Thursday, March 09, 2017

ராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேசும் போது எல்லை தாண்டி சென்றால் கொல்லத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து செல்லும் நியாயவான்களையும் அறிவுஜீவிகளையும் பார்க்கிறோம் . இது குறித்து சில விபரங்களைப் பார்ப்போம்.
கடலால் சூழப்பட்ட நாடுகளுக்கு நடுவிலான கடல்பரப்பில் அந்தந்த நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்பு , எந்த நாட்டுக்குமே சொந்தமில்லாத கடற்பரப்பு என இரு வகை பரப்புகள் இருக்கிறது .. ஒரு நாட்டில் நிலப்பரப்பிலிருந்து அதிக பட்சம் 12 நாட்டிகல் மைல் (சுமார் 22 கிமீ) தூரம் வரைக்குமே அந்த நாட்டின் கடல் பரப்பு . உதாரணமாக இந்தியாவுக்கு தெற்கேயும் மேற்கேயும் அடுத்த நாட்டு எல்லை வரை உள்ள கடற்பரப்பில் இந்தியாவிலிருந்து 22 கிமீ தாண்டி சர்வதேச கடற்பரப்பு ஏராளமாக உள்ளது .. இதில் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க யாருக்கும் அனுமதி உண்டு .
ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பின் தூரமே 22 கிமீ-க்கு குறைவு தான் . ஆக இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சமமாக பங்கிட்டால் கூட ஒரு பக்கத்துக்கு 10 கிமீ தான் தேறும் .. அதோடு அங்கே பொதுவாக மீன் பிடிக்கக் கூடிய சர்வதேச கடற்பரப்பு இல்லை .
கடலில் மீன் வளத்தை பொருத்தவரை , கடலின் அனைத்து பகுதிகளும் மீன் பிடிப்பதற்காக செறிவான மீன்கள் வாழும் பகுதிகள் இல்லை .. கடலில் 'மடை' எனப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மீன்கள் செறிவாக இனவிருத்தி செய்ய ஏதுவான சேறு இருக்கும் இது போன்ற 'மடை' பகுதிகளே பலரும் சென்று மீன் பிடிக்க ஏதுவான பகுதிகளாக இருக்கின்றன . உதாரணத்துக்கு குமரி மாவட்டத்தில் 45 மீனவ கிராமங்கள் இருக்கின்றன .. ஒவ்வொரு கிராமத்தினரும் அவர்கள் கிராமத்துக்கு நேராகத்தான் மீன் பிடிப்பார்கள் என்றில்லை .. குமரி மாவட்டத்தில் 10 -க்கு குறைவான 'மடை' பகுதிகள் இருக்கலாம் .. எனவே பாரம்பரியமாக ஒரு புரிந்துணர்வோடு பல பகுதியினரும் ஒரே மடையில் வந்து மீன் பிடிப்பார்கள் .
இது போல இப்போது பாக் ஜலசந்தியில் இந்த குறுகிய கடற்பரப்பில் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன்பாக அந்த கடற்பரப்பு பொதுவாகவே இருந்தது ..அதில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் ஒன்றாகவே ஒரே மடை பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர் . அதில் பரஸ்பர புரிந்துணர்வும் இருந்து வந்தது .. சுந்தந்திரத்துக்குப் பின் எல்லைகள் பிரிக்கப்பட்டு ஏற்கனவே சர்வதேச கடற்பரப்பு இல்லாத மிகக்குறுகிய பகுதி பங்கு வைக்கப்பட்ட பின்னர் , மிக முக்கியமான மடைகள் இருந்த பகுதி இலங்கை எல்லைக்குள் சென்று விட்டது . இவை இன்று நேற்றல்ல , நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியமாக இரு பகுதி மீனவர்களும் மீன் பிடித்துக்கொண்டிருந்த பகுதி .. இப்போது கோடு கிழித்து இந்த எல்லைக்குள் இருக்கும் இன்னும் சிறிய பகுதியில் மட்டும் நீ மீன் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நியாயமாகத் தோன்றலாம் . ஆனால் அது நடைமுறைக்கு பயனற்றது . மிகக் குறுகிய இந்த கடற்பரப்பில் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த மடைப்பகுதிகளுக்கு செல்வதே எல்லை தாண்டும் பிரச்சனை
மாநில அரசின் , மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்திரா அம்மையார் கச்சத்தீவை தாரை வார்த்தது நிச்சயம் இன்னொரு பிரச்சனை என்றாலும் , கச்சத்தீவை மீட்டு விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என்பதும் தவறான கோணமே .
ஒரு பேச்சுக்காக , தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வது தவறு என்று வைத்துக்கொண்டாலும் , அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது தான் தர்மமும் , சட்டபூர்வ நடவடிக்கையாக இருக்குமே தவிர , தாக்குவதும் , சுட்டுக்கொல்வதும் காட்டுமிராண்டித்தனம் .. எனவே இவர்கள் மீன்களை கொல்வதால் அவர்களை கொல்வது நியாயமே என்றளவில் மட்டுமே நியாயம் பேசும் உயர்குடியினரை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை .
இதற்கு என்ன தான் தீர்வு ?
சுதந்திரமாக சென்று மீன் பிடிக்கக் கூடிய சர்வதேச பொதுப்பகுதி இல்லாத இந்த பகுதியில் , வழக்கமான ஒரு நாட்டின் சொந்த கடற்பரப்பான 22 கிமீ கூட இல்லாததது மட்டுமல்ல , அதுவும் இரண்டாக பிரிக்கப்பட்ட இப்பகுதியில் .. பாரம்பரிய மீன் பிடித்தல் உரிமைகளை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் இதை பொதுப்பகுதியாக , குறைந்தபட்சம் அந்த மடைப்பகுதிகளை பொதுப்பகுதிகளாக அறிவித்து இரு நாட்டு கடல்வழி பாதுகாப்பையும், கடத்தல் போன்ற எல்லா இடங்களிலும் நடப்பவற்றை தடுக்கவும் உறுதி செய்யும் செயல்பாடுகளோடு சேர்த்து இரு பகுதி மீனவர்களும் பொதுவாக மீன் பிடிக்க தேவையான ஒப்பந்தங்களை செய்வது ஒன்றே இதற்கு தீர்வு .

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives