Tuesday, October 03, 2006

இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)

இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?

48 comments:

இறையடியான் said...

இறைவன் தன் தனித்தன்மையை காட்டவே அவ்வாரறு படைத்தான்
தனது திருமறையில் இது தன்க்கு மிகவும் சுலபம் என்கிறான்.

ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது இயேசு மட்டும் தந்தையின்றி பிறக்கவில்லை சக்காரியாவிற்க்கு பிறந்த யோவான் கூட ஆணின் உதவி இன்றிதான் பிறந்தார்.என்று பைபிளும் கூறுகிறது.

ஜோ/Joe said...

//ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது இயேசு மட்டும் தந்தையின்றி பிறக்கவில்லை சக்காரியாவிற்க்கு பிறந்த யோவான் கூட ஆணின் உதவி இன்றிதான் பிறந்தார்.என்று பைபிளும் கூறுகிறது.//
அப்படியா! அன்னை மரி மண ஒப்பந்தம் ஆகி ஜோசப் -வோடு சேர்ந்து வாழும் முன்னரே கருவுற்றார் .ஆனால் எலிசபெத் மணமாகி பல வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாதிருந்து பின்னர் கருவுற்றார் என்று தான் நான் அறிந்திருக்கிறேன் .அவர் ஆணின் துணையின்றி கருவுற்றார் என்பதை பைபிள் சொல்லுகிறதா ? இருந்தால் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் .சரி! யோவானும் இஸ்லாமால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபியா? இஸ்லாத்தில் அவர் பெயர் என்ன (எவ்வாறு அழைக்கப்படுகிறார்)?

இறையடியான் said...

*//யோவானும் இஸ்லாமால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபியா? இஸ்லாத்தில் அவர் பெயர் என்ன (எவ்வாறு அழைக்கப்படுகிறார்)? //*

இறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள்! நீ வேண்டுதலை செவியேற்;பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)

அவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)

எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும்? என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)


ஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார்

என் இறைவனே! என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை.

எனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.

ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.

இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்! நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனiவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.

அது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.

எனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா! என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன்

அப்துல் குத்தூஸ் said...

<<< இறையடியான் said...
சக்காரியாவிற்க்கு பிறந்த யோவான் கூட ஆணின் உதவி இன்றிதான் பிறந்தார்.என்று பைபிளும் கூறுகிறது. >>>

பைபில் இப்படி கூறுகிறது என்றால், குர்ஆன் அதற்கு மாற்றமாகவல்லவா கூறுகின்றது?

<<< இறையடியான் said...
ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன். >>>

ஜக்கரியாவிற்கு பிறப்பார் என்றால், யஹ்யா தகப்பன் உடையவராகத்தானே பிறக்கின்றார்? இங்கு குர்ஆனின் கூற்றைக் கவனிக்கும் பொழுது வயோதிகர்களுக்கும் இறைவன் நாடினால் ஆண்மையும், பெண்மையும் தருவான் என்பதாகவல்லவா பொருள் ஆகின்றது? ஆகையால் குர்ஆனின்படி யஹ்யா (அலை) அவர்கள் ஜக்கரியாவிற்குத்தான் பிறந்தார் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. ஆனால், இதைப்பற்றி பைபில் என்னக் கூறுகின்றது என யாராவது அறிந்தவர்கள் கூறினால் நலமாக இருக்கும்.

நன்றி.

ஜோ/Joe said...

//பைபில் இப்படி கூறுகிறது என்றால், குர்ஆன் அதற்கு மாற்றமாகவல்லவா கூறுகின்றது?//
பைபிள் அப்படி கூறவில்லை என்பது தான் என் கருத்தும் .இறையடியான் தான் வேறுபடுகிறார் .யோவானுக்கு இறைவனால் பெயர் அருளப்பட்டதே தவிர அவர் சக்காரியா மூலமாகத் தான் பிறந்தார் .இயேசு போல இறைவனால் நேரடியாக கருத்தரிக்கப்படவில்லை என்பதே நான் அறிந்தது.

ஜோ/Joe said...

aasalamone,
உங்களுக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரமதான் மாத வாழ்த்துக்கள்!

இன்னும் என் சந்தேகங்களுக்கு தெளிவான பதில் வருமென காத்திருக்கிறேன்.

Anonymous said...

Nala kelvigal

கூத்தாடி said...

ஜோ நல்லப் பதிவு ..

இறையடியான் ஒரு மாதிரியாக முதல் கேள்விக்கு பதில் சொல்லியிறுக்கிறார் ..இரண்டாவதுக் கேள்விக்கான பதில் யாராவது நண்பர்கள் சொல்லுவார்கள் என எண்ணுகிறேன்.

இரண்டாவது கேள்வியை நானும் ஒரு நண்பர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் அவ்வாறு நம்புகிறார்களா என்பது தெரியவில்லை ..

அப்துல் குத்தூஸ் இறையடியானிடம் இருந்து மாறுபடுகிறார் ..எது சரியானப் பதில் ..அவர் கருத்துப் படி விவிலியமும் குரானும் ஒன்று போல் தான் சொல்லியிருப்பதாகப் படுகிறது

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

ஜோ/Joe said...

saahul.koothadi,அபூ ஷைமா..உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

ஜோ/Joe said...

இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்குமென நம்புகிறேன்

இறையடியான் said...

சகோ.அப்துல் குத்தூஸ்

இறைவனின் சாந்தியும் சமாதான்மும் தங்கள் மீது என்ரும் உண்டாவதாக

இறைவன் யாருக்கும் மீண்டும் ஆண்மையையும் பெண்மையையும் குடுத்ததாக கூறவில்லை என்று கருதுகிர்றேன். இதைப்ப்ற்றி மேலதிகமான் விள்க்கத்தை எதிர்பார்கிறேன். என்னுடைய விள்க்கத்திற்க்கு பதில் தர முயற்ச்சிக்கிறேன் இரைவன் நாடும் பட்சத்தில்

nagoreismail said...

சகோதரர் ஜோ அவர்களே, நீங்கள் கேட்கும் கேள்வி, அல்லாஹ் ஏன் முஹம்மது நபியை விட ஈஸா நபியை சிறப்பித்து இருக்கிறான் என்பதாகும்? ஈஸா நபியை சிறப்பித்தான் என்பதற்கு நீங்கள் கூறும் காரணம்
(1) ஈஸா நபியின் பிறப்பின் சிறப்பை பற்றியதும்
(2) மீண்டும் இந்த உலகிற்கு அவர்கள் வருவாகள் எனபதும் தான், அல்லவா?
விளக்கம்-
(1) ஈஸா நபி தந்தையின்றி பிறக்கிறார்கள், இது முஹம்மது நபிகளுக்கு கூட கிடைக்கவில்லை. ஆனால் ஈஸா நபி தாயின் வயிற்றில் பத்து மாதம் அதாவது நம்மை போலவே சிசுவாகவே இருக்கிறார்கள். தந்தையின்றி பிறந்தது தான் சிறப்பு என்றால் ஆதம் (அலை) அவர்களுக்கு இதை விட சிறப்பு உள்ளது, அவர்கள் ஆண், பெண் இருவருமின்றியே பிறக்கிறார்கள் அல்லவா?
இதற்காக ஈஸா நபியை விட ஆதமே உயர்ந்தவர்கள் என்றும் கூட கூறலாம் அல்லவா?

(2) இஸ்லாத்தின் தீர்ப்பு படி எதிரிகளான யூதர்கள் ஈஸா நபியை கொல்ல சதி செய்த போது அல்லாஹ் அவர்களை உயர்த்திக் கொண்டான், அதாவது அவர்கள் இன்னும் மரணிக்க வில்லை, ஏதோ ஒரு நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் உலகுக்கு வருவார்கள், சத்தியத்தை போதிப்பார்கள், சரி,
இது தான் சிறப்பு என்றால் அல்லாஹ் இந்த உலகில் குகை வாசிகளை 100 வருடங்கள் வரை உறங்க வைத்து அவர்களை மீண்டும் எழுப்பி உலகில் வசிக்க அனுமதித்து இருக்கிறான், மேலும் இதே நிலையில் உஜைர் என்ற நல்லடியாரும் அவ்வாறே ஏதோ ஒரு நிலையில் வைத்திருந்து மீன்டும் உலகில் வசிக்க வாழ அனுமதியளிக்கப் பட்டிருக்கிறார்கள். குகை வாசிகளை பற்றி பைபிளிலும் வருகிறது என்று அறிகிறேன். உஜைர் என்பவரை தான் யூதர்கள் இறைவனின் குமாரன் என்கிறார்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸா நபியை இறவனின் குமாரர் என்று அழைப்பதை போலே.
சரி போகட்டும், இதெல்லாம் தான் சிறப்பா என்றால் சூபியாக்கள் எனும் ஞானிகள் சிறப்பு என்பதற்கு வேறு விளக்கம் வைத்திருக்கிறார்கள். பெருமானார் முஹம்மது நபிகளுக்கு இருந்த ஒரே ஆதரவான சிறிய தந்தை இறந்து விடுகிறார்கள், துக்கம் தணியும் முன்னர் அதே ஆண்டில் ஆருயிர் மனைவி அன்னை கதிஜா அவர்களும் இறக்கிறார்கள். மனமொடிந்து இருக்கும் தாயிஃப் சம்பவம் நடக்கிறது, தாயிப் மாக்கள் பெருமானார் அவர்களை கல்லாலும் சொல்லாலும் அடித்து துன்புறுத்து தெருவில் ஓட விட்டு வேடிக்கை பார்த்து 'பைத்தியம்' என்று கூறிய நிலையில், கடும் வேதனையில் இருக்கும் அவர்களிடம் தாயிபை அழிக்க அனுமதி கோரப்படுகிறது. பெருமானார் அனுமதி மறுக்கிறார்கள், 'இவர்கள் இஸ்லாத்தில் இணையா விட்டாலும் இவர்களது சந்ததிகள் இஸ்லாத்தில் இணைவார்கள்' என்று கூறுகிறார்கள்.
இறைவன் கட்டளையிடுகிறான், நான் என் அடியாரை காண வேண்டும், அழைத்து வாருங்கள், என்று இறைவனின் அடியாரான முஹம்மது நபிகள் இறைவனை சந்திக்கிறார்கள் இரண்டு புருவத்தின் இடைவெளியில் இருந்துக் கொண்டு. யாரும் அடையாத பாக்கியம் என்றால் இது தான். மிஃராஜ் எனும் விண்ணேற்ற பயணம் மேற்கொண்டு இறைவனை சந்தித்ததை விட சிறப்பு என்பது வேறு எதுவும் இல்லை, ஆகவே இத்தகைய சிறப்பு தான் எங்கள் நபியுடைய சிறப்பு. வேறு யாருக்கும் கிடைக்காத சிறப்பு.
நாகூர் இஸ்மாயில்

ஜோ/Joe said...

சகோதரர் நாகூர் இஸ்மாயில்,

//நீங்கள் கேட்கும் கேள்வி, அல்லாஹ் ஏன் முஹம்மது நபியை விட ஈஸா நபியை சிறப்பித்து இருக்கிறான் என்பதாகும்?//
இல்லை .நான் எதையும் நிறுவவில்லை .விளக்கம் மட்டுமே கேட்கிறேன் .ஈஸா நபிக்கு மற்றவருக்கு இல்லாத சிறப்பை (பிறப்பை) அல்லா கொடுத்தற்கு ஏதாவது காரனம் இருக்கலாம் .அது பற்றி இஸ்லாமில் என்ன கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நோக்கமேயன்றி வேறு அல்ல.

//இதற்காக ஈஸா நபியை விட ஆதமே உயர்ந்தவர்கள் என்றும் கூட கூறலாம் அல்லவா?//
கூறலாமே ? நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்களா என்பது தான் கேள்வி .நீங்கள் எதிர் வாதம் செய்வதற்கு நான் எதுவும் வாதம் செய்யவில்லையே ?

//தந்தையின்றி பிறந்தது தான் சிறப்பு என்றால் //
அப்படி நான் சொல்லவில்லையே ? எல்லா நபிகளுக்கும் அவ்வாரு ஏன் நடைபெறவில்லை ? ஆதமுக்கும் ஈஸாவுக்கும் மட்டும் ஏன் அவ்வாறு செய்யப்பட்டது .ஆதமுக்கு செய்யப்பட்டது அதற்கு முன்னர் மனிதர் இல்லையென்பதால் அவ்வாறு தான் செய்தாக வேண்டும் .ஆனால் ஈஸாவுக்கு அப்படி அல்ல.

//இஸ்லாத்தின் தீர்ப்பு படி எதிரிகளான யூதர்கள் ஈஸா நபியை கொல்ல சதி செய்த போது அல்லாஹ் அவர்களை உயர்த்திக் கொண்டான், அதாவது அவர்கள் இன்னும் மரணிக்க வில்லை, ஏதோ ஒரு நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் உலகுக்கு வருவார்கள், சத்தியத்தை போதிப்பார்கள்//

இந்த கருத்துக்கு நன்றி .ஏற்றுக்கொள்ளும் படி இருக்கிறது.

//ஆகவே இத்தகைய சிறப்பு தான் எங்கள் நபியுடைய சிறப்பு.//
இதிலே உங்கள் நபி ,எங்கள் நபி எங்கே வந்தது சகோதரரே! நீங்கள் என்னை ஒரு கிறிஸ்தவராக நினைத்து நீங்கள் ஒரு இஸ்லாமியரின் சார்பாக இதை சொல்வதாக இருந்தால் ..மன்னிக்கவும்..நீங்கள் என் நோக்கத்தையே புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் .நான் ஒரு கிறிஸ்தவனாக வாதம் செய்யவோ ,யாரை விட யார் மேல் என்று நிறுவவோ இந்த பதிவிடவில்லை .முழுக்க முழுக்க உங்கள் நபிமார்களைப் பற்றியே கேட்கிறேன் .இதில் அண்ணல் முகமது உங்கள் நபியென்றும் இயேசு எங்கள் நபியென்றும் நீங்கள் பொருள் படுவதாக இருந்தால் அது உங்கள் புரிந்துணர்வில் உள்ள குறையாகவே நான் காண்கிறேன் .

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

சகோதரர் ஜோ அவர்களே,

பதிவு நன்றாக உள்ளது. உங்கள் நோக்கமும் புரிந்து கொள்ளவே என்ற உங்கள் விளக்கத்திலிருந்து அறிந்து கொண்டேன்.

தற்போதைய உலகின் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட மக்களின் தந்தையாக ஒரே நபரே(இப்ராகீம்-ஆப்ரகாம்) இருக்கும் பொழுது ஏன் இந்த குழப்பங்கள் என அடிக்கடி ஆலோசித்ததுண்டு.

சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவ்வளவு பெரிய பாரிய பிளவு நடைபெற்றது எவ்வாறு என்றும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.

போகட்டும். உங்கள் இந்த பதிவு இரு சமூகங்களிடையே உள்ள சில தவறான புரிந்து கொள்ளல்களை விலக்குமாயின் இதுபோன்ற பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் விளைவு அதுவாகவே இருக்கட்டும் என இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறேன்.

சகோதரர் நாகூர் இஸ்மாயில் கூறிய "எங்கள் நபி" என்ற வாசகத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்ன நினைப்பில் அவ்வார்த்தையை பிரயோகித்தார் எனத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் கேட்ட விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டதாலோ என்னமோ.

எனக்குத்தெரிந்த சில விளக்கங்களை கூறுகிறேன். கூறிக் கொள்ளும் அளவில் அதிக ஆன்மீக ஞானம் ஒன்றும் எனக்கில்லை. எனவே என் கருத்தை இறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏதாவது தவறுகள் இருக்குமாயின் அது என்னுடைய தவறான புரிந்து கொள்ளலினால் நிகழ்ந்ததாகவே இருக்கும்.

இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள் அனைவரும் சமமே. அவர்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வோ, ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர்களோ கிடையாது.

ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் கால சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல் இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பை கொடுத்துள்ளான். சிலருக்கு பறவை, விலங்குகள் பேசுவதை அறியும் ஞானம்(நபி சுலைமான்-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு ஆட்சி அதிகாரம்(நபி தாவூது-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு மந்திர தந்திர சக்தி(நபி மூஸா-அலைஹிஸ்ஸலாம்),சிலருக்கு இறைவனை நேரில் காணும் பாக்கியம்(நபி முஹம்மது-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு எவ்வித நோயையும் குணமாக்கும் சக்தி(நபி ஈஸா-அலைஹிஸ்ஸலாம்)என ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தில் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதனை வைத்துக் கொண்டு இவரை விட அவருக்கு அதிக சக்தி உள்ளது அவரைவிட இவருக்கு அதிக சக்தி உள்ளது என தரம் பிரிப்பது இஸ்லாத்தில் பாவமான காரியமாகும்.

இதனைக் குறித்து குர்ஆனில் "நபிமார்களிடையே எவ்வித வேற்றுமையும் இல்லை. அனைவரும் சமமானவர்களே" எனத் தெளிவாக வருகிறது.

இனி இதனை வைத்துக்கொண்டு இந்த சக்தியை இவருக்கு ஏன் இறைவன் கொடுத்தான் எனக் கேட்பது சரியல்ல. அந்தந்த கால மக்களின் சூழலுக்கேற்ப சில அற்புதங்களையும், சக்திகளையும் இறைவன் நபிமார்களுக்கு கொடுத்தது இறைவனின் மகத்துவத்தை புரியவைப்பதற்காகவே. இதில் யாருக்கு என்ன சிறப்பைக் கொடுப்பது என்பது இறைவனின் விருப்பத்தின் பாற் பட்டதாகும். தான் விரும்பியவர்களுக்கு விரும்பியது போல் செய்கிறான்.

அதனைக் குறித்து ஏன் இந்த சிறப்பைக் கொடுத்துள்ளதாக எங்காவது கூறியிருக்கின்றானா என்றால் இல்லை. அது எதனால் என்பதை இறைவன் தான் தெரிவிக்க வேண்டும். அவன் கூறாமல் வெறும் ஊகாபோகத்தை வைத்து நாமாக ஒரு முடிவுக்கு வர இயலாது.

நபி ஈஸா(அலை) அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் சில அற்புதங்களையும் சக்திகளையும் இறைவன் வழங்கியிருந்தான். ஆனால் அவர் மரணித்து திரும்ப வருவார் என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. எனவே அதனை ஒரு சிறப்பாகவும் இஸ்லாம் கூறவில்லை. ஆனால் அது இறைவனால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.

தான் அனுப்பிய தூதரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை கொலை செய்ய முயன்ற போது இறைவன் அவரை தன் புறத்தில் உயர்த்தி பாதுகாத்துக் கொண்டான். இவ்வுலகில் பிறந்தவர் அனைவரும் மரணித்தே ஆக வேண்டும் என் ற நியதிக்கேற்ப(இல்லையெனில் மரணத்தீர்ப்பு நாள் நிகழாது) உலகின் இறுதி நாட்களின் போது நபி ஈஸா(அலை) இவ்வுலகிற்கு திரும்ப வருவார்கள்(பிறப்பார்கள் அல்ல), வாழ்வார்கள், மரணிப்பார்கள். இதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

அன்புடன்
இறை நேசன்

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் கால சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல் இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பை கொடுத்துள்ளான். சிலருக்கு பறவை, விலங்குகள் பேசுவதை அறியும் ஞானம்(நபி சுலைமான்-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு ஆட்சி அதிகாரம்(நபி தாவூது-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு மந்திர தந்திர சக்தி(நபி மூஸா-அலைஹிஸ்ஸலாம்),சிலருக்கு இறைவனை நேரில் காணும் பாக்கியம்(நபி முஹம்மது-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு எவ்வித நோயையும் குணமாக்கும் சக்தி(நபி ஈஸா-அலைஹிஸ்ஸலாம்)என ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தில் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதனை வைத்துக் கொண்டு இவரை விட அவருக்கு அதிக சக்தி உள்ளது அவரைவிட இவருக்கு அதிக சக்தி உள்ளது என தரம் பிரிப்பது இஸ்லாத்தில் பாவமான காரியமாகும்.
//
ஏறத்தாழ என் வினாவுக்கு விடையளிக்கும் விளக்கம் .மிக்க நன்றி!

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
//தான் அனுப்பிய தூதரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை கொலை செய்ய முயன்ற போது இறைவன் அவரை தன் புறத்தில் உயர்த்தி பாதுகாத்துக் கொண்டான். இவ்வுலகில் பிறந்தவர் அனைவரும் மரணித்தே ஆக வேண்டும் என் ற நியதிக்கேற்ப(இல்லையெனில் மரணத்தீர்ப்பு நாள் நிகழாது) உலகின் இறுதி நாட்களின் போது நபி ஈஸா(அலை) இவ்வுலகிற்கு திரும்ப வருவார்கள்(பிறப்பார்கள் அல்ல), வாழ்வார்கள், மரணிப்பார்கள். இதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.//

தெளிவாக இருக்கிறது .இஸ்லாமின் நிலைப்பாடு குறித்து மிகத் தெளிவாக அறியத் தந்தமைக்கு நன்றி!

அப்துல் குத்தூஸ் said...

1. விளக்கமெல்லாம் ஒன்றும் இல்லைங்க ஜோ! இறைவன் தான் நாடியதை நாடியவாறு படைக்கின்றான். இதில் நமக்கான பாடம் என்னவென்றால்? இறைவன் இருக்கின்றான் என்பதை அறிவதே! இந்த அறிதலின் மூலம் இறைக்கட்டளையை இவ்வுலகில் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கே.
இறைவன் ஒவ்வொரு இறைத்தூதருக்கும், ஒவ்வொரு சிறப்பை தந்துள்ளான். அந்தச் சிறப்புக்களை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டுமேத் தவிர அதைக் கொண்டு இறைத்தூதர்களுக்குள் உயர்வு, தாழ்வு கற்பிக்காமல், அதில் நமக்காண பாடம் என்ன என்றுதான் ஆராய வேண்டும். அவருக்கு இல்லாதது இவருக்கு ஏன்? எனவும், இவருக்கு இல்லாதது அவருக்கு ஏன்? என்பன போன்ற ஆராய்ச்சி இன்னும் வேற்றுமையைத்தான் ஏற்படுத்தும். இதைத்தான் திருமறைக் குர்ஆன் கீழ் கண்டவாறு கூறுகின்றது:

(முஃமின்களே!)'நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்' என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 2:136)

2:253 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (அல்குர்ஆன் 2:253)

வேண்டுமென்றால் இப்படி எடுத்துக் கொள்ளலாம். காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை இறைவன் கொடுத்துள்ளான்.

2. ஏனென்றால் ஈஸா (அலை) அவர்கள் இன்னும் இறக்க வில்லை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம். அதே இறை நாட்டத்தால் எந்தச் சமுதாயத்திலிருந்து வெளியேறி இறைவனிடத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த ஈஸா (அலை) அவர்களின் சமுதாயத்திற்குள் ஏற்படும் போராட்டத்திற்கு தீர்வு காண நீதிமானாக திரும்பவும் அச்சமுதாயத்தினரிடத்தில் தோன்றுவார்கள். அவர்களுக்குள் நீதியை நிலை நாட்டுவார்கள். இக்கட்டம் தான் உலக இறுதிநாளுக்காண அடையாளமாகும்.
இதைத்தான் இறைவேதம் திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியும் நமக்கு கிழ்கண்டவாறு அறிவிக்கின்றது:


இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:157,158)

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன்(ரலி) நூல்: திர்மிதீ.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவருக்கு ஒவ்வொரு சிறப்பை கொடுக்கின்றான். அச்சிறப்பைப்பற்றி ஆராயும் பொழுது, அது அக்காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. அவன் போட்ட கணக்கிற்கு நாம் விளக்கம் அளிக்க முடியுமாங்க. இதற்கு பெயர்தான் விதின்னு நாங்க சொல்லிட்டு போயிட்டே இருப்போம். :).

ஜோ/Joe said...

சகோ அப்துல் குத்தூஸ்,
எதை நான் கேட்டேனோ அதை கொடுத்திருக்கிறீர்கள் .உங்கள் தெளிவான விளக்கத்திற்கும் ,மிக பொருத்தமான இறை வசனங்களை கொடுத்ததற்கும் மிக்க நன்றி!

nagoreismail said...

சகோதரர் ஜோ அவர்களே
நான் எங்கள் நபி என்று கூறியதற்கு ஈஸா நபி உங்கள் நபி முஹம்மது நபி தான் எங்ங்கள் நபி என்ற அர்த்தத்தில் அல்ல- அது இயல்பாக என்னிலிருந்து வந்து விட்ட வார்த்தை- நான் எப்பொழுதும் கூறும் வார்த்தை தான் அது- தவறாக இருந்தால் நீக்கி விட வேண்டுகிறேன் -
உங்களை நான் நல்ல மனிதராக தான் நான் பார்க்கிறேன் -
கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் நான் பார்க்கவில்லை ஆனால் நான் இஸ்லாம் என்ற அடிப்படையில் தான் பதிலளித்தேன் - வாதங்கள் செய்வது போல் தங்களிடம் பதிலளிக்க கூடாது தான் - மன்னிக்கவும்-
நான் விளக்க முற்பட்டது எல்லா சிறப்புகளையும் விட சிறப்பானது இறைவனை சந்திக்கும் பெரும் பேறு பெருவது- அந்த கௌரவம் பெருமானாருக்கு வழங்கப்பட்டது என்பது தான்.

ஜோ/Joe said...

சகோதரர் நாகூர் இஸ்மாயில்,
//அது இயல்பாக என்னிலிருந்து வந்து விட்ட வார்த்தை- நான் எப்பொழுதும் கூறும் வார்த்தை தான் அது- தவறாக இருந்தால் நீக்கி விட வேண்டுகிறேன் //
நீக்கிவிடுகிற அளவுக்கு அது பெரிய தவறொன்றும் இல்லை .அது இயல்பான உரிமையில் வந்ததென்பதை நானும் அறிவேன் .ஆனால் இஸ்லாம் கூறுகிறபடி நபிமார்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபடுவதாக எனக்கு தோன்றியதால் அதை உணர்த்த நினைத்தேன் .உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

வஹ்ஹாபி said...

\\சிலருக்கு இறைவனை நேரில் காணும் பாக்கியம்(நபி முஹம்மது-அலைஹிஸ்ஸலாம்),\\

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தனிச் சிறப்புகளில் தலையாயது அவர்கள் இறுதிநபி என்பதே!

இறைவனை அவர் கண்டார் என்பதும் அதுவே அவரின் தனிச் சிறப்பு என்பதும் தவறான தகவல்.

குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா, "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!" என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டே இரும். அது தன் இடத்தில் நிலைத்திருக்குமாயின், என்னை உம்மால் பார்க்கவியலும்!" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்தபோது, அம்மலை நொறுக்கித் தூள்-தூளானது. மூஸா மூர்ச்சையாகி,நெடுமரமாய் நிலத்தில் வீழ்ந்தார்... [007:143]

(இவ்வுலகின்) எவருடைய பார்வையும் அவனை அடைய முடியாது ... [006:103].


இங்குப் பின்னூட்டமிட்ட சகோதரர்களுக்கு,

இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கொடுக்க விழைகையில் சான்றுகளை முன்வைத்து எழுதுவோமாயின் சறுக்கலிலிருந்து தப்பலாம்.

பதிவுக்கு நன்றி ஜோ!

Anonymous said...

//இறைவனை அவர் கண்டார் என்பதும் அதுவே அவரின் தனிச் சிறப்பு என்பதும் தவறான தகவல்.//

தவறுக்கு வருந்துகிறேன் சகோ. வஹ்ஹாபி அவர்களே.

அதிக மார்க்க ஞானமின்மை இதுபோன்ற தவறுகளை என்னில் நிகழ்த்தி விடுகிறது.

சந்தித்ததற்கும், கண்டதற்கும் வார்த்தைகளில் உள்ள பெருத்த வித்தியாசத்தை உங்கள் பதில் கண்டபின்பே உணர்ந்து கொண்டேன்.

மேலும் அதுமட்டும் தான் அவர் தனிச்சிறப்பு என்ற அர்த்தத்திலும் கூறவில்லை. நான் கூறிய விதம் அந்த அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது.

விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

சகோ. ஜோ அவர்களுக்கு மிக்க நன்றி. அறியாத ஒரு விஷயத்தை உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.

அன்புடன்
இறை நேசன்

ஜோ/Joe said...

வஹ்ஹாபி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

குமரன் (Kumaran) said...

பதிவையும் நேற்று மாலை வரை இருந்த பின்னூட்டங்களையும் படித்தேன் ஜோ.

இன்று வந்த பின்னூட்டங்களை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

suvanappiriyan said...

நணபர் ஜோவுக்கு என்னுடைய பதில!

//ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?//


'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'

4 : 1 - குர்ஆன்

ஏசுவின் பிறப்பை விட எந்த தாய் தகப்பனும் இல்லாமல் சுட்ட களிமண்ணால் படைக்கப் பட்ட ஆதமின் படைப்பே ஆச்சரியப் படத் தக்கதாகும். அதிலும் அவரிலிருந்தே ஏவாளையும் படைத்தது அதைவிட ஆச்சரியத்திற்குரியதாகும். இவை எல்லாம் இறைவன் தன்னால் எதுவும் முடியும் என்று மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடுகள். அதே போல் உலகில் அவதரித்த தூதர்களிலிருந்து அனைத்து மக்களுக்கும் தந்தை என்ற சிறப்பான அந்தஸ்தையும் ஆதம் பெறுகிறார். இது போல்அந்தந்த காலத்தில் அவதரித்த தூதர்களுக்கு சில சிறப்புகளை இறைவன் வழங்குவான் இதை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளது. 'மற்ற தூதர்களை விட என்னை உயர்த்திப் பேச வேண்டாம்' என்ற தடையையும் முகமது நபி விதித்துள்ளார்.

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்டஇறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!.

61 : 6 - குர்ஆன்

'முகம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'

4 : 79 - குர்ஆன்.

இதன் மூலம் ஏசு நாதர் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் இறைத் தூதராக அனுப்பப் பட்டார். ஆனால் முகமது நபியோ உலக முடிவு நாள் வரை மனித குலத்துக்கு தூதராக அனுப்பப் பட்டுள்ளார். உலக முடிவு நாளன்று திரும்ப பூமிக்கு வரப் போகும் ஏசு நாதரும் முகமது நபியைப் பின் பற்றி அவரை தூதராக ஏற்றுத்தான் இறக்க இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் 'அவரை விட இவர் சிறந்தவர்' என்ற கருத்தும் அடிப் பட்டுப் போகிறது.

'எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது இறைவனுக்குத தகுதியானதன்று. அவன் தூயவன்.'

19 : 35 - குர்ஆன்

இறைவனின் மகன் ஏசு என்று எண்ணுவது இறைவனின் தகுதிக்கு இழிவு என்று இறைவனே பிரகடனப் படுத்துகிறான்.

'தன் முகத்தை இறைவனுக்குப் பணியச் செய்து நல்லறம் செய்து உண்மை வழியில் நின்ற இப்றாகீமின் மார்க்கத்தைப் பின் பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? இறைவன் இப்றாகீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.'

4 : 125 - குர்ஆன்

ஏசு என்னுடைய மகன் அல்ல என்று மறுக்கும் இறைவன் ஆபரஹாம் என்னுடைய உற்ற தோழர் என்று அழைக்கிறான். இதனால் ஏசுவை தாழ்த்தியும் ஆப்ரஹாமை உயர்த்தியும் பேசலாமா என்றால் அவ்வாறு பேசுவது தவறு என்று இஸ்லாம் கண்டிக்கிறது.

'இத்தூதர்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு பல தகுதிகளை உயர்த்தியிருக்கிறான்.'

2 : 253 - குர்ஆன்

இதன் மூலம் சில இறைத் தூதர்களுக்கு மற்ற தூதர்களை விட சிறப்புகளை அளித்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.தூதர் சாலமனுக்கு கொடுத்த ஆட்சி அதிகாரம்,மோசேயுடன் இறைவன் நேரிடையாகப் பேசியது, ஏசுநாதர் இன்றும் உயிருடன் இருப்பது, முகமது நபி இறுதி நபியாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இருப்பது, ஆப்ரஹாமை தன் தோழராக்கிக் கொண்டது போன்ற சிறப்புகளைக் கூறலாம். இந்த சிறப்புகளை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்ற தூதரைத் தாழ்த்தியும் விவாதிப்பது பாவம் என்று குர்ஆன் பின் வருமாறு போதிக்கிறது.

'இறைவனையும், எங்களுக்கு அருளப் பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப் பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப் பட்டதையும், ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் அவனுக்கே நாங்கள் கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுங்கள்.

2 : 136 - குர்ஆன்.

இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இறைவன் தடுத்துள்ளதால் அந்த தூதர்கள் எதைச் சொன்னார்களோ அதன்படி நடந்து இறைவனின் அன்பை நாம் அனைவரும் பெறுவதற்கு முயற்ச்சிப்போமாக.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

ஜோ/Joe said...

சுவனப்பிரியன்,
உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி!

நல்லடியார் said...

//இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவருக்கு ஒவ்வொரு சிறப்பை கொடுக்கின்றான். அச்சிறப்பைப்பற்றி ஆராயும் பொழுது, அது அக்காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. அவன் போட்ட கணக்கிற்கு நாம் விளக்கம் அளிக்க முடியுமாங்க.// - அப்துல் குத்தூஸ்

சகோதரர் ஜோ,

உங்களின் கேள்வியான "இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?" என்பதற்கு சகோதரர் அப்துல் குத்தூஸின் மேற்குறிப்பிட்ட விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆதம் நபி (அலை..) முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை மனிதர்களுக்கு கொண்டு வந்தவை ஓரிரைக் கொள்கையே. அவ்வாறு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக மக்களிடம் அதை எடுத்துச் செல்லும் போது, சில அற்புதங்களோடு எடுத்துச் சொல்ல இறைவன் அருளினான்.

மூஸா (அலை...) அவர்கள் காலத்தில் சூன்யம் செய்பவர்களின் ஆதிக்கம் மிகைத்திருந்த போது, அத்தகைய சூனியக் காரர்களுக்கு சவாலாக அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். ஈஸா (அலை...) அவர்களின் காலத்தில் மருத்துவ அற்புதங்கள் மேலோங்கி இருந்தன. இயேசுவின் பிறப்பே மருத்துவ அற்புதங்களுக்கு சவாலாக இருந்ததோடு, இயேசுவுக்கு வேறு சில நோய் தீர்க்கும் அற்புதங்களையும் இறைவன் அருளினான். அதேபோல் இறுதி நபியாக வந்த முஹம்மது நபியின் காலத்தில் கவிஞர்கள், இலக்கிய்வாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி ஓரிரைக் கொள்கை பின் தள்ளப்பட்டபோது, அன்றைய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் வாயடைக்கும் விதமாக எழுதப்படிக்கத் தெரியாத அச்சமூகத்தவரால் ந்ன்கு அறியப்பட்டிருந்த முஹம்மது நபி மூலம் இலக்கியச் செழுமையும், கவித்திறனும் கொண்ட திருக்குர்ஆன் எனும் அற்புத வாழ்க்கை நெறியை உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் அருளினான். இதையே முஹம்மது நபி தனக்கு வழங்கப் பட்ட அற்புதமாகச் சொன்னார்கள்.

ஆக, யாருக்கு எந்த அற்புதங்களை வழங்கி மக்களை எம்முறையில் நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவன் நாடி இருந்தானோ அதன்படியே ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களோடோ அல்லது இல்லாமலோ ஓரிரைக் கொள்கையை கொண்டு செல்லும் கடமை இருந்தது.

ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரையிலான நபிமார்கள் இறைவனால் அனுப்பட்ட தூதுவர்கள் என்று நம்புவது முஸ்லிம்களின் தலையாய கடமைகளுல் ஒன்று. ஆக, நம் நபிமார்கள் அனைவரும் சிறப்பிற்குறியவர்களே!

பி.கு: மதம் சார்ந்த ஐயங்களை தீர்க்கும் விதமாக பரஸ்பர கருத்துப் பரிமாற்ற பதிவெழுதுவது எப்படி என்று உங்களிடம் டியூசன் எடுக்க வேண்டுமய்யா!

அன்புடன்

அபூ முஹை said...

அன்பின் சகோதரர் ஜோ அவர்களுக்கு!

''இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)'' என்ற தலைப்பில் இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் சிறப்புக்கு காரணம் என்ன? என்று முஸ்லிம்களிடம் கேள்வியை வைத்தீர்கள்.

அதற்கான திருக்குர்ஆன் விளக்கத்தை ''நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?'' என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். எழுதியவற்றில் சந்தேகமிருந்தால் மேலும் கேள்விகளை எழுப்புங்கள்!

அதோடு பைபிள் பற்றி என் கேள்விகளையும் வைத்துள்ளேன் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

ஜோ/Joe said...

நல்லடியார்,
உங்கள் விளக்கத்துக்கும் ,இனிய வார்த்தைகளுக்கும் நன்றி!

அபூ முஹை,
தனிப்பதிவிட்டு விளக்கியதற்கு மிக்க நன்றி! உங்கள் பதிவில் என் பதில்களை கொடுத்திருக்கிறேன்.

ஜோ/Joe said...

குமரன்,
வருகைக்கு நன்றி!
//இன்று வந்த பின்னூட்டங்களை இனிமேல் தான் படிக்கவேண்டும்.//

இப்போது படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

nagoreismail said...

உண்ர்ச்சி வசப்பட்ட அஸ்லம் அவர்களுக்கும் 'எங்கள் நபி' என்றூ எழுதியிருப்பதை பெரிது படுத்த வேண்டாம் என்ற இறைநேசனுக்கு நன்றி கலந்த ரமலான் வாழ்த்துக்கள்
- நாகூர் இஸ்மாயில்

தருமி said...

ஜோ,
உங்களுக்கு இந்தக் 'கேள்விகளின் காலம்' ஒரு நல்ல ஆரம்பம் என்றே நினைக்கின்றேன். இந்த ஆரம்பத்தின் நீட்சியாக எனது இண்டாம் கட்டளை உங்களுக்கு விரைவில் 'சித்திக்க' என் வாழ்த்துக்கள். :)

தருமி said...

நிறைய இஸ்லாமிய நண்பர்கள் 'இங்கே' இருப்பதால் எனக்குள்ள ஐயம் ஒன்று: இஸ்லாமிய வழக்கம் பற்றியது.

இறைவனைக் குறிக்கும்போதெல்லாம் ஆண்பால் ஒருமையைக் கைக்கொள்ளுவதும், நபி(களைப்) பற்றிக் குறிக்கும்போதெல்லாம் ஆண்பால் மரியாதைப் பன்மையையும் பயன்படுத்துவது ஏன்? அதிலும், இறைவனைக் குறிக்க எப்போதும் ஆண்பால் ஒருமையைக் கையாளுவது ஏன்? அராபிய மொழியிலிருந்து வந்த மொழி மாற்றத்தாலா அல்லது வேறு ஏதாவது காரணமா?

Unknown said...

இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) என்ற இந்த கடற்புரத்தான் ஜோவின் பதிவில் மத நம்பிக்கைகள் கொண்ட நண்பர்கள் கருத்துகளுக்குள் இருக்கும் சந்தேகம்/கேள்வி/விளக்கங்கள் போன்றவற்றை அருமையாக பரிமாற்றம் செய்து கொள்கிறீர்கள் அல்லது அருமையாக விவாதம் செய்கிறீர்கள் ....மகிழ்ச்சி!


இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

நீங்கள் நம்பும் ஒரு இறைவனை நம்பாமல் இருப்பவர்களை "நிராகரித்தோர்" (காஃபிர்) என்று சொல்கிறீர்கள் அதுவும் சரியே!

ஆதரவு/ஏற்பு என்ற ஒன்று இருந்தால் எதிர்ப்பு/மறுப்பு என்ற ஒன்றும் இருக்கும்.அதற்கு அவர்கள் ஒரு பெயர் கொடுத்துள்ளர்கள் அதுவும் பிரச்சனையில்லை.



அப்துல் குத்தூஸ் said...
//ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; //

//மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. //


ஆனால் நிராகரித்த காரணத்திற்காக அல்லது ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக "..மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை...." என்று சொல்வது கடவுளின் வார்த்தையாகவே இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.

எந்த மதத்தைச் சார்ந்தாலும்/சாராவிட்டாலும் கடவுளை நம்பினாலும்/நம்பாவிட்டாலும் நல்லவன் நல்லவனே. அது போல் கெட்டவன் கெட்டவனே.


நல்லது கெட்டதை ஆராயத் தெரியாத ,சும்மா மூச்சுக் காற்றாலேயே கொலை செய்பவர் எப்படி கடவுளாக/தூதனாக இருக்க முடியும்? அது எந்த மதமாக இருந்தாலும்.


கடவுளை ஏற்காதவன் கெட்டவனாகத்தான் இருக்க வேண்டுமா? அல்லது நீங்கள் நம்பும் (சார்ந்துள்ள) மதத்தை நம்பாதவன் (காஃபிர்) அனைவரும் அயோக்கியர்களா? என்ன அய்யா சொல்கிறீர்கள்?


"தீர்ப்பு நாளில் மனிதன் எந்த மத்தவனாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் இன்றி அவன் செய்த நல்லது/கெட்டது நன்மை/தீமை அடிப்படையில் (உங்கள்) இறைவன் தீர்ப்பு வழங்குவார் என்று சொல்லுங்கள்" அதுதான் கடவுளுக்கு அழகு.


CBSE பாடத்திட்டத்தில் படிக்காதவன் எல்லாம் முட்டாள் என்று சொல்வதும்,எந்த பாடத்திட்டத்திலும் படிக்காதவன் எல்லாம் அயோக்கியன் என்றும் Generalize செய்வது எப்படித் தவறோ அதுபோல்தான் நீங்கள் சொல்வதும் தவறு.


வருத்தத்துடன் :-(

ஜோ,
விவாதத்தை திசை திருப்ப இதை நான் போடவில்லை.Generalize செய்து நிராகரித்தோர் (காஃபிர்) அனைவரையும் குற்றவாளிகளாக ஆக்கும் வரிகளுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்யவே இந்தப் பின்னூட்டம்.திசை திருப்பும் என்று கருதினால வெளியிட வேண்டாம்.

nagoreismail said...

தருமி ஐயா அவர்களுக்கு, இஸ்லாம் பற்றிய தங்களது கேள்விகளுக்கு பதில்களை அனுப்ப நிறைய நேரங்களும் தகவல்களும் தேவைப்படுவதால் எழுத முடியவில்லை, இறைவனை குறிக்க அரபியில் 'அல்லாஹ்' என்று குறிப்பர்கள். ஆனால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை ஆண் பாலையும் குறிக்காது பெண் பாலையும் குறிக்காது அல்லது 'அலி'யையும் குறிக்காது அது தனித்துவம் பெற்ற வார்த்தை என்று தான் கூற வேண்டும். , தமிழில் 'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு நிகரான வார்த்தை எதுவென்று தெரியவில்லை. ஏனெனில், 'கடவுள்' என்ற வார்த்தைக்கு கடவுளர் என்ற பன்மை பதம் உண்டு, இறைவன் கூட ஆண் பால் தான் இறைவி என்பது பெண் பால். ஆங்கிலத்தில் கூட GOD என்பது ஆண் பால் GODDESS என்பது பெண்பால். உண்மைபில் வார்த்தை பற்றாக்குறையினால் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனால் தான் சூஃபி எனும் ஞானிகள் வார்த்தைகளை கட்டிக் கொண்டு மாரடிப்பதில்லை இறைவனது செய்திகளை பரிமாறிக் கொள்ள இதயமே சிறந்த வழியாகும் 'ஸீனா-ப- ஸீனா' அதாவது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்பதாகும்.

ஜோ/Joe said...

தருமி,
உங்கள் இரண்டாம் கட்டளை
//You open your eyes. அவர் சொன்னார்..இவர் சொன்னாரென்பதை விடவும் நாமே கொஞ்சம் யோசித்தல் தவறில்லையே.//

கண்டிப்பாக தவறில்லை .நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .நான் இப்ப தான் யார் யார் என்ன சொன்னாங்கண்ணு தெரிஞ்சுக்குற கட்டத்துல இருக்கேன்..ஹி..ஹி

மனதின் ஓசை said...

சகோதரர் ஜோ அவர்களே...
உங்கள் பதிவை அடிக்கடி படிப்பவன்.. நீங்கள் விவாதத்திற்கு களம் அமைத்துக்கொடுக்கும் விதம் அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்...நான் அதிகம் தெரிந்தவன் இல்லை... (எனக்கு தெரிந்த சிறு விவரங்களின்படி) "இஸ்லாமும் கிருத்துவமும் நிறைய கருத்துக்களில் ஒன்றுபட்டாலும் எப்படி விலகியே நிற்கின்றன" என அதிசயிப்பவன்...அத்ற்கு முக்கிய காரணம் இயேசுவை வழிபடுவதில் வேற்றுமை இருப்பதுதானோ என கருதுகிறேன்..
என்னுடைய முக்கிய ஐயம் : "இயேசு எங்கேயாவது தான் கடவுள் என்றோ அல்லது தன்னை வனங்குங்கள் என்றோ நேரடியாக கூறி இருக்கிறாரா?"

இது இந்த பதிவை திசை திருப்பும் என கருதுகிறேன்.. அதனால் வெளியிடுவதை தாங்களே தீர்மானியுங்கள்.. தனிப்பதிவாக போட்டாலும் சம்மதம்..தனி மடலில் பதில் சொன்னாலும் சரி..

இது என்னுள் சிலநாட்களாக உள்ள கேள்வி.. கேட்க கூடிய சூழல் இங்கே நிலவியதால் கேட்கிறேன்.. நான் இதுவரை மனிதரிடத்தில் மதம் பார்த்தது இல்லை..பழகும் விதம் மட்டுமே பார்த்து இருக்கிறேன்..

ஜோ/Joe said...

மனதின் ஓசை,
அருமையான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறீர்கள் .ஆனால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுகிற அளவுக்கு எனக்கு மத அறிவோ வயதோ இல்லை .எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது .இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.

யூத ,கிறிஸ்தவ ,இஸ்லாம் மதங்கள் ஒரே வழி வந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன் .மூவரும் ஒரே இறைவனைத் தான் வணங்குகின்றனர் .யார் ஆபிரகாமின் கடவுளோ ,யார் மோயீசனின் கடவுளோ அவரே இந்த மூன்று மதத்தவரின் கடவுள் .

1.ஆதாமிலிருந்து ,ஆபிரகாம்,மோயீசன் வழி வந்த இறைவாக்கினர்களை யூதர்கள் நம்புகின்றனர் .இவர்களுக்கு மேலாக மெசியா அல்லது இரட்சகர் ஒருவரை இறைவன் வாக்களித்திருப்பதாக யூதர்கள் நம்புகின்றனர் .அவர் தான் இயேசு என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் .ஆனால் இயேசுவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .வாக்களிக்கபட்ட மெசியா வருவார் என அவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர் .

2.கிறிஸ்தவர்கள் யூதர்கள் நம்புகின்ற இறைவாக்கினர்களை நம்புவதோடு ,இயேசுவை வாக்களிக்கபட்ட மெசியாவாக நம்புகின்றனர் .இறைவன் தன் குமாரனை இந்த உலகுக்கு மனித உருவில் அனுப்பியதாகவும் ,அதனாலேயே அவர் இறையருளால் ஒரு கன்னியின் கருவில் உருவாகி பிறந்ததாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் .இயேசு தன்னைத் தானே இறைவனின் மகனாக எங்கும் சொல்லிக்கொண்டதில்லை .ஆனால் இயேசு இறைவனின் குமாரன் என்பது பைபிளின் சில இடங்களில் குறிப்பிடபட்டிருக்கிறது
--------------------------------------------------
"ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,

தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; "
--------------------------------------------------------

இது போக பைபிள் முழுவது இயேசு இறைவனை 'தந்தை' என்றே குறிப்பிடுகிறார் .கிறிஸ்தவர்கள் ஒரே கடவுளை வணங்கினாலும் கடவுள் தமத்திரித்துவமாக (Trinity) இருப்பதாக நம்புகின்றனர் .பிதா ,சுதன் ,பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒரே கடவுளின் மூன்று நிலைகளாக நம்புகின்றனர் .இதில் சுதன் என்பது இயேசுவை குறிக்கிறது .அவரே மனிதனாக இவ்வுலகத்துக்கு இயேசுவாக வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

3.இஸ்லாமை பொறுத்தவரை அவர்களும் அனைத்து இறைவாக்கினர்களையும் ,அதோடு இயேசுவை ஒரு இறைவாக்கினராகவும் ,இறுதியாக முகமது அவர்களை இறுதி இறைவாக்கினராகவும் நம்புகின்றனர் .

யூதர்கள் முற்றிலும் புறக்கணித்த ,கிறிஸ்தவர்கள் தேவகுமாரனாக ஏற்றுக்கொண்ட இயேசுவை முஸ்லீம்கள் இறைவாக்கினர்களில் ஒருவராக நம்புகிறார்கள் (இறைமகனாக அல்ல) .இயேசு கன்னியிடம் கருத்தாங்கி பிறந்ததை நம்பும் முஸ்லீம்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புவதை ஏற்கவில்லை .இயேசு சிலுவையில் அறையப்படாமல் இறைவன் அவரை காத்து ,உயிரோடு வானகம் எடுத்துக்கொண்டதாகவும் ,இன்றும் அவர் மரணிகாமலே வாழ்வதாகவும் ,உலகின் கடைசி நாளில் அவர் மீண்டும் உலகுக்கு வந்து வாழ்ந்து மரணிப்பார் எனவும் முஸ்லீம்கள் நம்புகின்றனர் .இது தான் வேறுபாடு என நான் நினைக்கிறேன்.

முகமது நபியவர்கள் இஸ்லாம் மத கோட்பாடுகளை வரையறுத்து அதை ஒரு மதமாக நிறுவியது போல இயேசு எந்த மதத்தையும் நிறுவவில்லை .இயேசு இறை வார்த்தைகளை அறிவித்தாரே தவிர கிறிஸ்தவ மதத்தை அவர் தோற்றுவிக்கவில்லை .அவரை நம்பியவர்கள் இயேசு உயிர்த்து விண்ணேறியபின் ,இயேசுவை பின்பற்றியவர்கள் கிறிஸ்துவர்கள் என அறியப்பட்டார்கள் .அது ஒரு திருச்சபையாக மாறியது .

ரவி said...

பதிவுக்கு நன்றி ஜோ..

ஜோ/Joe said...

கல்வெட்டு,
உங்கள் வருத்தம் நியாயமானது .அதற்கு ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா என காத்திருப்போமே.

ஜோ/Joe said...

பகுத்தறிவாளன்,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் .நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.

ஜோ/Joe said...

செந்தழல் ரவி,
உங்கள் வருகைக்கு நன்றி!

மனதின் ஓசை said...

ஜோ,
உடனடியாக நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது...

தங்களின் நீண்ட விளக்கத்துக்கு நன்றி. ஒரு சில விசயங்களை புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி.


//இயேசு தன்னைத் தானே இறைவனின் மகனாக எங்கும் சொல்லிக்கொண்டதில்லை//

அது போலவே அவர் தன்னை வணங்க சொல்லி எங்கும் சொல்ல வில்லை என்பது போலவும் தோன்றுகிறது... அப்படி இருக்க அவரை வணங்குவது சரியா என்பது எனக்கு புரிய வில்லை..

எனிவே.. எனக்கு உங்களின் இந்த வரிகள் மிக பிடித்து இருக்கின்றன.
//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
என்னை யொசிக்க வைக்கின்றன..

நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாறா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு. எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு.
எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..

மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?
(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்னிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..

ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின்
விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.

சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் தீயினால் எரித்து விடும்.

*******

பதில் நீண்டதாக போய்விட்டது.. இந்த ப்ன்னூட்டத்தையே சிறிது மாற்றம் செய்து ஒரு தனி பதிவாக பொடலாம் என்றும் தோன்றுகிறது. நன்றி.

மனதின் ஓசை said...

ஜோ,

மேலே சொன்ன ப்ன்னூட்டத்தை சற்று மாற்றி ஒரு பதிவாக பொட்டு இருக்கிறேன்..

http://manathinoosai.blogspot.com/2006/10/blog-post_07.html

பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லவும்.நன்றி

தமிழ் செல்வன் said...

நல்ல பதிவு.

மதங்களுக்கிடையில் திறந்த கருத்துப் பரிமாற்றங்கள் இக்காலகட்டத்தின் மிக அவசியமான ஒன்றாகும். அவை சமூகத்தில் இணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும்.

நல்ல தொடக்கமிட்டுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

தமிழ் செல்வன்

Anonymous said...

மிக நல்ல பதிவு !

Anonymous said...

HAI THIS NICE CONVERSATION,PLZ CAN YOU START THIS TYPE BIBLICAL MATTER IN FUTURE.THIS IS IS MY BLOG
http://www.clementraj.blogspot.com

அஞ்சா சிங்கம் said...

ஹாய் ஜோ
நான் உங்கள் தளத்திற்கு புதியவன் .
நல்ல பதிவு .
http://www.torrentdownloads.net/torrent/249692/Zeitgeist+Remastered+Edition+2007+DVDRip+XviD
இது நீங்க அவசியம் காணவேண்டிய படம் சிரமம் பார்க்காமல் பார்க்கவும் .
நான் இதை பதிவிடலாம் என்று இருக்கிறேன் . அனுபவம் உள்ள நீங்கள் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
என்று நம்புகிறேன். பதிலுக்கு காத்திருக்கிறேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives