Friday, April 09, 2010

மகளிர் இட ஒதுக்கீடு - அடிப்படை புரிதலும் குழப்பமும்

சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?

இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.

ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.

Tuesday, April 06, 2010

எனக்கு பிடித்த 10 தமிழ் படங்கள்

தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்

அந்த நாள் (1954)

இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .

ரத்தக்கண்ணீர் (1954)

என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .

கர்ணன் (1964)

பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)

தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாயகன் (1987)

விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.

தேவர் மகன் (1992)

நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.






மகாநதி (1993)

கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.




சதி லீலாவதி (1995)
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.





குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .





அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.

குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.

குறைந்தது 2 பேரையாவது தொடருக்கு அழைக்க வாத்தியார் சொல்லிவிட்டார் . நண்பர்கள் மருத்துவர் புருனோ மற்றும் சுரேஷ் கண்ணன் இருவரையும் அழைக்கிறேன்.

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

நான் கடவுள் , உன்னைப் போல் ஒருவனுக்கு அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான் .வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது .பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .

இதுவரை செல்வராகவன் பாலாவைப் போல மிகக்கவர்ந்த இயக்குநர் இல்லை எனக்கு .முந்தைய நாள் தான் தொலைக்காட்சியில் 7Gரெயின்போ காலனி பார்க்க நேர்ந்தது .இது போன்ற அப்பார்ட்மெண்ட் காதலை சொதப்பல் நடிகர்களை வைத்து நகர்ப்புற ரசனைக்கேற்றவாறு கொஞ்சம் மந்தகாசமான கோணத்துடன் பெரும்பாலும் பாடல்களை நம்பி களமிறங்கும் ஒரு இயக்குநர் என்ற என் பொதுவான கருத்தை வலுப்படுத்திக் கொண்டு இந்த படத்திற்கு சென்றால் எதிர்பாராத மாற்றம் .எனக்கு தெரிந்து தமிழில் இந்த அளவுக்கு முன்னேற்பாடுகள் , காட்சியில் வரும் அதிகபட்ச மனிதர்களின் ஒருங்கிணைப்பு , அரங்க அமைப்பு போன்றவற்றுக்கு அதிகபட்ச உழைப்பு தேவைப்பட்டிருக்கும் படம் இதுவாகத் தானிருக்கும்.

“சோழர் பாண்டியர் உண்மை வரலாற்றுக்கும் இதற்கும் தொடர்பில்லை ..இது முழுக்க கற்பனையே” என முதலிலேயே போட்டு விட்ட பின்னரும் பலர் வரலாற்றுத் தவறுகளை நோண்டுவதுவும் பிடிபடவில்லை ..ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்து விட்டு கேள்வி கேட்கலாம் . வரலாற்றுப் புதினத்தில் வரும் கற்பனைகளையும், வர்ணனைகளையும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி ? அதான் புதினம் -ம்னு சொல்லியாச்சேப்பா (இதுவரை வரலாற்று புதினம் எதுவும் நான் படித்ததில்லை ,அதனால என் கண்ணோட்டம் தவறோ என்னவோ?)

படத்தின் கதை ,நடிப்பு ,இசை பற்றியெல்லாம் பலரும் அலசி விட்டார்கள் .என்னைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு ,அரங்க அமைப்பு ,காட்சி கோணங்களில் பிரம்மாண்டம் ..குறைந்தபட்சம் இவைகளில் இந்த படம் தமிழ்சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை மட்டும் வைத்து முற்றிலும் நிராகரிப்பதை விட அந்த காட்சியை ஒருங்கிணைப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை கருத்தில் கொள்வதும் முக்கியம் .அந்த வகையில் செல்வராகவன் கற்பனையில் தோன்றுவதை காட்சிப்படுத்தியதில் தமிழ் சினிமாவின் பொருளாதார வரைமுறைக்குட்பட்டு கொடுத்துள்ள பிம்பங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை. மீண்டும் 1000 கோடிகளை 30 கோடிகளுடன் ஒப்பிட்டு ஒற்றை வரியில் நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

கார்த்தியின் உடம்பில் புலி வண்ணத்தையெல்லாம் ஆராய்ந்து கேள்வி கேட்கும் சோழ மன்னன் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் உருவத்தை பார்த்து “யார் இந்த அரசன்?” என ஏன் கேள்வி கேட்கவில்லை ? என நானும் வம்புக்கு கேள்வி கேட்கலாம் .படம் முழுவதும் கற்பனையென்றான பின் இதற்கெல்லாம் விடையில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகள் ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு தோன்றியதாக சிலர் நினைப்பதற்கு முகாந்திரம் அதிகமே . ஒரு நாட்டின் ராணுவம் என்பது தேசபக்தியின் அடையாளம் , ஒழுக்க சீலர்களின் கூடாரம் ,புனிதப்பசுக்கள் போன்ற பாடப்புத்தக பொதுப்புத்தியிலிருப்பவர்களுக்கு கடைசி காட்சிகளை ஜீரணிக்க முடியாதிருக்கலாம் . ஆனால் அதை துணிந்து பதிவு செய்த செல்வாவை பாராட்ட வேண்டும். சோழர் காலத்து மொழியில் வரும் வசனங்கள் பலருக்கும் புரியவில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர அனைத்தும் தெளிவாக புரிந்தது.

செல்வா இன்னொன்றை செய்திருக்கலாம் ..படத்தை முடித்த பின்னர் வெளிப்படையாக கருத்து சொல்ல வாய்ப்பில்லாத தன் உள்வட்டத்தில் உள்ளவர்களை தவிர்த்து தனக்கு வெளிவட்டத்தில் ஒரு சில தரப்பினரிடம் படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தால் ,இரண்டாம் பாதியில் சில குறைத்தல் ,சரிப்படுத்துதல் செய்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் .

குறைகளைத் தாண்டி கண்டிப்பாக இது புறக்கணிக்கப்படவேண்டிய படமல்ல , கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவேனும் .

Wednesday, December 02, 2009

இடைத்தேர்தல் விதிமுறை கேலிக்கூத்து

அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வெற்றி பெறுவாராம் .பின்னர் அவர் சொந்த பிரச்சனை காரணமாக அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைவாராம் .உடனே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாராம் .அதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல் கமிஷன் இடைத் தேர்தல் நடத்துமாம் .தன் சொந்த பிரச்சனைக்காக அவர் ராஜினாமா செய்ததால் வரும் இடைத் தேர்தலில் அவரே மீண்டும் திமுக சார்பாக போட்டியிடுவாராம் .ஆளுங்கட்சி அமைச்சர்களெல்லாம் அமைச்சரவை பணிகளை விட்டு விட்டு அவர் தொகுதியில் முகாமடித்து மீண்டும் அவரை வெற்றி பெற செய்வார்களாம்.

இது போல ஒரு கேலிக்கூத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என தெரியவில்லை .ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , ஒரு தனிபட்டவரின் சொந்த விருப்பு வெறுப்பால் இழப்பு மக்கள் வரிப்பணம் ,அமைச்சர்கள் தேர்தல் வேலையால் அரசு பணிகளில் இழப்பு , இன்ன பிற..

ஒருவரை மக்கள் 5 வருட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த பிறகு ,அவரே முன் வந்து ராஜினாமா செய்வாரென்றால் ,ஒன்று குறைந்தபட்சம் அவர் எடுத்த முடிவால் வரும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது .இல்லை நான் போட்டியிடுவேன் என்றால் இவரின் சொந்த குழப்பத்தால் வரும் தேர்தலுக்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்பது தானே குறைந்த பட்ச நியாயம் என்ற முறையிலும் சரியாக இருக்கும் ? இதைக் கூட அமல் படுத்த முடியாத தேர்தல் விதிமுறை சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

இது ஒன்றும் புதிதல்ல ..ஏற்கனவே பலர் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் வருமானால் , இதுவரை நடந்தவையும் தவறு தான் என்பதில் சந்தேகம் இல்லை .எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் வேண்டும் .இப்படிப்பட்ட குறைந்த பட்ச நெறிமுறைகளை கடைபிடிக்காத தேர்தல் நெறிமுறைகளை வைத்துக்கோண்டு தேர்தல் கமிஷன் மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து.

Wednesday, September 23, 2009

உன்னைப்போல் ஒருவன் - முரண்களும் சந்தேகங்களும்

ஏற்கனவே பலரும் கிழியும் வரை அலசியாச்சு . சினிமா மொழி ,தொழில் நுட்பம் , திரைக்கதை வடிவம் ,தமிழ் சினிமாவின் பொதுவடிவத்திலிருந்து தனித்து நிற்பது போன்றவற்றை எடுத்துக்கொண்டால் உன்னைப்போல் ஒரு தனித்துவமான படம் தான் . கமல் ரசிகன் என்ற முறையில் , கமலுக்கு எதிர்பாராமல் கிடைத்த குறைந்த கால அவகாசத்தில் ரொம்பவும் மெனக்கெடாமல் , மிகுந்த பொருட் செலவில்லாமல் ,குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டத்தை குறிவைத்து வெற்றிகரமாக எடுக்கப்பட்ட படம் என நினைக்கிறேன் .வர்த்தக ரீதியுலும் இது ஒரு வெற்றிப்படமே. கமல் , மோகன்லால் நடிப்பு குறித்தெல்லாம் தனியே சொல்லத் தேவையில்லை .அனுபவத்தால் ஊதித் தள்ளியிருக்கிறார்கள்.



கலை வடிவம் என்பதைத் தாண்டி உன்னைப்போல் ஒருவன் சொல்லும் சேதி ,வசனங்கள் குறிக்கும் கருத்துருவாக்கம் இவையெல்லாம் வலையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டதை வைத்து அந்த கதாபாத்திரம் சார்ந்த ஒன்றை ஒட்டு மொத்தமாக சொல்வதாக கட்டமைக்கப்படும் வகை விமர்சனங்கள் எனக்கு ஏற்புடையதில்லை .ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வசனகர்த்தாவும் , இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல வரும் கருத்தா அல்லது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் கூறா என்பது அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது .

உன்னைப் போல் ஒருவனில் கூட குறை சொல்ல வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் ,ஒரு சில இடங்களில் சொல்லும் வசனங்களை மேற்கோள்காட்டி அவையே வசன கர்த்தாவின் கருத்து என நிறுவுகிறார்கள் ..அதற்கு நேரெதிராக இன்னொரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இந்த வாதத்துக்கு ஒத்து வராததால் ,அவை ஏதோ வசன கர்த்தா எழுதாதது போலவோ ,அல்லது அது அந்த பாத்திரத்தின் கருத்து போலவோ மறைத்து விடுகிறார்கள். ஆக கதாபாத்திரத்தின் கருத்தைத் தாண்டி வசனகர்த்தாவும் ,இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல முற்படும் கருத்துக்கள் எவை என யார் முடிவு செய்வது ? அவரவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இந்த படத்தில் சொல்லப்படும் வசனங்கள் , குறியீடுகள் பல எனக்கு சில வருத்தங்களையும் , சந்தேகங்களையும் எழுப்பியது உண்மை . இயக்குநர் சொல்ல வரும் கருத்து ஒன்றாகவும் பெரும்பான்மை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் வேறாகவும் இருப்பதற்கு ஏதுவான பல வசனங்கள் படத்தில் இருக்கிறது .. இந்த பூடகத்தன்மை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என சந்தேகமும் வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு , பெஸ்ட் பேக்கரி நிகழ்வு இரண்டுக்கும் உள்ள கால முரண்பாடு போன்ற சில அலசப்பட்டவற்றை தவித்து , வேறு சிலவற்றை பார்ப்போம் .அதற்கு நண்பர்கள் சிலர் கொடுத்த வேறு அர்த்தங்களும் உள்ளது .

1. அப்துல்லா என்ற தீவிரவாதி தன் மூன்றாவது மனைவி பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் எரித்து கொல்லப்பட்டதை குமுறலோடு சொல்லும் போது இந்துவாக பிறந்த உடனிருக்கும் தீவிரவாதி(சந்தான பாரதி) அதான் ரெண்டு பொண்டாட்டி மீதியிருக்கில்ல என்ற ரீதியில் நக்கலாக சொல்வது காட்சியாக வருகிறது . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .. ஆனால் திரையரங்கில் பலர் சிரித்தார்கள் . தீவிரவாதியோ யாரோ ஒரு பயங்கரவாத சம்பவத்தில் தன் மனைவி கொல்லப்படதை சொல்லும் போது ,அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? ஒரு சமுதாயத்தினரின் ஒரு வழக்கத்தை நக்கல் அடிப்பது தான் வசனகர்த்தாவின் நோக்கமா ? நண்பர் ஒருவர் சொன்னார் .. இல்லை ..அந்த இடத்தில் கூட இருக்கும் அந்த இந்து தீவிரவாதியின் குரூர புத்தியை சொல்ல வருகிறார்கள் என்று ..ஆனால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு சந்தான பாரதி சொன்னவுடன் எழும் சிரிப்பலையே சாட்சி.

2. கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் என்று ஒருவர் சொல்கிறார் .. அவர் மனைவியிடம் பேசும் போது அவர் மனைவி "இன்ஷா அல்லா-வா?" என்கிறார் ..எனவே அவர் முஸ்லீம் தான் என ஒருவர் சொல்லுகிறார் ..என்னைப் பொறுத்தவரை அவர் மனைவி 'இன்ஷா அல்லா' என்று அவரே சொல்லாமல் 'இன்ஷா அல்லா-வா?" என கேட்பது இது கமல்ஹாசன் வீட்டில் அவ்வப்போது சொல்வார் என்பதை குறிக்கிறது .. முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு .எனவே எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?

4 .தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்பது கமல் சொல்லும் கருத்து . கமல் ஒரு கருவறுத்தல் சம்பவத்தை சொல்லுகிறார் .அந்த கறுவறுத்தல் சம்பவம் எங்கே யாரால் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..ஆக அந்த தீவிரவாதத்தை செய்தவருக்கு எதிராக கமல் தீவிரவாதத்தை கையிலெடுத்தால் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் ? உலகுக்கே தெரியும் .. ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives