Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Monday, September 14, 2009

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை

பொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .


மா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிரேய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.

இதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...

* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.

* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.

* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .


* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .

* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .

* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).

* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .

* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.

* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.

(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)

* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)

* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)

* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.

* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.

இது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

மா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.

Wednesday, February 22, 2006

ஆழி சூழ் உலகு -நாவல் அறிமுகம்

ஆசிரியர் : ஜோ டி குரூஸ்
பக்கங்கள் :550
பதிப்பகம் :தமிழினி ,67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை,சென்னை-14.

Image hosting by Photobucket


சிறில் அலெக்ஸ் அவர்களின் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற முட்டம் பற்றிய பதிவுகளை படித்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அதில் 'ஆழி சூழ் உலகு' என்ற சமீபத்திய நாவலைப் பற்றி குறிப்பிட்டு தமிழில் முதன் முதலில் கிறிஸ்தவ பரதவ மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நாவல் என்றாலே எனக்கு கொஞ்சம் கசப்பு தான் என்றாலும் ,கிட்டத்தட்ட அதே பகுதி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சார்ந்தவனாக இருந்ததால் ,இதை படிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது .சிங்கையில் ஒரு கிளை நூலகத்துக்கு சென்று வேறு புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக இந்த புத்தகம் கண்ணில் பட்டது .அள்ளிக்கொண்டு வந்து படித்தேன்.

இந்த நாவலுக்கு உட்புகுமுன் தென்தமிழ்நாட்டு மீனவர்களைப்பற்றி சில அடிப்படை விடயங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது .திருச்செந்தூரின் சற்று கீழிருந்து கன்னியாகுமரி வரை வங்காள விரிகுடா ஓரமும் ,கன்னியாகுமரியிலிருந்து மேற்கே கேரள எல்லை நீரோடி வரை அரபிக்கடல் ஓரமும் வரிசையாக அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுக்க முழுக்க இரண்டு சமுதாயத்தை சார்ந்த (பரவர் ,முக்குவர்) கத்தோலிக்க மீனவர்கள் .இதில் வங்காள விரிகுடா ஓர தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட கிராமங்கள் கிட்டத்தட்ட முழுவதும் பரவர்கள் வாழுகிறார்கள் .அரபிக்கடல் ஓர குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள சுமார் 45 கிராமங்களில் 7 கிராமங்களில் முழுவதுமாக பரவர்களும் ,கன்னியாகுமரி ,முட்டம் என்ற 2 கிராமங்களில் இரு சமூகத்தினர் இணைந்தும் ,மற்ற அனைத்து கிராமங்களில் முக்குவர் சமுதாயத்தினரும் வசிக்கின்றனர்.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வரை குமரி அன்னையை குலதெய்வமாக கொண்டு இந்துக்களாக வாழ்ந்த இம்மக்கள் ,இப்பகுதிக்கு வந்த புனித சவேரியார் (St.Xavier) -ஆல் ஒட்டுமொத்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .மணப்பாடு ,நாகர்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்த சவேரியார் இந்த நீண்ட கடற்கரையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கால் பதித்தார் .முதலில் பரவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு கத்தோலிக்கர்களாக மாற,அவர்களை பின் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முக்குவர்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள் .இது நடந்தது கிட்டதட்ட 1530-வாக்கில்.

மதம் மாறியிருந்தாலும் ,அவர்கள் இதுவரை கைக்கொண்டிருந்த வழக்கங்கள் ஒரேயடியாக மாறிவிடவில்லை .குமரி அன்னை மீது மிகுந்த பக்தி கொண்டு குலதெய்வமாக வழிபட்ட இம்மக்கள் அந்த பக்தியை லேசில் விடுவதாக இல்லை .அதற்கு மாற்றாக அவர்கள் அன்னை மேரியை நிறுத்த நாளடைவில் பழகிக் கொண்டார்கள் .பின்னர் அதிலே ஊறியும் போனார்கள்.

இந்த நாவலைப் பொறுத்தவரை,இதிலுள்ள நிகழ்வுகள் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இறுதிவரை நிகழ்வனவாக சித்தரிக்கப்பட்டுள்ளது .வட ,மத்திய தமிழ்நாட்டு மீனவர்களைப் போல் பல்வேறு சாதி,மதம் கலந்து வாழும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ,முழுக்க ஒரே சாதி,மதமாக அடுத்தடுத்த கிராமங்களாக வாழும் இம்மக்களின் வாழ்க்கை முறை மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சமூக,பொருளாதார முறைமைகளை கொண்டிருக்கிறது .

இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மக்கள் பேசுகின்ற மொழி அவர்களிடமிருந்து 1 கி.மீ தூரத்தில் வாழும் உள்நாட்டினர் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டாலும் ,இலங்கைத் தமிழர் மொழியோடு ஓரளவு நெருக்கமாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து,என் சொந்த அனுபவத்தில்.

குறிப்பாக வங்காள விரிகுடா ஓர பரவ மீனவர்களைப் பற்றி பேசும் இந்த நாவல் ,அவர்கள் வாழ்க்கையின் எல்லா முக்கிய பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதாக சொல்ல முடியாது .குறிப்பாக மதம்,அரசியல் ,சினிமா,கலைகள் இவற்றின் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்யப்படவில்லையெனினும் ,அவர்களின் அலைகடலோடான போராட்டத்தையும் ,தனிமனித உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ,வேறு சமூகத்தோடு அவர்களின் உறவு முறையையும் அற்புதமாக பதிவு செய்கிறது.முக்கியமாக இந்த மக்களின் மொழி வழக்கு மிக அழகாக கையாளப்பட்டுள்ளது .ஆசிரியரும் அந்த சமூகத்தவர் என்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது.

இந்த மக்களோடு ,அவர்கள் மொழியோடு ,குறிப்பாக கடல் சார்ந்த குறியீடுகளோடு பரிச்சயம் இல்லாத வாசகர்கள் முதலில் பின் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'வட்டார வழக்கு சொல் அகராதி' யை ஒருமுறையேனும் படித்துவிட்டு நாவலின் உட்புகுவது நல்லது.

பின்குறிப்பு : இதன் ஆசிரியர் ஜோ டி குரூஸ் ,உவரி கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் .மறைந்த வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண் அவர்களும் இதே கிராமத்தை சார்ந்தவர் என்பது உபரித் தகவல்.

Friday, February 18, 2005

வார்த்தை சித்தர்

சமீபத்திய குமுதம் இதழில் வலம்புரி ஜான் அவர்களின் தற்போதைய உடல் நிலை குறித்து வைரமுத்து எழுதியிருந்த கட்டுரையில் அவரின் தற்போதைய நிலையிலுள்ள புகைப்படத்தை கண்டதும் மனது பதறியது.

சின்னவயதில் எனக்கு ஏனோ எம்.ஜி.ஆர் என்றாலே பிடிக்காது . அதே எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது தற்செயலாக வானொலி கேட்க நேர்ந்தது..அப்போது யாரோ ஒருவர் எம்.ஜி.ஆர் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன் .என்னையறியாமலேயே கண்ணீர் வந்து எட்டிப்பார்த்தது..அன்று நான் அதிகம் விரும்பாத எம்.ஜி.ஆர்-க்காக என்னை கண்ணீர் விட வைத்தவர் 'வலம்புரி ஜான்' என்று பின்னர் அறிந்தேன்.

காலப்போக்கில் அவருடைய பேச்சுக்கு தீவிர ரசிகனாகி விட்டேன்.கடல் சங்குகளில் 'வலம்புரி' அபூர்வமானது என்பதால் ,நெய்தல் நிலத்து மைந்தனான ஜான் -க்கு 'வலம்புரி' என்று கலைஞர் சூட்டிய பெயர் முற்றிலும் பொருத்தம்.

பல்துறை அறிவும் மொழி வளமும் ஒருங்கே அமைவது அரிது. வலம்புரி ஜான் அத்தகைய அரிதான மனிதர் .நம்முடய தமிழ் சமூகத்தில் திறமைகேற்ற அங்கிகாரம் கிடைப்பது அரிது என்பதோடு அரைகுறைகள் அதீத அங்கீகாரம் பெறுவதும் வழக்கமாக இருக்கிறது.

வலம்புரி ஜான் போன்ற அற்புதமான பேச்சாளர்களை விட மூன்றாம் தர அரசியல் பேச்சாளர்கள் தாம் மக்களிடையே பிரபலம் .4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்திய ரயில் நிலயத்தில் தோளில் ஒரு பையோடு நின்று கொண்டிருந்தார். யாரும் அவரைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை . அருகில் சென்று வணக்கம் சொல்லி "நான் உங்கள் ரசிகன்" என்று சொன்னேன் .மகிழ்ந்து புன்னகைத்து விட்டு ,ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் விடை பெற்றார்.

ஆழ்ந்த சிந்தனையும்,அற்புதமான மொழி புலமையும் ,அகண்ட வாசிப்பு அனுபவமும் கொண்ட அவர் ,அரசியலில் கண்ணதாசனைப் போல் கிளை விட்டு கிளை தாவும் பறவையாகவே இருந்தார். தி.மு.க, அ.தி.மு.க ,த.ம.கா ,மறுபடியும் தி.மு.க என்று எல்லா இடத்திலும் இருந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் 'இமயங்கள்' நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் பேச வந்த போது உடல் தளர்ந்து ,பார்வை மங்கிய நிலையிலும் உணர்ச்சிகரமாக பேசியது நினைவில் நிற்கிறது.
இப்போது மிகவும் உடல் நிலை குன்றிய நிலையில் உடல் உபாதைகளோடு போராடி கொண்டிருப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது .கோடி கோடியாக கொட்டி வைத்திருக்கின்ற தி.மு.க ,அவருடைய சிகிச்சை செலவுக்கு உதவி செய்தால் குறைந்தா போய் விடும்.?

மீண்டும் அவர் எழுந்து வந்து தமிழ் பணியாற்ற மனதார வேண்டுவோம்...

Monday, February 07, 2005

இலக்கிய அலர்ஜி

ஒரு சராசரி வாசகன் தான் மக்களே நான்.சின்ன வயசில இருந்து கையில கிடைக்கிற பிட் நோட்டீஸ் முதற்கொண்டு எதையும் விடாம படிக்கிறதுண்டு.ஆனா இத்தனை வயசாகியும் ,கதை,நாவல் படிக்குற பழக்கம் வரவே மாட்டேங்குது.அட என்னப்பா வெறும் கதைய படிக்குறதுல என்னத்த புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்.அதுக்கு பதிலா எதாவது தகவல் இருக்கிற மாதிரி கட்டுரையோ அல்லது துணுக்கு செய்திகளோ படிச்சா பிரயோஜனமா இருக்கும் அப்படின்னு தான் எண்ண ஒட்டம் போகுது..இப்போ குமுதம் ரிப்போர்ட்டர்ல ராகவன் எழுதிட்டு வர்ற 'நிலமெல்லாம் ரத்தம்' மாதிரி தகவல் சார்ந்த கட்டுரைகள் தான் நம்ம சாய்ஸ்..அது போல அரசியல்,சமூகம் சார்ந்த விவாதங்கள் எட்டி நின்று வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும்.

ஆனாலும் இந்த 'இலக்கிய விவாதம்' நமக்கு இம்மியும் பிடி படாத விசயமா இருக்கு..நம்மை போல படிக்கும் பழக்கமுள்ள நபர்களோடு இது பற்றி பேசுகிற தைரியம் எனக்கில்லை..அவங்க பாட்டுக்கு ஜெயகாந்தனோட அந்த நாவல் படிச்சிருகீங்களா? ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா?-னு எதாவது கேட்டா நான் அம்பேல்.

இப்போ நமக்கு சந்தேகம் என்னணா , 'இலக்கியம்'-னா என்ன? இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா? தகவல்,வரலாறு சார்ந்த எழுத்துககளும் இலக்கியம் தானா?
அடிக்க வராதீங்கண்ணா! எதோ அறியா சிறுவன் கேட்டுட்டேன்...கொஞ்சம் பொறுமையுள்ள அண்ணாச்சி யாராவது சொல்லி புரிய வையுங்கப்பா..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives