Sunday, December 04, 2005

'மதி'யுரை மறவேன் - ஜோ பேருரை

எழுச்சி மிகு இந்த விழாவுக்கு தலைமையேற்றிருக்கின்ற நம் 'தமிழ் மண இயக்கத்தின்' நிறுவனரும் நிர்வாக இயக்குனரும் ,ஆயிரம் இடர்வரினும் இந்த இயக்கத்தை இரும்புக் கோட்டையாக கட்டிக் காத்து வருகின்ற அஞ்சா நெஞ்சன் தானைத் தலைவர் காசி அவர்களே! ,இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரும் ,இணையில்லா உழைப்புக்கு சொந்தக்காரருமான தளபதி 'மதி' அவர்களே!

இயக்கத்தின் பகுத்தறிவுப் பாசறையின் தளபதியாக பவனி வரும் ,இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடு சுமந்து ,அதன் பின் எண்ணற்ற உரிமைப் போராட்டங்களில் சிறை புகுந்து ,சமீபத்தில் காந்த நடிகரின் இயக்கத்தில் கொள்கைப்பரப்பு செயலாளராக ஆகி விட்டார் என்று வதந்தி பரவிய வேளையிலே ,அவர் அந்த இயக்கத்தில் வேவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர் என்ற உண்மையறியாது நமது இயக்கத்து தோழர்கள் பலர் திகைப்புற்ற வேளையிலே ,போன காரியம் முடிந்தவுடன் கிஞ்சித்தும் தாமதியாமல் நமது இயக்கப் பணிகளில் பம்பரமாக சுழன்ற, சங்கம் வளர்த்த மதுரையில் நமது இயக்கத்தின் இடிதாங்கி தருமி அவர்களே!

நமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ,இயக்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்து (ஜோசப் சார்: அடப்பாவி பயலே! உனக்கு சப்போர்ட் பண்ணுனதுக்கு இது தேவை தான்) ,இயக்க மாநாடுகளில் எண்ணற்ற நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றி ,தலைவர் முதல் தொண்டர் வரை ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கின்ற இயக்கத்தின் 'நகைச்சுவை மன்னர்' ஜோசப் ஐயா அவர்களே!

இயக்க வரலாற்றிலேயே ஒரே பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்று ,தானே தன் சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் ,பின்னூட்ட வித்தகர் டோண்டு ஐயா அவர்களே!

தனியொரு ஆளாக நின்று நியூசிலாந்து மண்ணில் இயக்கத்தின் கொடியை விண்ணதிர பறக்க விட்டிருக்கின்ற ,"நான் தம்பிமார்களுக்கெல்லாம் அக்கா' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு அறிவித்த ,பாசமிகு அக்கா நியூசி துளசி அக்கா அவர்களே!

சிங்கை மாநகரின் இயக்கத்தின் தூணாக இருந்து ,இளம் உறுப்பினர்களை ஓடோடிச்சென்று ஊக்குவித்து அனைவரின் அன்பைப் பெற்ற ,இயக்கத்தின் தகவல் விளக்கப் பிரிவின் தளகர்த்தர் ஆற்றல்மிகு சிங்கை அன்பு அவர்களே !இயக்கத்தின் ஊடக வன்முறை எதிர்ப்பு அணியின் தலைவரும் ,தமிழ்மண பாட்டாளிப் பிரிவின் ஆலோசகருமான ,அருமை நண்பர் மானமிகு சிங்கை குழலி அவர்களே!(குழலி : அடேய்..சிங்கப்பூர் வா மவனே வச்சுகிறேன் கச்சேரிய),இயக்கத்தின் இளம்கவி சிங்.செயக்குமார் அவர்களே!

எங்கள் நாஞ்சில் நாட்டு இயக்க மறவர்களில் ஒருவரும் ,ஓடோடி வந்து ஊக்கக்கரம் கொடுப்பவருமான அருமைச் சகோதரர் நாஞ்சில் இறைநேசன் அவர்களே!முத்துநகர் தந்த சொத்து ,இயக்கத்தின் ஆன்மீக அணியின் ஆற்றல் மிகு செயல்மறவர் அருளாளர் கோ.ராகவன் அவர்களே! ஆன்மீக 'குமரன்' அவர்களே!

கர்நாடக மாநில இயக்கத்தின் சூப்பர் ஸ்டாரும் ,தமது நெகிழ்ச்சி உரைகளால் எல்லோர் உள்ளம் கவர்ந்த 'நாவலர்' இளவஞ்சி அவர்களே! இயக்கத்தின் குதிரைப்படை தளபதி பரஞ்சோதி அவர்களே! வெட்டு ஒன்று துண்டு ரெண்டென முழங்கும் கல்வெட்டு அவர்களே! வராது வந்த மாமணி மாயவரத்தான் அவர்களே!

ருஷ்ய நாட்டு இயக்கப் பிரதிநிதி செங்கொடி ராமநாதன் அவர்களே!பாசமிகு சகோதரிகள் உஷா அவர்களே!மதுமிதா அவர்களே!அருமை நண்பர்கள் முத்துக்குமரன்,டி.சே.தமிழன்,ராஜ்,முத்து,மூர்த்தி,சுதர்சனம்,சுதர்சனம் கோபால் அவர்களே!

நெல்லைச்சீமையில் இயக்க மருத்துவர் அணிக்கு தலைமையேற்றிருக்கும் மருத்துவர் தாணு அவர்களே!தங்கமணி அவர்களே!பதிவுகளில் தேன்மழை பொழிய வைக்கின்ற அருமைச் சகோதரி தேன் துளி பத்மா அவர்களே!

(அனைவரும் : அடேய்..போதும்டா.எப்ப தான் நிறுத்துவ!)

துவக்க விழாவுக்கு மட்டும் வருகை தந்து காணாமல் போன தமிழ்மண ரஜினி பேரவையின் தலைவர் இலக்கியச் செம்மல் ரஜினி ராம்கி அவர்களே! 'தமிழ்மண சுஜாதா பேரவையின்' தலைவர் ,செயலாளர் அனைத்துமான தேசிகன் அவர்களே! தமிழ் மண கலைஞானி கமல் பேரவைத் தலைவர் எம்.கே.குமார் அவர்களே! அவ்வப்போது வந்து 'லொள்'ளுகின்ற எல்.எல்.தாசு அவர்களே!

இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டா உருப்படுமா என்று முனகி விட்டு கடைகோடியில் முகமூடி போட்டுக்கொண்டு எனது உரையை செவிமடுக்கின்ற 'அறிவு ஜீவிகள்' அணி மறவர்களே!

பெயர்கள் விடுபட்ட இயக்கத்தின் முன்னோடிகளே!தாய்மார்களே பெரியோர்களே! (காசி: இவனுக்கு கொடுத்ததே 10 நிமிடம் .அதுல 9 நிமிடம் அவர்களே அவர்களே -ன்னு ஓட்டிட்டானே!சை!)

வாரம் ஒருவரை நட்சத்திரமாக நியமித்து பணிகள் ஆற்றச் செய்யும் நமது இயக்கத்தின் நடைமுறைக்கேற்ப மதி அவர்கள் இந்த வாரம் என்னை நட்சத்திரமாக இருக்கப் பணித்தார்கள் .வெளி நாட்டு பயணப் பணிகள் இருந்த போதிலும் இயக்க கடமை கருதி அதை நான் ஏற்றுக்கொண்டேன் (குழலி : கம்பெனி செலவுல ஊர் ஊரா ஜாலியா சுத்திகிட்டு ,பணி கிணி-ன்னு என்னமா பீலா உடுறான் பாரு). சுற்றுப்பயண வேளையிலேயே என்னால் முடிந்த அளவுக்கு இந்த பணியினை நிறைவேற்றியிருக்கிறேன் .இந்த நேரத்தில் எனக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இறுதியாக நமது தளபதி 'மதி' அவர்கள் ,கம்போடியா ,வியட்நாம் குறித்து நான் எழுதியது போல தொடந்து பல்வேறு பிரிவுகளில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் (ஜோ மனசாட்சி : அடே ..போற போக்குல ஒரு போட்டாவ பிடிச்சு தத்தக்க பித்தக்கன்னு எதயாவது எழுதிட்டு பெரிய வரலாற்று விற்பன்னர் மாதிரி பில்டப் குடுக்குறியா?) .அது மட்டுமல்ல..தலைவர் அவர்களிடம் 'ஜோ அவர்களுக்கு "தமிழ்மண யுவான் சுவாங்" என்ற பட்டத்தை கொடுத்தாலென்ன " என்று ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் (மதி: அடப் பாவி..இப்படின்னு தெரிஞ்சா நான் பின்னூட்டமே குடுத்திருக்க மாட்டேனே?) .அது அறிந்து நான் தாழ்மையாக மறுத்து விட்டேன்.

ஆனால் மதி அவர்களின் அந்த ஆலோசனையை நல்ல ஒரு 'மதியுரை'யாக (நன்றி:மதியுரை அமைச்சர் ,சிங்கப்பூர்) எடுத்துக்கொண்டு ,முடிந்த வரை அதை கடைபிடிக்க முயல்வேன் என்று கூறி ,'மதியுரை மறவேன்' என்று உறுதியளித்து ,உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் .

நன்றி! வணக்கம்!!

யேய்! நில்லுங்கப்பா! அடுத்த வாரம் நட்சத்திரமாக பொறுப்பேற்கும் நண்பர் --------- அவர்களை வருக வருக என வரவேற்று (ஒரு வழியா) அமைகிறேன்.

31 comments:

Anonymous said...

//நாஞ்சில் இறைநேசன்//

-ஆ! நான் எங்கே இருக்கிறேன்!

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் - நாஞ்சில்(ஹி, ஹி) இறை நேசன்.

தருமி said...

பின்னூட்டம் இட்டவர்களுக்கெல்லாம் நன்றின்னு ஒரு 3 வார்த்தையில சொல்ல வேண்டியத வச்சே ஒரு பதிவா? இந்த மாதிரி technology- எல்லாம் கைவசம் நிறைய வச்சிருப்பீங்க போலும்; அதான் "வண்டி" உலகம் பூரா சுத்துது!!

நன்றியுடன்....வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

"இயக்க வரலாற்றிலேயே ஒரே பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்று ,தானே தன் சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் ,பின்னூட்ட வித்தகர் டோண்டு ஐயா அவர்களே!"
அது!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிங். செயகுமார். said...

உனக்கும் எனக்கும்
ஓர் நாளும் அறிமுகமோ
எந்நாளும் தெரிமுகமோ
இல்லை!
ஓர் ஊரில் இருந்தும்
ஒரு போன் செய்ததில்லை
என் பேரும் உன் பதிவில்
நடு மத்தியில்!
சின்ன பயலுக்கும் ஓர் சீட் கொடுத்து
சிங்காரமாய் ஓர் பட்டம்
"இயக்கத்தின் இளம்கவி"
நன்றி நண்பரே!
வெறும் நன்றிதானா
வேறென்ன விரைவில் சந்திப்போம்
நிறைவாய் ........

நெஞ்சமெல்லாம் நிறைந்த
வாழ்த்துக்கள் நட்சத்திரமே!
உள்ளூரில்தான் இருக்கின்றேன்
உலகம் சுற்றும் வாலிபரே
உன்னோடும் என்னொடும்
எப்போது சந்திப்பு?

Anonymous said...

:-)

rv said...

நல்ல வாரம் ஜோ...

செங்கொடி இயக்கமா? ஜோசஃப் சார் லோன் தரார்னா நெடிய நடைப்பயணம் புறப்பட்டுற வேண்டியதுதான்.:)

ramachandranusha(உஷா) said...

சூப்ப்பர் வாஆஆஆரம் - சன் டீவி பாணியில் படிக்கவும் :-)

kirukan said...

Wonderful week.. The article on vietnam and Cambodia were interesting.

Pangaligal was full of emotions. It didnt interest me as I dont have any sentiments or else I can say myself as selfish.

Nice to know about Shepherd program.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஜோ, உங்களின் இந்த வாரப் பதிவுகளை இப்போது பின்சென்று படித்து வந்தேன். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

குசும்பன் said...

//இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டா உருப்படுமா என்று முனகி விட்டு கடைகோடியில் முகமூடி போட்டுக்கொண்டு எனது உரையை செவிமடுக்கின்ற 'அறிவு ஜீவிகள்' அணி மறவர்களே!//

அது...:=))

குமரன் (Kumaran) said...

ஆஹா. இனிவரும் நட்சத்திரங்களுக்கு ஒரு நல்லவழி காண்பித்துப் போகிறீர்களே ஜோ. இனி 'அவர்களே' பதிவு அதிகமாய் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். :-)

இவண்
ஆன்மீக 'குமரன்' :-)

அதென்ன என் பெயரை மட்டும் quotesல போட்டுட்டீங்க? ஓ. மதி பெயரையும் quotesல போட்டிருக்கீங்களா? ஏதாவது பொருள் இருக்கா அதுக்கு?

துளசி கோபால் said...

தலைவர் அவர்களே, தானைத்தளபதி மதி அவர்களெ, மற்றும் இன்னபிற.....அவர்களே,

ஊரார் பணத்திலே( அதாங்க கம்பெனிச் செலவிலே!) உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் என்
அருமைத்தம்பி, இன்னும் ஒரு நாள் மீதம் இருப்பதைக் கவனியாது அவசரமாக நன்றியுரை
நவில்ந்து( இந்த வார்த்தை சரிதானே?இல்லே 'நவின்று' வா?)விட்டார்.

தங்கத்தம்பிக்கு வேற ஊர் போகும் அவசரம் இருப்பது இதிலிருந்து புரிந்துவிட்டது. இத்தனை
வேலைகளுக்கிடையிடையிலும், இந்த தமிழ்மண(ன)ங்களை மறக்காது மண்டையோடு முதல்
மாரியம்மா வரை படம் காமித்து விளக்கிய பண்பை என்னவென்று சொல்வேன்?

வியட்நாம் வென்றான்( எப்போ?) வாழ்க, கம்போடியா கொண்டான் வாழ்க என்று கூறி
வாழ்த்த இங்கே 843 ப்ளஸ் 1( இது நம்ம டிபிஆர் ஜோவோட அம்மா) மனங்கள் இருக்கின்றன
என்று பெருமையோடு கூறிக்கொண்டு என் சிற்றுரையை முடிக்கின்றேன்.

வாழ்க தமிழ், வெல்க தமிழ்மணம்! ( இப்படித்தானே முடிக்கணுங்கறது சம்பிரதாயம்?)

முகமூடி said...

அது... (எதுக்குன்னு உங்களுக்கு தெரியாதா?)

ஜோ/Joe said...

நன்றியுரையிலே பெயர் சொல்ல மறந்தாலும் மீண்டும் இங்கு வந்து வாழ்த்திய கிறுக்கன் அவர்களே!மிக்க நன்றி!

இறைநேசன்,தருமி,டோண்டு சார் ,பின்னூட்டத்தையே கவிதையாக்கிய சிங்.செயக்குமார்,ராமனாதன்,உஷா,செல்வராஜ் ,குசும்பன்,குமரன் ,பட்டமளித்து சிறப்பித்த துளசி அக்கா..அனைவருக்கும் நன்றி.

நண்பர் முகமூடி வருகைக்கு நன்றி!

ஜோ/Joe said...

குமரன்,
'ஆன்மீக' குமரன் -ன்னு இருந்திருக்கணும் .பேசும்போது நல்ல ஏத்தமா தான் பேசுனேன் .எழுதும் போது தான் கோட்டை விட்டுட்டேன்.

அன்பு said...

தலைவா.... உங்க பேருரைக்கிடையில் ஒரு விசிலு சத்தம் காதைப்பொழந்துச்சே... அது நாந்தேன் என்று சொல்லி சுயதம்பட்டம் அடிக்கும் பரம்பரையில் வந்தவனில்லை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...

இந்தவாரம் ரொம்ப சூப்பர்... தொடருங்கள்.

மணியன் said...

இந்த வாரம் நல்ல சிந்தனைகளை தூண்டியும் நல்ல பல விதயங்களை அறிமுகப் படுத்தியும் சிறப்பாக அமைந்தது. நன்றியும் வாழ்த்துக்களும்.

குழலி / Kuzhali said...

உலகம் சுற்றும் வாலிபன் இலக்கிய செம்மல் இணைய தளபதி 'ஜோ' அவர்களே கலக்கிட்டிங்க, அப்படியே வாழ்த்து சொன்னதற்கும் நன்றி

G.Ragavan said...

இந்தியத் திருநாட்டிலே எல்லை என்று சொல்லை நிரூபிக்கும் குமரியின் மைந்தன் ஜோவை! உலகம் பல சென்று புகழ் பரம்பும் ஜோவை! செல்லும் இடமெல்லாம் செய்தி திரட்டி, கருத்துகளை உருட்டித் தரும் ஜோவை! ஊருக்கெல்லாம் பட்டம் தந்து உலகிற்கெல்லாம் அதை எடுத்துச் சொல்லிய ஜோவை! நட்சத்திரமாக தாரகையாக விண்மீனாக மின்னிய மின்னுகின்ற மின்னிக்கொண்டிருக்கப்போகின்ற ஜோவை! மதுரை வீரன் புகழை வியட்நாமில் கண்ட வியத்தகு ஜோவை! சிங்கையில் தங்கையில் நடந்ததைச் சொன்ன ஜோவை! கம்போடிய நாட்டின் களேபரத்தைக் கண்டுரைத்த கருத்துச் சிங்க ஜோவை! ஆன்மீகச் செயல்மறவர் அருளாளராகிய நான், தமிழ்மன யுவாங் சுவாங் என்று பட்டமளித்து மகிழ்கிறேன்.

நமது தமிழ்மண யுவாங் சுவாங் ஜோவிற்கு...ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கப்பூ!

b said...

அன்பின் ஜோ,

அதற்குள்ளாகவா ஒரு வாரம் முடிந்தது? இந்த வாரம் பொறுமையாகச் சென்றிருக்கக் கூடாதா? நல்ல பதிவுகள் இட்டு சந்தோஷப் படுத்தினீர்கள். மிக்க நன்றி ஜோ.

தாணு said...

ஒவ்வொருத்தர் பெயரும் வர வர, ஒருவேளை நம்ம பேர் இந்த பட்டியலில் இடம் பெறாமல் இருந்திருந்தால்... என்ற பயத்துடனே!தொடர்ந்து படித்தேன். அப்பாடி ஜோ லிஸ்ட்டில் சேர்க்கப் பட்டாச்சு, அடைமொழி கூட கிடைச்சிருக்கு.

ஆனாலும் சின்ன குறை ஜோ! உலகம் முழுதும் சுற்றினாலும் நாகர்கோயில் பத்தி நாலு வரியாச்சும் எழுதியிருக்கலாம் நீங்க! நட்சத்திர வாரத்தில்தானே ரசிகர் கூட்டம் நிறைய வரும்.

ஆனாலும் கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள்!

மதுமிதா said...

ஜோ

சிரிச்சிட்டும்,கண்ணீர் மல்கவும்,கை தட்டிட்டும் ஓரமா இருந்தப்ப

உரைக்கு நடுவிலே
கண்ணாலேயே சமாதான ஆறுதல் சொல்லி
அப்பிடியே புகைப்படமும் எடுத்தியேப்பா இன்னும் போடலியா

டிபிஆர்.ஜோசப் said...

ரொம்ப சாரி ஜோ லேட்டாயிருச்சி.

உங்க மெய்ல கிடைச்சது. பதில் அனுப்பிட்டேன்.

உங்க பேருரையில என்னையும் கண்டுக்குனதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. லோன் என்ன லோன் நன்கொடையாவ எவ்வளவு வேணும்னாலும் குடுத்துடறேன்.(நான்தான் இப்ப ப்ராஞ்சிலயே இல்லையே. பிறகென்ன? சும்மா சொல்றதுதான்).

நட்சத்திர வாரம் முடிஞ்சிருச்சேன்னு லாங் லீவ்ல போயிராதீங்க. அப்பப்ப உங்க டூர் பத்தி ஃபோட்டோவோட எழுதுங்க. வாழ்த்துக்கள்.

-L-L-D-a-s-u said...

நல்ல வாரம் . அருமையாக இருந்தது ... பாராட்டுகள் ..

கடைசிப்பதிவில் திராவிடப்பாரம்பரியத்தைக் காப்பாற்றிவிட்டீர்கள் . ;)

ஜோ/Joe said...

தாஸ்,நன்றி!

//கடைசிப்பதிவில் திராவிடப்பாரம்பரியத்தைக் காப்பாற்றிவிட்டீர்கள் //
என்ன பண்ணுறது தாஸ் .வின்செண்ட் சர்ச்சில் ,அரிஸ்டாட்டில் இவங்கள்ளால் பேசுனத நான் கேட்டதில்ல.எங்க ஊர் தெருக்கோடியில இப்படித் தான் பேசினாங்க .திராவிடனா பொறந்துட்டேன் .இந்த ஒரு தடவ பொறுத்துகுங்க

enRenRum-anbudan.BALA said...

கடற்புரத்துச் (உங்கள் வலைப்பதிவு தலைப்பில் "கடற்புறத்தான்" என்று உள்ளது சரியா என்று குழப்பம்!) சிங்கமே ! கடல் கடந்து சென்று திராவிட புகழ் பரப்பும் இளைய திலகமே ! நீவிர் வாழ்க ! OK, OK, ஒங்கப் பதிவை படிச்சதால வந்த வினை :)

போன வாரம் சற்று வேலைப்பளு அதிகம். அதனால், இப்போது தான் உங்கள் பதிவுகநளை பார்க்க முடிந்தது. அருமை, பாராட்டுக்கள் !
இருந்தாலும்,உங்கள் "மதி"யுரையில், பல சின்னப்பயல்களை(!) குறிப்பிட்டு விட்டு, என்னை விளிக்க மறந்தது (நான் வருகை தராமல்
இருந்திருந்தால் கூட!), தங்களைப் போன்ற அறிஞர்களுக்கு அழகில்லை என்பதை சுட்டிக் காட்டுவதை தாங்கள் தவறாக எண்ண மாட்டீர்கள் என்று உறுதியாக நம்பும் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

ஜோ/Joe said...

வாங்க பாலா!
உங்கள மறக்கல்ல ..ஆனா பாருங்க உங்கள ஆளையே காணோம்.வேற இயக்கத்துக்கு போயிட்டீங்களோண்னு சந்தேகமா போச்சு.அதனால இயக்க கட்டுப்பாடு கருதி தங்கள் பெயரை குறிப்பிடவில்லை..இப்போ சொல்லிக்கிறேன்.

இயக்கத்தின் அன்பர்கள் அணியின் ஆற்றல் மிகு தளபதி பாலா அவர்களே!

ஜோ/Joe said...

//"கடற்புறத்தான்" என்று உள்ளது சரியா என்று குழப்பம்//

நீங்க சொன்ன பிறகு எனக்கும் குழப்பம் வந்திடுச்சு .யாராவது சந்தேகத்தை தீர்த்து வைத்தால் நல்லது

ilavanji said...

இளமை துள்ளும் இளந்தாரியான இளஞ்சிங்கம் 'இள'வஞ்சியாகிய என்னை 'நாவலர்' என அழைத்து இலைமறைகாயென 'பெருசு' என அர்த்தப்படுத்தி நம்பர் 2(உவ்வே... ) வென சொல்லாமல் சொல்லி உள்குத்து குத்தும் வேலையிலே இறங்கையிருக்கும் எனது அருமைநண்பர் ஜோவின் பேருரையை சந்தேகப்படும் அதே வேளையிலே...
(இந்த வாரம் குழலியாமே..!? மிச்ச குத்துகளை அங்க போய் வைச்சுக்கறேன்!! ) :)

Anonymous said...

கும்தலக்கடி கும்மாவா, ஜோ-ன்னா சும்மாவா...

மஞ்சூர் ராசா said...

28 முறை அவர்களே என்று அவர்களை அழைத்து அந்த அவர்களுடனேயேக் கட்டுரையையும் முடித்த ஜோ அவர்களே
இன்னும் எத்தனை அவர்களே பாக்கி இருக்கிறது?

அனைவரையும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives