Sunday, May 13, 2007

'பெரியார்' திரைப்படம் - என் பார்வையில்

பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர் .கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக திட்டுவார் .கடவுள் சிலைகளை போட்டு உடைத்தவர்" இவ்வளவு தான் .இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை .இதற்கு காரணம் ,பெரியாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் மூலம் சுய தேடல் இல்லாத ,வெகுஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரியார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத்து விடலாம் என்று சிலர் மேற்கொண்ட முயற்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது .மாறாக பெரியார் தொண்டர்கள் ,வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப்பரிமாணத்தை தாண்டி அவரை முன்னிறுத்த தவறியதும் காரணமே .பெரியார் வழி வந்த அரசுகள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தூண்களிலும் சரி ,சிலைகளிலும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் "கடவுளை நம்பியவன் முட்டாள் ...." என்ற வாசகம் தான் .இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக்கருத்துக்கள் ,சாதி ஒழிப்பு கருத்துக்கள் ,பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதில்லை .பெரியாரின் பல முக்கிய பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.

அதிர்ஷ்ட வசமாக பெரியார் திரைப்படம் இந்த குறையை சற்று போக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது .அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக்குள் பெரியார் ஆவி புகுந்து கொண்டது போல கன கச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.

பெரியாரின் இளைமப்பருவத்திலிருந்து தொடங்கும் படத்தில் அவர் காசிக்கு செல்வதற்கு முன் வரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லை .வணிக ரீதியாக திணிக்கப்பட்டதாக சொல்ல முடியாத வகையில் இருந்தாலும் ,கேளிக்கை விடுதி நடனத்திற்காக வீணடிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரின் சிறு வயது வாழ்வில் தண்ணீர் குடிப்பதில் ஜாதிப்பாகுபாடு அவர் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை காண்பித்திருக்கலாம் .

முதல் மனைவியாக வரும் ஜோதிர்மாயி ,இரண்டாவது மனைவியாக வரும் குஷ்பு இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் .ராஜாஜியின் கதா பாத்திரம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது .அதே நேரத்தில் ராஜாஜியின் மறைவுக்கு சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்லை.

இளையராஜா இசையமைத்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் கூட வித்தியாசாகர் எதிர்பார்த்ததை விட நன்றாக இசையமைத்திருந்தார் .வைரமுத்துவின் ஆழமான வரிகளின் அர்த்தம் சிதையாமலும் ,இசைக்குள் வார்த்தைகளை அமுக்கி விடாமலும் பாடல் வரிகளுக்கு கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு இசையை வழங்கியிருக்கிறார் .வைக்கம் போராட்ட காட்சியில் வரும் ஒரு பாடலில் தீண்டாமை குறித்து "அவர்கள் மட்டும் தானா விந்து-லிருந்து பிறந்தார்கள் .நாங்கள் என்ன எச்சிலிலுருந்தா பிறந்தோம் ' என்னும் பொருள் படும் வரிகள் கைதட்டலை அள்ளுகிறது.
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் ,அந்த கால பழைய காற்றாடி போன்றவற்றை நுணுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் .

சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ... முதல் பாதியில் அதே சத்யராஜ் பாணி உச்சரிப்பை தவிர்த்திருக்கலாம் .இரண்டாவது பாதியில் சத்தியராஜ் சுத்தமாக மறைந்து பெரியார் நம்மை ஆட்கொள்ளுகிறார் .ஆட்சியமைக்கும் போது அண்ணாவின் விஜயம் மற்றும் இறுதிக்காட்சியில் சத்தியராஜ் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் .

95 வருட வாழ்க்கையை 3 மணி நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு .காந்தியாரோடு சந்திப்பு ,விதவை மறுமணம் ,தேவதாசி ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல் ,வைக்கம் போராட்டம் ,காங்கிரசில் ஜாதிப்பாகுபாடு ,காங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகியவை சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் பின்னர் தி.க உதயம் ,இரண்டாம் திருமணம் ,திமுக தொடக்கம் ,பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு ,திமுக ஆட்சி அமையும் போது அண்ணா சந்திப்பு ,கலைஞர் சந்திப்பு ,எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சிகள் நகர்வதாக தோன்றுகிரது .விஷுவல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .

மிகவும் உடல்நிலை பாதிப்பட்ட போதிலும் ,சொன்ன தேதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ,தனது நெஞ்சில் தைத்திருக்கும் முள் பற்றி வேதனைப் பட்டு விட்டு உரையைத் தொடரும் போதே மயங்கி சாய்கிறார் பெரியார் .95 வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை ,ஒடுக்கப்பட்டோர் இழிவு நீக்கல் ,விழிப்புணர்வு -க்காக பாடுபட்ட மாபெரும் தலைவன் மறைகிறார் .பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய அரசு மரியாதை இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிகளோடு படம் முடிகிறது.

பெரியார் வாழ்க்கை என்பது 3 மணி நேரத்தில் விளக்கப்பட முடிகிற ஒன்றல்ல .இந்த பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ,புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல .மாறாக ,பெரியாரின் ஒரு பரிமாணத்தை மட்டுமே அறிந்த இன்றைய தலை முறை "ஆகா பெரியாருக்கு இத்தனை முகங்களா ? இத்தனைக் காலம் தெரியாமல் விட்டுவிட்டோமே" என்றுணர்ந்து அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பயணத்தின் ஒரு நல்ல அறிமுகப் படலமாக இந்த படம் அமைந்திருக்கிறது .அந்த வகையில் இந்த படம் அதன் இலக்கை வென்றிருக்கிறது .

ஞானராஜசேகரனுக்கும் ,சத்திய ராஜ்-க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

Wednesday, May 02, 2007

பட்டுக்கோட்டையை காப்பியடித்த வைரமுத்து

என்னடா இது? வைரமுத்து மீது பகிரங்க குற்றசாட்டா என்று நினைக்க வேண்டாம் .நேற்று சிங்கையில் நடந்த விழாவில் வைரமுத்துவே குறிப்பிட்ட செய்தி இது.

சிங்கையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆர்வலர்களின் முயற்சியால் ஆண்டு தோறும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா கடந்த மூன்று ஆண்டுகளாக மேதினத்தன்று கொண்டாப்பட்டு வருகிறது .நேற்றைய விழாவுக்கு சிறப்புரை வழங்க கவிஞர் வைரமுத்து வைந்திருந்தார்.

சிங்கை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் அரங்கு நிறைந்து வழிந்த போதும் 7 மணியளவிலேயே துவங்கப்பட்டது .வைர முத்து பேசும் போது அரங்கத்திலிருந்த கூட்டத்தை போல 3 மடங்கு கூட்டம் திறந்த வெளியிலும் நின்று கொண்டிருந்தது .

சிறப்பு விருந்தினராக வந்திருந்து பட்டுக்கோட்டையார் பாடல்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த சிங்கை அமைச்சர் தெக் யூ நான்கைந்து தமிழ் வாக்கியங்களை எழுதி வந்து படித்த போது சீனர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு தமிழ் வாக்கியத்துக்கும் விண்ணதிர கைதட்டல் ஒலி எழும்பியது .ஒரு கவிஞரின் புகழ் பாடும் விழாவுக்கு இத்தனை பெரிய கூட்டத்தை அமைச்சர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அமைச்சர் சிங்கையின் அரசாங்க மொழிகளில் ஒன்றான தமிழை விஞ்ஞான யுகத்தில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் ,மொழி கலாச்சார கூறுகளை பேணிக்காக்க வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டி ,தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கை அரசு கொண்டுள்ள கடப்பாட்டை உறுதிப்படுத்தினார். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர் கூட்டம் அவரது பேச்சுக்கும் வருகைக்கும் மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

விழாவின் இறுதியில் கவிஞர் வைரமுத்து உணர்ச்சிகரமான உரைநிகழ்த்தினார் .29 வயதிலேயே மறைந்து விட்ட மாபெரும் 'மக்கள் கவிஞனின்' சிறப்புக்களை பட்டியலிட்ட அவர் சில சுவாரஸ்யமான தகவல்களையும் சொன்னார் .காதல் பாடல்களில் கூட பொதுவுடமையைச் சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை என்று உதாரணத்தோடு குறிப்பிட்ட அவர் ,பட்டுக்கோட்டையின் சமுதாய கருத்துக்கள் கொண்ட பாடல்களின் வெற்றி அப்போதிருந்த மற்ற கவிஞர்கள் சமுதாய கருத்துக்களை சொன்னால் தான் நிலைக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.

படத்துக்கு படம் ஒரு சமுதாயப்பாடல் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை நினைக்க வைத்தது பட்டுக்கோட்டை தான் ,அது எம்.ஜி.ஆரை அரியணையில் கொண்டு அமர்த்தியது என்று குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையை தான் காப்பியடித்த ரகசியத்தையும் சொன்னார் .பட்டுக்கோட்டையாரின் "தவறுக்கு தவறான தவறை புரிந்து விட்டு " என்ற தனது மனதில் தங்கிய வரிகளை காப்பியடித்தே சிந்து பைரவியில் 'மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்" என்றெழுதியதாக குறிப்பிட்டார் .

பட்டுக்கோட்டையார் இறந்த போது ஒரேயொரு நடிகை மட்டுமே அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தாராம் .அவர் அப்போது பட்டுக்கோட்டையார் பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு படத்தை தயாரித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை பண்டரி பாய் .ஒரு கையில் மாலையும் இன்னொரு கையில் காசோலையும் கொண்டு வந்து ,மாலையை அணிவித்து ,தான் கொடுக்க வேண்டிய தொகைக்கான காசோலையை பட்டுக்கோட்டையார் குடும்பத்துக்கு கொடுத்தார் என்ற செய்தியை குறிப்பிட்டார்.

வைரமுத்து பேசி முடிக்கும் போது இரவு 9-ஐ தாண்டியிருந்தது .வைரமுத்து பேச்சில் 'சிங்கப்பூர் தமிழர்கள்' என்று குறிப்பிடும் போதெல்லாம் என் மனதில் தோன்றியது ...இந்த விழாவை ஏற்பாடு செய்த ,மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்ற சில சிங்கப்பூர் தமிழர்களை தவிர இந்த நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காமல் வந்திருந்த கூட்டத்தில் 90 % இந்தியாவிலிருந்து இங்கு வந்து தினக்கூலிகளாக வேலை செய்யும் கட்டுமானத்துறை தொழிலாளர்கள் .

தொழிலார்கள் தினத்தன்று தொழிலாளர் நலம் பாடிய அந்த மக்கள் கவிஞனின் விழாவுக்கு திரளாக வந்திருந்து தமிழுக்கு அழிவில்லை என நிரூபித்த அந்த தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives