Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, August 16, 2010

இந்திய சுதந்திர தினமும் குறைந்து போன சுருதியும்

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்துமசுக்கு அடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் இந்திய சுதந்திர தினம் .10-வது படிக்கும் போது பள்ளி மாணவர் தலைவன் என்ற முறையில் திங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றி மாணவர் அணிவகுப்பு நடத்தும் பொருட்டு முன்னரே பள்ளிக்கு சென்று கொடியை மடித்துக்கட்டி உச்சியில் ஏற்றி வைக்கும் பொறுப்பும் எனக்கிருந்தது . தேவாலய வளாகத்திலேயே பள்ளி என்பதால் சுதந்திர தினத்தன்று தேவாலயத்தில் சுதந்திர தின சிறப்புத் திருப்பலி முடிந்தவுடன் ஒட்டு மொத்த ஊரும் கூடி நிற்க பள்ளி மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு மற்றும் கொடியேற்றம் நடைபெறும் . பின்னர் நாள் முழுவதும் இளைஞர் அமைப்பு ஒன்று குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான வித விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இரவில் பொதுக்கூட்டம் நடத்தி கலை நிகழ்ச்சிகளோடு பரிசு கொடுப்பார்கள் . பள்ளி நாட்களுக்கு பின்னர் கல்லூரி நாட்களில் இளைஞர் குழாமோடு இணைந்து பொறுப்பேற்று நடத்தியதுண்டு .இரவுப் பொதுக்கூட்டத்தில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன் ‘தாய்நாடு நம் தாயைப் போன்றது . நம் தாய்க்கு இணையான தாய்நாட்டுக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன் “ என்று உணர்ச்சிவசப்படுவது அநேகமாக நானாகத் தான் இருக்கும் .

இந்தியா , தாய்நாடு , ஜனகனமன , வந்தே மாதரம் இந்த வார்த்தைகளை கேட்டாலே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்த காலங்கள் அவை . அந்த தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக சிங்கப்பூர் வந்த பிறகு இந்த தேசபக்தி , பெருமிதமெல்லாம் இன்னும் ஒரு படி அதிகரித்திருத்திருந்தது . ஆகஸ்ட் 15 அன்று சின்ன தேசியக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டு அலுவலகத்துக்கு போயிருக்கிறேன்.

பள்ளியும் கல்லூரியும் கொடுத்த ஒற்றைப்பார்வை கல்வியைத் தாண்டி படிக்கவும் , பல நாடுகளை பற்றி அறிய ஆரம்பித்த போது தான் புனித பிம்பங்கள் கலைய ஆரம்பித்தது , காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு , ஒரே எண்ணம் ,ஒரே மக்கள் என கன்னியாகுமரியில் உட்கார்ந்து கொண்டு ‘முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக காமெடியாகிப் போனது . முகம் தெரியாத மூன்றாவது நாட்டில் ஏதாவது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது பாகிஸ்தான் நாட்டு சகோதரன் வந்தாலே கொஞ்சம் சிநேகமாக புன்னகைப்போம் . காணக்கிடைக்காத நாட்டில் வட இந்தியரைப் பார்த்தாலும் பேச்சுக் கொடுப்போம் . அதே நேரம் ஒரு ஈழத்தமிழனோ , மலேசியத் தமிழனோ தென்பட்டால் மெதுவாக நம் மனம் அங்கே நகரும் ..நம் வட இந்திய நண்பரோ பாகிஸ்தான் சகோதரரை நோக்கி நகர நாமோ ஈழத்தழனையோ மலேசியத் தமிழனையோ நோக்கி நகர்ந்திருப்போம் . நானும் வட இந்தியனும் ஒரே நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கிறோம் என்ற உறவைத் தவிர , எனக்கும் வேறு நாட்டு தமிழனுக்கும் உள்ள இயல்பாண பிணைப்பு அளவுக்கு எதுவும் இல்லை என தெரிய வருகின்ற தருணங்கள் அவை .

இந்தியா என்பது அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோட்டுக்கு கட்டுப்பட்ட பிரதேசமேயன்றி கலாச்சார , மொழி , பண்பாட்டால் உருவான கலாச்சார பிணைப்பு அல்ல என புரிய ஆரம்பித்தது . ஒரு இந்திய பஞ்சாபிக்கு ஒரு பாகிஸ்தான் பஞ்சாபியிடமே பகிர்ந்து கொள்ளவும் உறவு கொள்ளவும் அதிக காரணங்கள் இருக்குமே அல்லாமல் இந்தியன் என்பதற்காக ஒரு தமிழனோடு அல்ல என்பதும் , ஒரு வங்காளி தெலுங்கனை விட வங்காள தேசத்தவனோடே தன்னை அதிகமாக பொருத்திப்பார்க்க முடியும் என்பதும் ஒரு தமிழ்நாட்டு தமிழன் ஒரு இடத்தில் ஒரு உத்திரப் பிரதேசக்காரனையும் ஒரு ஈழத்தமிழனையோ அல்லது மலேசியத் தமிழனையோ காண நேர்ந்தால் யாரோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயல்வான் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. ’ முதலில் நான் இந்தியன் ..பின்னர் தான் ...” போன்ற வெற்று கோஷங்களின் போலித்தன்மை பல்லிளிக்க முதலில் நான் யார் என தெளிவாக உணர முடிகிறது.

மொழி , கலாச்சாரம் வேறு வேறானாலும் வேற்றுமையில் ஒற்றுமை தானே நம் தனித்துவம் என காரணம் சொல்லப்படுகின்ற போது இப்போதெல்லாம் ‘ நீ அரிசி கொண்டு வா ..நான் உமி கொண்டு வாறேன் ..ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்னலாம் ‘ என்ற சொற்றொடர் தாம் ஞாபகம் வருகிறது . கடல் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படும் குஜராத் மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ என இந்திய அரசு நினைக்கும் போது ராமேஸ்வரம் மீனவன் மட்டும் ‘தமிழக மீனவன்’ என்றால் நான் என்ன நினைப்பது ? பரம்பரை எதிரியாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி வந்து விட்ட மீனவனை சுடுவதில்லையே .. மிஞ்சிப்போனால் கைது செய்து சிறையில் தானே அடைக்கிறார்கள் .. ஆனால் காலங்காலமாக தங்கள் சொத்தாக இருந்த கச்சத்தீவை தன்னுடைய நாடு எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்ததும் அல்லாமல் , அங்கே வலைஉலர்த்தும் உரிமை இருப்பதாக சொன்னாலும் அதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலைமையில் ஒரு வல்லரசு என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒரு நாடு 400 -க்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூட அந்த குட்டி நாட்டுக்கெதிராக ஒரு குரலைக்கூட உயர்த்த முடியவில்லையென்று சொன்னால் இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் .. 1. இந்தியா என்ற நாட்டுக்கும் சுயமரியாதையும் முதுகெலும்பும் கிடையாது 2 . செத்துப்போன இன்னும் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை இந்த நாடு தன் குடிமக்களாக கருதவில்லை ..வெறென்ன காரணம் இருக்க முடியும் ?

இப்போது ஒருபடி மேலே போய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லை தாண்டி சென்றால் மீனவர்களுக்கு அரசு பொறுப்பல்ல என சொல்லியிருக்கிறார் ..ஏதோ இந்திய எல்லைக்குள் மட்டும் இவர்கள் ரொம்ப பாதுகாப்பு கொடுத்து கிழித்து விட்டது போல ..கச்சத்தீவுக்கு வெறும் 18 கிமீ தூரமே உள்ள ஒரு கடற்பரப்பில் , கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும் ,வலை உலர்த்தவும் உரிமை உண்டு என சொல்லப்பட்டும் கூட , 12 கீமி -லிருந்து தன்னுடைய கடற்பரப்பாக கருதிக்கொண்டு இலங்கை நம் மக்களை தாக்குகிறது .அதையும் தாண்டி நம்முடைய கரை வரை வந்து தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன ..ஆனால் வல்லரசின் மேன்மை தங்கிய வெளியுறவுத் துறை அமைச்சரோ தமிழக மீனவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதது ஒன்று தான் பாக்கி ..இந்த லட்சணத்தில் ’சுதந்திர தினம்’ ரொம்ப முக்கியம் !

Friday, April 09, 2010

மகளிர் இட ஒதுக்கீடு - அடிப்படை புரிதலும் குழப்பமும்

சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?

இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.

ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.

Wednesday, December 02, 2009

இடைத்தேர்தல் விதிமுறை கேலிக்கூத்து

அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வெற்றி பெறுவாராம் .பின்னர் அவர் சொந்த பிரச்சனை காரணமாக அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைவாராம் .உடனே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாராம் .அதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல் கமிஷன் இடைத் தேர்தல் நடத்துமாம் .தன் சொந்த பிரச்சனைக்காக அவர் ராஜினாமா செய்ததால் வரும் இடைத் தேர்தலில் அவரே மீண்டும் திமுக சார்பாக போட்டியிடுவாராம் .ஆளுங்கட்சி அமைச்சர்களெல்லாம் அமைச்சரவை பணிகளை விட்டு விட்டு அவர் தொகுதியில் முகாமடித்து மீண்டும் அவரை வெற்றி பெற செய்வார்களாம்.

இது போல ஒரு கேலிக்கூத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என தெரியவில்லை .ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , ஒரு தனிபட்டவரின் சொந்த விருப்பு வெறுப்பால் இழப்பு மக்கள் வரிப்பணம் ,அமைச்சர்கள் தேர்தல் வேலையால் அரசு பணிகளில் இழப்பு , இன்ன பிற..

ஒருவரை மக்கள் 5 வருட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த பிறகு ,அவரே முன் வந்து ராஜினாமா செய்வாரென்றால் ,ஒன்று குறைந்தபட்சம் அவர் எடுத்த முடிவால் வரும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது .இல்லை நான் போட்டியிடுவேன் என்றால் இவரின் சொந்த குழப்பத்தால் வரும் தேர்தலுக்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்பது தானே குறைந்த பட்ச நியாயம் என்ற முறையிலும் சரியாக இருக்கும் ? இதைக் கூட அமல் படுத்த முடியாத தேர்தல் விதிமுறை சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

இது ஒன்றும் புதிதல்ல ..ஏற்கனவே பலர் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் வருமானால் , இதுவரை நடந்தவையும் தவறு தான் என்பதில் சந்தேகம் இல்லை .எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் வேண்டும் .இப்படிப்பட்ட குறைந்த பட்ச நெறிமுறைகளை கடைபிடிக்காத தேர்தல் நெறிமுறைகளை வைத்துக்கோண்டு தேர்தல் கமிஷன் மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து.

Friday, June 05, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா ..வேலையப் பாரு - இலங்கை

இலங்கை ராணுவ இணையத்தளத்தில் சொல்லப்பட்டிருப்பது

According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.


To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka


இந்திய வெளியுறவு அமைச்சரை அவன் 'பொத்திகிட்டு போடா' என்கிறான் ..இவன்களோ அவனுக்காக ஓடி ஓடி ஆதரவு திரட்டுகிறான்கள் ..வெட்கம் ,மானம் எதுவுமே கிடையாதா ? இந்தியா வல்லரசு தான் ..எல்லோரும் நம்புங்கப்பா .

Friday, October 03, 2008

காதலில் விழுந்த கம்யூனிஸ்டுகள்

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் கொஞ்சம் மரியாதை உண்டு .தோழர் பெருமதிப்புக்குரிய நல்லக்கண்ணு போன்ற பண்பாளர்கள் அங்கம் வகிப்பதால். பெரும்பாலான தலைவர்களின் எளிமையும் ,கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியது .ஆனால் சமீப காலங்களில் கம்யூனிஸ்டுகள் காமெடியர்களாக மாறி வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை .

எதேச்சையாக சன் தொலைக்காட்சி பார்த்த போது செய்திகள் போய்க்கொண்டிருந்தது ..சிவப்பு துண்டைப் போட்டுக்கொண்டு தோழர் தா.பாண்டியன் முழங்கிக்கொண்டிருந்தார் .நான் கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் ஆவேசமாக பேசுகிறார் என நினைத்து கூர்ந்து கவனித்தால் அடடா.. 'காதலில் விழுந்தேன்' ஏன் மதுரைக் காரர்களை விழ அனுமதிக்கவில்லை என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை பற்றி வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருந்தார் .

சன் டீவியை பொறுத்தவரை 2 நாட்களாக தலைப்புச் செய்தியே 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு மக்கள் வரலாறு காணாத வரவேற்பு ..திரையரங்கமெங்கும் மக்கள் வெள்ளம் ..இத்தியாதி..இத்தியாதி ..இத்துப்போன இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க மு.க.அழகிரி தயவில் கிடைத்த வாய்ப்பை சன் டீவி நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது .இது ஏதோ உலக மகா பிரச்சனை போல "வாங்கையா..வாங்கையா" என திடீர் கருணாநிதி எதிர்ப்பாளர்களை தேடிப்பிடித்திருப்பார்கள் போல .

தோழர் தா.பாண்டியனை கேட்கவே வேண்டாம் ..நம்ம கிட்ட மைக் குடுத்துட்டாங்கப்பா -ன்ற சந்தோசத்துல பொளந்து கட்டினார் ..அந்த கொடுமை முடிந்தவுடன் அடுத்து மார்ச்சிஸ்ட் வரதராசன் ..அய்யோ ..மற்றொரு திடீர் கருணாநிதி எதிர்ப்பாளராம்.

இந்த காமெடி முடிஞ்சு இப்போ இன்னொரு காமெடி ..திடீர்ன்னு கம்யூனிஸ்டுகளுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை .உடனே புதிய நண்பர்களையெல்லாம் கூட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் ..கொடுமை என்னண்ணா அதுல அ.தி.மு.க -வும் கலந்து கொள்ளும் -ன்னு அறிவிப்பு .விட்டா ராஜபக்சே ,சோ போன்றவர்களையும் கூப்பிடுவார்கள் போல .

அம்மாவும் பெரியமனது பண்ணி முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என சொல்ல ..நிகழ்ச்சி தொடங்கியும் முத்துசாமி வரவில்லை .கடைசியில் அம்மா கொடுத்தார் பெரிய அல்வா ..வழக்கம் போல கடைசி நேரத்தில் அம்மா-வின் மூடு மாற ,கொஞ்ச நஞ்சம் வந்திருந்த அ.தி.மு.கவினர் மேலிட சிக்னல் கிடைத்ததும் கமுக்கமாக கழன்று கொண்டார்கள் .அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?

பொதுவாகவே இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் கலைஞரோடு கூட்டணி வைத்திருக்கும் போது தான் கூட்டணி ஜனநாயகம் ,கொள்கை ,நியாயமான தொகுதிப் பங்கீடு ,வெங்காயம் பற்றியெல்லாம் பேசுவார்கள் . அம்மாவிடமெல்லாம் இந்த பாச்சா பலிக்காது .உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.

இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு .அவர் வெளிய தான் புலி .அம்மா கிட்ட ஈழப்பிரச்சனை ,சேது சமுத்திர திட்டம் பத்தி ..ஊகூம் ..கப்சிப் ..அடுத்த முறை அம்மா இவரைப் பிடிச்சு உள்ளே போடுறவரை ஓயமாட்டார் ..அப்புறம் "பாசிச ஜெயலலிதா" -ன்னு முழங்குவார் .பார்க்கத் தானே போறோம் .கலைஞர் கிட்ட ஒரு தொகுதிக்கு உரிமைக்குரல் கொடுக்கிற வை.கோ-வும் ,தா .பாண்டியன் வகையறாக்கள் ஜெயலலிதா பிச்சைக்காசு மாதிரி வீசுகிற தொகுதிகளை கையையும் வாயையும் பொத்திகிட்டு எப்படி வாங்குறாங்கன்ணு.

Tuesday, September 16, 2008

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

Thursday, August 07, 2008

ரஜினி செய்தது தவறா?

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் போது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?" என்றெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்கள் ..இந்த அளவுக்காவது ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் காற்று இறங்கி வருவது நல்லது தான்.

ரஜினிகாந்த் நல்ல நடிகர் ..நல்ல மனிதரும் கூட .இருக்கட்டுமே ..யார் இல்லையென்று சொன்னது ? நான் ஒரு நடிகன் .என்னை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போயிருந்தால் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை உண்மையிலேயே அவரின் நடிப்புக்கு ,ஸ்டைலுக்கு திரண்ட கூட்டம் என்று எடுத்துக்கொண்டு போயிருந்திருக்கலாம் .ஆனால் ஊகங்கள் மூலம் அரசியல் சாயங்கள் விழுந்த போது அதனால் ஏற்படும் லாபங்களை மிக லாவகமாக வியாபாரமாக்கிக் கொண்ட போது தானே அவர் வெறும் நடிகர் என்பதையும் தாண்டி வெளியில் வந்து விழுகிறார் .

திரையில் அவர் பேசும் வசனங்கள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என்ற எல்லையை தாண்டி ரஜினிகாந்த் என்ற தனிமனிதன் பேசும் வசனங்களாக கருத்தில் எடுக்கப்பட்டதை (இப்போது அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டுமே என்று மறுத்தாலும் ) கொஞ்சமாவது மண்டையில் மசாலா உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியுமே ?எம்.ஜி.ஆரும் இப்படி அரசியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார் , பாடுவார் ..ஆனால் அவை படத்திலுள்ள இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசுவது போல மறைமுகமாக இருக்கும் .ஆனால் ரஜினி சம்பந்தம் இல்லாமல் கையை பார்வையாளரைப் பார்த்து நீட்டி நேரடியாகவே பேச ஆரம்பித்தார் . அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ,பாடல்கள் என்றால் ..வீட்டு வேலைக்காரராக இருக்கும் ஒருவர் அதிலும் காதல் காட்சியில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." என்று பாடினால் கேட்பவன் என்ன கேனயனா ? அதற்கு வேலைக்காரனின் காதலி வேறு " என்னமோ திட்டமிருக்கு " என்று பில்டப் வேறு ...ஆமாங்க இதெல்லாம் அவருக்கு தெரியாம இயக்குநரும் பாடலாசிரியரும் திணித்தது ..அல்லது ..இதைக்கூட அவர் பலமுறை தடுத்தும் கேட்காமல் சேர்த்து விட்டார்கள் ..என்று சொல்பவர்களை என்ன சொல்வது ..வடிவேலு பாணியில் ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான் .

தன்னை நடுரோட்டில் காக்க வைத்து விட்டார் என்ற காரணத்துக்காக ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தது .."மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ..ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது " என குரல் கொடுத்தது ..ஊடகங்களும் ஏதோ ரஜினி வாய்சினால் தான் திமுக வெற்றி பெற்றது ..இல்லையென்றால் ஜெயலலிதா வென்றிருப்பார் என காமெடி பண்ணியது ..அந்த பில்டெப்புகளெல்லாம் அடுத்த முறை கொடுத்த வாய்சிலேயே பணால் ஆனது ..மீண்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ம.க -வை எதிர்த்தது .. சும்மா விட்டிருந்தா குறைந்தது ரெண்டு இடத்துலயாவது தோற்க வாய்ப்பிருந்த பா.ம.கா-வை மறைமுகமாக ரசிகர்களை தூண்டிவிட்டு தோற்கடிக்கிறேன் பேர்வழின்னு எல்லா இடத்திலும் பா.ம.கா-வை வெற்றி பெற வைத்தது ..இதுக்கு பிறகாவது "பேர கேட்டாலே..அதிருதுல்ல ..ஒதறுதுல்ல"-ன்னு சொல்லாம இருந்திருக்கணும் .

வரமாட்டேன் ..வந்தாலும் வருவேன் ..வருவேண்ணு யார் சொன்னது ..நீங்களா நினைச்சுகிட்டா நான் என்ன செய்வது ..நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன் .. நாளை என்ன நடக்கும்-ன்னு சொல்ல முடியாது .. எல்லாம் (கைய மேலே தூக்குறது) என்றெல்லாம் மாறி மாறி சொல்லி வருவது எதனால் ? வேறு ஒன்றுமில்லை ..இத்தகைய ஊகங்கள் , எதிர்பார்ப்புகள் ,சந்தேகங்கள் ,விவாதங்கள் தன்னுடைய படங்களின் வியாபாரத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருக்கும் என்ற எண்ணம் தான் .

ரஜினிகாந்துக்கு எந்த சமூக பிரச்சனையிலும் ஆழமான அறிவோ ,தனக்கென ஒரு கருத்தோ இருந்ததில்லை ..அல்லது அரசியலுக்கு வந்து நிலைக்கும் அளவுக்கு அவருக்கு தலைமைப் பண்போ ,நிர்வாக திறனோ ,பக்குவமோ ,பொறுமையோ கிடையாது ..இவை அவருக்கு நன்றாக தெரிந்ததாலும் ..தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்று போட்டுடைக்க விரும்பவில்லை ..காரணம் ? வரமாட்டோம் -ன்னு தெரியும் ..அதற்காக வருவோம் ,வரமாட்டோம் என ஊகத்தின் அடிப்படையில் நம் திரைப்படங்களுக்கும் ,ஊடகங்களில் நடக்கு கிடைத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்கும் கிடைத்து வரும் லாபத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டும் ? போற வரைக்கும் போகட்டுமே என்பது தான் அவரது எண்ணமாக இருக்க முடியும்.

இதில் என்ன தவறு ? என்னைக் கேட்டால் தவறே இல்லை ..அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .

இப்போது கூட ரஜினி கணக்கை கொஞ்சம் வித்தியாசமாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம் ..உண்ணாவிரத பேச்சுக்கு பிறகு வந்த மிரட்டலுக்கு பிறகு கூட "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்று பேசியவர் இப்போது 2 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நட்டம் வந்து விடக்கூடாதே என்பதால் வருத்தம் தெரிவித்து நட்டத்தை போக்கியிருக்கிறார் ..ஆனால் நடந்தது என்ன ? கர்நாடகாவில் 2 கோடி லாபம் .தமிழகத்தில் 20 கோடி நட்டம் ..கொஞ்சம் வேறு மாதிரியாக யோசித்து ..லாபத்திற்காகவேனும் "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்பதை மறு உறுதிப்படுத்தியிருந்தால் ,2 கோடி நட்டத்துக்கு பதில் தமிழகத்தில் கூடுதலாக 10 கோடி பார்த்திருக்கலாம் ..தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!

Thursday, July 24, 2008

கிடைக்குமா கச்சத்தீவு? -ரவிக்குமார் எம்.எல்.ஏ

மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

'எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறை களால் ஆனது' என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தப் பிரச்னை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1921-ம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது. அப்போது இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்னை விவாதிக் கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டபோதிலும், ராம நாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால், அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய- இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில் இந்தியாவும் இலங்கையும் தம்முடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் 'இந்திய-இலங்கை கப்பல் கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல் லப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதத்தில், 'இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது' எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம்சாட்டி வருகின்றன. அது உண்மையல்ல. 1974-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்னை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளி நடப்பு செய்துள்ளனர். ''இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடரவேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நம்முடைய நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்'' என்று இரா.செழியன் பேசினார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரிகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இல்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைப் பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார். இது நம்முடைய ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்'' என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர், ''கச்சத்தீவு என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக் கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தன்னுடைய ராணு வத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டுவந்து குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினைதான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்'' என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப், ''1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அவற்றைப் படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்'' என்று பேசினார்.

ஒரிஸ்ஸா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ், ''நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சி யினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னாள் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நம்முடைய நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்குப் பிறகு என்ன மிச்சம் இருக்கும்'' என்று கேள்வி எழுப்பினார்.

ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாய் கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனர் என்றும் பேசினார். அந்த சமயத் தில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படி யான சம்பவங்களுக்குப் பிறகுதான் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங், அவையில் அறிக்கையை வாசித்தார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடை யில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில் களுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்'' என்றார் அவர்.

அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் இந்த ஒப்பந்தத்தைத் தம்முடைய கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ''மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921-ம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை கடல் மைல்கள் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம். அதற்குக் கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவைச் சுற்றி சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களுடைய வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே, இந்திய-இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப் படும்'' என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடை யூறின்றி தொடர்ந்தது. ஆனால், இலங் கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களுடைய மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட 'ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம்' இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதைப் பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளைப் பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்து காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது? இதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

'கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது' எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.

நன்றி - விகடன்.

Tuesday, February 20, 2007

எல்லை மீறும் கன்னட அமைப்புக்கள்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அடுத்து அது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சாதகமாகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது .முதலில் அரைகுறையாக வெளிவந்த செய்திகளின்படி தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் என குறிக்கப்பட்ட அளவை ,தமிழ்கத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய அளவாக திரித்துக் கூறப்பட்டு கர்நாடகத்தில் கொந்தளிப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் இப்போது தமிழகத்துக்கு கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு இடைக்கால உத்தரவு படி கொடுக்க வேண்டிய அளவை விட குறைவு என்று தெளிவாக தெரிந்த பின்னரும் கர்நாடக அமைப்புக்கள் தங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ளுவதாக இல்லை. உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதனை மொழிப் பிரச்சனையாக வழக்கம் போல ஊதி பெரிதாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துகென்று தனிக்கொடி கர்நாடகாவில் தான் உள்ளது .17 வருடங்கள் விசாரணைக்குப் பின் அளிக்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட தமிழர்கள் ,விவசாயிகள் இந்த வகையிலாவது நம் பங்கு கிடைத்ததே என்று நினைத்து எதிர்ப்புகள் ,ஆர்ப்பாட்டங்கள் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களை தவித்து வரும் நேரத்தில் கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன.

பந்த் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது எதிர் பார்த்ததை விட வன்முறைகள் கட்டுக்குள் இருந்ததற்கு கர்நாடக மாநில அரசை பாராட்டியே ஆக வேண்டும் .அதே நேரத்தில் வழக்கம் போல தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி இணைப்புகள் வழக்கம் போல துண்டிக்கப்பட்டன .தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது .தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன .இது போதாதென்று சிலர் அத்துமீறி தமிழகத்துகுள்ளேயே நுழைந்து ஓசுரை கைப்பற்றப்போவதாக கோஷமிட்டுள்ளனர்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காம் செய்தியில் தமிழக எல்லையில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ...

கர்நாடக கிறிஸ்துவ ஆலயயங்களில் தமிழ் பிராத்தனை ஜெபக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிக்க கன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது .இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபேல் கூறுகையியில் "பெங்களூர்,மைசூர்,மாண்டியா,கோலார் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் பிராத்தனை நடத்துவதை நிறுத்த வேண்டும் .இந்த கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் .கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழ் பிராத்தனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இப்படி ஒரு கேவலமான சிந்தனை உள்ள ஒருவர் கத்தோலிக்க சங்கத்தின் (இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தால்) தலைவராக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது .இச்செய்தியின் பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது போல கன்னடரல்லாத இயேசு கிறிஸ்துவை இவர்கள் ஏன் கும்பிட வேண்டும் .இவரெல்லாம் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வதே வெட்கக்கேடு.

காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது .எனவே கர்நாடகாவுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .ஆனால் காவிரி முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கே சொந்தம் என்று ஊளையிடுவது இந்திய ஒருமைப்பாட்டிக்கே அவமானம் .இதை மத்திய அரசு வேட்டிக்கை பார்ப்பது வேதனையானது .சரி .அப்படியே சொல்லி விட்டுப் போகட்டும் .ஆனால் இருவருக்கும் பொதுவான நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் இந்த கன்னட அமைப்புகள் காட்டும் வன்மத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? தான் என்ன செய்தாலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தமிழக தமிழர்கள் எதிராக எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற கோழை மனப்பான்மையும் மிரட்டல் புத்தியுமே கன்னட அமைப்புகளின் இந்த காட்டுமிராண்டித் தனங்களுக்கு அடிப்படைக் காரணம்.

தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு தலைக் கொள்ளி எறுப்புக்கள் .மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தான் .தன்மானம் இல்லாதவர்கள் ,மொழியுணர்வு இல்லாதவர்கள் என்ற மற்ற சில தமிழர்கள் சொல்லும் பழிச்சொல் ஒரு பக்கம் ..மொழி வெறி பிடித்தவர்கள் என்ற மற்ற மாநிலத்தவரின் அரை வேக்காட்டு குற்றச்சாட்டு மறு பக்கம் .தமிழகத்தில் கூட இதைக் கண்டித்து சிறிது குரல் எழுப்பினாலும் மொழி வெறியனென்று திட்டி ,முதலில் நாம் இந்தியர் என்றெல்லாம் இலவச அறிவுரை வழங்கி தேச துரோகிகளாக சித்தரிக்கும் தமிழரிலே ஒரு கூட்டம் மறுபக்கம் .எப்படி இருப்பினும் இத்தனை தூண்டல்களுக்குப் பின்னரும் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு அறிவுபூர்வமாக நடந்து கொண்டிருக்கும் தமிழக தமிழர்கள் தங்கள் முதிர்ச்சியை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள்.

கர்நாடகா-வினர் வெளிப்படையாக தனிக் கொடி வைத்திருக்கலாம் .தமிழர்களை அடிக்கலாம் .தமிழ் சார்ந்த அனைத்தையும் தடை செய்யலாம் .காவிரியில் எவனுக்கும் பங்கு கிடையாது என்று முழங்கலாம் .ஆனாலும் அவன் இந்தியன் .ஆனால் கார்கில் போரானாலும் சரி ,குஜராத் பூகம்பம் ஆனாலும் சரி இந்தியாவிலேயே அதிகமாக வாரிக்கொடுத்த தமிழன் தன் உரிமை பற்றி வாய் திறந்தாலோ உள்ளூரிலேயே தேச துரோகிப் பட்டம்.

வாழ்க இந்திய ஒருமைப்பாடு!

Friday, January 26, 2007

கலைஞரும் சாயி பாபாவும்

Photobucket - Video and Image Hosting

சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார் .இது தான் செய்தி.

பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் .எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர் .பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர் .இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?

பாபா ஆன்மீகவாதி .கலைஞர் ஆன்மீக மறுப்பாளர் .இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்று தான் .கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை .கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .

ஆனால் நடந்தது என்ன ?பிரதமர்களும்,கவர்னர்களும் ,முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார்.அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை .அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள் .இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை .காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும் ,அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள் .

இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது .ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே .இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே .ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை ,ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.

இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார் .கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்..ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள் .ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம் ..நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?

முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர் .

சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை..இதோ பார் .நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி ,இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து ,தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் ,கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள் .அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது ,இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு ,சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது...
"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.


மதிநுட்பத்தோடு செயல்பட்டு ,நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!


படம் :நன்றி -விகடன்

Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் முடிவு - விஜயகாந்தின் உள்குத்து

கொஞ்ச நாளாகவே விஜயகாந்த் செய்யும் அரசியலின் மீது எனக்கு ஒரு சந்தேகம் .அந்த சந்தேகம் இப்போது உண்மையாகும் அறிகுறிகள் தெரிகின்றன.

தனிக்கட்சி ஆரம்பித்தது முதலே விஜயகாந்த் திமுக-வையும் கலைஞரையும் கடுமையாக தாக்கி வருகிறார் .இன்று தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக காட்டிக்கொள்ளும் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கலைஞர் அபிமானி என அறியப்பட்டவர் .திமுகவினர் விஜயகாந்தை தங்கள் கட்சி அபிமானி என்றே முன்பு அறிந்திருந்தனர் .ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு அவர் திமுக ,அதிமுக இரண்டையும் தாக்கினாலும் ,திமுக எதிர்ப்பை அளவுக்கு அதிகமாகவே செய்து வருகிறார் .அதிமுக-வை பட்டும் படாமல் ஒப்புக்கு மட்டுமே தாக்குவதோடு தன்னை எம்.ஜி,ஆர் பக்தராக முன் நிறுத்தி வருகிறார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவருடைய வருகை அதிமுகவை விட திமுகவுக்கே வாக்கு இழப்பாக இருக்கும் என பத்திரிகைகள் ஆரூடம் சொன்னன. அவரும் ஏதோ திமுகவை எதிர்த்தே கட்சி ஆரம்பித்தது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதிலுள்ள சூட்சுமம் என்னவாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு ஓட்டு என்பது 50% மேல் உள்ளது .இதில் பெரும் பகுதியை அதிமுக அறுவடை செய்து வந்தது .தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மூலம் கிடைக்கும் சொற்ப சதவீதத்தோடு கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களில் பெரும் பகுதியை கைப்பற்றுவதே விஜயகாந்தின் திட்டமாக இருக்க முடியும் .அதோடு எம்.ஜி.ஆர் அபிமானிகளின் ஓட்டுக்களையும் பெற முயல்வது .அதற்கு ஒரே வழி கலைஞரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது .

இதன் மூலம்
1.கலைஞரை எதிர்ப்பதற்காக மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி விஜயகாந்துக்கு வாக்களிக்கும்.

2.கலைஞர் எதிர்ப்பு என்ற தாரக மந்திரத்தை கொண்டே எம்.ஜி.,ஆர் வெற்றி பவனி வந்தது போல ,கலைஞர் எதிர்ப்பாளராகவும் எம்.ஜி.ஆர் பக்தராகவும் காட்டிக்கொண்டால் ,கலைஞர் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜெயலலிதாவை வேண்டாவெறுப்போடு ஆதரித்து வந்த எம்.ஜி.ஆர் அபிமானிகள் ஓட்டுக்களையும் பெற முடியும்.

3.ஜெயலலிதாவை விட கலைஞரை அதிகமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்து தன் பக்கம் திரும்புவார்கள்.

இதோ மதுரை இடைத்தேர்தல் முடிவுகள்...

திமுக - 57 %
அதிமுக - 24 %
தேமுதிக - 19 %


கலைஞரும் விஜயகாந்தும் உள்குத்து கூட்டணி அமைத்துக்கொண்டு ,கலைஞர் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பு பயணம் வெற்றிப்பாதையில் செல்வது போலத்தான் தெரிகிறது.

Monday, May 15, 2006

குமரி மாவட்ட முடிவுகள் -சுவாரஸ்யத் துளிகள்

பொதுவாக தென் மாவட்டங்கள் அதிமுக கோட்டை ,தென் மாவட்டங்கள் சாதி மோதலுக்கு பெயர் போனவை என்று குறிப்பிடப்படும் போது தென் கோடியிலிருக்கிற எங்கள் குமரி மாவட்டத்தை ஒருவேளை தென் மாவட்டங்களில் சேர்க்கவில்லையா அல்லது குமரி மாவட்டத்தை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லையா என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .ஏனென்றால் குமரி மாவட்டம் ஒரு போதும் அதிமுக-வின் கோட்டையாக இருந்தது இல்லை என்பது மட்டுமல்ல ,தமிழகத்திலேயே அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கும் மாவட்டம் இது தான் என்பதும் உண்மை .அதுபோல மற்ற தென் மாவட்டங்களைப் போல ஜாதி மோதல்கள் எனக்கு தெரிந்து இல்லாத மாவட்டமும் இது தான் (1982 மதக்கலவரம் வேறு).

தமிழகத்திலேயே படிப்பறிவில் முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டம் இன்று வரை தேசியக் கட்சிகளின் கூடாரமாக இருக்கிறது .பெருந்தலைவர் காமராஜர் நாகர் கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞர் இங்கு முகாம் அமைத்து தீவிர பணியாற்றியும் மக்கள் பெருந்தலைவரை 'அப்பச்சி' 'அப்பச்சி' என்று வாஞ்சையோடு அழைத்து அமோக வெற்றி பெற செய்தார்கள் .அதனாலேயோ என்னவோ கலைஞர் அவர்கள் குமரி மாவட்டம் என்றாலே பாராமுகம் காட்டுவது உண்டு .ஒரு முறை வெறுத்துப் போய் 'நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை' என்று குறிப்பிட்டார் .பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னாலும் அவரை மிகவும் நேசிக்கும் மக்கள் நிறைந்த மாவட்டத்தில் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக கோலோச்சி வந்தது .

நாளடைவில் இந்துத்துவ கட்சிகள் இங்கு தலையெடுக்க ஆரம்பித்தன. தமிழகத்தில் சிறுபான்மை மதத்தினர் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருப்பதால் இயல்பாக இந்த மாவட்ட அரசியலிலும்,பொருளாதாரத்திலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பதை சில இந்து அமைப்புகள் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிலே ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் .தமிழகத்தில் பாஜக காலூன்றாத காலத்திலேயே பத்மநாதபுரம் தொகுதி முதல் பாஜக எம்.எல்.ஏ -வை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

அதிமுக-வைப் பொறுத்தவரை திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றிருக்கிறது .நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதன் நிலைமை அந்தோ பரிதாபம் தான். கேரள எல்லையில் அமைந்திருக்கும் திருவட்டாறு ,விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

இந்த தேர்தலில் பலம் பொருந்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இருந்ததால் திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு இயல்பான ஒன்று தான் .ஆனால் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மதிமுக- வை கூட்டணியில் பெற்றிருந்த அதிமுக டெபாஸிட் தொகையை இழக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வழக்கம் போலவே பாளையங்கோட்டை வரை வந்த கலைஞர் ,தொல்லை மாவட்டமான குமரிக்கு பிரச்சாரத்துக்கு வராத நிலையில் அதிமுக அணியில் ஜெயலலிதா ,வைக்கோ ,சரத்குமார் என்று அனைவரும் மாவட்டம் முழுக்க பிரச்சாரம் செய்தார்கள்.


தொகுதிவாரியாக இங்கு முடிவுகளைப் பார்ப்போம்...

நாகர்கோவில் - திமுக வெற்றி

ராஜன் (திமுக) -45,354
எஸ்.ஆஸ்டின் -31,609
ரத்தினராஜ்(மதிமுக) - 21,990
உதயகுமார்(பாஜக) -10,752
தேதிமுக -3783

இது தனிப்பட்ட முறையில் என்னுடைய தொகுதி .சென்ற முறை திமுக கூட்டணியில்(திருநாவுக்கரசு கட்சி) வென்று எம்.எல்.ஏ-வாக இருந்த ஆஸ்டின் பின்னர் அதிமுகவில் இணைந்தார் .அவருக்கு சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார் .சுனாமி நேரத்தில் கட்சி சார்பாக இல்லாமல் ,தான் சார்ந்திருந்த சர்ச் சார்பில் அவர் ஆற்றிய பணி அபாரம் .அந்த நன்றி மறவாத மீனவ மக்கள் அவருக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு ,கணிசமான வாக்குகளும் இரண்டாமிடமும் ..அதிமுக கூட்டணி 3-வது இடத்தில்.

பத்மநாபபுரம் - திமுக வெற்றி

தியோடர் ரெஜினால்ட் (திமுக) -51,612
ராஜேந்திர பிரசாத்(அதிமுக) -20,546
வேலாயுதன்(பாஜக) -19777
தேதிமுக -3360

200-க்கு மேல் திமுக கூட்டணிக்கு கணித்திருந்த ஜூவியில் கூட ,அதிமுக வெற்றி பெறும் என்று கணித்திருந்த தொகுதி ,கடைசியில் அதிமுக பெற்ற வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகம் என்று முடிந்திருக்கிறது ..பாஜக ஒரு காலத்தில் கோலோச்சிய தொகுதி .அதிமுக அளவுக்கு பாஜக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் (ராஜேந்திர பிரசாத் கிறிஸ்தவர் தான்..நம்புங்கள்..ஹி..ஹி) மதரீதியில் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்று சொல்லலாம்.

குளச்சல் (காங்கிரஸ் வெற்றி)

ஜெயபால் (காங்) -50,258
எம்.ஆர்.காந்தி -29,261
பச்சைமால்(அதிமுக)-20,407
தேதிமுக - 4941

காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி என்று நினைத்திருக்க அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடத்தில் பாஜக. தேதிமுக வேட்பாளர் மீனவர் என்பதால் மீனவர் ஓட்டை பெருமளவு பிரிக்கிறார் என்று ஜூவியிலும் ,இங்கே வலைப்பதிவிலும் சொல்லப்பட்ட போது நான் அதை மறுத்தேன் .அது பொய்க்கவில்லை .மீனவ ஓட்டுக்களை இம்முறை காங்கிரஸ் அள்ளியிருக்கிறது.

கிள்ளியூர் (காங்கிரஸ் வெற்றி)

ஜாண் ஜேக்கப்(காங்) -51,016
சந்திரகுமார்(பாஜக) -24,441
டாக்டர் குமாரதாஸ் (அதிமுக) -14,056
தேதிமுக - 1743

டாக்டர் குமாரதாஸ் கோலோச்சிய தொகுதி .ஜனதா தளம்,காங்கிரஸ் ,த.மா.க சார்பாக பல முறை அமோக வெற்றி பெற்ற டாக்டர் குமாரதாஸ் ,பச்சோந்தியாக மாறி அதிமுக சார்பில் நின்றதால் மக்கள் வெறுப்பை சம்பாதித்து டெப்பாஸிட் இழந்து மூன்றாமிடத்தில் பரிதாபமாக நிற்கிறார்..அய்யோ பாவம்!

திருவட்டாறு (மா.கம்யூ வெற்றி)

லீமா ரோஸ் (மா.கம்யூ) -57,162
சுஜித்குமார்(பாஜக) -29,076
திலக்குமார்(அதிமுக) -13,353
தேதிமுக -9431

கம்யூனிஸ்ட் அமோக வெற்றி பெற ,பாஜக இரண்டாமிடத்தில் ..அதிமுக பரிதாபமாக டெப்பாஸிட் இழந்து நிற்கிறது.அதிமுக +பாஜக கூட கம்யூ ஓட்டை நெருங்க முடியவில்லை.என்னங்க நடக்குது?


விளவங்கோடு (மா.கம்யூ வெற்றி)

ஜாண் ஜோசப் (மா.கம்யூ) -64,552
பிராங்கிளின்(அதிமுக) -19,458
பொன்.விஜயராகவன் -13,434
தேவதாஸ்(பாஜக) -12,553
தேதிமுக -7309

இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் ,இந்த சிறிய தொகுதியில் 4 முனை போட்டியில் நிகழ்த்தப்பட்டிருப்பது உண்மையிலேயே சாதனை தான். வாக்கு வித்தியாசம் 45000-க்கு மேல். இதற்கு மேல் என்ன சொல்லுவது?

கன்னியாக்குமரி (திமுக வெற்றி)

சுரேஷ்ராஜன் (திமுக) -63,181
தளவாய் சுந்தரம்(அதிமுக) -52,494
தேதிமுக -5093
பாஜக -3436

மற்ற தொகுதிகளிலிருந்து தனித்து நிற்பதும் ,அதிமுகவின் மானத்தை ஓரளவு காத்ததும் இந்த ஒரே தொகுதி தான் .இங்கு வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற செண்டிமெண்ட் இந்த முறையும் தப்பவில்லை.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது...

* அதிமுக ஏற்கனவே பலவீமமாயிருந்து ,இப்போது இன்னும் சரிந்திருக்கிறது

* ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அதிமுக எதிர்ப்பு அலை பலமாகவே வீசியிருக்கிறது.

* வழக்கமாக அதிமுக -வுக்கு சாதகமான மீனவர் ஓட்டுக்கள் இம்முறை பல்வேறு காரணங்களால் வேறு அணிக்கு போயிருக்கிறது

*அதிமுக 3 இடங்களில் டெபாஸிட் தொகையை இழந்திருக்கிறது

* பரவலாக தமிழகத்தில் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருக்க ,குமரி மாவட்டத்தில் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கிறது

* பாஜக செல்வாக்கு சரிந்திருந்தாலும் ,கணிசமாக வாக்கு வங்கி இன்னும் இருக்கிறது.

* மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இங்கு விஜயகாந்துக்கு ஆதரவு மிகக்குறைவு.

* திராவிடக்கட்சிகளில் இம்மாவட்டத்தில் பலமான திமுக தன் பலத்தை கூட்டியிருக்கிறது.

* தேசியக்கட்ட்சிகள் தொடர்ந்து குமரிமாவட்டத்தை கட்டிப்போட்டிருக்கின்றன.

திமுக -வுக்கு எச்சரிக்கை மணி!

தன் தள்ளாத வயதிலும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தனது பிரச்சாரத்தினால் கூட்டணியை தூக்கி நிறுத்தி ,இன்றும் தன்னை வசீகரத் தலைவராக நிரூபித்து ,வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்தின் முதல்வராக 5-வது முறை பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

சுவாரஸ்யம் மிகுந்த இந்த தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது .

அதிமுக ஆட்சியை இழந்தாலும் ,மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழக்கவில்லை என்பதை அக்கட்சி வலிமை குறைந்த கூட்டணியிலும் பெற்ற பெருவாரியான வெற்றியும் ,வாக்குக்களும் புலப்படுத்துகின்றன .அதிமுக இதை சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது எமது விருப்பமென்றாலும் ,அதன் தலைமை அந்த அளவுக்கு பக்குவப்பட்டது போல் தெரியவில்லை.

திமுக-வைப் பொறுத்தவரை கூட்டணி பலத்தால் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் ,பல இடங்களில் திமுக-வுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் என்பது உண்மை.

திமுக-வின் கோட்டை எனப்படும் சென்னையில் அதிமுக இம்முறை 14-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது .திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் கூட அதன் வாக்கு வித்தியாசம் திருப்தியுறும் அளவுக்கு இல்லை .இதற்கான காரணங்களை இதய சுத்தியோடு ஆராயவேண்டும் .சென்னையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் தட்டுப்பாடை நீக்கும் திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பது என் எண்ணம் .திமுக வழக்கம் போல பாரம்பரிய கோட்டை என்றெல்லாம் இனிமேல் சால்ஜாப்பு சொல்ல முடியாது .மக்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் .பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்து பெருவாரியான மக்கள் வெளியே வந்து ,பிரச்சனைகள் அடிப்படையில் ஓட்டளிக்கும் பாங்கு இப்போது அதிகரித்து வருகிறது .திமுக-வின் கோட்டையை தகர்க்க சென்னையைப் பொறுத்தவரை ஜெயலலிதா எடுத்த சில முயற்சிகள் வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள விதத்தில் அமைந்தது என்பதை ஜெயலலிதா எதிர்ப்பாளரான என் போன்றவர்கள் ஒத்துக்கொள்வதில் ஒன்றும் தயக்கம் இல்லை .அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்கள் .அதே வகையில் நல்லதை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்று சென்னை நகர மக்கள் கொடுத்திருக்கும் செய்தியை திமுக சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வெறும் பாரம்பரிய கோட்டை என்னும் மாயையை மட்டும் வைத்து இனிமேல் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் சென்னையில் பாதிக்கு பாதி இடங்கள் ,கோவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ,விருதுநகர்,தேனியில் பெருவாரியான இடங்கள் ,தூத்துக்குடி மற்றும் தஞ்சையில் பாதிக்கு பாதி இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .அதையும் மீறி கூட்டணி பலமின்றி அதிமுக பெற்ற ஓட்டுக்களை குறைத்து மதிப்பிட முடியாது தான் .

கலைஞர் அவர்கள் மற்றொரு விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .தான் திமுக கோட்டை என்று நம்பிய பல பகுதிகள் திமுகவை கைவிட்டது போல ,பாரம்பரியமாக தனக்கு சாதகமில்லாததாக திமுக நினைக்கும் பல பகுதிகள் திமுக-வை கைதூக்கி விட்டுருக்கின்றன.. உதாரணமாக கலைஞர் அவர்கள் தனது பிரச்சார பயணத்தில் முற்றிலுமாக புறக்கணித்த குமரி மாவட்டம் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்தது மட்டுமல்ல ,அதிமுக கூட்டணியை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழக்க செய்திருக்கிறது(இது பற்றி தனிப்பதிவு விரைவில்) .இனிமேலாவது கலைஞரும் திமுக-வும் இது போன்ற முன் முடிவுகளின் அடிப்படையும் செயல்படாமல் இருப்பது நல்லது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரேயடியாக ஆதரவும் தெரிவிக்கவில்லை ,முழுவதுமாக கைவிடவும் இல்லை .கலைஞரை முதல்வராக்கினாலும் திமுக-வுக்கு பல இடங்களில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள் .அதிமுக-வை ஆட்சியை விட்டு அகற்றினாலும் முழுவதுமாக கைவிட்டு விடவில்லை .மதிமுக தோல்வியை தழுவினாலும் முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறது .விடுதலைச் சிறுததைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்கள் .பாமக 17 தொகுதிகளைப் பிடித்திருந்தாலும் மக்கள் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .விஜயகாந்தின் துணிச்சலுக்கு பரிசாக பெருவாரியான வாக்குகளையும் அளித்து அவரை சட்டமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள் .சுயேட்சைகளை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டுமென்று அவர்களுக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் .

எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஒரு காலத்தில் மலையாள சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு தமிழ் சினிமாவை அதீதமாக கேலி செய்யும் நிலைமை இருந்தது .இன்று தமிழ் சினிமா அதன் தரத்தை உயர்த்தி அந்த இடைவெளியை குறைத்திருக்கிறது .இப்போது அரசியலும் அந்த பாதையில் மாறிக்கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் .மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும் கேரளாவைப்போல கடந்த நான்கு முறை தொடர்ந்து தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது .கேரளா போன்று முழுமையான கூட்டணியாட்சி இல்லையெனினும் கூட்டணி ஆதரவோடு ஆட்சி நீடித்து அமையும் என நம்புகிறேன் .

இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!

அனுபவமும் ஆற்றலும் கொண்ட கலைஞர் தலைமையில் தமிழகம் ஆக்க பூர்மான வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்..வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!

Thursday, March 30, 2006

நாகர்கோவில் தொகுதி அலசல்

குமரி மாவட்டம் எப்போதுமே அரசியலில் விசித்திரமான முடிவுகளையும் ,அரசியல் கட்சிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளையும் அளிக்கும் மாவட்டம் .பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் வென்ற பின்னர் நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி பொதுவாக காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்திருக்கிறது.

திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் எப்ப்போதுமே செல்வாக்கு குறைந்த மாவட்டம் .கலைஞரே ஒரு முறை வெறுத்துப்போய் " நெல்லை எங்கள் எல்லை .குமரி எங்கள் தொல்லை" என்று சொல்லியிருக்கிறார்.காங்கிரஸ்,பா.ஜ.க ,கம்யூனிஸ்டுகள் ஏன் ஜனதா தளம் கூட இங்கே குறிப்பிடத்தக்க செல்வாக்கோடு கோலோச்சியிருக்கின்றன .நாகர் கோவில் சட்ட மன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக வரும் கட்சி இங்கு வெற்றி பெறுவதில்லை அல்லது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் நிலையே இருக்கிறது .

* எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் வின்செண்ட் வென்றார் (1977,1980) .தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மீனவர்களின் சுளையான ஓட்டு இவரை இரு முறையும் கரையேற்றியது .ஆனால் 1982 மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவர் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என்பதால் அம்மக்கள் இவரை விரட்டி அடித்தனர் .அப்போதே அவர் அரசியலிலும் காணாமல் போனார்.

*எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுகொண்டே ஜெயித்த 1984 தேர்தலில் தமிழகம் அதிமுக பக்கம் சாய ,நாகர்கோவிலில் திமுக வென்றது .அப்போது தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ரத்தினராஜ் ,இப்போது ம.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

* 1989,1991,1996 மூன்று தேர்தல்களிலும் வென்றவர் டாக்டர் மோஸஸ் (காங்கிரஸ் ,தா.ம.க சார்பில்) .ஓட்டுக் கேட்க வருவதோடு இவர் பணி முடிந்து விடும் .ஜெயித்த பிறகு அடுத்த தேர்தல் வரை ,வாயில் வெத்திலையை குதப்பிக்கொண்டு அவருடைய மருத்துவமனையில் மட்டும் அவர் பணி தொடரும் .இவரிடமும் மக்கள் வெறுத்துப் போயினர்.

*2001 தேர்தலில் அதிமுக தமிழகம் முழுதும் வெற்றி முழக்கமிட ,நாகர் கோவில் தொகுதியில் வென்றவர் திமுக கூட்டணியில் திருநாவுக்கரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் .திடீரென்று அரசியலில் குதித்து குறுகிய காலத்தில் ஜெயலலிதாவால் அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,ராஜ்யசபா எம்.பி யாகவும் நியமிக்கப்பட்ட ஆஸ்டின் ,பின்னர் திருநாவுக்கரசுவுடன் அதிமுகவிலிருந்து வெளியேறினார் .தி.மு.க தொண்டர்களின் உழைப்பினால் எம்.எல்.ஏ ஆனவர் திருநாவுக்கரசு கட்சியை பா.ஜ.க வுடன் இணைத்த போது ,ஒரு கிறிஸ்தவராக அந்த கட்சிக்கு போக முடியாமல் மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாயுள்ளார் .இப்போது தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற தேர்தலில் மதிமுக இரண்டாமிடம் பிடித்த குளச்சல் தொகுதியை அதிமுகவே எடுத்துக்கொண்டுள்ளது)

* இந்த தொகுதியில் பா.ஜ.க வும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது .காரணம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருப்பது .எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்ணணி இங்கு 20% மேல் கணிசமான வாக்குக்களை பெற்று ஜெயலலிதா கட்சியை நான்காம் இடத்துக்கு தள்ளியது .இன்றும் நடிகர் திலகம் ரசிகர் நிறைந்த தொகுதி இது. ம.தி.மு.க குளச்சல் அளவு இல்லையெனினும் ஓரளவு ஓட்டு வங்கி பெற்றுள்ளது.

* மற்ற மாவட்டங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதி குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது போல ,இங்கு மதம் ஓரளவு ஒரு காரணியாக இருக்கிறது .பெரும்பாலும் கிறிஸ்தவர்களே இங்கு வென்று வந்துள்ளது அதைக்காட்டுகிறது.


இந்த தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தி.மு.க வும் ம.தி.மு.கவும் மோதுகின்றன . ம.தி.மு.க வில் முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின ராஜ் வேட்பாளர் .எளிய மனிதர் .நாகர் கோவில் டீகடைகளில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சாதாரணமாக நின்று கொண்டிருப்பார் .எளிமை அவருக்கு அனுகூலம் என்றாலும் தனிப்பட்ட செல்வாக்கோ ,பணபலமோ ,வசீகரமோ இல்லாதவர்.

தி.மு.க இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை .இந்த தொகுதியில் அதிமுக -வை விட தி.மு.க செல்வாக்கான கட்சி என்றபோதும் வெற்றி பெற அது போதாது .தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ் ஓட்டுக்களை தி.மு.கவுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது .அது போல கணிசமான ஓட்டுக்களை கொண்டுள்ள பா.ஜ.க தனித்து போட்டியிடும் சூழநிலையில் அதுவும் வெற்றி தோல்வியை பாதிக்கும் முக்கியமான காரணி .பா.ஜ.க ஆதரவு ஓட்டுக்கள் அப்படியே பா.ஜ.க வுக்கு விழும் பட்சத்தில் அது தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மை.இதற்கிடையில் அதிமுக-வில் புறக்கணிக்கப் பட்டதால் ஆஸ்டின் சுயேட்சையாக நிற்கலாம் என்ற பேச்சு இருக்கிறது .அப்படி நடந்தால் அதுவும் தி.மு.கவுக்கு சாதகமே.

மதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் ஆஸ்டினை சரிகட்ட வேண்டும் .பா.ஜ.க ஓட்டுக்களை ஓரளவு திசைதிருப்பி பெறவேண்டும் ..தி.மு.கவை பொறுத்தவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டு ஓட்டுக்களை முழுவதுமாக பெற்றுவிட்டால் வெற்றிக்கோட்டை தொடலாம் .தொகுதியிலிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்கள் பொதுவாக தி.மு.க பக்கம் என்பதும் அக்கட்சிக்கு சாதகமான அம்சம்...தி.மு.க வேட்பாளர் யார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

Sunday, March 05, 2006

கலைஞர் தடுமாறுகிறார்

கடந்த 35 ஆண்டுகளாக கலைஞர் தமிழக அரசியலின் மையப்புள்ளி .வெற்றியும் தோல்வியும் அவரில்லாமல் இல்லை .'அரசியல் ராஜதந்திரி' என வர்ணிக்கப்பட்டிருக்கிறவர் .மோதுகின்ற இரு தலைகளில் எதிர் புறம் நிற்கிற போட்டியாளர் மாறியிருக்கிறாரே தவிர கலைஞர் எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார்(காமராஜரிலிருந்து ஜெயலலிதா வரை) .ஆயிரம் விமரிசனங்கள் ,கோப தாபங்கள் ,எரிச்சல்கள் இருந்தாலும் ,அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்திருக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன் .ஆனால் இப்போது கலைஞரை 'ராஜதந்திரி' என்றழைப்பது கடினமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.

மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.

நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.

1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .

3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.

4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.

5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.

Wednesday, December 14, 2005

தமிழக அரசியல் - கேளிக்கை

சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதாலோ என்னவோ ,தமிழக அரசியல் வெகு காலமாக தனி மனித செல்வாக்கை மையமாக வைத்தே நடை போடுகிறது .நமது பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் ,அங்கே ஆட்சி அமைப்பதில் தனிமனித செல்வாக்கை விட கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை பெறுகிறது .ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் தலைவருக்காகத் தான் அந்த கட்சிக்கு ஓட்டளிக்கின்றனர் .தி.மு.க வுக்கு ஓட்டளிப்பவர்களில் பாதி பேர் கலைஞர் வரவேண்டும் என்றும் ,இன்னொரு பாதி பேர் ஜெயலலிதா வரக்கூடாது என்றும் வாக்களிக்கின்றனர்.அதே போல அ.தி.மு.க வின் ஓட்டுவங்கி ஜெயலலிதா ஆதரவு ,கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டு காரணிகளை உள்ளடக்கியது.இரண்டு பக்கத்திலும் ஒரு பெரும் கூட்டம் "அவருக்கு இவர் பரவாயில்லை' என்ற நிலைப்பாட்டிலேயே ஓட்டளிக்கின்றனர்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ,மக்கள் மதிக்கின்ற பலருக்கு ஓட்டளிப்பதில்லை .முதல் இரண்டு நிலைகளுக்கு கீழே இருக்கும் கட்சிகளின் சில தலைவர்கள் மேல் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் அவை ஒட்டுகளாக மாறுவதில்லை .காரணம் போட்டி என்பது முதல் இரண்டு பேருக்குத் தான் என்ற தோற்றம் வரும் போது ,வீணாக தன் ஓட்டை வெற்றி வாய்ப்பில்லாத ஒருவருக்கு போடும் போது ,அதன் மூலம் முதலிரண்டு நிலைகளில் தான் அதிகம் வெறுக்கும் கட்சி சாதகம் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ,முதலிரண்டு கட்சிகளில் தான் குறைவாக வெறுக்கின்ற கட்சிக்கு ஓட்டளிக்கிறார்கள்.

பொதுவாக இந்த ஆட்டுமந்தை மனநிலை தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை ! "நீ ஏம்பா ரஜினி ரசிகனா இருக்க?" -ன்னு கேட்டா "எனக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்கும்" இப்படி எதாவது சொல்லாமல் "அவர் படம் தானே ஓடுது .அதான் அவர் ரசிகன்' என்று பலர் சொல்லுவது போல ,பலர் இங்கே வெற்றி பெறுகின்ற பக்கம் சாய்வதை ,எங்கே ஆரவாரம் செய்ய வாய்ப்பிருக்கிறதோ ,எங்கே இருந்தால் தான் வெற்றி பெற்ற பக்கம் இருந்தேன் என்று சொல்லி மற்றவரை கேலி செய்து சுகம் காண முடியுமோ ,அங்கே கண்ணை மூடிக் கொண்டு சாய்கிற மனநிலை சினிமா போலவே ,அரசியலிலும் இருக்கிறது .
ஏனென்றால் இங்கு அரசியல் கூட ஒரு கேளிக்கை போலத் தான் இருக்கிறது .

கண்ணியமாக ,அமைதியாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மதிக்கப்படுகிற போதும் ,தேர்வு செய்யப்படுவதில்லை ."அன்பே சிவம்' மிக நல்ல படம் என்று நானறிந்த எல்லோரும் சொல்கிறார்கள் .ஆனால் அது தியேட்டரில் சென்று பார்ப்பதற்கல்ல .அதிலே விசிலடிக்க ஒன்றுமில்லை.'சிவகாசி' எனக்கு எப்படி சகிக்கவில்லையோ ,அதுபோல நானறிந்த பல நண்பர்களுக்கும் அவ்வாறே ,ஆனல் அது வசூலில் தூள்பறத்துகிறது .அது போல 'நல்ல கண்ணு'கள் இருக்கலாம் .நல்ல மனுசன் தான்னு எல்லோரும் சொல்லுறாங்க .ஆனா ஒரு கெத்து வேணாங்களா ? தலைவர்னா ஒரு மவுசு வேணாமா ? அவர் கலர பாத்து நாம வாய் பிழக்க வேண்டாமா ?ஒரு கலர்புல்லா இருந்தா தானே நல்லா இருக்கும் ,அப்படின்னு தான் சாதாரண மக்கள் நினைக்குறாங்க .
ஒரு கட்சியின் பலமே ,அது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறது ,அதன் தலைவர் கைது செய்யப்படும் போது எத்தனை பஸ் கண்ணாடிகள் உடைகிறது என்பதை பொறுத்து தான் மக்களால் எடை போடப்படுகிறது எனும் போது ,அரசியல் வாதிகள் அதற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறார்கள்.அவ்வாறு நடந்து கொள்ளாத அரசியல் வாதிகள் பலமில்லாத ,தலைவருக்குரிய கவர்ச்சி இல்லாதவராக ,இன்னும் சொல்லப்போனால் கேலிக்குரியவராக ஆக்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது .ஆக இங்கு பலமிக்க அரசியல்வாதியாக வளருவதற்கு மசாலா சினிமா போல ,மசாலா அரசியல் செய்தால் தான் ரசிகர்கள் இருப்பார்கள் .இல்லையென்றால் கண்ணியமான சொங்கி அரசியல் வாதிக்கு தொண்டனாக இருப்பதில் என்ன சுவாரசியம்?

உதாரணத்துக்கு பா.மா.க வை எடுத்துக் கொள்ளுவோம் .நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் "பா.ம.க கிலோ என்ன் விலை?' என்று கேட்கும் நிலை தான் .அதனால் எனக்கு எந்த சார்பும் கிடையாது.ராமதாஸ் காந்திய வழியில் நடந்து கொண்டிருந்தால் ,அவரைப்பற்றி யாரும் இங்கு பேசப்போவதும் இல்லை ,பாராட்டப் போவதும் இல்லை .அவர் தனது துவக்க கால போராட்ட முறைகளில் மசாலா தூவினார் .ரசிகர்கள் கிடைத்தார்கள் .அவரை எதிர்க்கும் கூட்டம் அதிகமானது .எதிர்ப்பு கூடக் கூட பிரபலமும் கூடுகிறது .பிரபலம் கூடக் கூட ரசிகர்களும் கூடுகிறார்கள் (இதில் நான் ராமதாஸ் அவர்களின் அரசியல் தேவை ,அவர் சார்ந்த சமுதாய எழுச்சியின் அவசியம் பற்றி பேச வரவில்லை .அதில் எனக்கு வேறு கருத்துக்கள் உண்டு .இங்கே வழிமுறைகள் பற்றியே பேசுகிறோம்)

வைக்கோவை எடுத்துக்கொள்வோம் .ஈழத்தமிழர் விடயத்திலும் ,கலைஞரோடு குலாவுவதிலும் பலருக்கு அவர் மேல் கருத்து வேற்றுமை இருக்கலாம் .ஆனால் அவர் குறைந்த பட்ச கண்ணியமாவது கடைபிடிக்கிற அரசியல் வாதி என்பது என் கருத்து .தமிழகத்தில் குறிப்பிடத் தக்க அளவு இளம் தொண்டர்களை கொண்டிருக்கின்ற தலைவர் அவர் .ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையிலடைக்கப்பட்ட போதும் ,நடைபயணங்கள் நடத்திய போதும் ,அவர் காட்டிய கண்ணியம் போற்றுதலுக்குரியது .தன்னிடமுள்ள இளைஞர் சக்தியை அவர் இதுவரை வன்முறைக்கு தூண்டி விட்டதில்லை .அவர் நினைத்திருந்தால் அவரது தொண்டர்களை பஸ் கண்ணாடியை உடைக்க தூண்டி தன் பலத்தை காட்டியிருக்கலாம் .ஆனால் அவ்வாறு செய்யவில்லை .அவ்வாறு அவர் கண்ணியம் காத்ததால் அவர் அடைந்த பலன் என்ன? "நடுநிலை"(?) சோ கூட இந்த கண்ணியத்தை பாராட்டியதில்லை .மாறாக அவரது தொண்டர்கள் அமைதி காத்ததை மறைமுகமாக அவரது பலமின்மையாக சுட்டிக்காட்டுவதும் , இயல்பான அவரது நெகிழும் குணத்தை கிண்டல் செய்து ,அவர் அழுமூஞ்சி என்ற ரீதியில் கேலி செய்வதும் தான் நடைபெற்றது .

ஜெயலலிதாவின் எதேச்சகாரமும் ,தான் என்ற எண்ணமும் ,வரட்டு பிடிவாதங்களும் கூட அவரது துணிவாகவும் ,தலைமைக்கு தேவையான உறுதியாகவும் அறிவு ஜீவிகளால் புகழப்படுகிற சூழ்நிலையில் ,கண்ணியமும் ,பொறுமையும் ,நல்லிணக்க முறைகளும் ஒரு அரசியல் வாதிக்கு கவனத்தையும் ,செல்வாக்கையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக ,பலகீனமாகவும் ,எள்ளலை சம்பாதித்து தருவதாகவும் இருக்கின்ற ஒரு சூழலில் ,ஆர்ப்பாட்ட அரசியல் ஒரு சாராரின் எதிர்ப்பை (அதில் பலர் ஓட்டே போடுவதில்லை) பெற்றுத்தந்தாலும் ,துடிப்பான அரசியல் வாதி என்ற தோற்றத்தையும் ,ஒரு சாராரின் கவனிப்பையும் பெற்றுத் தருமானால் ,அரசியல் வாதிகள் அந்த வழியை தேர்ந்தெடுப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .

அரசியலை பரபரப்பு கேளிக்கையாக மக்கள் நினைப்பதை குறைத்துக் கொள்ளும் வரை அரசியல்வாதிகள் இப்படித் தான் இருப்பார்கள்.

(சிறிது காலம் வலைப்பதிவுக்கு இடைவெளி விட வேண்டிய நிலை .புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் .அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives