Wednesday, November 30, 2005

ஷெப்பர்ட் புரோக்ராம்

"இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது" என்று மகாத்மா காந்தி சொன்னார்.நம் நாடு இப்போது பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வருகிறது .முன்பெல்லாம் பல்வேறு நாட்டினர் இந்தியாவென்றால் எதோ பாம்பாட்டிகளும்,பஞ்சப்பரதேசிகளும் நிறைந்த நாடு என்று நினைத்திருந்த நிலை மாறியது மட்டுமல்ல,இப்போது இந்தியாவில் எல்லோரும் பிறக்கும் போதே கையில் மடிக்கணிணியோடு தான் பிறக்கிறார்கள் போல என்ற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் .பெருமையாகத்தான் இருக்கிறது .ஆனால் உள்ளுக்கும் நமது வளர்ச்சி சீராக பரவலாக்கப்பட்ட வளர்ச்சியாக இருக்கிறதா என்றால் ,இல்லை.

ஒரு பக்கம் தொழில் நுட்ப அறிவில் கொடிகட்டுகிறோம்,இன்னொரு பக்கம் மிகப்பெரிய சதவீத மக்கள் எழுத்தறிவு கூட பெறவில்லை .ஒரு பக்கம் அணுக்குண்டு வெடித்து பெருமையை பறைசாற்றுகிறோம் ,அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம்,மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் ,வல்லரசு என்கிற நம் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

சரி.அரசியல்வாதிகளும் ,நமது சமுதாய சிக்கல்களும் இத்தகைய சீரான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று மட்டும் சொல்லி தப்பித்து விட முடியாது .வளர்ந்து வரும் இளைய தலைமுறை குறைந்த பட்சம் நாட்டின் சீரற்ற வளர்ச்சியின் நிலையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.நகரத்திலே பிறந்து வளரும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு கிராமங்களின் உண்மையான நிலை தெரிவதில்லை .அல்லது சினிமாவில் வருவது போல எல்லா கிராமங்களிலும் மலைகளும் ,ஆறும் ,பச்சை பசேல் புல் வெளிகளும் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம் .நகரங்களைத்தாண்டி சிறிய கிராமங்களில் மக்களின் நிலை ,அவர்களின் பிரச்சனைகள் ,அது குறித்த குறைந்த பட்ச அனுதாபம் இருப்பதாக தெரியவில்லை.

நகரங்களில் மேல்த்தட்டு வர்க்கம் பெரும்பாலும் ,எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகளை குறைகூறிக்கொண்டு,எதிலும் தன் காரியம் மட்டும் நடந்து விட்டால் போதும் என்ற மனநிலை நிலையோடு இருக்கிறார்கள் ,அறிவு ஜீவி எழுத்தாளர்கள் காபி தூள் வாங்க முடியாத அளவுக்கு குடும்பம் தள்ளப்பட்டது தான் நாட்டின் உச்ச கட்ட வறுமை என்ற ரீதியில் கண்ணீர் கதை எழுதி பாராட்டும் வாங்கி விடுவார்கள்.

படித்த இளைஞர்களிடையே ராமன் ஆண்டாலென்ன ,ராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலை இப்போது பெருகி வருகிறது.நகரத்தில் படித்து அங்கேயே வளருகின்ற இளைஞன் இந்தியாவில் கிராமங்களின் நிலை எப்படி இருக்கிறது என்று அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளும் நிலை இங்கே இல்லை .மாறாக ,வறியவர்கள் வாழ்க்கைப் போராட்டம் பலருக்கு கேலிப்பொருளாகவே இருக்கிறது .பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வேண்டிய கல்விக்கூடங்கள் இதற்காக பெரிதாக எதையும் செய்வதில்லை.மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் பலர் அதில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் நிலை பற்றி குறைந்த பட்ச அறிவைக்கூட பெறுவதில்லை.

இத்தகைய நிலையை உணர்ந்து ,மாணவர்கள் குறைந்த பட்ச சமுதாய அறிவை,பரிவை அனுபவபூர்வமாக பெற வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களை வகுக்கும் கல்வி நிறுவனங்கள் இல்லையென்று சொல்ல முடியாது .அதற்கு நான் பயின்ற திருச்சி புனித வளனார் கல்லூரி (st.Joseph's College) ஒரு உதாரணம் .

எங்கள் கல்லூரியில் ஷெப்பர்ட் புரோக்ராம்(Shepherd Programme) என்ற கட்டாய பாடத்திட்டம் இருக்கிறது .இதன் படி இளநிலை பட்டப்படிப்பில் ,ஒவ்வொரு வகுப்புக்கும் திருச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய ஒரு கிராமம் ஒதுக்கப்படும் .மாணவர்கள் தங்கள் மூன்றாண்டு காலத்தில் இந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களோடு தங்க வேண்டும் ,அவர்களுக்கு பணி செய்ய வேண்டும் .வகுப்பு மாணவர்கள் தங்களுக்குள் விவசாயம் ,மின்சாரம்,கல்வி இப்படி பல குழுக்களாக பிரித்துக் கொண்டு அது குறித்து அந்த கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்த மக்களை ஊக்குவித்து ,இணந்து பணியாற்றி ,அதிகாரிகளை அணுகும் முறைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து ,அவர்களோடு இணைந்து அந்த பிரச்சனைகளை ஓரளவாவது தீர்க்க பாடுபடவேண்டும்.கல்லூரியில் இதற்கென்று ஒரு துறையே இருக்கிறது .ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 100 மணி நேரமாவது இது தொடர்பான பணிகளில் ஈடு பட்டிருக்க வேண்டும் .இல்லையென்றால் அவர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற முடியாது .

குறிப்பிட்ட நாட்களில் அனைத்து மாணவர்களும் கிராமத்துக்கு சென்று முகாமிட வேண்டும் .அதற்குண்டான செலவுகள் கல்லூரி ஏற்றுக்கொள்ளும் .(இது பல முறை நடக்கும்) .அந்த மக்களோடு பழகி அவர்கள் உணர்வுகளை அறிந்து ,அவர்கள் குறைகளை கேட்டறிந்து ,அதற்கு நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் .

எங்கள் வகுப்புக்கு இது போல் ஒரு கிராமம் தரப்பட்டது .முதல் முகாமுக்கு சென்ற போது மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தது .திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலுள்ள சின்னபனையூர் என்ற ஒரு கிராமம் .அது வரைக்கும் தான் பேருந்து செல்லும் .எங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமமோ அங்கிருந்து முள் புதர்கள் வழியாக 3 கி.மீ நடக்க வேண்டும்.மாணவர்கள் மிகவும் ஜாலியாக நடந்து சென்று ஊரை அடைந்தோம் .ஒரு சிறிய கோவில் தென்பட்டது .அதை நாங்கள் நெருங்கிய சில நிமிடங்களில் கிட்டத்தட்ட 100 பேர் எங்களை சூழ்ந்து கொண்டார்கள் .நகர நாகரீக உடைகளோடு சென்ற எங்களை அவர்கள் ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தார்கள் போலும் .எடுத்த உடனேயே "ஐயா! பெரிய மனசு பண்ணி எங்களுக்கு லோன் வாங்கிக் கொடுங்கய்யா" என்று ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .அவர்களை அமைதிப்படுத்தி ,நாங்கள் மாணவர்கள் என்றும் ,நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்றும் சொன்னோம் .4 நாட்கள் அவர்கள் ஊரிலேயே தங்கப்போகிறோம் என்றும் சொன்னோம் .மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர்கள் ,எங்களை அருகில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தங்க ஏற்பாடு செய்தார்கள் .

ஊரை ஒரு நோட்டம் விட்டேன் .சுமார் 200 வீடுகள் இருந்தன .ஒன்றை தவிர அத்தனையும் ஓலைக்குடிசைகள் .ஒரு சிறிய கோவில் ,அருகில் நாங்கள் தங்கியிருந்த ஆரம்ப பாடசாலை .அதில் ஒரே ஒரு ஆசிரியர் .அவர் தான் தலைமையாசிரியர் .எல்லாமே அவர் தான் .அவர் விடுப்பு எடுத்தால் பள்ளிக்கு விடுமுறை தான் .1 முதல் 5 வரை எப்படி ஒருவர் பாடமெடுக்க முடியும் என்கிறீர்களா? 1 மற்றும் 2 -க்கு ஒன்றாக வகுப்பு ,அந்த நேரத்தில் 3,4,5 மாணவர்கள் வெளியே விளையாடுவார்கள்.அடுத்த ஒரு மணிக்கு 3,4,5-கு ஒன்றாக வகுப்பு ,மற்றவர்கள் விளையாட்டு ..நகரத்தில் ரொம்பவும் தான் அலுத்துக்கொள்ளும் மாணவர்களே! நினைத்துப்பாருங்கள்.இந்த ஊரில் அப்போது ஒரே ஒருவர் தான் 10-வது வகுப்பு தாண்டியிருந்தார்.மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூலி வேலை செய்கிறார்கள் .பெண்கள் சுள்ளி பொறுக்குகிறார்கள்.

காலையில் எழுந்து ஆண்கள் கூலி வேலைக்கு செல்ல ,பெண்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டோ அல்லது தங்களோடு சேர்த்துக்கொண்டோ சுள்ளி பொறுக்க செல்கிறார்கள் .இருட்டியதும் வீடு திருபுகிறார்கள் .கஞ்சி மீதி இருந்தால் சாப்பிட்டு படுக்கிறார்கள் .இது தான் அவர்கள் வாழ்க்கை..30 கி.மீ தூரத்திலிருக்கும் திருச்சிக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை .வெளியுலகம் பலருக்கு ,அதிலும் பெண்களுக்கு சுத்தமாக தெரியவில்லை .உலகமே இப்படித்தான் இருக்கும் போல என்று அவர்கள் நினைத்துக் கொள்வதால் தான் ரொம்பவும் அவர்கள் அலட்டிக்கொள்வதில்லையோ ?

முதல் நாள் மாண்வர்கள் நாங்களே சமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ய ,ஒரு பிரகஸ்பதி உப்புமா செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து ,பசியோடு சென்று பார்த்தால் அது களி-யாக இருந்தது .வேறு வழியின்றி நாங்கள் சாப்பிட்டிக்கொண்டிருக்க ,சில கிராமத்து பெரியவர்கள் பரிவோடு வந்து விசாரித்தார்கள் .இனிமேல் தாங்களே உணவு தருவதாக சொல்ல ,நாங்கள் அனைத்துப் பொருட்களும் வாங்கித் தருகிறோம் .உங்களுள் யாராவது சமைத்துத் தந்தால் போதும் என்று சொல்ல ..அடுத்த நாளில் இருந்து சுவையான உணவு ,அந்த மக்களின் அன்போடு சேர்ந்து கிடைத்தது.

அந்த மக்களோடு நாங்கள் அளவளாவியது..ஓவ்வொரு குடிசையாக சென்று பேசியது ,விளையாட்டுப் போட்டி நடத்தியது,கலைநிகழ்ச்சிகள் நடத்தியது ,அரசியல் பேசியது ,ஊரை சுத்தம் செய்தது ,அதிகாரிகளை அணுகும் முறைகளை சொல்லிக்கொடுத்தது,வேறு பல பயனுள்ள பணிகளை ஆற்றியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த மக்கள் அந்த வறுமையிலும் இயலாமையிலும் எங்களிடம் காட்டிய அன்பும் அக்கரையும் மறக்க முடியாதது.

எங்கள் கல்லூரி தொடந்து நடத்தி வரும் இந்த (கட்டாய) திட்டம் குறிப்பிட்ட அந்த கிராமங்களுக்கு எந்த அளவுக்கு பயனளித்தது என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை .ஆனால் என் போன்ற மாணவர்கள் ,என்னை விட நகர சூழலில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது ஒரு மனத்திறவு கோல் என்பதில் ஐயமில்லை.இந்த எளியவர் வாழ்க்கை மலராதோ,மாறாதோ என்று ஒவ்வொரு மாணவனும் ஏங்கியிருப்பான் என்பது திண்ணம் .அந்த எண்ணம் வந்து விட்டால் ,அந்தப் புள்ளியிலிருந்து தான் நம் 'வல்லரசு' கனவு நனவாக ஆரம்பிக்க முடியும்.

அதனால் தான் எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு 'அப்துல் கலாம்' உருவாக முடிந்ததோ?


மேலும் தகவல்களுக்கு சுட்டி இங்கே

Tuesday, November 29, 2005

பங்காளிகள்


ஒரு ஊரில் ரெண்டு பங்காளிங்க இருக்காங்க.ரெண்டு பேருக்கும் பொதுவான சொத்தை சம்பந்தம் இல்லாத இன்னொருத்தன் அபகரிச்சு
வச்சுக்கிறான்.வெகுகாலமா இவங்க ரெண்டுபேரும் ஒத்துமையா அந்த ஜென்ம விரோதிய எதிர்த்து போராடுறாங்க .நீண்ட போராட்டதுக்கப்புறம் ,அடி பட்டு ,ரத்தம் சிந்தி அந்த சொத்தை மீட்குறாங்க .சொத்து அவங்க கைக்கு வந்தவுடனே பங்காளிங்க ரெண்டுபேருக்கும் இருந்த ஒத்துமை காணாமப் போச்சு .ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா சரிப்பட்டு வராதுண்ணு ,சொத்த பிரிச்சுக்கிறாங்க .அதுக்கப்புறம் பாத்தீங்கண்ணா ஊருலயே இவங்க ரெண்டு பேரும் தான் ஜென்ம விரோதி .பாத்தா முறச்சுகிறாங்க .அடிச்சுகிறாங்க .அவங்க பிள்ளைகளையும் விரோத விஷம் ஏத்தி வளக்குறாங்க.இப்போ பழைய எதிரி இருந்தானே அவன் கூட ரெண்டு பேருக்கும் நல்ல தோஸ்து தான் .அவன் கூட்டம் இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய மூட்டி விட்டு ,உள்ளுக்குள்ள 'பைத்தியக்கார பசங்க'-ன்னு சிரிக்கிறாங்க .


இது தமிழ் சினிமாக்கதையாவும் இருக்கலாம் .ஆனா நான் சொல்லுறது இந்தியா - பாகிஸ்தான் உண்மைக் கதைங்க. ஒரு சராசரி இந்தியனும்,பாகிஸ்தானியும் தேசபக்தி என்பது தன் சொந்த நாட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வது ,நாட்டின் முன்னேற்றத்துக்கும் உலக அரங்கில் அதன் பெருமைக்கும் பாடுபடுது போன்றவற்றை விடவும், எந்த அளவுக்கு இந்த எதிரி நாட்டை வெறுக்கிறான்,உணர்ச்சி வசப்படுகிறான் என்பதில் தான் இருக்கிறது என்ற எண்ண ஓட்டத்தில் தான் வளர்க்கப்படுகிறான். நானும் ஒரு சராசரி இந்தியன் என்றாலும் பாகிஸ்தானியர் மீது எப்போதும் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லையெனினும் ,ஒரு அன்னியத்தன்மை ,அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற நிச்சயமற்ற மனநிலை இருந்தது உண்மை.அப்படிப்பட்ட பிரமை தோற்றுவிக்கப்பட்டது.


முதன்முதலில் நான் ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தது கம்போடியாவில் .வேலைநிமித்தம் சில காலம் அங்கு தங்கியிருந்த போது இந்திய உணவகம் தேடியபோது கண்ணில் பட்டது 'ராயல் இந்தியா' என்ற உணவகம் .அங்கு சென்று உட்கார்ந்திருந்த போது அந்த
உணவகத்தை நடத்துபவர் என்னிடம் வந்து பேசினார் .நான் அவரிடம் "நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?" என்று கேட்டேன் ."நான் ஒரு பாகிஸ்தானி" என்று சொன்னார் ."நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா?' என்று கேட்டார் .அந்த நேரத்தில் நான்
என்ன நினைத்தேனோ "இல்லை.நான் இலங்கையிலிருந்து வருகிறேன்" என்று பொய் சொல்லி விட்டேன்.எது அப்படி என்னை சொல்ல வைத்தது என்று எனக்கே தெரியவில்லை .அவர் என்னை மிக நன்றாக கவனித்தார் .(நான் இந்தியன் என்று சொல்லியிருந்தால்
இதைவிட பல மடங்கு என்னை கவனித்திருப்பார் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். நான் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது).


அதன் பின்னர் அங்குள்ள ஒரு இலங்கைத்தமிழர் நடத்தும் உணவகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம் .அங்கே இன்னொரு பாகிஸ்தானியரோடு நட்பு கிடைத்தது .நான் இந்தியர் என்பதை அறிந்து அவர் மிகவும் மரியாதையோடு பழகினார் .பல பொதுவான விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு முறை ஹாங்காங் சென்றிருந்தேன் .4 நாட்கள் இந்திய உணவு சாப்பிடாமல் பின்னர் இந்திய உணவகம் தேட ஆரம்பித்தேன் .ஓட்டல் அறையில் இருந்த செய்தித்தாளில் ஒரு பாகிஸ்தானிய உணவக விளம்பரம் கண்ணில் பட்டது.உடனே அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் .உணவக உரிமையாளரே பேசினார் .நானிருக்கும் இடத்தை சொல்லி ,இங்கிருந்து எப்படி உணவகம் இருக்கும் இடத்திற்கு வருவது என்று கேட்டேன் ."நீங்கள் எந்த நாட்டினர்?" என்று கேட்டார்.நான்
இந்தியன் என்று சொன்னேன் .மகிழ்ச்சி தெரிவித்த அவர் அங்கிருந்து சுரங்க ரயில் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இறங்கி 5 நிமிடம் நடக்க வேண்டும் .நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொன்னால் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்து வர நான் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னார் .நான் "சிரமம் வேண்டாம் .நான் அந்த நிலையத்துக்கு வந்து விசாரித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.


நிலையத்தின் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே சில பாகிஸ்தான் இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் (அந்த பகுதி பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியாம்) .அவர்களிடம் சென்று நான் ஒரு இந்தியன் என அறிமுகப்படுத்தி விட்டு
,உணவகத்தின் முகவரியை சொல்லி வழி கேட்டேன் .அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு ,ஒருவரை என் கூடவே அனுப்பி விட்டார்கள் .அவர் என்னை அழைத்து சென்று உணவக வாசலில் விட்டு விட்டு விடை பெற்றார்.நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தானியர் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று உட்கார வைத்தார் .இன்னொருவர் மெனுவோடு வந்தார். அவர் கல்கத்தாவை சேர்ந்தவராம் .பட்டியலில் இருந்த மீன் குழம்பு கேட்டேன் . அவரோ "மன்னிக்கவும் .தற்போதைக்கு மீன் இல்லை" என்றார் .பரவாயில்லை என்று சொல்லி சிக்கன் வகை ஒன்று ஆர்டர் செய்தேன் .அவர் சென்ற பிறகு சிறிது நேரத்தில்
பாகிஸ்தானியர் வந்து "உங்களுக்கு அவசரம் இல்லையென்றால் ,நான் மீன் வாங்கி வரச்செய்கிறேன் .இங்கே பக்கத்தில் தான் சந்தை" என்று சொல்ல நான் சிரமம் வேண்டாமென்று சொல்ல ,ஒன்றும் சிரமமில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார் .எனக்காக
மீன் வாங்கி வரச்செய்து சமைத்துக் கொடுக்கச் செய்தார் .மிகவும் மரியாதையாக நடத்தினார்.வற்புறுத்தி இலவசமாக குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.


2 நாட்களுக்குப்பின் மீண்டுமொரு முறை சென்றேன் .என்னைப் பார்த்ததும் பழக்க தோஷத்தில் "அஸ்லாமு அலைக்கும்" என்று சொல்லி விட்டு சுதாரித்து 'சாரி" என்று சொன்னார் .நான் உடனே "அலைக்கும் ஸலாம்" சொல்லி விட்டு "எதற்கு சாரி கேட்கிறீர்கள் ?.நீங்கள் எனக்கு சமாதனம் உண்டாகட்டும் என்று சொல்லுகிறீர்கள் .நான் பதிலுக்கு உங்களுக்கும் அவ்வாறே என்று சொல்லுகிறேன் .இது பொதுவான வாழ்த்து தானே .எங்கள் சர்ச்சில் கூட திருப்பலியில் இதைத்தான் சொல்லுகிறோம் .குருவானவர் அனைவரையும் பார்த்து "சமாதானம் உங்களோடு இருப்பதாக" என்று சொல்ல அனைவரும் பதிலுக்கு "உம்மோடும் இருப்பதாக" என்று சொல்லுகிறோம்" என்று சொன்னேன் .அவர் ஆமோதித்தார் .நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார் .வயதில் எனக்கு பெரியவராக இருந்த, படித்த அவரிடம் ,பாகிஸ்தான் பற்றிய பல விஷயங்களை கேட்க முடிந்தது .அவருடைய உரையாடலில் இந்தியா மீதும் இந்தியர் மீதும் அவர் வைத்துள்ள நல்லெண்ணம் பளிச்சிட்டது . அரசியல் காரணங்களுக்காக நிலவும் பகைமைக்கு அவரும் என்னைப்போலவே வருந்தினார்.இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது.


இன்று பொதுவாக,பரஸ்பர வெறுப்பு உள்ளூர் தேசபக்தியின் அளவுகோலாகவே மாறிவிட்டது .நல்லிணக்கத்தை வளர்ப்பதாக சொல்லப்படும் கிரிக்கெட் சில நேரங்களில் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாகவும் ,பல நேரங்களில் அர்த்தமற்ற வெறுப்பை
வளர்ப்பதாகவுமே எனக்குப்படுகிறது .படிக்காத பாமர மக்களை விட்டுவிடுவோம் .படித்த நண்பர்கள் பலரே கிரிக்கெட்டில் ஜெயிப்பதில் தான் இந்தியாவின் மானமே அடங்கியிருப்பதைப் போல அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன் .நம்முடைய நாடு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும் .அதற்கு அவர்களை விட நம்மவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் .நம் அணி மோசமாக விளையாடினாலும் அவர்கள் தோற்கவேண்டும் .இல்லையென்றால் அவர்களைத் திட்டுவது எந்த வகையில் நியாயம் .6 வருடங்களுக்கு முன்பு ,சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையிலிருந்து கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் ஏமாற்றத்தில் 2 நிமிடம் அமைதியாக இருந்து ,பின்னர் பாகிஸ்தான் வீரர்களை பாரட்டும் விதமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது ,சில பாகிஸ்தான் வீரர்களின் கண்களில் நெகிழ்ச்சியின் கண்ணீர் .சென்னை மக்களை நினைத்து நான் காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.பாகிஸ்தானில் இப்படி நடக்குமா என்று பலர் கேட்டார்கள் .ஆனால் பாகிஸ்தான் மக்கள் சமீபத்திய இந்திய அணி பயணத்தின் போது
சரியான பதில் தந்தார்கள் .இந்திய அணிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தார்கள்.


சில அரசியல் பிரச்சனைகளில் நாம் வேறுபட்டிருக்கிறோம் .அதை ராஜ்ஜிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம் .ஆனால் அடிப்படையில் ஒரு தாய்ப்பிள்ளைகளான மக்கள் நண்பர்களாக இருப்பதில் என்ன சிக்கல் .இரு புறங்களிலிலுமே ,சாதாராண மக்களிடையே பரஸ்பரம்
தவறான புரிந்துணர்வு இருக்கிறது .இது மாற்றப்பட வேண்டியது.

சில நேரங்களில் நண்பர்கள் பலருடைய அணுகுமுறை எனக்கு புரிவதில்லை .விளையாட்டு என்பதையும் மீறி ,உணர்வுபூர்வமாக ஒரு சார்பு நிலை வருவது இயல்பு தான் .நம் நாட்டு அணி எந்த நாட்டோடு மோதினாலும் ,உணர்வுபூர்வமாக நம் நாடு வெற்றி பெற
வேண்டுமென நாம் விரும்புகிறோம் .அது இயல்பு .ஆனால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் விளையாடினால் ,நாம் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டுமென (பாகிஸ்தான் தோற்க) விரும்புவது என்ன உணர்வு என தெரியவில்லை .நமக்கு இங்கிலாந்தை விட
பாகிஸ்தானல்லவா சொந்தம் ? பாகிஸ்தானை விட இங்கிலாந்தும் ,ஆஸ்திரேலியாவும் எந்த வகையில் நமக்கு நெருக்கம்? நியாயமாக பார்த்தால் நம் உணர்வுகள் பாகிஸ்தானோடல்லவா பொருந்த வேண்டும்?நாம் ஒன்றாக சுதந்திரத்துக்காக போராடினவர்கள் அல்லவா?.சில அரசியல் காரணங்களுக்காக அந்த முடிவு எடுக்கப்படாதிருந்தால் நாம் ஒரே நாட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா?


நம்ம குடும்பத்து பங்காளிச்சண்டை கோர்ட்-ல இருக்கலாம் .இருந்தாலும் பங்காளிகளோட பிள்ளைங்க நாம அன்பா இருப்போமே? நாளை அதுவே பங்காளிச்சண்டையின் உக்கிரம் குறைய பயன்படலாமில்லியா?

என்ன சொல்லுறீங்க?

Monday, November 28, 2005

வந்த நாள் முதல்...

நண்பர்களே!

இந்த வாரம் ...வேற வழியில்லீங்க உங்களுக்கு! .பின்ன என்னங்க, ஏதோ ஒரு வேகத்துல வலைப்பதிவு ஆரம்பிச்சு ,என்ன பதிவு போடலாம்ன்னு மண்டைய குழப்பி ,சட்டியில இருக்குறத சுரண்டி சுரண்டி ,ஆமை வேகத்துல 10 பதிவு தான் போட்டிருக்கிற ஒருத்தன திடீர்ன்னு மதி கூப்பிட்டு நட்சத்திரமா இருப்பியா-ன்னு கேட்டா கொஞ்சம் கூச்சமா இருந்தது .எல்லோரும் 100 ,200 -ன்னு போட்டுத் தாக்கிட்டு சும்மா ஜெட் வேகத்துல போயிட்டிருக்காங்க .10 பதிவு போட்ட நம்பளயும் கணக்குல எடுத்துருக்காங்களேண்னு ஒரு சந்தோஷம் .உருப்படியா இன்னும் எழுத ஆரம்பிக்காத என் மேல நம்பிக்கை வச்சு அழைத்த மதி அவர்களுக்கும் ,காசி அவர்களுக்கும் நன்றி!

தமிழ் வலைப்பதிவுகளில் இத்தனை பேர் பல்வேறு கோணங்களில் ரசிக்கும் படியாக ஆர்வத்தோடு எழுதி வருவது ,அதுவும் இளைய தலைமுறை தமிழை விட்டு விலகிப் போய்க்கொண்டிருகிறது என்று கருதப்படுகிற காலகட்டத்தில், இத்தனை இளைஞர்கள்(தருமியையும் சேர்த்துத்தான்) தொழில்நுட்ப வளர்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தமிழை முன்னெடுத்து செல்ல பங்காற்ற முன்வந்திருப்பது மகிழ்சிக்குரிய விஷயம் .தொழில்ரீதியாக அல்லாத இத்தகைய பங்களிப்புகளுக்கு ,படைக்கும் ஆர்வம், திறமை தவிர மொழி மீது கொண்டிருக்கும் ஆர்வமும் ஒரு காரணம்.ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு புள்ளியிலிருந்து இந்த ஆர்வம் தொடங்கியிருக்கும். எனக்கு ஆர்வம் வந்ததெப்படி?

எங்கள் கிராமத்தில் கத்தோலிக்க கோவிலுக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் 10 வது வரை படித்தேன் .அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர் .எனக்கும் ஆசிரியர் .அம்மா தமிழாசிரியர் இல்லையென்றாலும் ,தமிழார்வமும் எழுத்துத்திறமையும் உள்ளவர்கள் .ஆசிரியர் பணியோடு ,கோவில் பணிகளிலும் ,ஊரில் பொதுக்காரியங்களிலும் அயராது பங்களிப்பார்கள் .கோவிலில் ஞாயிறு மற்றும் விசேட தினங்களில் நடைபெறும் திருப்பலிகளின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் 'இன்றைய சிந்தனை' பெரும்பாலும் அம்மாவே எழுதுவார்கள் .உள்ளூரில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக நாடகம் ,பாடல்கள் நிறைய எழுதுவார்கள் .

எங்கள் ஊர் ஒரு வித்தியாசமான சூழல் தான் .முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களைக் கொண்ட ஒரு மீனவ கிராமம் என்றாலும் ,படிப்பறிவில் பின் தங்கிவிடவில்லை .நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் 'இராயப்பர்(St.Peter) எழுத்தாளர் மன்றம்' என்ற ஒரு அமைப்பு இருந்தது .அம்மா தான் தலைவர் .ஆசிரியர்கள் ,படித்த இளைஞர்கள்,கன்னிகாஸ்திரிகள் அதில் உறுப்பினராக இருந்தார்கள் .அவர்கள் இணைந்து மாதமொருமுறை வெளிவரும்படி ஒரு கையெழுத்துப்பத்திரிகை நடத்தினார்கள்.அதற்கு அம்மா ஆசிரியர் என்ற முறையில் ,எங்கள் வீட்டில் அந்த பணிகள் நடக்கும் .தொகுப்புப் பணி முடிந்த பிறகு ஒரே மாதிரி 5 பிரதிகள் எழுத வேண்டும் .அப்பாவோட கையெழுத்து சும்மா அச்சு மாதிரி இருக்கும் .அதனால அப்பா 2 பிரதி எழுதுவாங்க .என்னோட தமிழ் கையெழுத்து அப்போ அழகா இருந்ததால நான் 1 பிரதி எழுதுவேன் .அது எனக்கு ஒரு நல்ல அனுபவம் .அடிப்படையிலயே எனக்கும் சின்ன வயசிலயே இந்த ஆர்வம் இருந்ததால மகிழ்ச்சியாக இருந்தது .கதைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் ,போட்டிகள் இப்படி கலந்து கட்டி ,அந்த பத்திரிகைகள் நல்லாவே இருந்தது .எழுதி முடித்த பின்னர் எங்கள் ஊரில் ஆர்வமுள்ள வீடுகளுக்கு ஒரு நாள் ஒரு வீடு என்ற வகையில் வாசித்து அடுத்த வீட்டுக்கு அவர்களே கொடுத்து விடுவார்கள் .

சின்ன வயதிலேயே ,விளையாட்டுகளோடு ,சினிமா பாட்டு கேக்குறதுல ரொம்ப ஆர்வம் .வீட்டுல எல்லோரும் கோவில் பாட்டு மட்டும் ஆர்வத்தோடு பாடுவார்கள் .நான் மட்டும் சினிமாப் பாட்டு தான் .இலங்கை வானொலி தான் என் உற்ற நண்பன் .கல்யாணம் போன்ற விசேடங்கள் என்றால் பெரிய குழல் வச்சு ஒலி பெருக்கி வச்சு பெரும்பாலும் எம்.ஜி.ஆர் பாட்டு தான் கேட்கும் .ஏகப்பட்ட எம்.ஜி.ஆர் பாட்டுக்கள் முழு வரிகளும் எனக்கு மனப்பாடம் ஆனது இப்படித்தான் .ஆனா அதுலயும் ஒரு பயன் இருந்தது .ஊரில திருமண வரவேற்பின் போது மணமக்களை வாழ்த்தி சினிமாப் பாடல் மெட்டில் பொருத்தமான வரிகள் எழுதி பாடுவது அப்போது கண்டிப்பாக உண்டு .பெரும்பாலும் எல்லோரும் அம்மாவத்தான் தேடி வருவாங்க .எந்த பாட்டு மெட்டு-ன்னு ஆர்டர் வேற.அம்மாக்கு அவ்வளவா சினிமாப் பாட்டு தெரியாது .அதனால என்னைக் கூப்பிட்டு பாட சொல்லுவாங்க .நான் பாடுற மெட்டை மனசுல வச்சுகிட்டு அப்புறமா எழுதிடுவாங்க .அப்புறம் எழுதிய பாட்டை அதே மெட்டுல என்னை பாட சொல்லுவாங்க .சில இடங்கள்ள உதைக்கும் .நான் சொல்லுவேன் .அம்மா வேற வார்த்தை போடுவாங்க ..இப்படியே நாளாக ஆக நானே மாற்று வார்த்தை சொல்ல அம்மா ஒத்துக்குவாங்க ..அப்புறம் ஒரு தடவ எழுதிட்டு என்கிட்ட கொடுத்து நீயே திருத்திக்கொடுத்துடு-ன்னு சொல்லிடுவாங்க .அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.

10-வது வகுப்பு முடித்த பிறகு நாகர்கோவிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தேன் .வீட்டிலிருந்து 10 கி.மீ தான் என்றாலும் ,கிராமத்தில் வீட்டுக்கு பக்கத்தில் தெரிந்த ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,நல்ல சூழலில் படித்த எனக்கு நகரத்தின் இறுக்கமான புதுச்சூழல் ஒத்து வரவே இல்லை .வகுப்பில் சுமாரான மாணவனாக இருந்தேன்.ஆசிரியர்கள் அந்நியமாக இருந்தார்கள் .நகர மாணவர்களோடு ஒட்ட முடியவில்லை .ஒரு நாள் தமிழாசிரியர் வகுப்பு நடத்தும் போது நாகர்கோவில் ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட அளவில் கட்டுரை போட்டி நடைபெறுவதாகவும் ,அதற்கு எங்கள் வகுப்பிலிருந்து ஒருவரை அனுப்பச்சொல்லி சுற்றறிக்கை வந்தது .ஆசிரியர் கேட்ட போது மாணவர்கள் யாரும் தயாராக இல்லை,நான் உட்பட .ஆசிரியர் என்ன நினைத்தாரோ ,கடைசி வரிசையில் இருந்த என்னை எழும்ப சொன்னார் .பெயர் கேட்டார் .சொன்னேன் .என் பெயரை அதில் எழுதி விட்டு "நீ போற..போய் எழுதுற"-ன்னு ஒரே போடா போட்டார் .எனக்கு ஒண்ணுமே புரியல்ல .வகுப்பில் நான் கவனம் பெறாத மாணவன் .ஆசிரியரிடம் பேசியதே இல்லை .எதனால் என்னை சொன்னார் என தெரியாது .கட்டுரை எழுத வேண்டிய நாளன்று வேறு ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள் .அப்பாவியாக அங்கு சென்றேன் .அங்கே நிறைய நகரத்து மாணவர்கள் ரொம்ப சீரியசா கட்டுரை எழுத போறது பத்தி பேசிட்டிருந்தாங்க .நேரம் வந்த போது அப்போது தான் "சுதந்திர இந்தியாவின் 40 ஆண்டு கால சாதனை" -ன்னு தலைப்பு கொடுத்து எழுத சொன்னார்கள் .நானும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டேன் .இரண்டு வாரம் கழித்து திங்கள் கிழமை காலை தேசியக்கொடி அணிவகுப்பின் போது பள்ளி முதல்வர் "மாவட்ட அளவில் ரோட்டரி சங்கம் நடத்திய கட்டுரைப்போட்டியில் நமது பள்ளி மாணவர் முதல் பரிசை பெற்றுள்ளார்" என்று சொல்லி என் பெயரைச் சொன்னார் .உண்மையிலயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இங்கே சிங்கை வந்த புதிதில் ,இலங்கையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வழக்கம் போல (வழமையாக) பொத்தாம் பொதுவாக தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழை பேணுவதே இல்லை என்ற குற்றசாட்டைச் சொல்ல அவருக்கு மறுத்து பதிலிறுக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பினேன் .அவர் என்ன நினைத்தாரோ ,அதை கட்டுரை போன்று ஒரு நாளிதழுக்கு அனுப்பி வைக்க ,அவர்களும் அதை 'தமிழகம் தமிழை புறக்கணிக்கிறதா?" என்ற தலைப்போடு கட்டுரையாக பிரசுரித்து விட்டார்கள் (தினக்குரல் என்று நினைக்கிறேன்) .அவர் அந்த கட்டுரையை மட்டும் வெட்டி எனக்கு அனுப்பியிருந்தார் .என்ன தான் இருந்தாலும் நம்முடைய எழுத்தை அச்சில் பார்த்தால் அந்த மகிழ்ச்சியே தனி தான்.

இப்போ நாம கிறுக்குறதையும் படிக்க கொஞ்ச ஜீவன்கள் இங்க இருக்குறது சந்தோஷமா இருக்கு .அதைவிட பலபேருடைய எழுத்துக்களை படித்து பல விடயங்களை அறிந்து கொள்ள முடிவது அதைவிட சந்தோஷமா இருக்கு..தொடர்வோம் இந்த பகிர்தலை ..நண்பர்களே!

Wednesday, November 16, 2005

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ

Image hosted by Photobucket.com

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ...

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரைஊரார் நினைப்பது சுலபம்


---------------------------------------------

மீனவனின் வாழ்க்கையை இத்தனை உருக்கத்தோடு என்னால் எழுத முடிந்திருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை .ஆனால் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணன் அனுபவித்து எழுதியிருப்பது ஆச்சரியமல்லவா!

வாலி நீ வாழி!

Wednesday, November 02, 2005

குமரி மாவட்டம் -பொன்விழா ஆண்டு -சில துளிகள்

சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.


எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.

* இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்

* கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.

* பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.

* தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)

* 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.

* இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்

* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)

* கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.

* சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.

* சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.

* இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் .

* மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.

* தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் - நாகர்கோவில்).

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives