Friday, October 03, 2008

காதலில் விழுந்த கம்யூனிஸ்டுகள்

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் கொஞ்சம் மரியாதை உண்டு .தோழர் பெருமதிப்புக்குரிய நல்லக்கண்ணு போன்ற பண்பாளர்கள் அங்கம் வகிப்பதால். பெரும்பாலான தலைவர்களின் எளிமையும் ,கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியது .ஆனால் சமீப காலங்களில் கம்யூனிஸ்டுகள் காமெடியர்களாக மாறி வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை .

எதேச்சையாக சன் தொலைக்காட்சி பார்த்த போது செய்திகள் போய்க்கொண்டிருந்தது ..சிவப்பு துண்டைப் போட்டுக்கொண்டு தோழர் தா.பாண்டியன் முழங்கிக்கொண்டிருந்தார் .நான் கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் ஆவேசமாக பேசுகிறார் என நினைத்து கூர்ந்து கவனித்தால் அடடா.. 'காதலில் விழுந்தேன்' ஏன் மதுரைக் காரர்களை விழ அனுமதிக்கவில்லை என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை பற்றி வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருந்தார் .

சன் டீவியை பொறுத்தவரை 2 நாட்களாக தலைப்புச் செய்தியே 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு மக்கள் வரலாறு காணாத வரவேற்பு ..திரையரங்கமெங்கும் மக்கள் வெள்ளம் ..இத்தியாதி..இத்தியாதி ..இத்துப்போன இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க மு.க.அழகிரி தயவில் கிடைத்த வாய்ப்பை சன் டீவி நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது .இது ஏதோ உலக மகா பிரச்சனை போல "வாங்கையா..வாங்கையா" என திடீர் கருணாநிதி எதிர்ப்பாளர்களை தேடிப்பிடித்திருப்பார்கள் போல .

தோழர் தா.பாண்டியனை கேட்கவே வேண்டாம் ..நம்ம கிட்ட மைக் குடுத்துட்டாங்கப்பா -ன்ற சந்தோசத்துல பொளந்து கட்டினார் ..அந்த கொடுமை முடிந்தவுடன் அடுத்து மார்ச்சிஸ்ட் வரதராசன் ..அய்யோ ..மற்றொரு திடீர் கருணாநிதி எதிர்ப்பாளராம்.

இந்த காமெடி முடிஞ்சு இப்போ இன்னொரு காமெடி ..திடீர்ன்னு கம்யூனிஸ்டுகளுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை .உடனே புதிய நண்பர்களையெல்லாம் கூட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் ..கொடுமை என்னண்ணா அதுல அ.தி.மு.க -வும் கலந்து கொள்ளும் -ன்னு அறிவிப்பு .விட்டா ராஜபக்சே ,சோ போன்றவர்களையும் கூப்பிடுவார்கள் போல .

அம்மாவும் பெரியமனது பண்ணி முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என சொல்ல ..நிகழ்ச்சி தொடங்கியும் முத்துசாமி வரவில்லை .கடைசியில் அம்மா கொடுத்தார் பெரிய அல்வா ..வழக்கம் போல கடைசி நேரத்தில் அம்மா-வின் மூடு மாற ,கொஞ்ச நஞ்சம் வந்திருந்த அ.தி.மு.கவினர் மேலிட சிக்னல் கிடைத்ததும் கமுக்கமாக கழன்று கொண்டார்கள் .அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?

பொதுவாகவே இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் கலைஞரோடு கூட்டணி வைத்திருக்கும் போது தான் கூட்டணி ஜனநாயகம் ,கொள்கை ,நியாயமான தொகுதிப் பங்கீடு ,வெங்காயம் பற்றியெல்லாம் பேசுவார்கள் . அம்மாவிடமெல்லாம் இந்த பாச்சா பலிக்காது .உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.

இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு .அவர் வெளிய தான் புலி .அம்மா கிட்ட ஈழப்பிரச்சனை ,சேது சமுத்திர திட்டம் பத்தி ..ஊகூம் ..கப்சிப் ..அடுத்த முறை அம்மா இவரைப் பிடிச்சு உள்ளே போடுறவரை ஓயமாட்டார் ..அப்புறம் "பாசிச ஜெயலலிதா" -ன்னு முழங்குவார் .பார்க்கத் தானே போறோம் .கலைஞர் கிட்ட ஒரு தொகுதிக்கு உரிமைக்குரல் கொடுக்கிற வை.கோ-வும் ,தா .பாண்டியன் வகையறாக்கள் ஜெயலலிதா பிச்சைக்காசு மாதிரி வீசுகிற தொகுதிகளை கையையும் வாயையும் பொத்திகிட்டு எப்படி வாங்குறாங்கன்ணு.

Tuesday, September 16, 2008

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

Thursday, August 07, 2008

ரஜினி செய்தது தவறா?

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் போது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?" என்றெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்கள் ..இந்த அளவுக்காவது ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் காற்று இறங்கி வருவது நல்லது தான்.

ரஜினிகாந்த் நல்ல நடிகர் ..நல்ல மனிதரும் கூட .இருக்கட்டுமே ..யார் இல்லையென்று சொன்னது ? நான் ஒரு நடிகன் .என்னை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போயிருந்தால் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை உண்மையிலேயே அவரின் நடிப்புக்கு ,ஸ்டைலுக்கு திரண்ட கூட்டம் என்று எடுத்துக்கொண்டு போயிருந்திருக்கலாம் .ஆனால் ஊகங்கள் மூலம் அரசியல் சாயங்கள் விழுந்த போது அதனால் ஏற்படும் லாபங்களை மிக லாவகமாக வியாபாரமாக்கிக் கொண்ட போது தானே அவர் வெறும் நடிகர் என்பதையும் தாண்டி வெளியில் வந்து விழுகிறார் .

திரையில் அவர் பேசும் வசனங்கள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என்ற எல்லையை தாண்டி ரஜினிகாந்த் என்ற தனிமனிதன் பேசும் வசனங்களாக கருத்தில் எடுக்கப்பட்டதை (இப்போது அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டுமே என்று மறுத்தாலும் ) கொஞ்சமாவது மண்டையில் மசாலா உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியுமே ?எம்.ஜி.ஆரும் இப்படி அரசியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார் , பாடுவார் ..ஆனால் அவை படத்திலுள்ள இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசுவது போல மறைமுகமாக இருக்கும் .ஆனால் ரஜினி சம்பந்தம் இல்லாமல் கையை பார்வையாளரைப் பார்த்து நீட்டி நேரடியாகவே பேச ஆரம்பித்தார் . அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ,பாடல்கள் என்றால் ..வீட்டு வேலைக்காரராக இருக்கும் ஒருவர் அதிலும் காதல் காட்சியில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." என்று பாடினால் கேட்பவன் என்ன கேனயனா ? அதற்கு வேலைக்காரனின் காதலி வேறு " என்னமோ திட்டமிருக்கு " என்று பில்டப் வேறு ...ஆமாங்க இதெல்லாம் அவருக்கு தெரியாம இயக்குநரும் பாடலாசிரியரும் திணித்தது ..அல்லது ..இதைக்கூட அவர் பலமுறை தடுத்தும் கேட்காமல் சேர்த்து விட்டார்கள் ..என்று சொல்பவர்களை என்ன சொல்வது ..வடிவேலு பாணியில் ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான் .

தன்னை நடுரோட்டில் காக்க வைத்து விட்டார் என்ற காரணத்துக்காக ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தது .."மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ..ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது " என குரல் கொடுத்தது ..ஊடகங்களும் ஏதோ ரஜினி வாய்சினால் தான் திமுக வெற்றி பெற்றது ..இல்லையென்றால் ஜெயலலிதா வென்றிருப்பார் என காமெடி பண்ணியது ..அந்த பில்டெப்புகளெல்லாம் அடுத்த முறை கொடுத்த வாய்சிலேயே பணால் ஆனது ..மீண்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ம.க -வை எதிர்த்தது .. சும்மா விட்டிருந்தா குறைந்தது ரெண்டு இடத்துலயாவது தோற்க வாய்ப்பிருந்த பா.ம.கா-வை மறைமுகமாக ரசிகர்களை தூண்டிவிட்டு தோற்கடிக்கிறேன் பேர்வழின்னு எல்லா இடத்திலும் பா.ம.கா-வை வெற்றி பெற வைத்தது ..இதுக்கு பிறகாவது "பேர கேட்டாலே..அதிருதுல்ல ..ஒதறுதுல்ல"-ன்னு சொல்லாம இருந்திருக்கணும் .

வரமாட்டேன் ..வந்தாலும் வருவேன் ..வருவேண்ணு யார் சொன்னது ..நீங்களா நினைச்சுகிட்டா நான் என்ன செய்வது ..நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன் .. நாளை என்ன நடக்கும்-ன்னு சொல்ல முடியாது .. எல்லாம் (கைய மேலே தூக்குறது) என்றெல்லாம் மாறி மாறி சொல்லி வருவது எதனால் ? வேறு ஒன்றுமில்லை ..இத்தகைய ஊகங்கள் , எதிர்பார்ப்புகள் ,சந்தேகங்கள் ,விவாதங்கள் தன்னுடைய படங்களின் வியாபாரத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருக்கும் என்ற எண்ணம் தான் .

ரஜினிகாந்துக்கு எந்த சமூக பிரச்சனையிலும் ஆழமான அறிவோ ,தனக்கென ஒரு கருத்தோ இருந்ததில்லை ..அல்லது அரசியலுக்கு வந்து நிலைக்கும் அளவுக்கு அவருக்கு தலைமைப் பண்போ ,நிர்வாக திறனோ ,பக்குவமோ ,பொறுமையோ கிடையாது ..இவை அவருக்கு நன்றாக தெரிந்ததாலும் ..தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்று போட்டுடைக்க விரும்பவில்லை ..காரணம் ? வரமாட்டோம் -ன்னு தெரியும் ..அதற்காக வருவோம் ,வரமாட்டோம் என ஊகத்தின் அடிப்படையில் நம் திரைப்படங்களுக்கும் ,ஊடகங்களில் நடக்கு கிடைத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்கும் கிடைத்து வரும் லாபத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டும் ? போற வரைக்கும் போகட்டுமே என்பது தான் அவரது எண்ணமாக இருக்க முடியும்.

இதில் என்ன தவறு ? என்னைக் கேட்டால் தவறே இல்லை ..அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .

இப்போது கூட ரஜினி கணக்கை கொஞ்சம் வித்தியாசமாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம் ..உண்ணாவிரத பேச்சுக்கு பிறகு வந்த மிரட்டலுக்கு பிறகு கூட "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்று பேசியவர் இப்போது 2 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நட்டம் வந்து விடக்கூடாதே என்பதால் வருத்தம் தெரிவித்து நட்டத்தை போக்கியிருக்கிறார் ..ஆனால் நடந்தது என்ன ? கர்நாடகாவில் 2 கோடி லாபம் .தமிழகத்தில் 20 கோடி நட்டம் ..கொஞ்சம் வேறு மாதிரியாக யோசித்து ..லாபத்திற்காகவேனும் "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்பதை மறு உறுதிப்படுத்தியிருந்தால் ,2 கோடி நட்டத்துக்கு பதில் தமிழகத்தில் கூடுதலாக 10 கோடி பார்த்திருக்கலாம் ..தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!

Thursday, July 24, 2008

கிடைக்குமா கச்சத்தீவு? -ரவிக்குமார் எம்.எல்.ஏ

மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

'எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறை களால் ஆனது' என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தப் பிரச்னை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1921-ம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது. அப்போது இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்னை விவாதிக் கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டபோதிலும், ராம நாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால், அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய- இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில் இந்தியாவும் இலங்கையும் தம்முடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் 'இந்திய-இலங்கை கப்பல் கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல் லப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதத்தில், 'இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது' எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம்சாட்டி வருகின்றன. அது உண்மையல்ல. 1974-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்னை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளி நடப்பு செய்துள்ளனர். ''இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடரவேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நம்முடைய நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்'' என்று இரா.செழியன் பேசினார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரிகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இல்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைப் பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார். இது நம்முடைய ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்'' என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர், ''கச்சத்தீவு என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக் கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தன்னுடைய ராணு வத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டுவந்து குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினைதான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்'' என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப், ''1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அவற்றைப் படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்'' என்று பேசினார்.

ஒரிஸ்ஸா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ், ''நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சி யினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னாள் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நம்முடைய நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்குப் பிறகு என்ன மிச்சம் இருக்கும்'' என்று கேள்வி எழுப்பினார்.

ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாய் கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனர் என்றும் பேசினார். அந்த சமயத் தில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படி யான சம்பவங்களுக்குப் பிறகுதான் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங், அவையில் அறிக்கையை வாசித்தார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடை யில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில் களுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்'' என்றார் அவர்.

அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் இந்த ஒப்பந்தத்தைத் தம்முடைய கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ''மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921-ம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை கடல் மைல்கள் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம். அதற்குக் கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவைச் சுற்றி சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களுடைய வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே, இந்திய-இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப் படும்'' என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடை யூறின்றி தொடர்ந்தது. ஆனால், இலங் கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களுடைய மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட 'ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம்' இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதைப் பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளைப் பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்து காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது? இதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

'கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது' எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.

நன்றி - விகடன்.

Saturday, July 12, 2008

மானெங்கெட்ட மத்திய மாநில அரசுகள்

வல்லரசாவதெல்லாம் இருக்கட்டும் .முதலில் தன் நாட்டு மீனவர்களை தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சுண்டைக்காய் இலங்கை அரசை கண்டிக்க வக்குண்டா இந்த இந்திய வல்லரசுக்கு ..வெட்கம் .கேவலம்.

தமிழனென்றாலே பாராமுகம் தான் .அதிலும் மீனவன் என்றால் கேட்கவே வேண்டாம் .மற்றவர்களுக்காகவெல்லாம் கொதித்தெழும் அரசுகளும் அரசியல் கட்சிகளும் மீனவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பாராமுகமாகவும் அலட்சியமாகவும் இருப்பதற்கு காரணம் மீனவர்கள் கொண்டுள்ள குறைந்த பட்ச அரசியல் செல்வாக்கு தான் .

புவியல் ரீதியாக நேர்கோட்டில் வசித்து வரும் மீனவர்கள் தொகுதிவாரியாக பல தொகுதிகளுக்கு பங்கிடப்படுவது தான் இதற்கு காரணம் .உதாரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாக்குமரி முதல் கேரள எல்லையான நீரோடிவரை நீண்ட கடற்கரை பகுதியில் சுமார் 45 மீனவ கிராமங்களில் வசித்து வரும் மீனவர்கள் அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவத்தையும் பெறுவதில்லை .நீள்வாக்கில் சேர்த்தால் தனி சட்டமன்ற தொகுதி அளவுக்கு மக்கள் தொகை இருந்தாலும் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரிந்திருக்கிறார்கள் .இதனால் எந்த தொகுதியிலும் அவர்களால் முக்கியத்துவம் பெற முடிவதில்லை.

உயிரை பணயம் வைத்து அன்றாடம் அலைகளோடு அல்லாடும் மீனவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாத கேடுகெட்ட அரசாங்கம் தன்னை ஒரு வல்லரசாக பறைசாற்றிக் கொள்ள முனைவது போல கேலிக்கூத்து எதுவுமில்லை .

மற்றவிடயங்களிலெல்லாம் தேசபக்தி பொங்கி வழியும் உள்நாட்டு மக்களுக்கு கூட மீனவன் அந்நிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அது ஒரு செய்தியே இல்லை .

தன் குடிமகன்கள் இவ்வளவு சிறிய அண்டை நாட்டால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப் பட்டுக்கொண்டிருந்தாலும் அந்நாட்டிலிருந்து வரும் பிரதமருக்கு சிவப்பு கம்பளம் விரிந்து மரியாதை கொடுக்கும் கேடு கெட்ட இந்திய அரசாங்கத்தால் அதிகார பூர்வமாக ஒரு சிறிய எச்சரிக்கை கூட விடமுடியவில்லை .கொடுமையிலும் கொடுமை .

இங்கிருக்கும் கலைஞர் அரசாங்கம் வெறும் கடிதம் எழுதினோம் என்று எத்தனை நாளைக்கு பூச்சாண்டி காட்ட முடியும் ? மீனவ மக்களென்றால் அவ்வளவு இளப்பமாக போய்விட்டதா ? கலைஞர் அவர்கள் தன் மெத்தனத்தை உடனே களைய வேண்டும் ..இல்லையென்றால் அதன் பலனை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கும் .

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives