Thursday, December 15, 2005

விகடனுக்கு நன்றி!

"ஒதுக்கப்பட்ட கல்லே மூலைக்கல்லானது" என்பது போன்ற ஒரு வாசகம் பைபிளில் உண்டு .சமீபத்தில் நட்சத்திர வாரத்தில் தினம் ஒரு பதிவு எழுதுவதே பெரிய சவாலாக இருந்தது.ஒரு நாள் எழுத நினைத்திருந்த பதிவு நேரமின்மையால் எழுத முடியாமையால் போக ,அதை ஈடு கட்ட வியட்நாமின் ஹோசிமின் சிட்டி-யில் இருந்த மாரியம்மன் கோவிலையும் ,அதிலிருந்த மதுரை வீரன் சாமியையும் என் கைத்தொலைபேசியில் படம் பிடித்து ,அவரசமாக போட்ட பதிவு
வியட்நாமில் மதுரை வீரன்.

அன்றே அவள் விகடன் ஆசிரியர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ,தகவல் சுவாரஸ்யமாயிருப்பதாகவும் ,நான் அனுமதித்தால் இதை அவள் விகடனில் பிரசுரிக்க இருப்பதாகவும் கேட்டிருந்தார் .அதன் படி தற்போதைய அவள் விகடனில் பிரசுரமாகியுள்ளது.

பதிவு செய்திருப்பவர்களுக்கு சுட்டி இங்கே.

விகடனில் பிரசுரமாயிருக்கிறது என்பதை விட ,விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ்மணத்தையும் ,தமிழ் வலைப்பதிவுகளையும் வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

Wednesday, December 14, 2005

தமிழக அரசியல் - கேளிக்கை

சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதாலோ என்னவோ ,தமிழக அரசியல் வெகு காலமாக தனி மனித செல்வாக்கை மையமாக வைத்தே நடை போடுகிறது .நமது பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் ,அங்கே ஆட்சி அமைப்பதில் தனிமனித செல்வாக்கை விட கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை பெறுகிறது .ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் தலைவருக்காகத் தான் அந்த கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர் .தி.மு.க வுக்கு ஓட்டளிப்பவர்களில் பாதி பேர் கலைஞர் வரவேண்டும் என்றும் ,இன்னொரு பாதி பேர் ஜெயலலிதா வரக்கூடாது என்றும் வாக்களிக்கின்றனர்.அதே போல அ.தி.மு.க வின் ஓட்டுவங்கி ஜெயலலிதா ஆதரவு ,கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டு காரணிகளை உள்ளடக்கியது.இரண்டு பக்கத்திலும் ஒரு பெரும் கூட்டம் "அவருக்கு இவர் பரவாயில்லை' என்ற நிலைப்பாட்டிலேயே ஓட்டளிக்கின்றனர்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ,மக்கள் மதிக்கின்ற பலருக்கு ஓட்டளிப்பதில்லை .முதல் இரண்டு நிலைகளுக்கு கீழே இருக்கும் கட்சிகளின் சில தலைவர்கள் மேல் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் அவை ஒட்டுகளாக மாறுவதில்லை .காரணம் போட்டி என்பது முதல் இரண்டு பேருக்குத் தான் என்ற தோற்றம் வரும் போது ,வீணாக தன் ஓட்டை வெற்றி வாய்ப்பில்லாத ஒருவருக்கு போடும் போது ,அதன் மூலம் முதலிரண்டு நிலைகளில் தான் அதிகம் வெறுக்கும் கட்சி சாதகம் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ,முதலிரண்டு கட்சிகளில் தான் குறைவாக வெறுக்கின்ற கட்சிக்கு ஓட்டளிக்கிறார்கள்.

பொதுவாக இந்த ஆட்டுமந்தை மனநிலை தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை ! "நீ ஏம்பா ரஜினி ரசிகனா இருக்க?" -ன்னு கேட்டா "எனக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்கும்" இப்படி எதாவது சொல்லாமல் "அவர் படம் தானே ஓடுது .அதான் அவர் ரசிகன்' என்று பலர் சொல்லுவது போல ,பலர் இங்கே வெற்றி பெறுகின்ற பக்கம் சாய்வதை ,எங்கே ஆரவாரம் செய்ய வாய்ப்பிருக்கிறதோ ,எங்கே இருந்தால் தான் வெற்றி பெற்ற பக்கம் இருந்தேன் என்று சொல்லி மற்றவரை கேலி செய்து சுகம் காண முடியுமோ ,அங்கே கண்ணை மூடிக் கொண்டு சாய்கிற மனநிலை சினிமா போலவே ,அரசியலிலும் இருக்கிறது .
ஏனென்றால் இங்கு அரசியல் கூட ஒரு கேளிக்கை போலத் தான் இருக்கிறது .

கண்ணியமாக ,அமைதியாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மதிக்கப்படுகிற போதும் ,தேர்வு செய்யப்படுவதில்லை ."அன்பே சிவம்' மிக நல்ல படம் என்று நானறிந்த எல்லோரும் சொல்கிறார்கள் .ஆனால் அது தியேட்டரில் சென்று பார்ப்பதற்கல்ல .அதிலே விசிலடிக்க ஒன்றுமில்லை.'சிவகாசி' எனக்கு எப்படி சகிக்கவில்லையோ ,அதுபோல நானறிந்த பல நண்பர்களுக்கும் அவ்வாறே ,ஆனல் அது வசூலில் தூள்பறத்துகிறது .அது போல 'நல்ல கண்ணு'கள் இருக்கலாம் .நல்ல மனுசன் தான்னு எல்லோரும் சொல்லுறாங்க .ஆனா ஒரு கெத்து வேணாங்களா ? தலைவர்னா ஒரு மவுசு வேணாமா ? அவர் கலர பாத்து நாம வாய் பிழக்க வேண்டாமா ?ஒரு கலர்புல்லா இருந்தா தானே நல்லா இருக்கும் ,அப்படின்னு தான் சாதாரண மக்கள் நினைக்குறாங்க .
ஒரு கட்சியின் பலமே ,அது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறது ,அதன் தலைவர் கைது செய்யப்படும் போது எத்தனை பஸ் கண்ணாடிகள் உடைகிறது என்பதை பொறுத்து தான் மக்களால் எடை போடப்படுகிறது எனும் போது ,அரசியல் வாதிகள் அதற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறார்கள்.அவ்வாறு நடந்து கொள்ளாத அரசியல் வாதிகள் பலமில்லாத ,தலைவருக்குரிய கவர்ச்சி இல்லாதவராக ,இன்னும் சொல்லப்போனால் கேலிக்குரியவராக ஆக்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது .ஆக இங்கு பலமிக்க அரசியல்வாதியாக வளருவதற்கு மசாலா சினிமா போல ,மசாலா அரசியல் செய்தால் தான் ரசிகர்கள் இருப்பார்கள் .இல்லையென்றால் கண்ணியமான சொங்கி அரசியல் வாதிக்கு தொண்டனாக இருப்பதில் என்ன சுவாரசியம்?

உதாரணத்துக்கு பா.மா.க வை எடுத்துக் கொள்ளுவோம் .நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் "பா.ம.க கிலோ என்ன் விலை?' என்று கேட்கும் நிலை தான் .அதனால் எனக்கு எந்த சார்பும் கிடையாது.ராமதாஸ் காந்திய வழியில் நடந்து கொண்டிருந்தால் ,அவரைப்பற்றி யாரும் இங்கு பேசப்போவதும் இல்லை ,பாராட்டப் போவதும் இல்லை .அவர் தனது துவக்க கால போராட்ட முறைகளில் மசாலா தூவினார் .ரசிகர்கள் கிடைத்தார்கள் .அவரை எதிர்க்கும் கூட்டம் அதிகமானது .எதிர்ப்பு கூடக் கூட பிரபலமும் கூடுகிறது .பிரபலம் கூடக் கூட ரசிகர்களும் கூடுகிறார்கள் (இதில் நான் ராமதாஸ் அவர்களின் அரசியல் தேவை ,அவர் சார்ந்த சமுதாய எழுச்சியின் அவசியம் பற்றி பேச வரவில்லை .அதில் எனக்கு வேறு கருத்துக்கள் உண்டு .இங்கே வழிமுறைகள் பற்றியே பேசுகிறோம்)

வைக்கோவை எடுத்துக்கொள்வோம் .ஈழத்தமிழர் விடயத்திலும் ,கலைஞரோடு குலாவுவதிலும் பலருக்கு அவர் மேல் கருத்து வேற்றுமை இருக்கலாம் .ஆனால் அவர் குறைந்த பட்ச கண்ணியமாவது கடைபிடிக்கிற அரசியல் வாதி என்பது என் கருத்து .தமிழகத்தில் குறிப்பிடத் தக்க அளவு இளம் தொண்டர்களை கொண்டிருக்கின்ற தலைவர் அவர் .ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையிலடைக்கப்பட்ட போதும் ,நடைபயணங்கள் நடத்திய போதும் ,அவர் காட்டிய கண்ணியம் போற்றுதலுக்குரியது .தன்னிடமுள்ள இளைஞர் சக்தியை அவர் இதுவரை வன்முறைக்கு தூண்டி விட்டதில்லை .அவர் நினைத்திருந்தால் அவரது தொண்டர்களை பஸ் கண்ணாடியை உடைக்க தூண்டி தன் பலத்தை காட்டியிருக்கலாம் .ஆனால் அவ்வாறு செய்யவில்லை .அவ்வாறு அவர் கண்ணியம் காத்ததால் அவர் அடைந்த பலன் என்ன? "நடுநிலை"(?) சோ கூட இந்த கண்ணியத்தை பாராட்டியதில்லை .மாறாக அவரது தொண்டர்கள் அமைதி காத்ததை மறைமுகமாக அவரது பலமின்மையாக சுட்டிக்காட்டுவதும் , இயல்பான அவரது நெகிழும் குணத்தை கிண்டல் செய்து ,அவர் அழுமூஞ்சி என்ற ரீதியில் கேலி செய்வதும் தான் நடைபெற்றது .

ஜெயலலிதாவின் எதேச்சகாரமும் ,தான் என்ற எண்ணமும் ,வரட்டு பிடிவாதங்களும் கூட அவரது துணிவாகவும் ,தலைமைக்கு தேவையான உறுதியாகவும் அறிவு ஜீவிகளால் புகழப்படுகிற சூழ்நிலையில் ,கண்ணியமும் ,பொறுமையும் ,நல்லிணக்க முறைகளும் ஒரு அரசியல் வாதிக்கு கவனத்தையும் ,செல்வாக்கையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக ,பலகீனமாகவும் ,எள்ளலை சம்பாதித்து தருவதாகவும் இருக்கின்ற ஒரு சூழலில் ,ஆர்ப்பாட்ட அரசியல் ஒரு சாராரின் எதிர்ப்பை (அதில் பலர் ஓட்டே போடுவதில்லை) பெற்றுத்தந்தாலும் ,துடிப்பான அரசியல் வாதி என்ற தோற்றத்தையும் ,ஒரு சாராரின் கவனிப்பையும் பெற்றுத் தருமானால் ,அரசியல் வாதிகள் அந்த வழியை தேர்ந்தெடுப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .

அரசியலை பரபரப்பு கேளிக்கையாக மக்கள் நினைப்பதை குறைத்துக் கொள்ளும் வரை அரசியல்வாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.

(சிறிது காலம் வலைப்பதிவுக்கு இடைவெளி விட வேண்டிய நிலை .புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் .அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)

Sunday, December 04, 2005

'மதி'யுரை மறவேன் - ஜோ பேருரை

எழுச்சி மிகு இந்த விழாவுக்கு தலைமையேற்றிருக்கின்ற நம் 'தமிழ் மண இயக்கத்தின்' நிறுவனரும் நிர்வாக இயக்குனரும் ,ஆயிரம் இடர்வரினும் இந்த இயக்கத்தை இரும்புக் கோட்டையாக கட்டிக் காத்து வருகின்ற அஞ்சா நெஞ்சன் தானைத் தலைவர் காசி அவர்களே! ,இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரும் ,இணையில்லா உழைப்புக்கு சொந்தக்காரருமான தளபதி 'மதி' அவர்களே!

இயக்கத்தின் பகுத்தறிவுப் பாசறையின் தளபதியாக பவனி வரும் ,இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடு சுமந்து ,அதன் பின் எண்ணற்ற உரிமைப் போராட்டங்களில் சிறை புகுந்து ,சமீபத்தில் காந்த நடிகரின் இயக்கத்தில் கொள்கைப்பரப்பு செயலாளராக ஆகி விட்டார் என்று வதந்தி பரவிய வேளையிலே ,அவர் அந்த இயக்கத்தில் வேவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர் என்ற உண்மையறியாது நமது இயக்கத்து தோழர்கள் பலர் திகைப்புற்ற வேளையிலே ,போன காரியம் முடிந்தவுடன் கிஞ்சித்தும் தாமதியாமல் நமது இயக்கப் பணிகளில் பம்பரமாக சுழன்ற, சங்கம் வளர்த்த மதுரையில் நமது இயக்கத்தின் இடிதாங்கி தருமி அவர்களே!

நமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ,இயக்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்து (ஜோசப் சார்: அடப்பாவி பயலே! உனக்கு சப்போர்ட் பண்ணுனதுக்கு இது தேவை தான்) ,இயக்க மாநாடுகளில் எண்ணற்ற நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றி ,தலைவர் முதல் தொண்டர் வரை ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கின்ற இயக்கத்தின் 'நகைச்சுவை மன்னர்' ஜோசப் ஐயா அவர்களே!

இயக்க வரலாற்றிலேயே ஒரே பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்று ,தானே தன் சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் ,பின்னூட்ட வித்தகர் டோண்டு ஐயா அவர்களே!

தனியொரு ஆளாக நின்று நியூசிலாந்து மண்ணில் இயக்கத்தின் கொடியை விண்ணதிர பறக்க விட்டிருக்கின்ற ,"நான் தம்பிமார்களுக்கெல்லாம் அக்கா' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு அறிவித்த ,பாசமிகு அக்கா நியூசி துளசி அக்கா அவர்களே!

சிங்கை மாநகரின் இயக்கத்தின் தூணாக இருந்து ,இளம் உறுப்பினர்களை ஓடோடிச்சென்று ஊக்குவித்து அனைவரின் அன்பைப் பெற்ற ,இயக்கத்தின் தகவல் விளக்கப் பிரிவின் தளகர்த்தர் ஆற்றல்மிகு சிங்கை அன்பு அவர்களே !இயக்கத்தின் ஊடக வன்முறை எதிர்ப்பு அணியின் தலைவரும் ,தமிழ்மண பாட்டாளிப் பிரிவின் ஆலோசகருமான ,அருமை நண்பர் மானமிகு சிங்கை குழலி அவர்களே!(குழலி : அடேய்..சிங்கப்பூர் வா மவனே வச்சுகிறேன் கச்சேரிய),இயக்கத்தின் இளம்கவி சிங்.செயக்குமார் அவர்களே!

எங்கள் நாஞ்சில் நாட்டு இயக்க மறவர்களில் ஒருவரும் ,ஓடோடி வந்து ஊக்கக்கரம் கொடுப்பவருமான அருமைச் சகோதரர் நாஞ்சில் இறைநேசன் அவர்களே!முத்துநகர் தந்த சொத்து ,இயக்கத்தின் ஆன்மீக அணியின் ஆற்றல் மிகு செயல்மறவர் அருளாளர் கோ.ராகவன் அவர்களே! ஆன்மீக 'குமரன்' அவர்களே!

கர்நாடக மாநில இயக்கத்தின் சூப்பர் ஸ்டாரும் ,தமது நெகிழ்ச்சி உரைகளால் எல்லோர் உள்ளம் கவர்ந்த 'நாவலர்' இளவஞ்சி அவர்களே! இயக்கத்தின் குதிரைப்படை தளபதி பரஞ்சோதி அவர்களே! வெட்டு ஒன்று துண்டு ரெண்டென முழங்கும் கல்வெட்டு அவர்களே! வராது வந்த மாமணி மாயவரத்தான் அவர்களே!

ருஷ்ய நாட்டு இயக்கப் பிரதிநிதி செங்கொடி ராமநாதன் அவர்களே!பாசமிகு சகோதரிகள் உஷா அவர்களே!மதுமிதா அவர்களே!அருமை நண்பர்கள் முத்துக்குமரன்,டி.சே.தமிழன்,ராஜ்,முத்து,மூர்த்தி,சுதர்சனம்,சுதர்சனம் கோபால் அவர்களே!

நெல்லைச்சீமையில் இயக்க மருத்துவர் அணிக்கு தலைமையேற்றிருக்கும் மருத்துவர் தாணு அவர்களே!தங்கமணி அவர்களே!பதிவுகளில் தேன்மழை பொழிய வைக்கின்ற அருமைச் சகோதரி தேன் துளி பத்மா அவர்களே!

(அனைவரும் : அடேய்..போதும்டா.எப்ப தான் நிறுத்துவ!)

துவக்க விழாவுக்கு மட்டும் வருகை தந்து காணாமல் போன தமிழ்மண ரஜினி பேரவையின் தலைவர் இலக்கியச் செம்மல் ரஜினி ராம்கி அவர்களே! 'தமிழ்மண சுஜாதா பேரவையின்' தலைவர் ,செயலாளர் அனைத்துமான தேசிகன் அவர்களே! தமிழ் மண கலைஞானி கமல் பேரவைத் தலைவர் எம்.கே.குமார் அவர்களே! அவ்வப்போது வந்து 'லொள்'ளுகின்ற எல்.எல்.தாசு அவர்களே!

இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டா உருப்படுமா என்று முனகி விட்டு கடைகோடியில் முகமூடி போட்டுக்கொண்டு எனது உரையை செவிமடுக்கின்ற 'அறிவு ஜீவிகள்' அணி மறவர்களே!

பெயர்கள் விடுபட்ட இயக்கத்தின் முன்னோடிகளே!தாய்மார்களே பெரியோர்களே! (காசி: இவனுக்கு கொடுத்ததே 10 நிமிடம் .அதுல 9 நிமிடம் அவர்களே அவர்களே -ன்னு ஓட்டிட்டானே!சை!)

வாரம் ஒருவரை நட்சத்திரமாக நியமித்து பணிகள் ஆற்றச் செய்யும் நமது இயக்கத்தின் நடைமுறைக்கேற்ப மதி அவர்கள் இந்த வாரம் என்னை நட்சத்திரமாக இருக்கப் பணித்தார்கள் .வெளி நாட்டு பயணப் பணிகள் இருந்த போதிலும் இயக்க கடமை கருதி அதை நான் ஏற்றுக்கொண்டேன் (குழலி : கம்பெனி செலவுல ஊர் ஊரா ஜாலியா சுத்திகிட்டு ,பணி கிணி-ன்னு என்னமா பீலா உடுறான் பாரு). சுற்றுப்பயண வேளையிலேயே என்னால் முடிந்த அளவுக்கு இந்த பணியினை நிறைவேற்றியிருக்கிறேன் .இந்த நேரத்தில் எனக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இறுதியாக நமது தளபதி 'மதி' அவர்கள் ,கம்போடியா ,வியட்நாம் குறித்து நான் எழுதியது போல தொடந்து பல்வேறு பிரிவுகளில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் (ஜோ மனசாட்சி : அடே ..போற போக்குல ஒரு போட்டாவ பிடிச்சு தத்தக்க பித்தக்கன்னு எதயாவது எழுதிட்டு பெரிய வரலாற்று விற்பன்னர் மாதிரி பில்டப் குடுக்குறியா?) .அது மட்டுமல்ல..தலைவர் அவர்களிடம் 'ஜோ அவர்களுக்கு "தமிழ்மண யுவான் சுவாங்" என்ற பட்டத்தை கொடுத்தாலென்ன " என்று ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் (மதி: அடப் பாவி..இப்படின்னு தெரிஞ்சா நான் பின்னூட்டமே குடுத்திருக்க மாட்டேனே?) .அது அறிந்து நான் தாழ்மையாக மறுத்து விட்டேன்.

ஆனால் மதி அவர்களின் அந்த ஆலோசனையை நல்ல ஒரு 'மதியுரை'யாக (நன்றி:மதியுரை அமைச்சர் ,சிங்கப்பூர்) எடுத்துக்கொண்டு ,முடிந்த வரை அதை கடைபிடிக்க முயல்வேன் என்று கூறி ,'மதியுரை மறவேன்' என்று உறுதியளித்து ,உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் .

நன்றி! வணக்கம்!!

யேய்! நில்லுங்கப்பா! அடுத்த வாரம் நட்சத்திரமாக பொறுப்பேற்கும் நண்பர் --------- அவர்களை வருக வருக என வரவேற்று (ஒரு வழியா) அமைகிறேன்.

Saturday, December 03, 2005

வியட்நாமில் மதுரை வீரன்

என்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா? என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி .இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க.வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)

ஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு .அதாங்க ஒரு மாரியம்மன் கோவில் ,அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே?).மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.

Image hosted by Photobucket.com

இதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா ?.பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள் .ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம்
.ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க .அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும் ,மதுரை வீரனுக்கும்
கும்பிடு.

Image hosted by Photobucket.com

உள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு .மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு .அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம் .பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம் .வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய
இந்தியர்கள் இருந்தாங்களாம் .போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம் .விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.

Image hosted by Photobucket.com

வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல .கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா!


(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரத்துக்கு பொறுத்துகுங்க மக்களே!)

Friday, December 02, 2005

கனவு காணும் வாழ்க்கை

2 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் பிரபலமான ஒரு பல்பொருள் வணிக வளாகத்திற்கு சென்று விட்டு ,அதனோடு ஒட்டியிருக்கின்ற உணவகத்தில் நண்பரோடு காபி அருந்திக் கொண்டிருந்தேன் .சுவாரஸ்யமான உரையாடலில் இருந்த போது ,பக்கத்து இருக்கையில் இருந்து ஒருவர் "சார் .S-Pass -ன்னா என்ன சார்?" என்று கேட்டார்.35-40 வயதிருக்கும் .சோர்ந்து போயிருந்த முகம்.சிங்கப்பூரைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணி புரிவோருக்கு 4 விதமான அடையாள அட்டைகள் இருக்கின்றன .

1.Work Permit (கட்டிடத் தொழிலாளர் ,உணவகத்தில் வேலை செய்பவர் போன்ற நாள் கூலி மற்றும் குறைந்த சம்பளம் உள்ளவர்)

2.S-Pass (1000-2500 டாலர் அடிப்படை சம்பளமுள்ள நடுத்தர வேலை செய்வோருக்கு)

3.Emloyement Pass (2500 டாலருக்கு மேல் அடிப்படை சம்பளமுள்ள புரபஷ்னல் வேலை செய்வோருக்கு)

4.Permenant Resident (நீண்ட நாள் வேலை செய்வோர் தங்களை நிரந்தர வாசிகளாக மாற்றிக்கொள்ளலாம்)

இதையே நான் அவரிடம் சொன்னேன் .அவர் சொன்னார் "சார். நான் இஞ்சினீயரிங் படித்துள்ளேன் .சென்னையில் 8 ஆண்டுகள் Production துறையில் அனுபவம் உண்டு .2 மாதங்களுக்கு முன் S-Pass-ல் சிங்கப்பூர் வந்தேன் .இப்போது இந்த வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்" .நான் ஆடிப்போய்விட்டேன் .அவருடைய S-Pass அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார் .அதில் அவருடைய வேலை 'Mechine Technician' என்று போட்டிருந்தது .என்ன நடந்தது என கேட்டேன் .தான் அனுபவம் பெற்ற புரொடக்சன் வேலை என்று தன்னை அழைத்து வந்ததாகவும் ,ஆனால் உடனடியாக அந்த வேலை காலியாக இல்லை,எனவே அதுவரை வேறு வேலைகள் கொடுப்பதாகவும் சொல்லி அவரை பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார் .இப்படியே நாட்கள் கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டதாம் .வணிக வளாகங்களில் ட்ராலிகளை சேகரிப்பது ,கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்ய அவர் நிறுவனம் அனுப்பி வைப்பதாக கூறினார்.

பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது .மிகவும் சோர்ந்து காணப்பட்டார் .ஊருக்கு திரும்பிப் போய்விடலாமா என நினைப்பதாக சொன்னார். இஞ்சினியரிங் வரை படித்த ஒருவர் எப்படி இவ்வளவு ஏமாந்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை .அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன் "சார் .நீங்க இஞ்சினியரிங் படித்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?"..அவரோ "என்ன சார்..நான் படிக்காதவனா இருந்திருந்தா மகிழ்ச்சியோடு இந்த வேலைகளை செய்திருப்பேன் .இப்படி ஏமாற்றம் இருந்திருக்காது .இப்போது 8 வருடம் ப்ரொடக்சன் வேலை செய்து விட்டு பல கனவுகளோடு வந்து இங்கு இப்படி இருப்பது ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றார்.

"சரி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். "என்னால் முடிந்த வரை இதே வேலைகளை செய்ய வேண்டியது தான் .அதற்குள் எனக்கு சொல்லப்பட்ட வேலை தரல்லிண்ணா வேற வழியில்லை..ஊருக்கு போக வேண்டியது தான்" என்றார் .நான் அவரிடம் "நீங்கள் வருமுன்னர் நன்கு விசாரித்து வந்திருக்க வேண்டும் .சரி அதை விடுங்கள் .இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் .நீங்க சொன்ன மாதிரி அவர்கள் சொல்லப்பட்ட வேலை தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு சிறிது காலம் ஓட்டி விடுங்கள் .அல்லது ஊருக்குத் தான் போகப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் ,வெறுமனே சென்று விடாதீர்கள் .அந்த நிறுவனத்தின் இந்த மோசடியைப் பற்றி மனித வள அமைச்சுக்கு ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டு போங்கள் .அரசாங்கம் கண்டிப்பாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் .அட்லீஸ்ட் இனிமேலாவது உங்களைப் போல பலரை அவர்கள் ஏமாற்றாமல் தடுத்த புண்ணியமாவது உங்களுக்கு கிடைக்கும்" என்று சொன்னேன் .அவரும் ஆமோதித்து அப்படியே செய்வதாக சொன்னார்.

இந்த மனிதர் எத்தனை கனவுகளோடு இங்கே வந்திருப்பார் .விமானத்தில் பறந்து வரும் போது என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருப்பார்? 8 ஆண்டுகள் ப்ரொடக்சன் அனுபவம் பெற்றிருந்தாலும் சிங்கப்பூர் போல அதி தொழில் நுட்பம் நிறைந்த இடத்தில், தனக்கு மேலும் நுட்பமான வேலை கிடைத்தால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டாரா? இப்போது அவருக்கு கிடைத்தது கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை .அது ஒன்றும் தரக்குறைவான ,இழிவான வேலையல்ல .ஆனால் அதை ஏற்றுக்கொண்டு எதிர்பார்த்து வந்திருந்தால் பிரச்சனையில்லை .இப்போது அவர் குடும்பத்தினரிடம் கூட உண்மையை சொல்லியிருப்பாரா தெரியவில்லை.

ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் ,இன்னொரு பக்கம் அவர் மேல் கோபமாகவும் இருக்கிறது .இவ்வளவு படித்தவர் இப்படி கண்ணை மூடிக்கொண்டு வரலாமா? படிக்காத பாமர மக்கள் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி எதாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று எதையும் விசாரிக்காமல் இங்கு வந்து கஷ்டப்படுவது வாடிக்கை தான் .ஆனால் படித்தவர்களும் அப்படியே இருந்தால் என்ன செய்வது ?தான் பணிபுரியப்போகும் நிறுவனத்தைப் பற்றி இங்கு வரு முன்னரே விசாரித்து அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது .இவ்வளவு படித்த ஒருவருக்கு யார் மூலமாகவோ ,சிங்கையில் பணிபுரியும் ஒருவரிடம் அந்த நிறுவன விபரங்களை கொடுத்து ,அவை உண்மை தானா ,உண்மையிலேயே அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலை கொடுக்கும் நிலையிலுள்ள,அது சம்பந்தமான பணிகள் நடக்கும் நிறுவனம் தானா என்று விசாரித்து அறிந்து கொள்ளலாமே?இங்கிருக்கின்ற நண்பர்கள்,அல்லது நண்பர்களின் நண்பர்கள் யாராவது ஒருவர் குறைந்த பட்சம் இந்த உதவி கூடவா செய்யாமல் போய் விடுவார்கள்?

இங்கே ஒரு இந்திய தூ--தரகம் இருக்கிறது என்று தான் பெயர்.அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளத் தோழர்களின் பிரச்சனைகளில் எந்த அக்கரையும் காட்டியதாக தெரியவில்லை .Work Permit-ல் இங்கு வரும் இந்திய தொழிலாளர்களை விட அதே வேலை செய்யும் மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் .பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்கள் கூட தம் நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் அக்கரையோடு நடந்து கொள்வதாக கேள்விப்பட்டேன் .ஆனால் நம் நாட்டு தூதரகத்துக்கு ஒரே வேலை, பிறப்பு சான்றிதழ் 40 டாலர் ,திருமண சான்றிதழ் 40 டாலர் இப்படி வித விதமாக சான்றிதழ்களுக்கு பணம் வசூலிக்கும் ஒரே பணி .இது தூதரகமா இல்லை போஸ்ட் ஆபீசா தெரியவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டு என்னை அணுகினார் .உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிப்படை ஆங்கிலம் ,எளிய உரையாடல்கள் ,பணியிடத்தில் அணுகு முறைகள்,சிங்கை நடைமுறைகள் போன்ற பயன் மிக்கவை பற்றி அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக ,அதற்கான பாடத்தை தமிழ்ப் படுத்தித்தர வேண்டும் என்று கேட்டார்.நானும் செய்து கொடுத்தேன் .இதில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் சீனர்கள் .நமது தொழிலாளர்கள் மீது இந்த சீனர்களுக்கு உள்ள அக்கரையாவது இங்குள்ள தூதரகத்துக்கு இருக்கிறதா ?சுதந்திர தினத்தன்று கொடியேற்றி இனிப்பு வழங்கி விட்டால் ஒரு வருட தேச சேவை முடிந்து விட்டது போலும்.

சரி.நாம் தொடங்கிய விடயத்துக்கு வருவோம்.பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு மனநிலை இருக்கிறது .நேரடியாக நிறுவனங்களை அணுகியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமோ அல்லாமல் ,ஒரு தனி இடைத்தரகர் மூலம் இப்படி வேலைக்கு வருபவர்கள் சிங்கப்பூர் வந்து விட்டால் போதும் என்ற ஒரே கண்ணோட்டத்தோடு வேறு சிக்கல்களைப் பற்றி எண்ணுவது கூட கிடையாது .அப்படி எண்ணினால் இங்கு வருவது தடைபட்டு விடுமோ என்ற பயம் .தனக்கு தெரிந்தவர்களிடம் கூட விவரங்கள் சொல்வதில்லை .யாராவது எதையாவது சொல்லி தாங்கள் போவதை தடுத்து மனம் மாற வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ,கண்னை மூடிக்கொண்டு இங்கு வந்து சேருகிறார்கள்.இதை படிக்காத பாமரர்கள் விபரமின்றி செய்கிறார்கள் என்பதை பொறுத்துக்கொள்ளலாம் .ஆனால் ஓரளவு படித்தவர்களே இப்படி நடந்து கொண்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

இனிமேலாவது ,குறைந்த பட்சம் படித்தவர்கள் சிங்கை போன்ற நாடுகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வரு முன் ,இங்கிருக்கும் யார் மூலமாவது கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் ஓரளவு உண்மை தானா என்று சற்று விசாரித்து விட்டு வரவும் .உதவி செய்ய என்னைப் போன்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

Thursday, December 01, 2005

கம்போடியா-மண்டை ஓடுகளின் நடுவில்

1999 இறுதியில் நான் சிங்கையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலைநிமித்தமாக கம்போடியா செல்ல வேண்டியிருந்தது .அப்போது அந்த நாட்டைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.ஹிட்லரை விட பன்மடங்கு கொடூரமான போல்பாட் தன் சொந்த நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியை கொன்று குவித்து 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை .அந்த போல்பாட் இறந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

உங்களில் பல பேர் அந்த வரலாறை அறிந்திருப்பீர்கள் என்றாலும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன் .இயற்கை வளத்திற்கும்,கலாச்சார பெருமைக்கும் குறைவில்லாத நாடு கம்போடியா.ஒரு காலத்தில் கம்போடியாவில் இருந்த கமேர் பேரரசுவின் கீழ் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதி,தெற்கு வியட்நாம்,லாவோஸ் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன.பிற்காலத்தில் அந்த பேரரசு நலிவடைந்து 1863-ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.பின்னர் 1953-ல் சுதந்திரம் பெற்றது.வியட்நாம் போரின் போது 1965-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இங்கு குவிக்கப்பட்டு வியட்நாம் போருக்கான தளமாக ஆக்கப்பட்டது.வியட்நாம் ஆதரவு கம்போடிய கம்யூனிஸ்டுகள் அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டை செய்ய,அமைதி கீழறுக்கப்பட்டது.1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் சார்பு கெமர் ரூஜ் (Khmer Rouge) என்ற அமைப்பு திடீரென்று தலைநகர் புனாம் பென் -ஐ கைப்பற்ற புதிய ஆட்சி மலர்ந்தது.

Image hosted by Photobucket.com

இந்த கெமர் ரூஜ் (Khmer Rouge) -ன் தலைவர் தான் போல்பாட் .கம்போடியாவின் கிராம புறத்தில் பிறந்த இவன் சிறிது காலம் பிரான்ஸில் சென்று பயின்ற போது கம்யூனிஸ்டு சிந்தனை வளர்ந்து ,படிப்பை முடிக்காமலேயே நாடு திரும்பினான்.சீனாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாற்றத்தைப் போல கம்போடியாவிலும் நிகழ்த்த வேண்டும் என்பது அவனது நோக்கம்.நாடு திரும்பிய போல்பாட் கிராமப் புற படிக்காத இளைஞர்களையும்,இளம் பெண்களையும் ஒன்று சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுத்து ஒரு கொரில்லா இயக்கமாக மாற்றினான்.
கிராமத்தில் கஷ்டப்பட்டு உழைத்தும் வறுமையில் வாடும் போது நகரங்களில் படித்தவர்கள் ,வியாபாரிகள் சுகபோகமாக வாழ்வது இவர்கள் கண்ணை உறுத்தியது .உடல் உளைப்பின்றி வாழும் அனைவரும் எதிரிகளாக கொள்ளப்பட்டனர் .1975 ஆண்டு கெமர் ரூஜ் (Khmer Rouge) அமைப்பு புனாம் பென் -ஐ கைப்பற்றிய போது ,அமெரிக்க படைகளால் அமைதியிழந்திருந்த மக்கள் ,இவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் .கிராமத்தான்கள் சேர்ந்து தம்மை மீட்டு விட்டதாக தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள் .ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நகரத்து மக்கள் ஒட்டு மொத்தமாக நகரத்தை காலி செய்து கொண்டு உடனே கிராமப்பகுதிகளுக்கு விவசாயம் செய்ய புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது .மறுத்தவர்கள் கொல்லப்படனர் .

மருத்துவர்கள் ,பொறியாளர்கள் ,ஆசிரியர்கள் இப்படி அத்தனை பேரும் விவசாய நிலங்களில் துப்பாக்கி முனைகளில் வேலை செய்ய பணிக்கப்பட்டனர் .மறுத்தவர்கள் ,வேலை செய்ய திராணியற்றவர்கள் கொல்லபட்டனர் .நகரங்கள் இழுத்து மூடப்பட்டன. நாணயம் நிறுத்தப்பட்டது .மருத்துவ மனைகள் பூட்டபட்டன .கல்விக்கூடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன.கம்போடியா உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

பல இடங்களில் மக்களை ஒன்றாக கூட்டி அவர்களில் மருத்துவர் யார்,பொறியாளர் யார் ,ஆசிரியர் யார் என்று கேட்டு அவர்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதாக அழைத்துச் செல்வார்கள் .பின்னர் அவர்கள் திரும்பியதே இல்லை .புனாம் பென் -னுக்கு புறநகர் பகுதியில் கொலைக்களம் ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் உயிரோடு புதைகுழிகளில் கொல்லப்பட்டனர் .தோண்டத்தோண்ட பிணங்களில் மண்டை ஓடுகள் இருக்கும் அந்த பகுதி Killing Field என்று அழைக்கப்படுகிறது .இப்போது சில மண்டை ஓடுகளை எடுத்து பல மாடி கோபுரத்தில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.

Image hosted by Photobucket.com

இப்படியாக 4 வருடங்கள் நீடித்த இந்த அராஜகத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொல்லப்பட்டனர் .அவர்கள் பெரும் பாலும் படித்த ஆண்கள் .1979 -வியட்நாம் படைகள் கம்போடியாவில் நுழைந்து கெமர் ரூஜ் (Khmer Rouge) -ஐ வென்றது கமெர் ரோக்(Khmer Rouge) தாய்லாந்து அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் தஞ்சம் புகுந்தது .ஒரு காலத்தில் நாட்டின் பிரதமராக இருந்து இத்தனை படுகொலைகளையும் செய்த போல்பாட் கடைசி வரை எந்த தண்டனையும் இன்றி ,1998-ல் காட்டிலேயே மரணமடந்தான் .அவனுடைய இறுதி காரியத்தை செய்தது அவன் மனைவி மட்டும் தான்.

Image hosted by Photobucket.com

சுத்தமாக கல்வி ,வர்த்தகம்,உள்நாட்டு கட்டமைப்பு என்பவை முற்றாக துடைத்தெறியப்பட்ட ,ஆண்களில் பெரும்பகுதி கொல்லப்பட்ட ஒரு நாட்டின் நிலையை நினைத்துப்பாருங்கள் .இன்று கிட்டத்தட்ட அனைத்து குடுப்பங்களிலும் ஆண்களை இழந்து ஒரு தலைமுறை தான் ஆகியிருக்கிறது .பெண்களில் 30% -க்கு மேல் எய்ட்ஸ் நோய் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.30 ஆண்டு கால வடுக்கள் இன்னும் மறையவில்லை.மக்களின் முகங்களில் இனம்தெரியாத ஒரு சோகம்,விரக்தி கண்டுகொள்ளமுடிகிறது. உள்நாட்டு சண்டைகளும் ,ஆட்சி அதிகார மோதல்களும் ,ஊழலும் இன்னும் நீடிக்கின்ற இந்த நாடு ,மண்டை ஓடுகளில் நடுவிலிருந்து எழுந்து வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது .நகரங்கள் ஓரளவு வளர்ந்து விட்ட போதிலும் ,கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது .என் கண் முன்னரே துப்பாக்கிச் சண்டையை பார்த்திருக்கிறேன் .இந்தியாவோடு நீண்ட கலாச்சார தொடர்புடைய நாடு கம்போடியா.ஒரு காலத்தில் இந்துக் கலாச்சாரம் இங்கு தழைத்தோங்கியிருக்கிறது .12-ம் நூற்றாண்டில் கட்டபட்ட அங்கோர் வாட் என்னும் உலகின் மிகப்பெரிய ,பழமையான கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது .இது இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது .அடந்த காடுகளுக்கு நடுவில் சுமார் 40 க்.மீ சுற்றளவில் ஆங்காங்கே இப்படி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக அங்கோர் என அழைக்கப்படுகிற இந்த பகுதியில் அங்கோர் வாட் என்பது முதன்மையான கோவில் .கம்போடிய தேசியக்கொடியில் இதன் உருவம் இடம் பெற்றுள்ளது .இது தவிர சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவிலும் ,மன்னர்களுக்காக கட்டப்ட்ட பல கோவில்களும் ,இப்படி சுமார் 30 கோவில்கள் உள்ளன .

Image hosted by Photobucket.com

இவை அனைத்தையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அங்கோர் வாட் -டின் இன்றைய நிலை சற்று புத்த கோவிலாக மாற்றம் கண்டிருந்தாலும் ,அது விஷ்ணு-வுக்காக கட்டபட்ட கோவில் தான் .பிற்காலத்தில் மன்னர் பரம்பரை புத்த மதத்தை தழுவியதாலும் ,தாய்லாந்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி சிறிது காலம் இருந்ததாலும் ,இதனை ஒரு புத்த ஆலயமாக மாற்றும் முயற்சிகள் நடந்திருப்பது கண்கூடாக தெரிகிறது .இந்து கடவுளர்களின் சிலைகளில் தலை மட்டும் அகற்றப்பட்டு புத்த தலைகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் கோவிலின் நீண்ட சுவர்களில் சிற்ப ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள இராமாயணக்கதைகள் ,பார்க்கடலை கடைந்த கதைகள் அப்படியே இருக்கின்றன.

இது தவிர பெரிய சிவன் ஆலயம் ஒன்று இருக்கிறது .நான் அங்கு சென்ற போது அங்கிருந்தவர் எனக்கு அதை விளக்க முற்பட்டார் .சிவன் ,பார்வதி என்று ஒவ்வொன்றாக காட்ட ,நான் 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' -என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க ,அவருக்கு புரிந்து "ஓ! நீங்கள் இந்தியர் .உங்களுக்கு தெரியாததா?" -என்று சிரித்தார் .மகிழ்ச்சியாக இருந்தது .நான் ஒரு இந்து அல்ல என்ற போதும் இவற்றை என் நாட்டு கலாச்சார பரவலின் அடையாளங்களாகத் தான் பார்த்தேன் .பெருமையாக இருந்தது.

இன்றும் இராமயணம் தான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் இதிகாசம் .பிள்ளையார் இங்கு மிகவும் பிரபலம் .இப்போது முழுக்க முழுக்க புத்த நாடாக இருந்தாலும் இந்து கலாச்சாரம் ,பழக்க வழக்கங்கள் கிராமப்பகுதிகளில் தொடர்கின்றன.கல்யாணத்திற்கு வாழை மரம் கட்டி பந்தல் அமைப்பது முதல் பெயர்களில் கூட இந்திய வாடை இருக்கிறது .இவர்களின் தேசிய மொழியாம கெமர் மொழி எழுத்து வடிவம் இந்திய மொழிகலின் சாயலில் இருக்கிறது,பல வார்த்தைகளும் வடமொழிச்சொற்களாக இருக்கின்றன.இங்குள்ள ஒரு நகரத்தின் பெயர் ரத்னகிரி .ரத்தினக்கற்கள் கிடைக்கும் மலைப்பகுதி என்பதை சொல்லத்தேவையில்லை.

மக்கள் நட்பு பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதிலும் இந்தியராக இருந்தால் கூடுதல் புன்னகை .சாதாரண மக்களும் இந்தியாவோடு உள்ள பண்டைய கலாச்சார தொடர்பை அறிந்திருக்கிறார்கள் .சில நேரம் அலுவலக வேலையாக நான் நடந்து செல்லும் போது ,பலரும் சினேகமாக சிரிப்பார்கள் .நகரப்பகுதிகள் இப்போது சீன தாக்கத்தினால் கிராமங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது .நகரங்களில் மஞ்சள் நிற மேனியும் ,சாப் ஸ்டிக்கில் சாப்பிடிவதுமாகத் தான் பலர் இருக்கிறார்கள் .ஒரு முறை நான் கிராமப்பகுதிகளுக்கு சென்ற போது ,தவறி இந்தியாவுக்கு வந்து விட்டோமோ என்று நினைத்தேன் .ஆற்றுக்கரைகளில் பெண்கள் மார்போடு கச்சை கட்டிக்கொண்டு குளித்துக்கொண்டிருக்க ,ஆண்கள் மீசை வைத்து,லுங்கி அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.தட்டில் சோறு போட்டு நம்மைப்போல கையாலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் .மேனி நிறம் கூட ஓரளவு கறுத்திருந்தது .ஆகா ..நகரத்தில் நம்மைப்பார்த்து பலரும் சிரித்ததற்கு இதுவும் காரணமாக இருக்குமோ..பாதி பேர் நான் இந்தியன் என்பதற்காக சிரிக்க ,மீதி பேர் "இத பார்டா .நம்மூர் கிராமத்தான் கையில கம்ப்யூட்டரோட டிப் டாப்-ஆ போறத" -அப்படீன்னு சொல்லி சிரிச்சிருப்பாங்களோ?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives