
வார இறுதியில் குழந்தைகளோடு கழிக்கும் தருணங்கள் போல மகிழ்ச்சியானது வேறெதுவும் இல்லை . நேற்று முந்தினம் என் 5 வயது மகன் தன் விளையாட்டுத் தோழன் மூலமாக கிடைத்த கிருஷ்ணன் பற்றிய ஒரு கார்ட்டூன் குறுந்தகடு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தான் ..முழுவதுமாக ஒரு முறை பார்த்து முடித்து விட்டு , தொடர்ச்சியாக இன்னொரு முறை பார்க்க வேண்டுமென கேட்டு இரண்டாம் முறையும் பார்த்து முடித்தான்.
முடித்தவுடன் என்னிடம் வந்த அவனுக்கும் எனக்கும் உரையாடல் இப்படிப் போனது..
மகன் :அப்பா , கிருஷ்ணன் பவர்புல் காட்-ஆ ?
(நான் பதில் சொல்லும் முன்னரே மீண்டும் அவனே)
மகன் :ஜீஸசும் கிருஷ்ணாவும் பவர்புல் காட்-சா?
நான் :ஆமா!
மகன் :எப்படி ரெண்டு பேரும் பவர்புல் காட்ஸ்?
நான் :காட் ஒருத்தர் இருக்கார் .சிலர் அவரை கிருஷ்ணன் என்கிறார்கள் .சிலர் அவரை ஜீஸஸ் என்கிறார்கள். அவ்வளவு தான்.
மகன் :போத் ஆர் சேம் ?
நான் : நாம சர்ச்-க்கு போகும் போது ஜீஸஸ் கிட்ட ப்ரே பண்ணுறோம்ல .அதுபோல சமிக்ஷா டெம்பிள்-க்கு போகும் போது கிருஷ்ணா கிட்ட பிரே பண்ணுவா.
சின்ன பையன் கிட்ட இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் ..சொல்லணும் .வெற்றிகரமா இப்போதைக்கு முடிஞ்ச அளவு புரிய வச்சுட்டோம் .அவன் வயசுக்கு இதுவரை அவனுக்கு புரிஞ்சாலே போதும் -ன்னு நான் நினைச்சிட்டிருக்கும் போது , அவன் ’அன்பே சிவம்’ கமல் ரேஞ்சுக்கு அடிச்சான் ஒரு ஷாட்
மகன் : அப்பா , யூ ஆர் ஆல்சோ காட்
என்ன சொல்லுறதுண்ணு தெரியல்ல ..மறுத்தா இப்போதைக்கு முழுமையா விளக்க முடியாது
நான் : யூ டூ மோனே !
குழந்தை இயேசுவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் .
குழந்தையின் உள்ளத்தில் எந்த பிரிவினையும் கபடும் கிடையாது என்பதால் தான் இயேசு கூட இப்படிச் சொன்னார் ...
நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... (மத்தேயு 18:3)