தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு
வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்
அந்த நாள் (1954) 
இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .
ரத்தக்கண்ணீர் (1954) 
என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .
கர்ணன் (1964) 
பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)
தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாயகன் (1987) 
விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.
தேவர் மகன் (1992) 
நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.
மகாநதி (1993) 
கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.
சதி லீலாவதி (1995) 
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.
குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .
அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.
குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.