
கலை வடிவம் என்பதைத் தாண்டி உன்னைப்போல் ஒருவன் சொல்லும் சேதி ,வசனங்கள் குறிக்கும் கருத்துருவாக்கம் இவையெல்லாம் வலையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டதை வைத்து அந்த கதாபாத்திரம் சார்ந்த ஒன்றை ஒட்டு மொத்தமாக சொல்வதாக கட்டமைக்கப்படும் வகை விமர்சனங்கள் எனக்கு ஏற்புடையதில்லை .ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வசனகர்த்தாவும் , இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல வரும் கருத்தா அல்லது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் கூறா என்பது அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது .
உன்னைப் போல் ஒருவனில் கூட குறை சொல்ல வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் ,ஒரு சில இடங்களில் சொல்லும் வசனங்களை மேற்கோள்காட்டி அவையே வசன கர்த்தாவின் கருத்து என நிறுவுகிறார்கள் ..அதற்கு நேரெதிராக இன்னொரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இந்த வாதத்துக்கு ஒத்து வராததால் ,அவை ஏதோ வசன கர்த்தா எழுதாதது போலவோ ,அல்லது அது அந்த பாத்திரத்தின் கருத்து போலவோ மறைத்து விடுகிறார்கள். ஆக கதாபாத்திரத்தின் கருத்தைத் தாண்டி வசனகர்த்தாவும் ,இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல முற்படும் கருத்துக்கள் எவை என யார் முடிவு செய்வது ? அவரவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இந்த படத்தில் சொல்லப்படும் வசனங்கள் , குறியீடுகள் பல எனக்கு சில வருத்தங்களையும் , சந்தேகங்களையும் எழுப்பியது உண்மை . இயக்குநர் சொல்ல வரும் கருத்து ஒன்றாகவும் பெரும்பான்மை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் வேறாகவும் இருப்பதற்கு ஏதுவான பல வசனங்கள் படத்தில் இருக்கிறது .. இந்த பூடகத்தன்மை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என சந்தேகமும் வருகிறது.
கோவை குண்டு வெடிப்பு , பெஸ்ட் பேக்கரி நிகழ்வு இரண்டுக்கும் உள்ள கால முரண்பாடு போன்ற சில அலசப்பட்டவற்றை தவித்து , வேறு சிலவற்றை பார்ப்போம் .அதற்கு நண்பர்கள் சிலர் கொடுத்த வேறு அர்த்தங்களும் உள்ளது .
1. அப்துல்லா என்ற தீவிரவாதி தன் மூன்றாவது மனைவி பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் எரித்து கொல்லப்பட்டதை குமுறலோடு சொல்லும் போது இந்துவாக பிறந்த உடனிருக்கும் தீவிரவாதி(சந்தான பாரதி) அதான் ரெண்டு பொண்டாட்டி மீதியிருக்கில்ல என்ற ரீதியில் நக்கலாக சொல்வது காட்சியாக வருகிறது . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .. ஆனால் திரையரங்கில் பலர் சிரித்தார்கள் . தீவிரவாதியோ யாரோ ஒரு பயங்கரவாத சம்பவத்தில் தன் மனைவி கொல்லப்படதை சொல்லும் போது ,அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? ஒரு சமுதாயத்தினரின் ஒரு வழக்கத்தை நக்கல் அடிப்பது தான் வசனகர்த்தாவின் நோக்கமா ? நண்பர் ஒருவர் சொன்னார் .. இல்லை ..அந்த இடத்தில் கூட இருக்கும் அந்த இந்து தீவிரவாதியின் குரூர புத்தியை சொல்ல வருகிறார்கள் என்று ..ஆனால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு சந்தான பாரதி சொன்னவுடன் எழும் சிரிப்பலையே சாட்சி.
2. கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் என்று ஒருவர் சொல்கிறார் .. அவர் மனைவியிடம் பேசும் போது அவர் மனைவி "இன்ஷா அல்லா-வா?" என்கிறார் ..எனவே அவர் முஸ்லீம் தான் என ஒருவர் சொல்லுகிறார் ..என்னைப் பொறுத்தவரை அவர் மனைவி 'இன்ஷா அல்லா' என்று அவரே சொல்லாமல் 'இன்ஷா அல்லா-வா?" என கேட்பது இது கமல்ஹாசன் வீட்டில் அவ்வப்போது சொல்வார் என்பதை குறிக்கிறது .. முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு .எனவே எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?
4 .தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்பது கமல் சொல்லும் கருத்து . கமல் ஒரு கருவறுத்தல் சம்பவத்தை சொல்லுகிறார் .அந்த கறுவறுத்தல் சம்பவம் எங்கே யாரால் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..ஆக அந்த தீவிரவாதத்தை செய்தவருக்கு எதிராக கமல் தீவிரவாதத்தை கையிலெடுத்தால் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் ? உலகுக்கே தெரியும் .. ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????