
50 -வருடங்களுக்கு முன் அந்த சுட்டி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாட்டுக்கு கொடுத்த முக அசைவைப் பார்த்தவர்கள் கணித்திருப்பார்களோ என்னவோ ,இந்த புள்ளையாண்டான் தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைக்கப் போகிறான் என்று .ஆனா இப்போ அதை பார்க்கும் போது 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது உண்மை என கண்டிப்பாக நினைப்பார்கள் . முதல் படத்திலேயே நடிகையர் திலகம் கைகளில் தவழ்ந்த குழந்தை ,மிக விரைவிலேயே நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்தது ..'நீ ஒருவனை நம்பி வந்தாயோ ,இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ' என கைகளில் கிடத்தி நடிகர் திலகம் கேட்ட கேள்விக்கு 'இல்லை ..நான் என்னையே நம்பி வந்திருக்கிறேன்' என்று அந்த பயல் பதில் சொல்லியிருப்பானோ ? .பின்னர் ஆனந்த ஜோதியில் மக்கள் திலகம் 'நீ பெரிய ஆளா வருவ' -ன்னு சொன்னது பலிக்காம இருக்குமா !
.jpg)
இன்று கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் சாதனைகளை இங்கு பட்டியலிட்டுத் தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .சினிமா உலகில் சிலர் சில திறமைகளில் மிகச் சிறப்பானவராக இருக்கலாம் .சிலர் ஒரு சில திறமைகளை ஒருங்கே பெற்றிருக்கலாம் ..ஆனால் சினிமாவின் முழுத் திறமைகளையும் முயன்று வளர்த்துக்கொண்டு முத்திரை பதித்தவர்கள் கமல்ஹாசனைப் போல யாருமில்லை.
வணிக ரீதியிலும் ,தொழில் நுட்ப ரீதியில் இரண்டிலும் தேவையான அளவுக்கு தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ,இன்னும் ..இன்னும் என முன்னேற்றத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் கலைஞன் .நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்.
50 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12-தேதி 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது .தமிழ் சினிமாவுக்கு புதிய விழி வந்தது.
கலையுலக பொன் விழா காணும் நம்மவருக்கு வாழ்த்துகள்!