ஈழப்பிரச்சனையில் இன்று காட்சிகள் மாறுகின்றன .நிலைப்பாடுகள் திசைமாறுகின்ற சூழல் .யார் சொல்லுவதை எடுத்துக்கொள்ளுவது ,யார் சொல்லுவதை உதற வேண்டியது என்பதில் இதுவரை இல்லாத குழப்பங்கள் . சர்வதேச , தேச , இனத்துக்குள்ளேயே, பிரதேச ,தனிமனித அரசியல் அத்தனையும் சேர்ந்து தண்டிக்கப்பட்டதென்னவோ
சாதாரண மக்கள் தான் .உரிமைக்காக ஏங்கி நின்ற அந்த மக்கள் இன்று உயிராவது மிஞ்சாதா எனும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .போதிய அளவு பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருந்து கொண்டு வீராவேசங்களும் ,அரசியல் கட்டுடைப்புகளும் நிகழ்த்துவது சுலபம் .உயிராவது மிஞ்சுமா எனும் சூழலில் இருந்து பார்த்தால் தான் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணவோட்டங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .
நேரடியாக சம்பந்தப்படாத ,ரத்த சம்பந்த உணர்வினாலே உந்தப்பட்டு ஏதாவது நிகழ்ந்து நம் சொந்தங்களுக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என ஏங்கும் தமிழக தமிழர்களில் ஒருவன் என்ற முறையில் கையாலாக நிலையின் உச்சத்தில் நின்று வசவுகளையும் ,அவமானங்களையும் தாங்கிக் கொண்டு ,இன்னும் நம்மால் செய்ய முடிவது என்ன என தெளிவான பாதை தெரியாமல் தவிக்குது மனது . தமிழகத்தில் இருக்கிற தமிழர்களின் கவனமும் செயல் வெளிப்பாடும் தேவையான அளவுக்கு இல்லாமல் போயிற்றே என மனம் அங்கலாய்க்கும் நேரத்தில் '1 ரூபாய் அரிசிக்கும் பிரியாணிக்கும் ஈழத்தமிழனை விற்று விட்ட இழிபிறவிகள் ' என்ற பொதுவான வசைமொழிக்கு தமிழகத்து தமிழர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்கள் என (சுய விமர்சனம் என்ற முறையில்) சிந்திக்க வேண்டியுள்ளது.
என் புரிதலில் ஈழ விவகாரத்தைப் பொறுத்தவரை 5 விதமான மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
1.பாமரர்கள் - இவர்களில் பெரும்பாலாருக்கு தெரிந்ததெல்லாம் இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்கும் சண்டை .நாம் தமிழர்கள் என்பதால் தமிழர்கள் கை ஓங்கியதாக செய்தி வந்தால் மகிழ்வது ,தமிழர்கள் அடிவாங்கினால் வருத்தப்படுவது .இவர்களில் பெரும்பான்மையாவர்களுக்கு வடக்கிலுள்ள தமிழர்கள் பூர்வ குடிமக்கள் என்பதோ ,போராட்டத்தின் காரணம் ,வளர்ச்சி ,போக்கு பற்றியோ ,பூர்வீக தமிழர்கள் ,மலையக தமிழர்கள் ,தமிழ் பேசும் முஸ்லீகள் இடையிலான வேறு பாடு பற்றியோ ,வடக்கு ,கிழக்கு பிரதேச வேறுபாடுகள் பற்றியோ பெரிதாக ஒன்றும் தெரியாது .இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலிருந்து அங்கே போய் குடியேறிய தமிழர்கள் இப்போது தனிநாடு கேட்கிறார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள் ..ஆனாலும் என்ன ? அவர்கள் நம்மைப் போல் தமிழர்கள் .அந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் வென்றால் மகிழ்ச்சி ..மொட்டையாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கையிலுள்ள எல்லா தமிழரும் ஒட்டு மொத்தமாக போராடுகிறார்கள் .எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகள் அவர்களுக்காக சண்டை போடுகிறார்கள் ..அவ்வளவு தான்.
(பாமரர்கள் என்றால் வெறும் படிக்காதவர்கள் மட்டுமல்ல .உத்தியோகம் வாங்குவதற்கும் ,பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் தேவையான வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் பயின்ற கனவான்களும் இதில் அடக்கம்).
2.ஆதரவாளர்கள் - இவர்களில் பலர் ஈழ விடயத்தைப் பற்றி அக்கறை எடுத்து தெரிந்து கொண்டிருப்பவர்கள் .ஆனால் இவர்களுக்குள்ளும் 3 வகை உண்டு .. முதலில் ஈழ வரலாறு ,போராட்டம் பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும் 'தமிழன்' என்ற ஒரே காரணத்துக்காக ,வேறெதும் காரணம் தேவைப்படாமல் தீவிரமாக ஆதரிப்பவர்கள்
..இரண்டாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் மேலுள்ள விமரிசனத்தை மொத்தமாக புறந்தள்ளி விட்டு ஒட்டு மொத்தமாக ஆதரிப்பவர்கள் ..மூன்றாவது ஓரளவு தெரிந்து கொண்டு ,புலிகளின் தவறுகளை ஏற்றுக்கொண்டாலும் ,அதையும் தாண்டி ஒட்டு மொத்த போராட்டத்தையும் ஆதரிப்பவர்கள் .
3.எதிர்ப்பாளர்கள் - இதில் முதல் வகையினருக்கு இதை எதிர்ப்பதற்கு 'தமிழன்' என்ற ஒரே காரணமே போதும் .'தமிழ்' ,'தமிழன்' என்று தொடங்கினாலே இவர்களுக்கு வேப்பங்காய் .அதற்கு மேல் ஒன்றுமில்லை ..இரண்டாவது வகை 'நாம் முதலில் இந்தியன் ' 'தமிழன் என்ற குறுகிய மனப்பான்மை கூடாது ' போன்ற முத்துக்களை உதிர்ப்பவர்கள் ..போதாத குறைக்கு 'இறையாண்மை' ,'ராஜீவ் படுகொலை' போன்ற வெங்காய காரணங்கள் ..ஈழத்தமிழனை விட (தனக்கு சம்பந்தமே இல்லாத) பஞ்சாப் காரனும் ,பீகார் காரனும் தான் முக்கியம் என இல்லாத தேசியத்தை தூக்கி சுமப்பவர்கள் ..மூன்றாவது புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஒட்டு மொத்த தமிழர்களின் போராட்டத்தையே குடுட்டுத் தனமாக எதிர்ப்பவர்கள்.
4.சார்பு நிலை - தான் சார்ந்திருக்கின்ற அல்லது அபிமானம் கொண்டுள்ள அரசியல் கட்சி ,தலைவர்கள் ,சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டையும் வகுத்துக்கொள்பவர்கள்
5. கண்டுகொள்ளாதவர்கள் - எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன ? அரசியல் ,இனம் ,மொழி எல்லாம் பம்மாத்து என தத்துவம் பேசிக்கொண்டு திரியும் மேல்தட்டு படித்த இளையோர் கூட்டம் இதில் அதிகம் .இவர்களோடு தன் படிப்பு ,வேலை ,சினிமா ,கிரிக்கெட் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத மேல் தட்டு ,நடுத்தர ,கீழ்த் தட்டு கூட்டமும் இதில் அடக்கம் .தன் இனத்துக்கும் ,நாட்டுக்கும் ,தான் வாழும் சமுதாயத்துக்கும் சம்பந்தம் உள்ள எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச் தேடலின்றி ,ஆனால் சம்பந்தமில்லாத உலக விடயங்களில் தமக்கிருக்கும் அறிவை மெச்சிக் கொள்ளும் 'கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன ' கூட்டமும் இதில் அடக்கம் .
கடந்த 6 மாதங்களாக ஈழத்தில் நடந்து வரும் சம்பவங்கள் இந்த 5 வகையினரையும் ஓரளவு கவனம் ஈர்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .ஆனாலும் அதில் எத்தனை பேர் மேலும் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி . வலைப்பதிவுகள் போன்ற இரு வேறு அதீத கோணங்களில் வரும் கருத்துக்கள் தாண்டி , சினிமா ,கிரிக்கெட் மட்டுமே விவாதிக்கும் வேறு தளங்களில் மட்டுமே இயங்கும் பலரும் முதல் முறையாக குறைந்த பட்சம் இந்த விடயங்களில் அனுதாபமும் தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டியது அனுபவ பூர்வமாக உண்மை ..இது நாள் வரை இதைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் இருந்தேனே என்ற குற்ற உணர்ச்சியை கூட சிலர் என்னிடம் வெளிக்காட்டினார்கள் .அதே நேரத்தில் தெரிந்து கொள்ளும் முகமாக அவர்கள் கேட்ட கேள்விகள் , ஆச்சரியங்கள் ,நிலைப்பாடுகள் வலைப்பதிவுகளைத் தாண்டி பலர் கொண்டிருக்கிற ஐயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின .
நேரம் கிடைக்கும் போது அது பற்றி எழுதுகிறேன் ..
Friday, May 29, 2009
Subscribe to:
Posts (Atom)