Friday, February 18, 2005

வார்த்தை சித்தர்

சமீபத்திய குமுதம் இதழில் வலம்புரி ஜான் அவர்களின் தற்போதைய உடல் நிலை குறித்து வைரமுத்து எழுதியிருந்த கட்டுரையில் அவரின் தற்போதைய நிலையிலுள்ள புகைப்படத்தை கண்டதும் மனது பதறியது.

சின்னவயதில் எனக்கு ஏனோ எம்.ஜி.ஆர் என்றாலே பிடிக்காது . அதே எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது தற்செயலாக வானொலி கேட்க நேர்ந்தது..அப்போது யாரோ ஒருவர் எம்.ஜி.ஆர் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன் .என்னையறியாமலேயே கண்ணீர் வந்து எட்டிப்பார்த்தது..அன்று நான் அதிகம் விரும்பாத எம்.ஜி.ஆர்-க்காக என்னை கண்ணீர் விட வைத்தவர் 'வலம்புரி ஜான்' என்று பின்னர் அறிந்தேன்.

காலப்போக்கில் அவருடைய பேச்சுக்கு தீவிர ரசிகனாகி விட்டேன்.கடல் சங்குகளில் 'வலம்புரி' அபூர்வமானது என்பதால் ,நெய்தல் நிலத்து மைந்தனான ஜான் -க்கு 'வலம்புரி' என்று கலைஞர் சூட்டிய பெயர் முற்றிலும் பொருத்தம்.

பல்துறை அறிவும் மொழி வளமும் ஒருங்கே அமைவது அரிது. வலம்புரி ஜான் அத்தகைய அரிதான மனிதர் .நம்முடய தமிழ் சமூகத்தில் திறமைகேற்ற அங்கிகாரம் கிடைப்பது அரிது என்பதோடு அரைகுறைகள் அதீத அங்கீகாரம் பெறுவதும் வழக்கமாக இருக்கிறது.

வலம்புரி ஜான் போன்ற அற்புதமான பேச்சாளர்களை விட மூன்றாம் தர அரசியல் பேச்சாளர்கள் தாம் மக்களிடையே பிரபலம் .4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்திய ரயில் நிலயத்தில் தோளில் ஒரு பையோடு நின்று கொண்டிருந்தார். யாரும் அவரைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை . அருகில் சென்று வணக்கம் சொல்லி "நான் உங்கள் ரசிகன்" என்று சொன்னேன் .மகிழ்ந்து புன்னகைத்து விட்டு ,ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் விடை பெற்றார்.

ஆழ்ந்த சிந்தனையும்,அற்புதமான மொழி புலமையும் ,அகண்ட வாசிப்பு அனுபவமும் கொண்ட அவர் ,அரசியலில் கண்ணதாசனைப் போல் கிளை விட்டு கிளை தாவும் பறவையாகவே இருந்தார். தி.மு.க, அ.தி.மு.க ,த.ம.கா ,மறுபடியும் தி.மு.க என்று எல்லா இடத்திலும் இருந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் 'இமயங்கள்' நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் பேச வந்த போது உடல் தளர்ந்து ,பார்வை மங்கிய நிலையிலும் உணர்ச்சிகரமாக பேசியது நினைவில் நிற்கிறது.
இப்போது மிகவும் உடல் நிலை குன்றிய நிலையில் உடல் உபாதைகளோடு போராடி கொண்டிருப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது .கோடி கோடியாக கொட்டி வைத்திருக்கின்ற தி.மு.க ,அவருடைய சிகிச்சை செலவுக்கு உதவி செய்தால் குறைந்தா போய் விடும்.?

மீண்டும் அவர் எழுந்து வந்து தமிழ் பணியாற்ற மனதார வேண்டுவோம்...

Monday, February 14, 2005

தேச பக்தர்

சிங்கப்பூர் வந்த புதிதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.

பிரபலமான செந்தோசா தீவுக்கு கம்பிவட ஊர்தியில் செல்வதற்காக நண்பர்களோடு அனுமதி சீட்டு பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயதுக் காரர் ஏதோ விசாரிக்கும் முகமாக என்னை நோக்கி வந்தார்.நேரடியாக இந்தியில் ஏதோ கேட்டார்..நான் அவரிடம் "மன்னிக்கவும்.எனக்கு இந்தி தெரியாது.உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா?" என்று பொருள்பட ஆங்கிலத்தில் வினவினேன் .மனிதர் உடனே முகத்தை கேலி செய்யும் விதமாக வைத்துக் கொண்டு "இந்தி தெரியாதா?" என்று கேட்டார் .நான் 'தெரியாது' என்று மறுபடியும் சொன்னேன் .மனிதர் அதோடு விட்டுவிட்டு கேட்க நினைத்ததை கேட்டிருக்கலாம் ..இன்னும் கேலி செய்யும் தொனியோடு "இந்தியராக இருக்கிறீர்கள்..எப்படி இந்தி தெரியாமலிருக்கலாம்?"..அது வரை பொறுமையாக இருந்த நான் உண்மையிலேயே வெடித்து விட்டேன் .."இதோ பாருங்கள்..நீங்கள் இப்போது உத்தர பிரதேசத்திலோ அல்லது பீகாரிலோ இல்லை..இது சிங்கப்பூர் ..இங்கே தமிழ் தான் ஆட்சி மொழிகளில் ஒன்று ..இந்தி அல்ல..முடிந்தால் ஆங்கிலத்தில் பேசுங்கள்..அல்லது தமிழ் கற்று கொள்ளுங்கள்..உங்கள் அறியாமையை இங்கு வந்து காட்டாதீர்கள்" என்று பொருள் பட கத்தி தீர்த்து விட்டேன்.
இந்த மனிதரின் மனப்போக்கில் எனக்கு பல கேள்விகள் எழும்பின..

1. தோற்றத்தின் மூலம் நான் இந்திய இனத்தவன் என்று அவர் புரிந்து கொண்டது சரியே..ஆனால் நான் இந்திய தேசத்தவனா அல்லது சிங்கப்பூர் இந்தியனா என்று கூட அவருக்கு தெரியாது .இந்தியாவில் பிறந்தவனென்றால் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கூமுட்டை தனத்தை கூட சகித்து கொள்ளலாம்..ஒரு வேளை சிங்கப்பூர் தமிழனாக இருந்தாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்று நினைக்கிற அளவுக்கா மாங்காய் மடையனாக இருக்க முடியும்?

2.இவர் வட நாட்டினர் என்று தெரிந்ததும் ,சிங்கப்பூரே ஆனாலும் கூட நான் அவர் தமிழ் பேச வேண்டுமென்று எதிர் பார்க்கவில்லை..ஆனால் சம்பந்தமே இல்லாமல் நான் இந்தி பேச வேண்டும் என்று எப்படி இவர் எதிர் பார்க்கிறார்?

3.'இந்தி தெரிந்தால் தான் இந்தியன்' என்ற மனநிலை இவர்களுக்கு ஏற்பட என்ன காரணம்?..

இந்தி படிக்குறவங்க படிச்சிட்டு போங்கப்பா..நமக்கு அதில் ஒண்ணும் பிரச்சினை இல்லை..ஆனா இந்தி அறிந்திருக்கிறவன் கூடுதல் தேச பக்தனாய் காணப்படுவது எதனால் .? நம்ம ஆளுங்களோட தேசபக்தி அளவுகோல்களை நினைத்தாலே புல்லரிக்குது.

குப்பை தொட்டி வரை குப்பையை கொண்டு வந்து சுதந்திர திமிர்ல வேண்டுமென்றே குப்பை தொட்டிக்கு வெளியே கொட்டி விட்டு போகிற ,பொது இடங்களில் மற்றவர் உரிமையை மதிக்க தெரியாத ,சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கரை இல்லாத ஒருவர் தேச பக்திமானாய் ஆவதற்கு சுலப வழி உண்டு..ஒன்றுமில்லை ..இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது கூட்டத்தோட TV முன்னால உட்கார்ந்துகிட்டு.. இந்தியா காரன் எப்படி மோசமா விளையாடினாலும் குருட்டாம் போக்கிலயாவது ஜெயிக்கணும் ...பாகிஸ்தான் காரன் நல்லா விளையாடினாலும் அவுட் கொடுக்காத அம்பயர திட்டணும் ... தப்பி தவறி பக்கத்தில யாரவது "அவனுங்க நல்லா ஆடுராங்கப்பா" -ன்னு சொன்னா "தேச பக்தி கொஞ்சமாவது இருக்காடா?"-ன்னு கண்ட படி திட்டணும்..உடனே இவர் பெரிய தேச பக்தர் ஆயிடுவார்.

Monday, February 07, 2005

இலக்கிய அலர்ஜி

ஒரு சராசரி வாசகன் தான் மக்களே நான்.சின்ன வயசில இருந்து கையில கிடைக்கிற பிட் நோட்டீஸ் முதற்கொண்டு எதையும் விடாம படிக்கிறதுண்டு.ஆனா இத்தனை வயசாகியும் ,கதை,நாவல் படிக்குற பழக்கம் வரவே மாட்டேங்குது.அட என்னப்பா வெறும் கதைய படிக்குறதுல என்னத்த புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்.அதுக்கு பதிலா எதாவது தகவல் இருக்கிற மாதிரி கட்டுரையோ அல்லது துணுக்கு செய்திகளோ படிச்சா பிரயோஜனமா இருக்கும் அப்படின்னு தான் எண்ண ஒட்டம் போகுது..இப்போ குமுதம் ரிப்போர்ட்டர்ல ராகவன் எழுதிட்டு வர்ற 'நிலமெல்லாம் ரத்தம்' மாதிரி தகவல் சார்ந்த கட்டுரைகள் தான் நம்ம சாய்ஸ்..அது போல அரசியல்,சமூகம் சார்ந்த விவாதங்கள் எட்டி நின்று வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும்.

ஆனாலும் இந்த 'இலக்கிய விவாதம்' நமக்கு இம்மியும் பிடி படாத விசயமா இருக்கு..நம்மை போல படிக்கும் பழக்கமுள்ள நபர்களோடு இது பற்றி பேசுகிற தைரியம் எனக்கில்லை..அவங்க பாட்டுக்கு ஜெயகாந்தனோட அந்த நாவல் படிச்சிருகீங்களா? ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா?-னு எதாவது கேட்டா நான் அம்பேல்.

இப்போ நமக்கு சந்தேகம் என்னணா , 'இலக்கியம்'-னா என்ன? இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா? தகவல்,வரலாறு சார்ந்த எழுத்துககளும் இலக்கியம் தானா?
அடிக்க வராதீங்கண்ணா! எதோ அறியா சிறுவன் கேட்டுட்டேன்...கொஞ்சம் பொறுமையுள்ள அண்ணாச்சி யாராவது சொல்லி புரிய வையுங்கப்பா..

கணியம் -என்ன மக்களே அர்த்தம்?

வணக்கம் நண்பர்களே!நாஞ்சில் நாட்டு நெய்தல் நிலத்துக்காரன் என்பதால் 'கணியம்' என்ற இந்த தலைப்பு.இது மீனவர்களின் தொழிலோடு சம்மந்தப் பட்ட ஒரு வார்த்தை.
மீன் பிடி வலைகளிலே பல வகை .

1.செவ்வக வடிவிலான,நீண்ட வலையை வீசி ஓரு மணி நேரத்தில் அவற்றை உடனே எடுத்து மீன்களை கண்ணிகளிலிருந்து உருவி எடுப்பது ஒரு வகை.இவற்றில் கண்ணிகளில் சிக்கி கொண்ட மீன்களே நம் கைக்கு வருகின்றன.கண்ணிகளில் மாட்டிக் கொண்ட மீன்கள் தண்ணீரிலிருந்தாலும் கூட சிறிது நேரத்தில் இறந்து விடுகின்றன.எனவே முடிந்த அளவு விரைவாக அவை அழுகுமுன் கரை சேர்ப்பது அவசியம்.

2.மிக சிறிய கண்ணிகளை கொண்டு ,நம்மூர் மூதாட்டிகள் வைத்திருக்கும் 'சுருக்கு' போன்று வடிவமைக்கப் பட்ட இவ்வகை பை போன்ற வலையை குமரி மாவட்ட மீனவர்கள் 'மடி' என்று அழைக்கிறார்கள். குறைந்தது 40 மீட்டர் நீளம் ,10 மீட்டர் அகலம் கொண்ட மெகா பைக்குள் கூட்டமாக வரும் தன்மை கொண்ட மீன் வகையை லாவகமாக ஒரு சேர உள்ளே தள்ளி ,கண்ணிமைக்கும் நேரத்தில் சுருக்கை பூட்டிக் கொண்டு மொத்தமாக மீன்களை அள்ளிக் கொள்ளும் முறை இது.

3.சந்தையில் மிக விலையுயர்ந்த கல் இரால் (lopstar) போன்ற உயிரினங்கள் பாறை பகுதிகளில் கிடைக்கின்றன .இருந்தாலும் இவை மீன்களை போன்று பெரும் எண்ணிக்கையில் வருவதில்லை. இதன் சிறப்பு இவை வலைகளில் மாட்டிக் கொண்டாலும் இறப்பதில்லை..கரைக்கு வந்த பின்பும் நீண்ட நேரம் உயிரோடிருக்கும் தன்மை கொண்டவை..எனவே இவற்றை கரை சேர்ப்பதில் அவசரம் காட்ட தேவையில்லை. எனவே இவற்றை பிடிப்பதற்கு ஏறத்தாழ முதல் வகை வலையையே பயன்படுதினாலும் அவற்றை உடனே எடுத்து வருவதில்லை.

குறிப்பிட்ட இடத்தில் இந்த வலைகளை தண்ணீருக்குள் அமுக்கி விட்டு ,அடையாளத்திற்கான மிதவைகள் மட்டும் வெளியே தெரியும் வகையில் வலையை விட்டு விட்டு மீனவர்கள் கரை வந்து விடுவார்கள் .மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வலையை போட்ட இடத்தில் சென்று எடுத்து வர வேண்டும்..ஆழ் கடலில் ,கிட்ட தட்ட நிலம் மறைந்து ,மலை உச்சிகளும் ,சில உயரமான கோபுரங்களும் ,தேவாலய உச்சிகளுமே மட்டும் தெரிகிற பரந்து விரிந்த தண்ணீர் பரப்பில் குறிப்பாக தாங்கள் விட்டுச் சென்ற வலையின் இருப்பிடத்தை கணித்து கொள்வதற்கு ,மீனவர்கள் கோவில் கோபுரங்களையும் ,மலை முகடுகளையு ஒரு சேர்த்து ஒரு கணக்கை மனதுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். இதனை அவர்கள் 'கணியம்' என்றழைக்கிறார்கள்.

வணக்கம்

நம்ம நண்பர் ஒருவர் மூலமா சமீபத்தில் வலை பூக்கள் அறிமுகம் கிடைத்தது.அப்போதிலிருந்தே தமிழ்மணம்.காம்-ய் அரை மணி நேரத்திற்கொரு முறை refresh பண்ணுறதே நம்ம பொழப்பா போச்சு.

நாமும் ஒண்ணு ஆரம்பிச்சுட வேண்டியது தான்..நாம பிறந்து வளர்ந்த நெய்தல் நிலத்து அனுபவங்களை ,செய்திகளை சொல்லலாமேன்ணு தோணிச்சு.

வலை பூ நண்பர்கள் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives