Sunday, December 19, 2010

குழந்தையும் தெய்வமும்



வார இறுதியில் குழந்தைகளோடு கழிக்கும் தருணங்கள் போல மகிழ்ச்சியானது வேறெதுவும் இல்லை . நேற்று முந்தினம் என் 5 வயது மகன் தன் விளையாட்டுத் தோழன் மூலமாக கிடைத்த கிருஷ்ணன் பற்றிய ஒரு கார்ட்டூன் குறுந்தகடு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தான் ..முழுவதுமாக ஒரு முறை பார்த்து முடித்து விட்டு , தொடர்ச்சியாக இன்னொரு முறை பார்க்க வேண்டுமென கேட்டு இரண்டாம் முறையும் பார்த்து முடித்தான்.

முடித்தவுடன் என்னிடம் வந்த அவனுக்கும் எனக்கும் உரையாடல் இப்படிப் போனது..

மகன் :அப்பா , கிருஷ்ணன் பவர்புல் காட்-ஆ ?

(நான் பதில் சொல்லும் முன்னரே மீண்டும் அவனே)

மகன் :ஜீஸசும் கிருஷ்ணாவும் பவர்புல் காட்-சா?

நான் :ஆமா!

மகன் :எப்படி ரெண்டு பேரும் பவர்புல் காட்ஸ்?

நான் :காட் ஒருத்தர் இருக்கார் .சிலர் அவரை கிருஷ்ணன் என்கிறார்கள் .சிலர் அவரை ஜீஸஸ் என்கிறார்கள். அவ்வளவு தான்.

மகன் :போத் ஆர் சேம் ?

நான் : நாம சர்ச்-க்கு போகும் போது ஜீஸஸ் கிட்ட ப்ரே பண்ணுறோம்ல .அதுபோல சமிக்‌ஷா டெம்பிள்-க்கு போகும் போது கிருஷ்ணா கிட்ட பிரே பண்ணுவா.

சின்ன பையன் கிட்ட இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் ..சொல்லணும் .வெற்றிகரமா இப்போதைக்கு முடிஞ்ச அளவு புரிய வச்சுட்டோம் .அவன் வயசுக்கு இதுவரை அவனுக்கு புரிஞ்சாலே போதும் -ன்னு நான் நினைச்சிட்டிருக்கும் போது , அவன் ’அன்பே சிவம்’ கமல் ரேஞ்சுக்கு அடிச்சான் ஒரு ஷாட்

மகன் : அப்பா , யூ ஆர் ஆல்சோ காட்

என்ன சொல்லுறதுண்ணு தெரியல்ல ..மறுத்தா இப்போதைக்கு முழுமையா விளக்க முடியாது

நான் : யூ டூ மோனே !

குழந்தை இயேசுவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் .


குழந்தையின் உள்ளத்தில் எந்த பிரிவினையும் கபடும் கிடையாது என்பதால் தான் இயேசு கூட இப்படிச் சொன்னார் ...



நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... (மத்தேயு 18:3)

Monday, August 16, 2010

இந்திய சுதந்திர தினமும் குறைந்து போன சுருதியும்

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்துமசுக்கு அடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் இந்திய சுதந்திர தினம் .10-வது படிக்கும் போது பள்ளி மாணவர் தலைவன் என்ற முறையில் திங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றி மாணவர் அணிவகுப்பு நடத்தும் பொருட்டு முன்னரே பள்ளிக்கு சென்று கொடியை மடித்துக்கட்டி உச்சியில் ஏற்றி வைக்கும் பொறுப்பும் எனக்கிருந்தது . தேவாலய வளாகத்திலேயே பள்ளி என்பதால் சுதந்திர தினத்தன்று தேவாலயத்தில் சுதந்திர தின சிறப்புத் திருப்பலி முடிந்தவுடன் ஒட்டு மொத்த ஊரும் கூடி நிற்க பள்ளி மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு மற்றும் கொடியேற்றம் நடைபெறும் . பின்னர் நாள் முழுவதும் இளைஞர் அமைப்பு ஒன்று குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான வித விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இரவில் பொதுக்கூட்டம் நடத்தி கலை நிகழ்ச்சிகளோடு பரிசு கொடுப்பார்கள் . பள்ளி நாட்களுக்கு பின்னர் கல்லூரி நாட்களில் இளைஞர் குழாமோடு இணைந்து பொறுப்பேற்று நடத்தியதுண்டு .இரவுப் பொதுக்கூட்டத்தில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன் ‘தாய்நாடு நம் தாயைப் போன்றது . நம் தாய்க்கு இணையான தாய்நாட்டுக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன் “ என்று உணர்ச்சிவசப்படுவது அநேகமாக நானாகத் தான் இருக்கும் .

இந்தியா , தாய்நாடு , ஜனகனமன , வந்தே மாதரம் இந்த வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்த காலங்கள் அவை . அந்த தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக சிங்கப்பூர் வந்த பிறகு இந்த தேசபக்தி , பெருமிதமெல்லாம் இன்னும் ஒரு படி அதிகரித்திருத்திருந்தது . ஆகஸ்ட் 15 அன்று சின்ன தேசியக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டு அலுவலகத்துக்கு போயிருக்கிறேன்.

பள்ளியும் கல்லூரியும் கொடுத்த ஒற்றைப்பார்வை கல்வியைத் தாண்டி படிக்கவும் , பல நாடுகளை பற்றி அறிய ஆரம்பித்த போது தான் புனித பிம்பங்கள் கலைய ஆரம்பித்தது , காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு , ஒரே எண்ணம் ,ஒரே மக்கள் என கன்னியாகுமரியில் உட்கார்ந்து கொண்டு ‘முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக காமெடியாகிப் போனது . முகம் தெரியாத மூன்றாவது நாட்டில் ஏதாவது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது பாகிஸ்தான் நாட்டு சகோதரன் வந்தாலே கொஞ்சம் சிநேகமாக புன்னகைப்போம் . காணக்கிடைக்காத நாட்டில் வட இந்தியரைப் பார்த்தாலும் பேச்சுக் கொடுப்போம் . அதே நேரம் ஒரு ஈழத்தமிழனோ , மலேசியத் தமிழனோ தென்பட்டால் மெதுவாக நம் மனம் அங்கே நகரும் ..நம் வட இந்திய நண்பரோ பாகிஸ்தான் சகோதரரை நோக்கி நகர நாமோ ஈழத்தழனையோ மலேசியத் தமிழனையோ நோக்கி நகர்ந்திருப்போம் . நானும் வட இந்தியனும் ஒரே நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறோம் என்ற உறவைத் தவிர , எனக்கும் வேறு நாட்டு தமிழனுக்கும் உள்ள இயல்பாண பிணைப்பு அளவுக்கு எதுவும் இல்லை என தெரிய வருகின்ற தருணங்கள் அவை .

இந்தியா என்பது அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோட்டுக்கு கட்டுப்பட்ட பிரதேசமேயன்றி கலாச்சார , மொழி , பண்பாட்டால் உருவான கலாச்சார பிணைப்பு அல்ல என புரிய ஆரம்பித்தது . ஒரு இந்திய பஞ்சாபிக்கு ஒரு பாகிஸ்தான் பஞ்சாபியிடமே பகிர்ந்து கொள்ளவும் உறவு கொள்ளவும் அதிக காரணங்கள் இருக்குமே அல்லாமல் இந்தியன் என்பதற்காக ஒரு தமிழனோடு அல்ல என்பதும் , ஒரு வங்காளி தெலுங்கனை விட வங்காள தேசத்தவனோடே தன்னை அதிகமாக பொருத்திப்பார்க்க முடியும் என்பதும் ஒரு தமிழ்நாட்டு தமிழன் ஒரு இடத்தில் ஒரு உத்திரப் பிரதேசக்காரனையும் ஒரு ஈழத்தமிழனையோ அல்லது மலேசியத் தமிழனையோ காண நேர்ந்தால் யாரோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயல்வான் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. ’ முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” போன்ற வெற்று கோஷங்களின் போலித்தன்மை பல்லிளிக்க முதலில் நான் யார் என தெளிவாக உணர முடிகிறது.

மொழி , கலாச்சாரம் வேறு வேறானாலும் வேற்றுமையில் ஒற்றுமை தானே நம் தனித்துவம் என காரணம் சொல்லப்படுகின்ற போது இப்போதெல்லாம் ‘ நீ அரிசி கொண்டு வா ..நான் உமி கொண்டு வாறேன் ..ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்னலாம் ‘ என்ற சொற்றொடர் தாம் ஞாபகம் வருகிறது . கடல் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படும் குஜராத் மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ என இந்திய அரசு நினைக்கும் போது ராமேஸ்வரம் மீனவன் மட்டும் ‘தமிழக மீனவன்’ என்றால் நான் என்ன நினைப்பது ? பரம்பரை எதிரியாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி வந்து விட்ட மீனவனை சுடுவதில்லையே .. மிஞ்சிப்போனால் கைது செய்து சிறையில் தானே அடைக்கிறார்கள் .. ஆனால் காலங்காலமாக தங்கள் சொத்தாக இருந்த கச்சத்தீவை தன்னுடைய நாடு எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்ததும் அல்லாமல் , அங்கே வலைஉலர்த்தும் உரிமை இருப்பதாக சொன்னாலும் அதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலைமையில் ஒரு வல்லரசு என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒரு நாடு 400 -க்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூட அந்த குட்டி நாட்டுக்கெதிராக ஒரு குரலைக்கூட உயர்த்த முடியவில்லையென்று சொன்னால் இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் .. 1. இந்தியா என்ற நாட்டுக்கும் சுயமரியாதையும் முதுகெலும்பும் கிடையாது 2 . செத்துப்போன இன்னும் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை இந்த நாடு தன் குடிமக்களாக கருதவில்லை ..வெறென்ன காரணம் இருக்க முடியும் ?

இப்போது ஒருபடி மேலே போய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லை தாண்டி சென்றால் மீனவர்களுக்கு அரசு பொறுப்பல்ல என சொல்லியிருக்கிறார் ..ஏதோ இந்திய எல்லைக்குள் மட்டும் இவர்கள் ரொம்ப பாதுகாப்பு கொடுத்து கிழித்து விட்டது போல ..கச்சத்தீவுக்கு வெறும் 18 கிமீ தூரமே உள்ள ஒரு கடற்பரப்பில் , கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும் ,வலை உலர்த்தவும் உரிமை உண்டு என சொல்லப்பட்டும் கூட , 12 கீமி -லிருந்து தன்னுடைய கடற்பரப்பாக கருதிக்கொண்டு இலங்கை நம் மக்களை தாக்குகிறது .அதையும் தாண்டி நம்முடைய கரை வரை வந்து தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன ..ஆனால் வல்லரசின் மேன்மை தங்கிய வெளியுறவுத் துறை அமைச்சரோ தமிழக மீனவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதது ஒன்று தான் பாக்கி ..இந்த லட்சணத்தில் ’சுதந்திர தினம்’ ரொம்ப முக்கியம் !

Friday, April 09, 2010

மகளிர் இட ஒதுக்கீடு - அடிப்படை புரிதலும் குழப்பமும்

சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?

இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.

ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.

Tuesday, April 06, 2010

எனக்கு பிடித்த 10 தமிழ் படங்கள்

தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்

அந்த நாள் (1954)

இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .

ரத்தக்கண்ணீர் (1954)

என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .

கர்ணன் (1964)

பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)

தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாயகன் (1987)

விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.

தேவர் மகன் (1992)

நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.






மகாநதி (1993)

கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.




சதி லீலாவதி (1995)
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.





குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .





அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.

குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.

குறைந்தது 2 பேரையாவது தொடருக்கு அழைக்க வாத்தியார் சொல்லிவிட்டார் . நண்பர்கள் மருத்துவர் புருனோ மற்றும் சுரேஷ் கண்ணன் இருவரையும் அழைக்கிறேன்.

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

நான் கடவுள் , உன்னைப் போல் ஒருவனுக்கு அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான் .வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது .பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .

இதுவரை செல்வராகவன் பாலாவைப் போல மிகக்கவர்ந்த இயக்குநர் இல்லை எனக்கு .முந்தைய நாள் தான் தொலைக்காட்சியில் 7Gரெயின்போ காலனி பார்க்க நேர்ந்தது .இது போன்ற அப்பார்ட்மெண்ட் காதலை சொதப்பல் நடிகர்களை வைத்து நகர்ப்புற ரசனைக்கேற்றவாறு கொஞ்சம் மந்தகாசமான கோணத்துடன் பெரும்பாலும் பாடல்களை நம்பி களமிறங்கும் ஒரு இயக்குநர் என்ற என் பொதுவான கருத்தை வலுப்படுத்திக் கொண்டு இந்த படத்திற்கு சென்றால் எதிர்பாராத மாற்றம் .எனக்கு தெரிந்து தமிழில் இந்த அளவுக்கு முன்னேற்பாடுகள் , காட்சியில் வரும் அதிகபட்ச மனிதர்களின் ஒருங்கிணைப்பு , அரங்க அமைப்பு போன்றவற்றுக்கு அதிகபட்ச உழைப்பு தேவைப்பட்டிருக்கும் படம் இதுவாகத் தானிருக்கும்.

“சோழர் பாண்டியர் உண்மை வரலாற்றுக்கும் இதற்கும் தொடர்பில்லை ..இது முழுக்க கற்பனையே” என முதலிலேயே போட்டு விட்ட பின்னரும் பலர் வரலாற்றுத் தவறுகளை நோண்டுவதுவும் பிடிபடவில்லை ..ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்து விட்டு கேள்வி கேட்கலாம் . வரலாற்றுப் புதினத்தில் வரும் கற்பனைகளையும், வர்ணனைகளையும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி ? அதான் புதினம் -ம்னு சொல்லியாச்சேப்பா (இதுவரை வரலாற்று புதினம் எதுவும் நான் படித்ததில்லை ,அதனால என் கண்ணோட்டம் தவறோ என்னவோ?)

படத்தின் கதை ,நடிப்பு ,இசை பற்றியெல்லாம் பலரும் அலசி விட்டார்கள் .என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு ,அரங்க அமைப்பு ,காட்சி கோணங்களில் பிரம்மாண்டம் ..குறைந்தபட்சம் இவைகளில் இந்த படம் தமிழ்சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை மட்டும் வைத்து முற்றிலும் நிராகரிப்பதை விட அந்த காட்சியை ஒருங்கிணைப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை கருத்தில் கொள்வதும் முக்கியம் .அந்த வகையில் செல்வராகவன் கற்பனையில் தோன்றுவதை காட்சிப்படுத்தியதில் தமிழ் சினிமாவின் பொருளாதார வரைமுறைக்குட்பட்டு கொடுத்துள்ள பிம்பங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை. மீண்டும் 1000 கோடிகளை 30 கோடிகளுடன் ஒப்பிட்டு ஒற்றை வரியில் நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

கார்த்தியின் உடம்பில் புலி வண்ணத்தையெல்லாம் ஆராய்ந்து கேள்வி கேட்கும் சோழ மன்னன் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் உருவத்தை பார்த்து “யார் இந்த அரசன்?” என ஏன் கேள்வி கேட்கவில்லை ? என நானும் வம்புக்கு கேள்வி கேட்கலாம் .படம் முழுவதும் கற்பனையென்றான பின் இதற்கெல்லாம் விடையில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகள் ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு தோன்றியதாக சிலர் நினைப்பதற்கு முகாந்திரம் அதிகமே . ஒரு நாட்டின் ராணுவம் என்பது தேசபக்தியின் அடையாளம் , ஒழுக்க சீலர்களின் கூடாரம் ,புனிதப்பசுக்கள் போன்ற பாடப்புத்தக பொதுப்புத்தியிலிருப்பவர்களுக்கு கடைசி காட்சிகளை ஜீரணிக்க முடியாதிருக்கலாம் . ஆனால் அதை துணிந்து பதிவு செய்த செல்வாவை பாராட்ட வேண்டும். சோழர் காலத்து மொழியில் வரும் வசனங்கள் பலருக்கும் புரியவில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர அனைத்தும் தெளிவாக புரிந்தது.

செல்வா இன்னொன்றை செய்திருக்கலாம் ..படத்தை முடித்த பின்னர் வெளிப்படையாக கருத்து சொல்ல வாய்ப்பில்லாத தன் உள்வட்டத்தில் உள்ளவர்களை தவிர்த்து தனக்கு வெளிவட்டத்தில் ஒரு சில தரப்பினரிடம் படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தால் ,இரண்டாம் பாதியில் சில குறைத்தல் ,சரிப்படுத்துதல் செய்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் .

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல , கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives