று ,இஸ்லாமில் முக்கியமான இறை தூதராக கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

நண்பன் ,இறைநேசன் போன்ற இஸ்லாமிய சகோதரர்களிடம் நான் கேட்க நினைப்பது இது தான் .முகமது நபி அவர்கள் ஒரு இறை தூதர் மட்டுமே,அவர் ஒரு இறைவனின் அடியார் என்ற வகையில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கோட்பாடு வற்புறுத்தினாலும் ,நடை முறையில் முகமது நபியவர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நீங்கள் நினைக்கவில்லையா?அப்படி கொடுக்கப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.அப்படியே இருக்கட்டுமே? ஆனால் முகமது நபியவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்காவது இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறதா?

நான் செவிமடுத்த இஸ்லாமிய உரைகளிலும் ,எழுத்துக்களிலும் இப்ராஹிம் ,மூசா போன்ற மற்ற நபிகள் குறிப்பிடப்படுவது போல ஈசா நபி மேற்கோள் காட்டவோ ,குறிப்பிடப்படவோ இல்லை .இது ஈஸா நபி-யை கிறிஸ்தவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்ற ஆழ் மன வெளிப்பாடா ?ஈஸா நபியை தவறாக புரிந்து கொண்டு அவரை அவமானப்படுத்துகிறார்கள் என நீங்கள் கருதும் கிறிஸ்தவர்கள் பற்றி நீங்கள் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? அதற்காக உங்கள் ஈஸா நபியை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் ?உங்களுக்கு ஈஸா நபியின் பால் உள்ள நம்பிக்கை ,அவரை பின்பற்றுவதாகச் சொல்லும் மற்றவரை பொறுத்து இல்லாமல் ,சுயமாக இருக்க வேண்டாமா?

இவற்றை நான் கேட்பதற்கு காரணம் வெறும் கேள்வி கேட்கும் திருப்தியை பெறுவதற்காக அல்ல .மேலே நான் குறிப்பிட்ட கிறிஸ்தவம் ,இஸ்லாம் குறித்த தொடர்புகள் ,பொதுவான கோட்பாடுகள் ,மெல்லிய முரண்கள் பற்றியெல்லாம் நானறிந்த கிறிஸ்தவர்களில் 5 சதவீதத்தினர் கூட அறிந்து வைத்துக்கொள்ளவில்லை .பெரும்பான்மையோருக்கு கிறிஸ்தவத்தும் ,இஸ்லாமுக்கும் தொடர்பு இருப்பதே தெரியாது .அல்லா என்பது அவர்கள் கடவுள் என்பது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் .தாங்கள் தந்தையென்றழைக்கும் ஆபிரகாமின் கடவுளுமான ,மோயீசனின் கடவுளுமான அதே இறைவனைத்தான் இஸ்லாமியர்கள் 'அல்லா' என்ற அரபு வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைப் போல சாதாரண முஸ்லிம்கள் இவை பற்றிய தெளிவைப் பெற்றிருக்கிறார்களா?

இப்படி மிக நெருக்கமான இரு பெரும் மதங்களை சேர்ந்த பெரும்பான்மையோர் ,இந்த அடிப்படைகளை பற்றிய அறிவில்லாமல் வளர்வது ஆச்சர்யமாக இருக்கிறது .இந்த புரிந்துணர்வு சாதாரண மக்களிடம் வருவது ,உலக அமைதிக்கும் முஸ்லீம்கள் மேலுள்ள பார்வை மாற்றத்திற்கும் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.

Monday, January 16, 2006

வியட்நாமில் மதுரை வீரன்-பாகம் 2

சென்ற முறை வியட்நாமில் மதுரை வீரன் பதிவு போட்டிருந்த போது ,நண்பர் அன்பு அவர்கள் ஹோசிமின் சிட்டியில் இட்லி,தோசை,வடை கிடைக்குமா? என கேட்டிருந்தார் .அதற்கான தேடலில் கடைசியில் இட்லி,தோசை,வடையோடு தமிழர் ஒருவர் நடத்தும் 'ஊர்வசி' என்ற உணவகத்தின் முகவரி கிடைக்க ,நேற்று அங்கு சென்றிருந்தேன் .

தொலைக்காட்சியில் ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு ,வெளியில் இறங்கி நடந்தால் ,முந்தைய மாரியம்மன் கோவிலைவிட பெரிய இந்து கோவில் ஒன்று கண்ணில் பட்டது.இம்முறை 'ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்'.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மாரியம்மன் கோவில் மாதிரியே இங்கேயும்,உள்ளே நுழைந்ததும் அமுதத் தமிழ் செவியில் நுழைந்தது .'காக்க காக்க ..கனகவேல் காக்க' -என்ற மயக்கும் பாடல் ,கொஞ்ச நேரம் அப்படியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன் .பின்னர் மிதியடிகளை அவிழ்த்து விட்டு பிரகாரம் அருகில் நுழைந்தால் ,உள்ளிருந்து இந்தியரா ,வியட்நாமியரா என்று குழப்பம் தருகிற தோற்றத்தோடு ஒருவர் வெளியே வந்து என்னைக் கண்டு கைகூப்பி வரவேற்றார் .பதில் வணக்கம் தெரிவித்து ,அவரிடம் பின்னர் பேசலாம் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.

Image hosted by Photobucket.com

மிகவும் விசாலமான இடவசதி இருந்தது கோவிலில் ,பிரகாரத்தை சுற்றி நிறைய சாமிப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன .'காக்க காக்க " பாடலை கேட்டுக்கொண்டே ஒரு முறை சுற்றி வந்தது இனிமையாக இருந்தது .மதிய நேரம் என்பதால் எண்ணைய் ,பூக்கள் விற்றுக்கொண்டிருந்த இரு வியட்நாம் பெண்கள் தவிர யாருமில்லை .முதலில் பார்த்த நபரை பேசலாமே என்று தேடினால் ,ஆளை காணவில்லை .

Image hosted by Photobucket.com

சரி கிளம்பலாம் என்று நினைக்கும் போது கோவிலின் உள்ளே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த சில இந்திய தலைவர்கள் ,அறிஞர்களின் பெரிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.அதில் ஆச்சரியமும் ,மகிழ்ச்சியும் தந்தது ,இளம் விவேகானந்தருக்கு அருகில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படம்.

Image hosted by Photobucket.com

ஒரு இந்துக் கோவிலுக்குள் ,ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு ,ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives