Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Monday, March 26, 2007

தருமி கண்டுபிடித்த 1- ம் நம்பர் கிறுக்கன்

நான் ஒரு 1-ம் நம்பர் கிறுக்கன் -னு கண்டுபிடிச்சிருக்கார் தருமி .ஒரே ஒரு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை வைத்தே சரியா கணிச்சிருக்கார் .என்ன இருந்தாலும் வாத்தியார் அல்லவா.

1.சின்ன வயசுல நான் கிறுக்குத்தனமா இருந்தது 'பட்டம்' விடுறதுல .பட்டம்-ன்னா சென்னைல சின்னதா ஒரு பட்டம் விடுவாங்களே அது மாதிரி இல்ல .எங்க ஊருல கதவு அளவு பட்டமெல்லாம் விட்டிருக்காங்க .நான் விட்ட பட்டமெல்லாம் அரைக் கதவு அளவுக்கு .அதாவது மூங்கிலை வெட்டி 3 அடி ,1.5 அடி யாக தலா 3 கம்புகள் எடுத்து நீள் சதுரமாக கட்டி அதில் இரண்டு மூன்று அடுக்கு செய்தித் தாள்களை வைத்து ஒட்டி பட்டம் செய்து அதற்கு சரடி இட்டு ,வாலுக்குக்காக மீன்பிடிக்க பயன் படும் பெரிய கயிறை கட்டி ,நூலுக்கு பதிலாக மீன்பிடிக்க பயன்படும் நைலான் ரோல் வைத்து பட்டம் விடுவது தான் எங்க ஊருல வழக்கம் .சின்ன பட்டம் ,நூல் வைத்து விடுவதெல்லாம் எங்கள் ஊரில் கடற்கரையில் வீசுகிற காற்றுக்கு பஞ்சாக பறந்து விடும் .மே மாத கோடை விடுமுறையில் எனக்கு முழு நேர தொழிலே இது தான் .எனக்கு 2 உதவியாளர்கள் வேறு .எங்கள் வீட்டில் யாரும் மீன் பிடிப்பவர்கள் இல்லையாததால் உதவியாளர்கள் வீட்டிலிருந்து நைலான் ரோல் எடுத்து வருவார்கள் .தூண்டில் மீன் பிடிக்க பயன் படும் இந்த நைலான் ரோல் விறைப்பாக இருக்க வேண்டியது அவசியம் .அதனால் சில நேரம் மீன் பிடிக்க செல்லும் முன் 200 மீட்டர் நீளத்தில் இரண்டு பேர் பிடித்துக்கொண்டு இழுப்பார்கள் .பட்டம் விட இதே நைலான் ரோலை உபயோகித்தால் தானாகவே விறைப்பாக ஆகிவிடும் என்பதால் உதவியாளர்கள் வீட்டில் அதை நாங்கள் எடுத்து பட்டம் விடுவதில் சிக்கல் எதுவுமில்லை. காலை 9 மணியளவில் பட்டத்தை எடுத்து பாரமான வாலை கட்டி ,முதலில் ஒரு 50 அடி தூரம் கொண்டு சென்று பட்டத்தை விட்டால் விர்ரென்று 45 டிகிரியில் போய் ஆடாமல் அசையாமல் போய் நிற்கும் .பின்னர் மெதுவாக மீதமுள்ள ரோலை இரண்டு பேர் சேர்ந்து விடுவிக்க வேண்டும் .கொஞ்சம் அசந்தால் கையை அறுத்து விடும் .முழுவதுமாக ரோலை விடுவித்து பின்னர் ரோல் இருக்கும் கட்டையை ஏதாவது ஒரு மரத்தில் அல்லது கட்டுமரத்தில் கட்டிவைத்து விடுவோம் .பொதுவாக எங்கள் ஊரில் விடப்படும் பட்டத்தில் உச்சியில் நடு கம்பு நீளமாக இருக்கும் .அதில் சில நேரம் தேசியக் கொடி அல்லது அதிமுக ,திமுக கட்சிக் கொடி பறக்கும் .பெரும்பாலான பட்டத்தில் பெரிய எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்படிருக்கும் .நம்ம பட்டத்தில் மட்டும் சிவாஜி படம்.45 டிகிரில் விறைப்பாக நிற்கும் ரோல்.திருப்பி இழுக்க வேண்டுமென்றால் துணியை கையில் சுற்றி தான் இழுக்க வேண்டும் .இல்லையென்றால் கையை வெட்டி விடும் .தென்னை ஓலையை கிழித்து ரோலை சுற்றி சொருகி விட்டால் காற்றடிப்பதால் சல்லென்று மேலே சென்று பட்டத்தோடு ஒட்டிக்கொள்ளும் .எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் இங்கிருந்து தந்தி அனுப்புகிறோமாம்..இப்படி வேகாத வெயில்ல பட்டம் விட்டே கறுத்து கருவாடு ஆனேன் நான்.

2.பொதுவா நடந்து ஒரு இடத்துக்கு போறோம்னா ஏதோ கோட்டையை பிடிக்க போறது மாதிரி இண்டு இடுக்குல புகுந்து ,விறு விறுண்ணு நடந்து போகிற பழக்கம் எனக்கு .எதிரே யார் வர்றாங்கண்ணு கூட கவனிக்க மாட்டேன் .பல முறை தூரத்திலேயே என்னை பார்த்து விட்ட நமக்கு தெரிந்தவர் பக்கத்தில் வரும் போது நம்மை பார்ப்பான் என்றெண்ணி குறுக்கே நிற்க ,கிட்டத்தட்ட மோதிய பிறகு நிமிர்ந்து பார்த்து அசடு வழிந்திருக்கிறேன் .ரொம்ப அவசரமான வேலையாக போகும் போது இப்படி போனா பரவாயில்ல .சும்மா நேரப்போக்குக்கு போகும் போதும் இப்படித் தான்.

திருச்சியில் படிக்கும் போது கல்லூரிக்கு எதிரே தெப்பகுளம் முதல் மலைக்கோட்டை வரையிலாக திருச்சியில் மிக பிரபலமான பரபரப்பான ரோட்டில் நண்பர்களோடு மாலை வேளையில் நடந்து செல்வது வழக்கம் .போவதே சும்மா நேரப்போகுக்கு .சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பெண்கள் கூட்டம் ,ஏகப்பட்ட துணிக்கடை ,ஆற அமர ரசித்துக்கொண்டு நடந்து வருவது தான் நண்பர்கள் வழக்கம் .நான் ஏதோ புகுந்து புறப்பட்டு வளைந்து நெளிந்து நடந்து கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தால் நண்பர்கள் ஒரு 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருப்பார்கள் .அவர்கள் வந்து "டேய் ! என்னடா மலைக்கோட்டையை போய் வாங்கப் போகிறாயா என்ன ? எதுக்கு இப்படி ஓடுற" என்பார்கள் .எனக்கும் 'அதானே! ஏன் இப்படி பறக்குறேன்" -ன்னு தோணும் .ஆனால் அடுத்த 5-வது நிமிடத்தில் அதுவே மீண்டும் நடக்கும் .நான் மாறவே இல்ல.

3.காபி குடிக்குறது .ஒரு காபி-யை வாங்கி வைத்து ஆற அமர குடித்து முடிப்பதற்கு குறைந்தது 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுவோரை பார்த்திருக்கிறேன் .ஆனால் நமக்கு 1 நிமிடத்துக்கு மேல் தேறாது .பல முறை முயற்சி செய்திருக்கிறேன் .ஆனாலும் குடிக்க ஆரம்பித்தால் குடித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல குடிப்பது என் வழக்கம் .எனக்கே இது ஓவராக தெரிந்தாலும் இன்னும் மாற்ற முடியவில்லை.

4.திருச்சியில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த போது ,வார இறுதி நாட்களில் நண்பர்களெல்லாம் ரஜினி,கமல் படம் பார்க்க பறந்து கொண்டிருக்க ,நானோ திருச்சியின் சந்து பொந்துகளில் இருக்கும் ஓட்டை ஒடிசல் பழைய தியேட்டர்களை கண்டு பிடித்து தாய்மார்கள் பெரியோர்கள் நடுவில் அமர்ந்து பழைய சிவாஜி படங்களை விரட்டி விரட்டிப் பார்த்தது .'உத்தம புத்திரன்' படம் பார்த்து வெளியே வந்து விட்டு ,அடுத்த காட்சிக்கு நின்ற வரிசையில் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தது .நண்பர்கள் என்னை ஒரு தினுசாக பார்த்ததை சொல்லவும் வேண்டுமா!

5.எனக்கு விவரம் தெரியுமுன்னரே நடந்த ஒரு நிகழ்ச்சியை என் மாமா (எனக்கு பெயரிட்டவர் .பேராசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்) சொல்லிச் சொல்லி சிரிப்பதுண்டு .எனக்கு இரண்டரை வயதிருக்கும் போது அம்மா எனக்கு சோறூட்டியிருக்கிறார்கள் .முதல் சுற்று முடிந்து ,இரண்டாவது சுற்று .அதையும் முடித்து விட்டு மேலும் சோறு எனபது போல அம்மாவை பார்த்திருக்கிறேன் .பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.."

Thursday, February 08, 2007

டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள்

டோண்டு ராகவன் என்ற வலைப்பதிவர் மிகுந்த அனுபவமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர் என்ற வகையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் மீறி மரியாதைக்குரியவராகவே கருதி வந்தவர்களில் நானும் ஒருவன்.

போலி டோண்டு விவகாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .போலி டோண்டு-வின் ஆபாச செய்கைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை ,நிராகரிக்கத் தக்கவை ,அருவருக்கத் தக்கவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .முகம் தெரியாத (சிலருக்கு தெரியும் என்கிறார்கள்) அந்த நபரின் செய்கைகள் டோண்டுவை மட்டுமல்ல ,வலைப்பதியும் பல சகோதரிகள் உட்பட சம்பந்தம் இல்லாத பலரையும் மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மோசமானதாக உருவெடுத்தது .தமிழ் வலைப்பதிவுலகில் உருப்படியான விவாதங்களை பின்னுக்குத் தள்ளி ,தேவையில்லாத இந்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது துரதிருஷ்ட வசமானது.

ஆனால் இந்த விவகாரம் அணைந்து விடாமலும் ,அதன் மூலம் தனக்கு கிடைக்கும் விளம்பரமும் அனுதாபமும் தளர்ந்து விடாமலும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்ததில் டோண்டு அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை தொடக்கத்திலிருந்து கவனித்து வரும் நடுநிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் .

இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த புதிதில் என் போன்ற சிலர் டோண்டு அவர்களிடம் பல முறை வேண்டுகோள் வைத்தோம் .தயவு செய்து இந்த புண்ணை கிளறாதீர்கள் .ஆறப்போடுங்கள் .ஏட்டிக்கு போட்டியாக மீண்டும் மீண்டும் இதை கிளறுவதால் எந்த பயனும் இல்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம் .ஆனால் டோண்டு அவர்களின் பதில் "நீ என்ன அவனுக்கு வக்காலத்தா .அவனைக் கேட்க வேண்டியது தானே!" என்ற ரீதியிலே இருந்தது .

இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார் ,யாரென்றே தெரியவில்லை ,சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த ,புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் படி வேண்ட முடியும் .ஆனால் அந்த நபரே நம்மை எதிர் தரப்பு ஆதரவாளன் என முத்திரை குத்தி அதிலும் விளம்பரம் தேடி ,அனுதாபம் பெற முயற்சிக்கும் போது எழும் எரிச்சலை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு "நீ ஒன்றில் என் பக்கம் .அல்லது அவன் பக்கம்" என்று புஷ் தனமாக டோண்டு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் கூறு போட்டு குழு மனப்பான்மையை தொடங்கி வைத்தார் .செல்லுகிற இடமெல்லாம் இதைப் பற்றியே எல்லோரும் பேசும் படி செய்து விளம்பரம் தேடிக்கொண்டார் .இதை சுட்டிக்காட்டிய அனைவரையும் போலியின் ஆதரவாளன் என வாய் கூசாமல் பழி சுமத்தினார் .புதிதாக வலைப்பதிபவர்கள் மேலோட்டமாக இதை புரிந்து கொண்டு ,டோண்டு பக்கம் தவறே இல்லாதது போல நினைக்கும் படி செய்தார்.

இவரின் சாதி சாதி என பிடித்து தொங்கும் விவகாரத்தில் நான் நுழைய விரும்பவில்லை .தொங்கிக் கொள்ளட்டும் .எனக்கு அதைப்பற்றி விவாதிக்க கூட ஆர்வமில்லை .இத்தனையும் மீறி இவரை நான் டோண்டு சார் அல்லது டோண்டு ஐயா என்று வயது ,அனுபவம் காரணமாக மரியாதையாகத் தான் அழைத்து வந்தேன். அதனால் சில மிரட்டல் கடிதங்களும் கிடைக்கப்பெற்றேன் .அதைப்பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ்- சமீபத்திய ஒலிப்பதிவில் நான் டோண்டு விவகாரத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட்ட போது அவருக்கு இந்த பின்னணி தெரியாது என குறிப்பிட்டிருந்தார் .அவரை போல இந்த விவகாரம் சூடு பிடித்த பின்னர் வலைப்பதிய வந்தவர்களுக்கும் இந்த பின்னணி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனை பதிகிறேன்.

போலி டோண்டுவோ அல்லது ஆபாசமாக எழுதும் யாரோ அவர்களை நான் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை .ஆனால் டோண்டு மிக முக்கியமான வலைப்பதிவராக அறியப்பட்டவர் .சரியான விளம்பரப் பிரியர் .போலி டோண்டு விவகாரத்தில் இந்த பிரச்சனையை முடிக்கும் ஆர்வத்தை விட இதை வைத்து தான் எப்படி சுய விளம்பரம் தேடிக்கொள்ளலாம் ,வெளிச்சத்திலேயே இருக்கலாம் என்ற ஆர்வம் தான் அவருக்கு அதிகம் இருந்ததாக என் மனசாட்சி சொல்லுகிறது .

எப்போதெல்லாம் இந்த விவகாரம் சிறிது அமுங்கி ,டோண்டு வெளிச்சத்திற்கு வெளியே போகிறாரோ ,அப்போதெல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதனை கிண்டி கிளறி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ,வெளிச்சம் மீண்டும் தன் மீது விழுவதை ரசிப்பவர் டோண்டு அவர்கள் .அதனால் தமிழ் வலையுலகில் ஏற்படும் திசை திருப்பல்கள் குறித்தோ அல்லது பாதிக்கப்படுவோர் குறித்தோ அவருக்கு கவலையில்லை .மாறாக இன்னும் எத்தனை பேரை பாதிக்க வைக்கலாம் ,அதன் மூலம் கூட்டம் சேர்க்கலாம் ,அதை வைத்து கும்மியடிக்கலாம் என்பதே அவரின் நோக்கமாக இருந்ததாக நான் நினைக்கிறேன்.

தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது ,தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயத்தை ,தனக்கு சாதகமான நேரத்தில் பொதுவில் வெளிப்படித்திவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல நடிப்பது ,எங்கு சென்றாலும் இந்த விவகாரத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அனைவருக்கும் ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் அவரின் புத்திசாலித் தனமான (அப்படி அவர் நினைத்துக்கொள்ளுகிற) உத்திகள் .

டோண்டு அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .அவரின் வயது ,அனுபவம் காரணமாக நாம் அவரை மதிக்கிறோம் என்பதற்காக ,அவரின் சிறுபிள்ளைத் தனமான வழிமுறைகளும் ,விளக்கங்களும் நமக்கு புரியாமல் இல்லை .பல நேரங்களில் இவரிடம் போய் விவாதித்து இவரின் விதண்டாவாதத்தில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமே என்பதால் தான் பலர் இவரை தவிர்த்து வருகிறார்கள் .ஆனால் அவர்களையும் இவர் விடுவதில்லை .இவருக்கு பின்னூட்டம் கொடுக்காதவர்களெல்லாம் போலிக்கு பயந்தவர்கள் ,விட்டால் போலிக்கு நண்பன் என்று ஓயாமல் சொல்லி வருவார்.

நிறைய சொல்லலாம் .இப்போதைக்கு இது போதும் .இப்போது அவர் பல முகமெடுத்து (ஆமய்யா ! ஆமா! ஆபாசமாகவெல்லாம் எழுதவில்லை) மாட்டிக்கொண்டது பற்றி அவரின் "மீசையில் மண் ஒட்டாத' விளக்கங்கள் குறித்து நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

Thursday, June 29, 2006

எனக்கு பிடித்த ஆறு..

ஆறு போட அழைத்த சகோதரி லிவிங் ஸ்மைல் மற்றும் விடாது கறுப்பு இருவருக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக தமிழ்மணம் பக்கமே அதிகமாக வர முடியாத நிலை .இருப்பினும் அவரச ஆறு!

பிடித்த பேச்சாளர்கள்

1.வலம்புரி ஜாண்
2.சுகி சிவம்
3.ப.சிதம்பரம்
4.அண்ணா
5.வைகோ
6.பெரியார் தாசன்

பிடித்த நடிகர்கள் / நடிகைகள்

1.நடிகர் திலகம்
2.கமல்ஹாசன்
3.நாகேஷ்
4.மம்மூட்டி
5.சாவித்திரி
6.எம்.ஆர்.ராதா

பிடித்த இசை/பாடகர்கள்

1.இசை ஞானி இளையராஜா
2.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
3.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
4.பி.சுசீலா
5.வாணி ஜெயராம்
6.டி.எம்.எஸ்

பிடித்த பாடல்கள்

1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது -வறுமையின் நிறம் சிவப்பு
2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?
3.மலர்ந்தும் மலராத -பாசமலர்
4.எங்கே என் ஜீவனே -உயர்ந்த உள்ளம்
5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை
6.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை

பிடித்த படங்கள்

1.சலங்கை ஒலி
2.குருதிப்புனல்
3.மகாநதி
4.தேவர் மகன்
5.முதல் மரியாதை
6.முள்ளும் மலரும்

படித்ததில் பிடித்தது

1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்

என்னை பாதித்தவர்கள்

1.தந்தை பெரியார்
2.பெருந்தலைவர் காமராஜர்
3.நடிகர் திலகம் சிவாஜி
4.அப்துல் கலாம்
5.கக்கன்
6.கலைஞர்

பிடித்த இடங்கள்

1.எங்கள் ஊர் பள்ளம் ,குமரி மாவட்டம்
2.கேரளா
3.அங்கோர் வாட் ,கம்போடியா
4.கோத்தா திங்கி ,மலேசியா
5.கீரிப்பாறை ,குமரி மாவட்டம்
6.முட்டம் ,குமரி மாவட்டம்

அடிக்கடி உலாவுவது

1.தமிழ்மணம்
2.forumhub
3.திண்ணை
4.தமிழ்.சிபி
5.தட்ஸ்தமிழ்
6.விகடன்.காம்

மனதிற்கு இதம்

1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்
2. அதிகாலையில் தூரத்தில் கேட்கும் சுப்பிரபாதம்
3. குழந்தையின் சிரிப்பு
4. பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்
5. மாலை நேர கடற்கரை உலாத்தல்
6. தமிழ் மொழி

நான் அழைக்கும் ஆறு பேர்

1. டி.பி.ஆர்.ஜோசப்
2. தருமி
3. பாலசந்தர் கணேசன்
4. நெல்லை சிவா
5. ரஜினி ராம்கி
6. முத்து தமிழினி

Thursday, February 23, 2006

சங்கிலி பதிவு -ஜோசப் சார் அழைப்பில்

ஜோசப் சார் நம்மளையும் ஞாபகம் வச்சு இழுத்து விட்டுட்டாரு..அவர் சொன்னா மறுக்கமுடியுமா?

பிடித்த நான்கு விடயங்கள்

1.அரசியல்,வரலாறு புத்தகங்கள் படிப்பது
-நூலகத்துக்குப் போனால் முதலில் தேடுவது இந்த புத்தகங்களைத் தான்.'அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டார்' போல அதர பழசில்லாமல் ,இந்த நூற்றாண்டு அரசியல் ,சமூகம் பற்றிய புத்தகங்கள் படிக்க மிகவும் விருப்பம்

2.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்
-எம்.ஜி.ஆர் ரசிகனில்லை என்றாலும் ,அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மீது எப்போதும் ஒரு மயக்கம்.

3.சமையல் செய்வது
-குண்டக்க மண்டக்க-னு எதயாவது ஒரு காம்பினேஷன்ல சமையல் செய்து பார்ப்பது .ஓரு தடவை இப்படி நண்பரோடு சேர்ந்து சிக்கன் வகையறா ஒன்று சமைக்க ,அது அதிகமாக வெந்து சிதறி விட்டது .அதற்கு 'சிக்கன் சிதறல்' -ன்னு புதுப் பேர் கொடுத்து சாப்பிட்டோம் .ரொம்ப நல்லாயிருக்க ,இன்னொரு தடவ பண்ணலாம்னா வரமாட்டேங்குது.

4.குழந்தையோடு விளையாடுவது
- சமீபத்தில் வாய்த்திருக்கிற சந்தோஷம்.

பிடித்த நான்கு திரைப்படத் துறையினர்

1.நடிகர் திலகம்
ஆயிரம் பேர் 'ஓவர் ஆக்டிங்'-ன்னு என்ன தான் வாரினாலும் ,அசைக்க முடியாத என் அபிமானம் அந்த ஈடில்லா கலைஞன்மீது.கிட்டத்தட்ட கிறுக்கு பிடித்த அபிமானம்.

2.இசைஞானி இளையராஜா
மெல்லிசை மன்னருக்கு ரசிகனாகி பின்னர் இசைஞானி இசைக்கு ரசிகனானேன்
3.கமல் ஹாசன்
நடிகர் திலகத்தின் வாரிசு .மனம் கவர்ந்த கலைஞன்!
4.எம்.ஆர்.ராதா
இவரைப்போல இவர் மட்டும் தான் .தனித்தன்மை மிக்க கலைஞன் .லொள்ளுக்கு மன்னன்!

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் 4

1.ரத்தக்கண்ணீர்
2.குருதிப்புனல்
3.தில்லானா மோகனாம்பாள்
4.சலங்கை ஒலி

வசித்த நான்கு இடங்கள்
1.பள்ளம்,குமரி மாவட்டம்
-பிறந்து வளர்ந்த இடம்
2.திருச்சி
-கல்லூரிப்படிப்பு
3.சென்னை-6 வருடங்கள்
4.சிங்கப்பூர் -6 வருடங்கள்

பிடித்த 4 உணவு வகைகள்

1.வெறும் குழம்பு - தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து அம்மா செய்யும் மிக சுலபமான குழம்பு .ஒப்புக்கு செய்யும் இந்த குழம்பு எனக்கு அந்த அளவுக்கு ஏன் பிடிக்கிறது என்று அம்மாவுக்கு ஆச்சரியம் .ஆனால் எனக்காக எப்போதும் செய்வார்கள் ,சும்மா சூப்பர் ஸ்டார் வேகத்துல.

2.வாளை மீன் குழம்பு - எல்லா மீன்களும் பிடிக்குமென்றாலும் ,இது கொஞ்சம் அதிகமாக..

3.கணவாய் பொரித்தது

4.ஆப்பம் - கோழி குருமா பண்டிகை நாட்களில் கண்டிப்பாக உண்டு.

Tag செய்ய விரும்பும் வலைப்பதிவர்கள்

1.குழலி
2.தருமி
3.முத்துக்குமரன்
4.சிங்.செயக்குமார்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives