Monday, August 15, 2005

தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும்

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

39 comments:

ஜோ/Joe said...

LLdasu,
I have shorten the title as per your idea..Hope it works..Thanks for your suggesion..I am unable to write in tamil,since I am in interner parlour(outside singapore)

ஜோ/Joe said...

vishytheking said...
hi joe,

which year did you study in St. joseph's.. i was in New hostel between 84-87.
i have seen whatever you have mentioned with my friends too.

i know of a friend who changed church as they were not in good terms with the father.. i also know somebody who was looking for a christian udayaar bride ..

nice article.

anbudan vichu
neyvelivichu.blogspot.com

11:12 PM, August 15, 2005
ஜோ said...
Vichu,
Thanks for your comments.
I have studied there from 1988-93..Stayed both in SH hostel and New Hostel

11:50 PM, August 15, 2005
Kuzhali said...
நானும் நீண்ட நாட்கள் பாராதிராசா படம் போல்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், என் நண்பரின் சகோதரி திருமணத்தில் தான் உண்மை தெரிந்தது.

நன்றி

11:55 PM, August 15, 2005
Dharumi said...
hi Joe,
இந்தக் கத்தோலிக்கர்கள் பொட்டு வைப்பதும், பிரிவினைச்சபை மக்கள் பொட்டு வைக்காமல் இருப்பதற்கும் உள்ள சமூகக்காரணங்களைப்
பற்றியும், மற்றும் பல பழக்க வழக்கங்களைப்பற்றியும் எழுதலாமா வேண்டாமாவென ஒரு சிந்தனை ரொம்ப நாளாக. நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள்; தொடருங்கள். i will play second fiddle, if need be. right?

12:25 AM, August 16, 2005

ஜோ/Joe said...

இரண்டு பதிவுகள் இருந்ததால் ,ஒன்றை நீக்கி விட்டேன் .அதில் இடப்பட்ட பின்னூட்டங்களை இங்கே இட்டிருக்கிறேன்

-L-L-D-a-s-u said...

Nice post ..aanaa en oru pathivukku aappu vachchuttiinga.. ;)

ஜோ/Joe said...

தாஸ்,
அது என்ன பதிவு?

ஜோ/Joe said...

தருமி,
CSI தமிழர்கள் பொட்டு வைப்பதில்லயா? எங்கள் ஊரில் நான் பார்த்திருக்கிறேன்.

தருமி said...

இருக்காதே...கொஞ்சம் நல்லா பாத்துச்சொல்லுங்களேன்..

ஜோ/Joe said...

தருமி,
பொட்டு வைத்திருக்கும் CSI கிறிஸ்தவர் சிலரை தனிப்பட்ட விதத்தில் எனக்கு தெரியும் .ஆனால் பொதுவாக தெரியாது. கொஞ்சம் விளக்குவீர்களா ? பொட்டு வைக்ககூடாதென்று மதத்தில் சொல்லியிருக்குறதா என்ன?

தருமி said...

என்ன ஜோ இப்படிக் கேட்டுட்டீங்க! நி
றைய CSI-catholic தம்பதிகள் இந்தப் பொட்டு விவகாரத்தில் விவாகரத்துவரை போயிருக்கிறார்கள், தெரியுமா?
"பொட்டு வைக்ககூடாதென்று மதத்தில் சொல்லியிருக்குறதா என்ன? " - மதமெல்லாம் அப்படிச் சொல்லவில்லை. சரி, வேண்டாமென்று நினைத்த விஷயத்தை எழுதிட்டாப் போச்சு

-L-L-D-a-s-u said...

தலைப்பை குறைத்துவிட்டீரா.. இங்கும் 'சினிமா' தான் பிரச்சினைபோல..

ஒன்னுமில்ல நான் தொடலாம்னு நினைச்ச டாப்பிக் ..
நீங்க தெளிவாகவே எழுதிருக்கீங்க ..

கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் குழப்பும் மக்கள் ..
ஒரு சின்ன ஆராய்ச்சிக்கூட செய்யாமல் படம் எடுக்கும் இயக்குனர்கள்..
ம்ம்ம்ம்ம்.

தருமி சார்.. உங்கள் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள ஆசை ..

Anonymous said...

Nice post Jo. My husband is a catholic too and I wore the koorai pudavai (Andhra style cos my husband is from that place) etc. for the wedding. In fact, my MIL is very particular about pottu, thaali, poo, metti etc and I have seen all their family like that. Pongal pathi sonneengale, thats true. Aanal ennudaya sila thozhigal pongal dhinathandru engal veettirku vandhu sappida mattern endru solli vittargal (Suriyanukku padayalaga vaithadhal!). Adhan piragu enga amma avargalukku thaniyaga samaithargal (Varutham ellam onnum illai...avanga avanga nambikkai appadi, avvalavudhan). Nalla padhivu, en kanavarukk padithu kattugiren.

Anonymous said...

//எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.
//

எங்க ஊரில் கல்யாண பூசையின் போது பொட்டு வைப்பதில்லை. வீட்டில் ஆரத்தி எடுத்தவுடன் வைப்பார்கள். "குஷி"யில் ஒரளவிற்கு சரியாக காட்சிகள் அமைந்திருக்கும்.

முக்கால் அங்கியுடன் (பாண்ட் தெரியும் மாதிரி) எப்பொழுதும் பைபிளுடன் உலாவும் பாதிரியார்களைப் பற்றி சொல்லவில்லையே !

:)

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு ஜோ.

தைப்பொங்கல் விசயத்தில் கத்தோலிக்கர் அப்பண்டிகையைக் கொண்டாடுவதை வியப்பாகப் பார்த்த பலரைக் கண்டிருக்கிறேன். அதுவும் தைப்பொங்கல் நாளை ஒரு திருநாளாக அதற்கென்று சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுத்து தேவாலயத்திலேயே பொங்கிக் கொண்டாடுவதைப் பலர் நம்பமுடியாமல் பார்க்கின்றனர்.

என்ன?.. சாணியை உருட்டிப் பிள்ளையார் பிடித்துவைப்பதும், சுற்றிநின்று குலையிடுவதும் (ஈழத்தில் குலையிடுவதில்லை) தான் இல்லை. மற்றும்படி பாரம்பரியப் பொங்கல்தான்.

இத்தகைய விழாக்களில் மதங்களைச் சம்பந்தப்படுத்தாமலிருப்பது நல்லதுதான். ஈழத்தில் தீபாவளிக்கு முக்கியத்துவமில்லை. தைப்பொங்கல் தான் எல்லோருக்கும் சிறப்புப் பண்டிகை. இன்று தீபாவளி தமிழர் பண்டிகையன்று என்ற கருத்து ஈழத்தில் ஆழமாகிவருகிறது கண்கூடு.

G.Ragavan said...

நான் வலைப்பூவில் படித்து மகிழ்ந்த அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று. மதம் வேறு. தமிழர் பழக்க வழக்கம் வேறு என்று புரிந்து கொண்டால் தமிழராக வாழ்வதில் சிரமமேயில்லை. இதற்காக நான் எல்லாரும் பொட்டு வைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. மதங்களை மீறிய பழக்கங்கள் தமிழில் உண்டு. அவைகளை விட்டு விலகுவது யாருக்கும் ஒவ்வாது.

துளசி கோபால் said...

ஜோ,

அருமையான பதிவு. எனக்குத் தெரிஞ்ச எல்லாக் கத்தோலிக்கரும் பொட்டு வச்சுக்கறவங்கதான். அதிலும் இங்கே இருக்கற மலையாளிகள் எல்லோரும் கத்தோலிக்கர்ங்கதான். ஓணம் கொண்டாட்டத்தில் எல்லோரும் சந்தனம் நெத்தியில் வச்சுக்குவாங்க. இந்து யாரு, கிறீஸ்டியன் யாருன்னே தெரியாது!

உண்மைக்குமே, எந்த மதமாவது பொட்டு வைக்காதேன்னு சொல்லுதா?

அப்புறம், கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினரெந்தவிதமான ஆபரணமும் அணியாம, எப்பவுமே வெள்ளைச்சீலை உடுத்தறாங்களே அதுபத்திக் கொஞ்சம் விளக்கம்தாங்களேன் நீங்களும் நம்மதருமியுமாய்.

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

Hi Joe:
nice post.

Dan Brown has mentioned in "DaVinci Code" (leave alone the controversy that the book has stirred) that catholics did incorporate some aspects of the locally popular religions into christianity so as to make the locals identify himself with his/her newfound religion.
This could also have been the reason why several catholic churches in Ramnad districts do have a fastival like hindu's do with procession, fireworks, pongal et al.
Cheers
Draj

ஜோ/Joe said...

கருத்து சொன்ன அனைவருக்கும் (LLdasu,Anonymous,ரவியா,வசந்தன்,G.ராகவன்,துளசி கோபால்,Draj)நன்றி.

ரவியா,
// "குஷி"யில் ஒரளவிற்கு சரியாக காட்சிகள் அமைந்திருக்கும்.//
சூர்யா கிறிஸ்தவர் என்பதால் இருக்கலாம்.

//முக்கால் அங்கியுடன் (பாண்ட் தெரியும் மாதிரி) எப்பொழுதும் பைபிளுடன் உலாவும் பாதிரியார்களைப் பற்றி சொல்லவில்லையே !//
ஹி..ஹி.."GOD bless you my child"..இதெல்லாம் பெரும்பாலும் சினிமாவில் மட்டும் தான்.

ராகவன்,
//இதற்காக நான் எல்லாரும் பொட்டு வைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. //
பொட்டு வைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை .தருமி அவர்கள் பதில் தரக்கூடும் .பொட்டு வைக்காமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் வைக்கக்கூடாது என்பதற்கு மத ரீதியாக என்ன காரணமும் எனக்கு தெரியவில்லை.

துளசி கோபால்,
//உண்மைக்குமே, எந்த மதமாவது பொட்டு வைக்காதேன்னு சொல்லுதா?//
இதே கேள்விய நானும் கேக்குறேன் துளசி அக்கா..தருமி சொல்லுவார்ன்னு நினைக்குறேன்.

//அப்புறம், கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினரெந்தவிதமான ஆபரணமும் அணியாம, எப்பவுமே வெள்ளைச்சீலை உடுத்தறாங்களே அதுபத்திக் கொஞ்சம் விளக்கம்தாங்களேன் நீங்களும் நம்மதருமியுமாய்.//
எனக்கும் காரணம் தெரியவில்லை (கத்தோலிக்கர் அப்படி செய்வதில்லை என்பதால்) .

Draj

//This could also have been the reason why several catholic churches in Ramnad districts do have a fastival like hindu's do with procession, fireworks, pongal et al. //
ராமநாதபுரத்தில் மட்டுமல்ல .தமிழகம் முழுவதும் இப்படித்தான் ,எங்கள் ஊரிலும் தேர்பவனி ,நாதஸ்வரம் ,வாணவேடிக்கை எல்லாம் உண்டு.

ஜோ/Joe said...

ரவியா,
//எங்க ஊரில் கல்யாண பூசையின் போது பொட்டு வைப்பதில்லை. வீட்டில் ஆரத்தி எடுத்தவுடன் வைப்பார்கள்.//
இருக்கலாம் .இதற்கு காரணம் என்னால் ஊகிக்க முடிகிறது .திருமண அலங்காரங்கள் செய்து திருமணத்துக்கு புறப்படும் முன்னர் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் ஒவ்வொருவராக மணமகள் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீர்வதிப்பது வழக்கம் .அப்போது பொட்டு வைப்பதால் அழிந்து விடும் என்பதால் சிலர் வைக்காமல் இருக்கலாம் .மற்றபடி வைக்கக்கூடாது என்று எதுவுமில்லை என நினைக்கிறேன்

தருமி said...

ஐயா ஜோ,
எவ்வளவு பெரிய விஷயம் இந்த பொட்டு விஷயம்!

சரி..சரி..மக்கள் எல்லோரும் இங்கே வாங்க

G.Ragavan said...

// பொட்டு வைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை .தருமி அவர்கள் பதில் தரக்கூடும் .பொட்டு வைக்காமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் வைக்கக்கூடாது என்பதற்கு மத ரீதியாக என்ன காரணமும் எனக்கு தெரியவில்லை. //

இது வேறுபடுத்திக் காட்டுவதற்காக இருக்கலாம். அல்லது பின்பற்றும் மதம் தோன்றிய ஊரில் அந்தப் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். அதை அப்படியே பின்பற்றலாம். இதுதான் எனக்குத் தோன்றுகிறது.

பொட்டு வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம். இதைப் பற்றி நினைக்கும் பொழுதுதான் இன்னொன்றும் தோன்றியது. கிருஸ்துவ இஸ்லாமிய பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்களா? இன்றைக்கு எத்தனை இந்துப் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வி. இருந்தாலும் தெரிந்து கொள்ளக் கேட்கின்றேன்.

Anonymous said...

//எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . //

ஆனால் Sri Lankan தமிழ் கத்தோலிக் மக்கள் வெள்ளை கவுன் அல்லது வெள்ளை சாரி போட்டு தான் தாலி கட்டுவார்கள்.

அதுக்குபிறகு தான் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு வருறார்கள். நான் இப்படி நிறைய கல்யாணவீடு பாத்திருக்கிறேன்.

-L-L-D-a-s-u said...

//கிருஸ்துவ இஸ்லாமிய பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்களா?//

கிராமங்களில் தமிழ் கத்தோலிக்கர்கள் மஞ்சள் பூசுவார்கள் .. எங்கள் கிராமத்தில் , என் சொந்தங்கள் பூசுவதுண்டு .. இதுக்கு மேல நா ஏதாவது, மஞ்சளை , மஞ்சள் பூசுவோரையும் எழுதினால் வீட்டில் அடிவாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்பதால் ...'மஞ்சளா? அது என்ன கலர்ல இருக்கும் '.

ஜோ/Joe said...

//ஆனால் Sri Lankan தமிழ் கத்தோலிக் மக்கள் வெள்ளை கவுன் அல்லது வெள்ளை சாரி போட்டு தான் தாலி கட்டுவார்கள். //
அப்படியா? வசந்தன் அவர்களிடமிருந்து இதுபற்றிய கருத்தை அறிய முடிந்தால் நல்லது.

ஜோ/Joe said...

நான் இந்த பதிவை ஒரு கத்தோலிக்கன் என்பதை விட ஒரு தமிழன் என்ற வகையில் நமக்குள் புரிந்துணர்வை அதிகமாக்கும் நோக்கத்துடனே எழுதினேன் என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஜோ. பாராட்டுக்கள்

ஜோ/Joe said...

நன்றி ரவிசங்கர்!

ஜோ/Joe said...

நன்றி ரவிசங்கர்!

Anonymous said...

Weldon Jo!!!. I am not able to write in Tamil. Your pathivu will help other religions to know about the Christian marriages and cultures. Tamil cinema has changed like this. I want you to write a pathivu about the christian names for Villans in Tamil cinema. Anyhow keep it up!!!!

NambikkaiRAMA said...

உண்மைதான் . எங்கள் ஊரில் கூட அப்படிதான்

ooviyam said...

dear jo,
yr autograph about seeing movies..... exactly the same like me. even in my town they used screen free movie shows and we all used to run to watch those movies. in the middle of the movie only the real problem begins. they will show about our town and how it was developed. you have to bear with it because only for that they are showing the movie in every block. there were some ardents fans who used watch the same movie again and again everyday in every screening session. no tv and this was our only entertainment. i have also seen my catholic friends dressing up exactly like a hindu woman sorry tamil women with kungkumam, silk saree, jasmine flowers etc and of course manjal kayiru thaali and putting kolam, kuthuviLakku. ofcourse all these you cannot call it as religious habits. could be tamilians habits.
chitra

பாலதர்ஷன் said...

உங்கடை நண்பன் கேட்டமாதிரித்தான் சிலதினங்களின் முன் நான் என் கிறிஸ்தவ நண்பனைக் கேட்டேன்! (ஏனென்றால் இதுவரை கிறிஸ்த்தவர்களுடைய திருமணத்தை சினிமாவில்தான் பார்த்துள்ளேன்!)அவன் சொன்னான் அதெல்லாம் தமிழர்களுடைய கலாச்சாரம் என்று!

ஜோ/Joe said...

சித்ரா அக்கா,
கருத்துக்களுக்கு நன்றி!

பாலதர்ஷன்,
உங்கள் நண்பர் சொன்னது சரி தானே?

நியோ / neo said...

வாழ்க நண்பர் ஜோ! :)

>> மதம் வேறு. தமிழர் பழக்க வழக்கம் வேறு என்று புரிந்து கொண்டால் தமிழராக வாழ்வதில் சிரமமேயில்லை. >>

வைரமுத்துவின் வரிகளில் சொல்வதானால் - எப்போதுமே தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழினத்துக்கு ஒரு "நிறம்" உண்டு!

காலத்தால் அழியாத வண்ணம் பூசிக்கொண்டது தமிழ்!

நண்பர் ஜோவுக்கு அருமையான இந்த வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!

ஜோ/Joe said...

மிக்க நன்றி Neo!

Anonymous said...

sagarmd@yahoo.com
பொட்டு வைக்கூடாது என்று வேதத்தில் இல்லை.
ஆனால் எந்த மதசம்பந்தமான அடையளங்களையும் தவிர்கக வேண்டும் என்று புனித பவுல் கூறுகிறார்.
பொட்டு என்பது மதசம்பந்தாகவே இருக்க வேண்டும் என்று CSI மற்றும் பிற பிரிவினர் தவிர்கின்றனர்.
அதே சமயத்தில் கத்தோலிக் Sisters யாரும் பொட்டு வைப்பது இல்லை.
அவர்களுக்கும் ஒரு சந்தேக்ம் இருப்பதால் யாரும் வைப்ததல்லை

தைப்பொங்கல் மட்டுமல்ல தமிழ் புது வருட பிறப்பையும் எங்கள் சபையில் கொண்டாடுவது உண்டு. அதற்கு காரணமும் வேதத்தில் உண்டு.

கிறிஸ்தவர்கள் தமிழுக்காக என்ன செய்துள்ளார்கள்? - பாகம் 1

ஆக்கம் - விஜய், பெங்களூர்.






தலைப்பே உங்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். கிறிஸ்தவர்களுக்கும் தமிழுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே? கிறிஸ்தவம் மேலை நாட்டில் இருந்து நமது நாட்டிற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதம் அல்லது நம்பிக்கை அவ்வளவு தான். மற்றபடி அவர்கள் தமிழுக்கென்று பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று எண்ணம் உடையவராக நீங்கள் இருந்தால், இக்கட்டுரை உங்களுக்கு தான். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும்

“ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க, தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.(அது இன்று வரை தெடர்கிறது).
கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த, நம் தாய்மொழியாகிய தூய,இனிய செந்தமிழ், அதற்குப் பின், ஆரியரின் வேதமத்தாலும், மற்ற காரணங்களாலும் தாக்குண்டு, படிபடியாய்ச் சீர்கெட்டது. தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும், அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும். ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன. வேத ஆரியர்களும், தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு, தமிழ் மூலநூல்களை அழித்தனர். இவ்வாறு மதப் போராட்டங்களாலும், வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று. ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன. ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின. உரைநடை நூல்கள், செய்யுள் நூல்கள்,இசை,நாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது. களப்பிரர், பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன. மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று, இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது. அரசியல், குமகாயம், சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது. இந்த வீழ்ச்சி பயணம் 17ம் நூற்றாண்டு வரை தெடர்ந்து.

தரங்கை வளர்த்த தமிழியல்

தரங்கம்பாடிக் கடற்கரையில் 1706ஆம் ஆண்டு ஆனித் திங்கள் சீகன்பால்கு(Bartholomaeus Ziegenbalg) கால் வைத்த அன்றே தமிழ் வளர்ச்சி பாதையில் வீருநடை போடதுவங்கியது. இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும். என்ன செய்தார் அவர்:
• தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதி,கொன்றைவேந்தன், நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது
• ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது
• தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது
• தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது.
• தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது.
• தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.
இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணி,வகனம்,தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும். தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.
இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர்(Walther), பப்ரிலியுஸ்(Fabricius), ப்ரைடஹதுப்ட்(Breithaupt), பைஸன் ஹெர்ட்ஸ்(Beisenherx) கிரவுல்(Graul), ரெனியுஸ்(Rhenius), பைத்தான்(Beythan), ஷொமேருஸ்(Schomerus), லேமன்(Lehmann) போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர். இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது. தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன. பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய ‘வெளிநாடுகளில் தமிழியல்: நல்ல கட்டுரைத் தொகுதி(Xavier S.Thaninayagam, Tamil Studies Abroad: Asymposium, 1968) என்னும் நூலில் டாக்டர் ஆல்ப்ரெஹ்ட் வெட்ஸலர்(Dr.Albrecht Wetzler) டாக்டர் அரனோலேமன்( Dr.Arno Lehmann) ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.

செம்மொழி

கால்டுவெல் (Rev. Robert Caldwell) அவர்களின் “திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்” . தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன், தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து; அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது. தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார்(Word List ). என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.

கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார். அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார். அதற்க்கு அன்பழகன் “கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?” . ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான். எம் மொழியை, எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார். தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.


- தொடரும்




விஜய் பெங்களூர்

sagarmd@yahoo.com

நண்பன் said...

ஜோ

மிக்க மகிழ்ச்சி - ஒரு நேசமிகு பதிவை கொடுத்துப் படிக்கச் செய்தமைக்கு.

தமிழ் திரை எப்பொழுதுமே அழகுணர்ச்சியுடன் கூறுகிறேன் பேர்வழி என்று எல்லாவற்றையும் சிதைத்து தவறான பதிவுகளையே முன்வைக்கிறது.

பார்க்கலாம் என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள்.

நண்பன் said...

ஐயா பெங்களூர் விஜய் -

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் தான் கடைசியாக கால்டுவெல் தங்கியிருந்தார் என்பது வரைக்கும் கூறிய நீங்கள் - அது எந்த ஊர் அல்லது அது எந்த இடம் என்று கொஞ்சம் சொல்லியிருக்கக் கூடாதா?

அடுத்த முறை ஊருக்குப் போகும் பொழுது போய்ப் பார்த்துட்டு வந்திடலாமே?

புருனோ Bruno said...

ஜோ சார்,

அப்படியே

மொட்டை அடிப்பது
தென்னங்கன்று தருவது
உப்பு காணிக்கை
மிளகு காணிக்கை

ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

இதை விட முக்கியமான சுவாரசியமான விஷயம்

Though the feast days follows gregorian calendar, பல ஊர்களில் கத்தோலிக்க கோயில் திருவிழாக்கள் (வேளாங்கன்னி விதிவிலக்கு) தமிழ் மாதப்படி நடக்கும்

உதாரணம் - தைமாதம் மூன்றாவது செவ்வாய்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives